Tuesday 5 October 2021

குறுங்கதைகள்-மரகதச் சாவி

 



பள்ளி முடிந்து காட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்த அவனுக்குப் புதரின் பின்புறத்தில் ஓர் அங்குலம் அளவே இருந்த மரகதக் கல்லாலான ஒரு சாவி கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்த அவனுக்குள் குதூகலம் பிறந்தது. இந்தச் சாவி திறக்கும் பூட்டு எங்கிருக்கும் என யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது வானத்தில் ஒரு பெரிய கருடன் பறந்து வட்டமிட்டது. இவனுக்கு லேசாக அச்சம் தோன்றியது. எழுந்து வீட்டுக்குப் போய்விடலாமா என நினைத்தான். கருடன் மெதுவாக இறங்கி அவனருகே வந்தது. உனக்கு ஒரு சாவி கிடைத்ததா என கருடன் கேட்டது. ஆம் என்றான். என்னுடன் நீ வந்தால் உன்னை இந்தச் சாவி திறக்கும் பூட்டு உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றது. அதற்கு ஒத்துக் கொண்டு அதன் பின்னால் ஏறி அமர்ந்தான். கருடன் வெகு தூரம் பறந்து ஆறிப்போன எரிமலையின் வாய்ப் பகுதியில் நுழைந்தது. உள்ளே சாம்பல் வாசம் வீசியது. அந்த மலையின் உட்பகுதியில் ஒரு சுரங்கம் இருக்கிறது. அதற்குள் போனால் ஒரு பெரிய எறும்பு ஒரு கதவைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். அவன் வைத்திருக்கும் சாவியைக் காட்டினால் உள்ளே அனுமதிக்கும் என்று சொல்லி கருடன் அவனை இறக்கிவிட்டது. இவன் மெதுவாக நடந்து உள்ளே போனான் ஒரு பெரிய எறும்பு அந்தக் கதவிற்குக் காவல் நின்று கொண்டிருந்தது. இவன் சாவியைக் காட்டினான். உள்ளே போக அந்த எறும்பு அனுமதித்தது. அந்தக் கதவு திறந்தவுடன் மஞ்சள் ஒளி அவன் கண்களைக் கூசச் செய்தது. அதில் தடுமாறி நடந்தான். புகை மண்டலம் போலவும் இருந்தது. அந்தப் பாதையின் இறுதியில் பெரிய கதவுகள் இருந்தன. அந்தக் கதவுகளுக்கு மிகச்சிறிய பூட்டு இருந்தது. அவனுடைய சாவி கொண்டு அதனைத் திறந்தான். அங்கு அவனுக்குப் பிடித்த தின்பண்டங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. மிக அழகிய விளையாட்டுப் பொருள்கள் மற்றொரு வரிசையில் அடுக்கப்பட்டிருந்தன. வேறொரு பக்கம் அழகழகான கண்ணைப் பறிக்கும் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. இவனுக்கு எதைத் தொடுவதற்கும் பயமாக இருந்தது. இவன் தயங்கி நிற்பதைப் பார்த்து எங்கிருந்தோ வந்த முதியவர் இவனை அழைத்து அவை எல்லாமே அவனுக்காகத்தான் என்றார். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் இதை எனக்குக் கொடுக்கிறீர்கள் எனக் கேட்டான். மரகதச் சாவி யார் கண்ணிலும்படாமல் அவனுக்குக் கிடைத்திருப்பதால் அவன் உயரிய பரிசுகளைப் பெறத் தகுதியானவனாகிறான் என்றார் முதியவர். இவற்றை எல்லாம் தன்னால் எடுத்துச் செல்ல முடியாதே என்றான் சிறுவன். அவன் தினம் அங்கு வந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் முதியவர். ஒரே ஒரு விதி அவன் மரகதச் சாவியைப் பத்திரமாக வைத்திருக்கவேண்டும் என்றார். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்த வழியிலேயே கருடன் துணையோடு திரும்பி வந்து சேர்ந்தான். மரகதச் சாவியைத் தொட்டுப் பார்த்து கொண்டே தூங்கிப் போனான். கனவில் மீண்டும் அந்த இடத்துக்குப் போனான். இரவில் அந்த இடம் பாம்புகளும் கொடூர விலங்குகளும் வாழும் இடமாய் மாறியிருந்தது. இவன் பயந்து கருடனை அழைத்து தன் இடத்திற்கு வேகமாய்த் திரும்பினான். அடுத்த நாள் அந்த மரகதச் சாவியைக் கொண்டுபோய் காட்டில் வீசிவிட்டு வந்தான்.   

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...