Thursday 12 January 2012

பெண்:புராணம்-பிளவு-தன்னிலை:இறுதிப் பகுதி

3.தன்னிலை

சுயமானது தன்னிலையாக கட்டப்படும் என்றும் மற்றமையாக அது வெளிப்படும் என்றும் நனவிலியை மையமிழக்க வைத்து சிதைவடைந்த உடலை தந்தைமை கலாச்சாரத்தில் புனைவதை உறுதிப்படுத்தும் என்றும் கூறி பெண்மையின் தன்னிலையை காணாமல் செய்துவிட்ட உளவியல் ஆய்வும் உண்டு. மணம் செய்யாத பெண் உடல் பொருளற்றிருப்பதாக பயனிற்றிருப்பதாக அறவுரை வழங்கப்பட்டு விதிகளை பெருக்கிய பல நூற்றாண்டு பெண்மையின் தன்னிலையும் பேசும். பெண் தன்னிலை அது கட்டப்படுவதற்கு முன்பான விதிகளால் ஆளப்பட்டிருக்கும்[1]. சமூக வாழ்நிலையில் வாழமுடியாத, வாழ இயலாத தன்மையையும் கொண்டிருக்கும் தன்னிலை என்ற பரப்பில் தனித்த உயிராக நிலை பெற்ற, விலக்கப்பட்ட, உள்ளிருப்பாக மாறும் பெண்மையின் ஒழுங்கமைவு, பால் என்ற பதத்தின் தளத்திலிருந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.

பாலின் மதிப்பு பாலினமாக இயல்பாக்கப்பட்டிருக்கிறது. பால் என்பது கலாச்சாரத்தில் பாலினமாக மறுதலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாலை நேரடியாக புரிந்துகொள்ளப்படுவதை விட பாலினமாக புரிந்துகொள்ளப்படுவதுதான் நடப்பில் இருக்கிறது. பால் ஒரு கதையாக அதீத கற்பனையாக புனைவாக இருப்பதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. தன்னிலை என்பது பாலின உறவில் பிணைந்து வருகிறது. பாலினமாக கொள்ளப்படுவது முதலில் தன்னிலைக்கு முன்பாக செயல்பட்டு அது கோரும் தன்னிலையாக பாவிக்கிறது. மனிதம் உருவாவதற்கு முன்னரே பாலினம் செயல்பட்டுவிடுகிறது. பாலினமாக பெயரிடப்படுதலே பாலின விதிகளை நிர்ணயித்துவிடுகின்றது. மொழி அல்லது சமூகம் அல்லது மொழியாடல் தன்னிலையில் பிரதிபலிக்கும் போது தன்னிலையின் மீமெய்யியல் வலுப்படுகிறது. இங்கு தன்னிலை கட்டப்படுவதாக கொள்ளப்பட்டால் இந்த கட்டமைப்பில் தன்னிலையும் அதன் செயல்பாடும் தோற்றம் கொள்வதாக வலியுறுத்தப்படுகின்றன. இந்த வலியுறுத்தலில் பால், உற்பத்தியும் செய்யப்படுகிறது; உறுதியின்மையும் ஆகிறது.

பெண்மை என்பது பொருளாம்சத்திற்கும் பொதுமைக்கும் பிரதிநிதியாக ஆக்கப்படுவது சிக்கலானதல்ல. மாறாக பெண்மை உருவுக்கும் பொளுக்கும் பொதுமைக்கும் தனிப்பட்டதற்குமான இருமைகளுக்கு வெளியில் இருப்பதால் சிக்கலாகிறது[2].

