Saturday 9 October 2021

குறுங்கதைகள்-சிப்பி





அன்று கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அழகிய சிப்பி அவளுக்குக் கிடைத்தது. அதனை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டு தன் நண்பர்களிடம் காட்டினாள். அதன் அழகில் மயங்கிய அவள் பள்ளித் தோழன் அதனைத் தரும்படி கேட்டான். அதற்கு மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் தனக்குப் பிடிக்காத உணவைப் பார்த்து முகம் சுழித்தாள். அந்தச் சிப்பியைக் கையில் வைத்துக் கொண்டு தனக்குப் பிடித்தமான உணவு கிடைக்க ஏங்கினாள். உடனே அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகள் வந்தன. அவள் குதூகலத்துடன் அவற்றைச் சாப்பிட்டு உறங்கிப் போனாள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்று அந்தச் சிப்பியைக் கையில் வைத்து தேவையானவற்றைக் கேட்டால் உடனே வரும் என்று கூறினாள். அவளுக்குப் பிடித்த புத்தம் புதிய உடைகள் வரும்படி கேட்டாள். அவை உடனே வந்தன. அவளுடன் படித்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. வீடு வந்து சேர்ந்தவளுக்கு தன் வீடு மாளிகை போல் ஆகவேண்டும் எனக் கேட்டாள். மிகப்பெரிய அரண்மனையில் அவள் அமர்ந்திருந்தாள். தான் பெரியவளாகி இளவரசி ஆகவேண்டும் என நினைத்தாள். அவள் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாகிவிட்டாள். தன் அண்டைநாட்டு இளவரசனை முடித்தாள். இருவரும் கப்பலில் பல ராஜ்ஜியங்களைப் பார்க்கக் கிளம்பினார்கள். தன் கையில் இருக்கும் சிப்பியால்தான் தனக்கு இந்த வாழ்வு கிடைத்ததாகக் கணவனிடம் கூறினாள். அதை வாங்கிப் பார்த்த இளவரசன் இது எங்கே கிடைத்தது என்று கேட்டான். தான் சிறுவயதில் விளையாடிய கடற்கரையில் கிடைத்ததாகக் கூறினாள். சிறுவயதில் தன்னுடன் விளையாடிய போது ஒரு சிறுமி இதே போன்ற சிப்பியைத் தன் கையில் கொடுக்காததை எண்ணிக் குறைப்பட்டுக் கொண்ட இளவரசன் அந்தக் கடற்கரைக்குத் தான் சிறுவனாகச் செல்லவேண்டும் என்று நினைத்தான். அந்தக் கடற்கரையில் எடுத்த அழகிய சிப்பியுடன் சிறுவன் வீடு வந்து சேர்ந்தான். பெரிய அரண்மனை கேட்டான் உடனே கிடைத்தது. வளர்ந்து பெரியவனாகி பெரிய ராஜ்ஜியத்தின் இளவரசனாகக் கேட்டான். உடனே இளவரசன் ஆகிவிட்டான். அண்டை சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியை மணமுடித்தான். இருவரும் கப்பலில் பயணம் செய்தார்கள். சிப்பியால்தான் இந்த அளவு வளர்ந்து இந்தக் கப்பல் வரை வந்து சேர முடிந்ததாகத் தன் மனைவியிடம் கூறினான்.  

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...