Monday, 9 August 2021

குறுங்கதைகள்-கொலை





அவன் இன்னும் ஓர் ஆறு மாதங்களில் கொலை செய்யப்படுவான் என அவனுடைய குரு சொல்லிவிட்டார். அதுவும் ஒரு சிறுமியின் கையால் கொலை நடக்கும் என்பதையும் கூறியிருந்தார். ஆறு மாதம் பாதுகாப்பாக இருக்கப் பெரிய கோட்டை மதில் சுவர் உள்ள வீட்டைப் பார்த்துக் குடியேறினான். அந்த மதிலைத் தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும்படி செய்தான். அந்தச் சுவரில் ஓரிரு சிறிய துளைகளை இட்டான். பெரும்பாலும் அவன் வீட்டுக்கு யாரும் வருவதில்லை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மட்டும் அந்த மதிலின் வாசலைத் தாண்ட முயற்சி செய்யும். அவை வாசலுக்குள் வராமல் இருக்க கம்பி வேலி அமைத்து அதில் மின்சாரம் பொருத்தி வைத்தான். ஒரு துப்பாக்கியை எப்போதும் இடுப்பில் சொருகி வைத்திருந்தான். மின்சாரம் இல்லாத நேரத்தில் வேலியைத் தாண்டும் விலங்குகளைத் துப்பாக்கியால் கொன்றுவிடுவான். மதில் பக்கத்தில் யாராவது நடமாடுவது போல் ஒலி கேட்டால் அதில் இருக்கும் துளைகளில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுவிடுவான். ஆறு மாதங்கள் கடந்தன. ஒரு நாள் அவன் வீட்டின் நிலவறையில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுமி அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றாள். மின்சாரம் இல்லாததால் வாசலைத் தாண்டினாள். வீட்டைச் சுற்றி வந்தாள். வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிய ஆவல் கொண்டாள். பின் கதவைத் திறந்தாள் அது திறந்தது கொண்டது. யாருமற்ற அந்தப் பெரிய வீட்டில் வெளியே வைக்கப்பட்டிருந்தத் துப்பாக்கியை எடுத்தாள். அது தன் பொம்மைத் துப்பாக்கி போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். வீட்டின் அடிப்பகுதிக்குப் போவதற்கான படிகள் இருப்பதைப் பார்த்து அதில் இறங்கினாள். அங்கு அவன் தூங்கிக் கொண்டிருந்த அறையில் நுழைந்தாள். அவன் உறங்குவதைப் பார்த்து அவனுடன் விளையாடுவதற்காக அந்தத் துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறி பார்த்து இயக்கினாள்.   

 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...