சதை தொகுப்பின் அம்சமாக பெண் தன்னிலை வார்க்கப்பட்டிருக்கிறது. அல்லது சதை தொகுதிகளாக சதை பிண்டங்களாக பெண்மை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. வளையல்களாகவும் அவற்றின் ஒலிகளாகவும் அவற்றை அணிவதன் மகிழ்வாகவும் அவற்றின் வரலாறாகவும் அவற்றின் உறுப்பாகவும் பிளக்கப்பட்டிருப்பதை நுண்மையுடன் மறைக்கப்படும்[3] இடங்களும் உண்டு. பொருள்வயின் பிரிந்தாலும் போர்வயின் பிரிந்தாலும் உடல் மெலியும் நலியும் காமத்தின் பாற்பட்ட பிரிவாக மாற்றிப் பார்க்கும். பேராசை பிம்பமாகவும் குடும்பத்தின் இணைப்பு கண்ணியாகவும் அழும் கண்களாகவும் கணவன்களை பிணைத்திருக்கும் அங்கமாகவும் ஆண் துணை சேர் வாழ்வை பெரிதும் விரும்புவதாகவும் இருக்கும் பெண் தன்னிலையாக வகுக்கப்பட்டிருக்கும். பெண்மை என்ற உடல் பாலியல் தன்னிலையாக வேர்கொண்ட அழுத்தம்தான் புனைவாக பொருளாக சொல்லாக மொழியாக வரையப்படும். எதிர்பால் விழைவுகள் கொண்ட விதிகளுக்கு உட்படுவது, அருள் பாலிப்பதும் அருள் பெறுவதும் நிறைகொள் உணர்வாய் இருப்பது, என்று பெண் தன்னிலை உருக்கொள்கிறது. நகையும் பொய்யாய் உணர்ச்சியும் மிகையாய் செயற்கையும் பகட்டும் மீதூர பகடையாய் பரவசப்படுவதும் பெண் தன்னிலையின் பாவனைகள் புகலப்படுகின்றன. உடல் மேன்மை பாராட்டும் அரூபமாக பாவையாக பின்னியிருக்கும் பெண் தன்னிலை அதிர்ச்சியான இன்பப் பீறிடல்களையும் நிகழ்த்துகிறது அவ்வப்போது. சேலை கட்டும் அதியம் ராமர்களைத் தேடும் செயபாட்டுத்துவம், புணர்வின் மீறல்களை அடுக்கும் மயக்க பிதற்றல்கள் என பெண் தன்னிலை புதுக் கோணல்களைத் தீர்மானிக்கிறது[4]. மணபந்தம் மீறிய உறவுகளின் தேவைகளை நிர்ணயிப்பதும் உள் புழுங்கும் வேட்கையின் பொங்குதல்களை மடைமாற்றுவதும் தோற்பாவைகளின் நிழல்கூத்தாடிகளாய் மரபை இடமாற்றம் செய்வதும் பெண் தன்னிலையின் நெருக்கடிகளுக்கான பதில்களாக இருக்கின்றன. தெய்வம் தொழுது கொழுநன் தொழுது மழை பெய்விக்கும் இயற்கை விதி மீறிய ஒழுக்கம் புலன்சார் இறையாய் அடைக்கப்பட்டுவிட்டதால் இனி காமத்திலும் காயத்திலும் புரண்ட புழங்கிய வெளியாய் தன்னிலை விடுவிக்கப்படுகிறது. பொது உடலாக தனி உடல் தன்னிலையில் இணைக்கப்பட்டிருக்கிறது. பெண் என்பதே இல்லை என்ற முன்தீர்மானத்தில் தன்னிலையை கட்டமைப்பது லிங்கமையவாதத்தின் ஒழுங்கமைவுதான். அதனால் உருவாகும் பெண் என்பதே ஒரு பன்மைத்துவமாக கொள்ளப்பட்டால் இருமை பிளவை தவிர்க்க முடியும். எல்லா மனப்பிறழ்வுகளையும் இடிபல் முக்கோணத்திலிருந்து விலக்கிவைக்க முடியும். ஆனால் பெண் என்பதே பெண்மை என்ற விதிகளிலிருந்து கட்டமைக்கப்படுவதாக மாறுகிறது. பொம்மை விளையாட்டின் குழந்தையான சிறுமியிலிருந்து பெண் உடலாக மாற்றம் பெறுவதைத்தான் பாலினத்தின் சிக்கலாக தன்னிலையின் உருவாகலாக தொடரப்படுகிறது. மழலை பேசும் சிறுமியின் தாயாக மாற்றமடையும் அடையாளம் தன்னிலையை சங்கேதப்படுத்துகிறது.  எதிர் பாலுறவின் அடிப்படையில் உருவான தன்னிலை ஆண்மையின் அடிப்படையில் பெண்மையை முன்னிலைப்படுத்துகிறது. அண்ணன், தம்பிகளுக்கும் அக்கா, தங்கைகளுக்கும் என்று உறவுகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டப்படும் உடல் முன்னுரிமையின் அடிப்படையில், சிறுமியின் உடல் பெண்ணின் உடலாக விதிகளின் அடிப்படையில் முன்தீர்மானிக்கப்பட்ட விதிகளின் உடலாக மாற்றம் பெறுவது படைப்பின் சிறுகளமாகிவிடுகிறது[5]. பெண் தன்னிலை தன்னை தானாக முன் நிறுத்துவது மற்றமையின் விருப்பத்திலிருந்துதான். தாய், மகள், சகோதரி, மனைவி என்று உறவின் பாற்பட்ட தன்னிலையாக இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பிளவுறும் தன்னிலையை காணவேண்டியதாக அலைவுறும் புள்ளிகளில் நிலைபெறுவதாக கொண்டுவிட, படைப்பில் கண்டுவிடத்தான் பொருளாம்சத்தை தேடவேண்டியிருக்கிறது.

  




[1] Judith Butler, Bodies that Matter On the Discursive Limits of Sex
[2] The problem is not that the feminine is made to stand for matter or for universality; rather, the feminine is cast outside the form/matter and universal/particular binarisms. Judith Butler, Bodies that matter On the Discursive Limits of Sex P.42.
[3] சகீனாவின் வளையல்கள்-ஜாஹீரா சையது,ஆப்கானிய சிறுகதை மொழிபெயர்ப்பில், திண்ணை இணையதளம்
[4] பெருந்தேவி கவிதைகள்
[5] வசியம்- காஞ்சனா தாமோதரன் சிறுகதை-திண்ணை இணைய தளம்


மந்திரச்சிமிழ்-இதழ் 7-10 ஏப்ரல் '11-மார்ச் '12 இதழில் வெளியான கட்டுரை 

   

  



Bibiliography
1.Judith Butler-Bodies that Matter On the Discursive Limits of Sex
2.Virpi Lehtinen-Luce Irigary's Philosophy of Feminine Being:Body, Desire and Wisdom
3.Ian Buchanan and Claire Colebrook(Ed)-Deleuze and Feminist Theory
4.Chrysanthi Nigianni and Merl Storr(Ed)-Deleuze and Queer Theory
5.நீலி-மாலதி மைத்ரி கவிதைகள் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், 2005
6.காலச்சுவடு இணையதளம்
7.திண்ணை இணையதளம்
8.இன்னபிற வலைப்பூ
9.குட்டிரேவதி கவிதைகள் வலைப்பூ
10.சங்க இலக்கியம்-தமிழ் இணைய நூலகம்.



















Wednesday 4 January 2012

பெண்:புராணம்-பிளவு-தன்னிலை:பகுதி 2

2.பிளவு

எதிர்பால் பிளவு இருமைகளின் நிகழ்வை நெறிமையாக்க லிங்கமையமொழியின் அபிநயம். தலையில் மழை துளிகள் விழுந்ததால் பேரொலி எழுப்பும் அரவம் போல் பாலியல் விழைவின் ஒப்பிடல்[1]. இல்லை எனில் மெய் மலிந்த காமம் என்று மிகை கொள் போக்காக நிலைப்பு. ஆண்மை/பெண்மை என்ற இருமைகளில் காணாமல் போகும் பெண்மையும் மேலதிக பெண்மையுமாய். ஆண்மையின் ஊடுருவலாய் பெண்மையை லிங்கமையமொழி பின்னி, தாய்/கொள்கலன் என்ற மேலதிக பெண்மையை நெய்யும். ஆயமும் ஊரும் கோவலரும் வடித்தெடுத்த பெண்மை மொழிவது காமத்தின் மொழி அல்லது பேரார்வமான பாலியல் விழைவு. அறத்தின் நிலைபேறாக இருப்பதும் வேட்கையை ஆட்டுவிப்பதும் என பல பூணுதல்களைக் கொண்டிருப்பதால் ஆண் உடலின் தேடலில் பெண்மையை விளைவித்திருக்கும் லிங்கத்தை ஊடுருவக் கோருவதாக சிருங்காரச் சுவை கூட்டும். தோலின் மெய்ப்பாடுகள் துலங்கும் சிலிர்ப்புகளை பெண்மையின் குறித்தலில் சேர்த்து இரங்குதலையும் பிரிதலையும் புணர்தலையும் பொருள் கொள்ள வைக்கப்படும். அல்லது உறையிலிடாத உப்பாய் கரையும் முத்தமாக சேர்க்கப்படும்[2]. காணாமல் போயிருக்கும் பெண் உடலாய் மொழி பேசி பெண்மையின் நிழலாட. தோலில் நிலைபெறும் உடலாய் பாவித்து பாலியல் சமைக்கும் பண்டமாய் பிரவாகிக்கும். சிறைபட்டிருக்கும் உடலில் சிறைபட்டிருக்கும் பெண்மையாக தோலின் நிலையை அறிவித்து நிற்பதாக படிக்கப்படலாம். பூக்காத உடல் பெண்மை கொண்டதாக சிறைபடாதிருப்பதும் தனிக்காட்டு மானாய் தொலைந்து போவதும் முன் தீர்மானிக்கப்பட்டதாவும் இருக்கலாம்[3]. ஆணின் பெண்ணாக ஆணின் பிரதிபிம்பமாக உருவற்ற ஒன்றாக, நீர்மமாக, கொள்கலனாக, உணர்வாக, தாய்மையாக, செவிலியாக பாத்திரமற்றவளாக பிளவுறுவதுதான் நிகழ்த்துதலாக இருக்கிறது. மனம் எனும் உடலையும் உடல் எனும் மனதையும் இணைத்திருப்பதில் பெண்மையின் நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. ஆண் உடலின் தேவை போல் பெண் உடலின் தேவையை வர்ணிப்பதும் சமநிலையாக விடுதலையை பாவிப்பதும் விடுதலையாக இருப்பது உடலின் எல்லை மீறலாக புனைவதும் பாலின பிளவை பெரிதாக்குவதும் லிங்க மைய மொழி அமைப்பாகக் கொள்ளப்படலாம். பெண்மைக்கான உடல் என்று பிளவு எப்படி நிலைபெற்றது என்றும் பெண்மையின் உடல் பெருமையாக அல்லது தோற்றத்தின் நிலைபேற்றாக அறத்தின் சார்பில் விளைந்த பிளவாக தோற்றம் கொள்ள வைப்பதும் இருமை பண்புகளின் முடிந்த முடிபுகளாக மாறிப் போகலாம். மீமெய்யியலிலிருந்து உருவான பிளவுதான் என்றோ அல்லது உள்ளீட்டின் ஒரு வடிவம் என்றோ கொள்ளத்தான் உடல் வேறுபாடு உறுப்புகளின் வேறுபாடாக கொள்ளப்பட்டும் இருக்கும். மறு உற்பத்தி உடல் என்ற உணர்வு கொண்ட உடல் இப்படி பிளவை சாத்தியப்படுத்துகிறது வரலாற்றின் அடிச்சுவட்டில் சிக்கி. சிறைபட்டிருக்கும் பாலினத்தில் சிறையான உடலாய் பாவிக்க.

தாய்மை/பராமரிப்பவர் என்பது மனித வடிவத்தை ஒப்புமை கொள்ளும் உருவகம் அல்ல. ஆனால் அது மனித எல்லையில் உருவான  விதிகளுக்குட்பட்ட ஒரு வடிவமற்ற, வடிவமற்றுப் போவதான அச்சத்தைக் கொண்டது. அது ஒரு வடிவமோ அல்லது உருவோ அல்ல அதனால் அது ஒரு உடலே அல்ல .[4]

சான்றோனாக்கும் தாயாக குழந்தையை போர்க்களம் அனுப்புபவளாக கொள்கலனாக நிரப்பப்படும் நிறையாக இல்லாத குறையாக உடல்சார் உற்பத்தியின் எந்திரமாக இருப்பதாக முன் தீர்மானத்தை ஏற்று பெண்மையை நவில்ந்துவிடும் போக்கும் இருக்கும். பரிகாரமாக இருப்பதும் உடலின் பலவகையான போலச் செய்தல்களாகவே இருக்கும். நளினத்தின் தேர்வில் பகடி செய்வது மட்டுமே உரித்தானதாக மாற்றப்பட்டிருப்பதால் தாய்மையின் அரங்கேற்றமும் மீள் உற்பத்தியும் பூமாதேவியின் வாழ்தல் என, அடிவயிற்றுக் கோடுகள் என முட்டை இடுவதை கற்பனை செய்வதைப் போல இங்கு போன்மைகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்[5]. ஆண் உடலின் கிளையாய் பரவி நிற்கும் பெண்மையை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்த்தவைக்கும் படலம் வனபேச்சியின் காட்டை ஈன முடியாத வதைக்கு உட்படுத்துகிறது[6]. நிலைக்காத ஒருவன் உடன் அழைக்காத ஒருவன் கரம் பற்றி கருவறை தாண்டுவதும் ஆணின் பெண்ணற்றதும் ஆணின் பெண்ணானதுமான விளையாட்டின் ஒரு படி. பெண்ணின் உருவாகுதலாக இருக்கும் இடத்தில்தான் பெண்மை எனும் பாலினத்தை ஊன்றிவிட்ட புள்ளியாக கொண்டுவிடலாம்தான்[7]. 

பிறழ்ச்சிப் பெண்மை, அன்புக்குரிய பெண்மை, மாயப்பெண்மை என்று பெண்மையை ஆணின் பெண்ணாக வகைமைக் கொண்டுவிடலாம்[8]. பிறழ்ச்சிப் பெண்மையின் பாலியல் விழைவுகள் ஆணின் பெண்மையாக இல்லாத நிலையின் வெளிப்பாடாக இருக்கலாம். உயவு நோய் அறியாது துஞ்சும் ஊரின் மீது வெறுப்படைந்து தாக்கும் பாலியலை வெளிப்படுத்தும் பிறழ்வுற்ற செயல்முறையாக புனைவு உரைக்கப்படுகிறது[9]. சிதறி பிறழ்ந்து பொழியும் விருப்பத்தின் முதிர்வை சொல்லிச் செல்லும். காமத்திலும் காயத்திலும் புரண்டு கோடையின் சுழலாய் இசை மேலெழும்புகிறது[10], விருப்பமாக. சிறைப்படுத்தலின் விதிகளை மீறி எழுந்த இசையாய் விருப்பம் அறிவிப்பது ஒழுங்கின்மையை. பாலியல் ஒழுங்கின்மையை. பெண்மையின் வகைமைகளாய் போலச் செய்து கொண்டிருக்கின்ற லிங்கமையத்தின் சொல்லாடலில் மாற்றை மற்றமையை இன்மையாக பொருளாம்சம் கொள்ள வைப்பதில் சிக்கல் கொண்ட பாத்திரமேற்பு பரிதவிக்கிறது. முடமாவதிலும் முடங்கிப்போவதிலும் பெண்மையின் மொழியை தேடி நிறுவி விடுவது பெண் உருவாகுதலின் ஒரு பகுதியாகிவிடலாம். மூதுரைகளின் பிடியிலும் அறவரிகளின் நிலைப்பிலும் பெண்ணாக உருமாறுவது ஆணின் பெண்ணாகத்தான். பெண்ணை பெண் பதிலி செய்வதும் உடல் பொருளாம்சத்தால்தான். ஒரே வார்ப்பிலான பெண்மையின் ஸ்தானத்தை விதிபலனாய் முகிழ்த்த மொழியாம்சத்தின் உட்பொருளாக பதியவைப்பதும் நடக்கிறது. உடலின் பிறப்பை விட உருவாக்கப்படுவதுதான் பாலினத்தை முற்ற வைக்கிறது என்பதில் நிகழ்த்துதல் மாய வலையாக பின்னப்படுகிறது. பெண்மையின் மொழிதலாக விருப்பம் அழுத்தப்படுகிறது. கண்காணிக்கப்படுகிறது. ஒடுக்கப்படுகிறது. நோய்மைப்படுகிறது.

பெண்மையின் குணாம்சங்களாக அடைக்கப்பட்டவை இடம்பெறும் இடமாக கொள்கலன் இருக்கும். பெண்மை, தாய்மை மற்றும் பராமரிப்பை எதிர்க்கிறது. இந்த பெண்மை எனும் குறியின் கீழ் வரும் எல்லா விலக்கப்பட்டவைகளின் எச்சங்களையும் இந்த கொள்கலன் என்பது நிகழ்த்தி, நடித்துக் காட்டுகிறது அதனால் இந்த கொள்கலன் என்பது ஒரு பிரதிமை ஆகிறது. ஆனால் கொள்கலனை சாதாரணமாக எளிமையாக பிரதிமை என்று கொள்ளமுடியாது, அழைக்க முடியாது. ஏனெனில் பெண்மை சிலவற்றை விலக்கிவைக்கிறது எதிர்க்கிறது விலக்கப்பட்டவற்றின் எச்சங்களை வெறுமனே நிகழ்த்தி அல்லது நடித்துக் காட்டுகிறது அது எந்த பாத்திரத்தில் நடிக்கிறதோ அல்லது நிகழ்த்துகிறதோ அதை ஒரு படிமமாக கொள்ளலாம்.[11]

அன்புக்குரிய பெண்மை என்பது பெண்ணை உடலாக பதிலி செய்யப்படும் உடலாக பாவித்துக் கொள்ளும் மொழிதலில் கட்டமைக்கப்படுவது. குடும்பத்தை உடைப்பதில் ஒழுக்கத்தின் நிலைப்பாட்டை மீறாமல் இருக்கும் உடலாக விழைவை முயங்கச் செய்வதில் அன்புக்குரிய பெண்மை மருளுகிறது. மருட்டப்படுகிறது.

மாயப் பெண்மை, இறையை விருப்பத்தின் வெளிப்பாடாய் மோகிப்பதாக இறையாய் விருப்பம் மயங்குவதாக நிலைப்படுத்தப்படுகிறது. கற்பூரமும் கமலமும் பவளச் செவ்வாயும் நாறுவதும் சுவைப்பதும் இறையில் சங்கமிக்கும் விருப்பத்தின் நுகர்வு[12]. இறையாய் லிங்கமையத்தை மேம்படுத்துவதும் அதன் பால் அருளாய் காதலைப் பெறுவதும் மாயப்பெண்மையின் வாழ்நிலை. தூய பக்திக்கு கிடைக்கும் தூய காதல் என்பதாகவும் தூய பாலியல் என்பதாகவும் பொருளாம்சம் விரிவுபடுகிறது. இறையின் அறிவில் மெய்மறந்து மெய்யை மறுத்து ஆண்மையின் உயர்வாய் கொண்டு மெய்ப்பொருளாய் கண்டு உய்வித்துவிடும் பெண்மையும் உண்டு. ;மாயப்பெண்மையின் இறை லிங்கமையத்தின் மீதான விருப்பத்தேர்வு லட்சிய ஆண்மைக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. லட்சிய ஆண்மைதான் மாயப் பெண்மையை வரையறுக்கும். துறவின் வழியில் வற்றிவிட்ட பெண் பாலியலாகவும் அல்லது பேயாகிவிட்ட பெண் பால் உடலாகவும் வர்ணிக்கப்படலாம்.
'நீ என்னுள் இல்லை. நான் உன்னை என்னுள் கொள்ளவில்லை. என் வயிற்றில் என் கைகளில் என் தலையில் வைத்திருக்கவில்லை. என் நினைவில் என் மனதில் என் மொழியிலும் வைத்திருக்கவில்லை. நீ இருக்கிறாய் என் தோல் போல்'[13] என்ற தோலின் வரையறையாக பாலின சங்கமிப்பு அடிக்கோடிடப்படும். தோலின் சதையின் இளமையின் கறையை வற்றிவிட்டு எலும்பின் பாலியல் இன்பத்தை பெற பேயாவதாக, ஏக்கத்தில் இருக்கும் அருள் எனும் இன்மையை அடைய விரும்பும் உடலாக மாறுவதும் வரலாறாகிறது[14]. உண்டிச் சுருக்கி அழகு பெற்று சொற்திரம்பாத கற்பைக் கொண்டு மரணத்திற்கு சமமான அடக்கத்தையும் மானத்தையும் பெற்று சிறையின் விதிகளில் சிறைபட்டு நிற்கிறது பெண்மை என்ற பால் மறைந்த அதீத புனைவின் மறுபெயர்[15].

மந்திரச்சிமிழ்-இதழ் 7-10 ஏப்ரல் '11-மார்ச் '12-ல் வெளியான கட்டுரை


[1] ஔவையார் பாடல் நற்றிணை 129, 187
[2] உறையிலிடாத முத்தம்-சுகிர்தராணி கவிதைகள்-காலச்சுவடு
[3] அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை-திண்ணை இணைய தளம்
[4] This receptacle/nurse is not a metaphor based on likeness to a human form, but a disfigu-ration that emerges at the boundaries of the human both as its very condition and as the insistent threat of its deformation; it cannot take a form, a morphe, and in that sense, cannot be a body.-Judith Butler, Bodies that Matter  On the Discursive limits of Sex P.41
[5] பூமாதேவி-நீலி,மாலதி மைத்ரி கவிதைகள் தொகுப்பு. ப 28
[6] வனப்பேச்சி-மாலதி மைத்ரி கவிதைகள்
[7] கருவறை-குட்டிரேவதி கவிதைகள்
[8] Virpi Lehtinen-Luce Irigary's Philosopy of Feminine Being:Body, Desire and Wisdom, P.65
[9] ஔவையார் பாடல் குறுந்தொகை 8
[10] ஒரு துளி இசையும் ஒரு பாம்புச்சட்டையும்-சுகிர்தராணி கவிதைகள்-காலச்சுவடு
[11] the receptacle is not simply a figure for the excluded, but, taken as a figure, stands for the excluded and thus performs or enacts yet another set of exclusions of all that remains unfigurable under the sign of the feminine—that in the feminine which resists the figure of the nurse-receptacle. Judith Butler, Bodies that Matter On the Discursive limits of Sex, P.42
[12] ஆண்டாளின் திருப்பாவை
[13] You are not in me. I do not contain you or retain you in my stomach, my arms, my head. Nor in my memory, my mind, my language. You are there, like my skin." Luce Irigary, Speculam of the Other Woman P.37
[14] காரைக்காலம்மையார், திருப்பதிகம்
[15] ஔவையார் ஆத்திச்சூடி.



மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...