Wednesday 21 August 2024

பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு






(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை)


பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரேமாவின் படைப்பாக்கமும் பெண்ணியம் சார்ந்தே அவருடைய இந்தச் சிறுகதைத் தொகுப்பான எங்களோட கதையில் உள்ளது. பல்வேறு வாழ்வியல் நிலைகளில் பெண்கள் படும் பாட்டை இந்தத் தொகுப்பின் பத்து கதைகளில் எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள பெண்களை கீழ் வரும் வகையில் வரிசைப்படுத்தலாம்:

1.உறுதியானவர்கள்

2.அப்பாவியானவர்கள்

3.தனித்திறன் கொண்டவர்கள்

………………

1.உறுதியானவர்கள்

இந்த வகைமையில் உள்ள பெண்கள் தங்களின் முடிவைத் தானே எடுக்கும் நிலையில் இருப்பவர்களாக இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர்களிடம் பொறுப்பு உள்ளது. மேலும் ஆண்களைச் சார்ந்து நிற்கக் கூடாது என்ற எண்ணத்தில் உறுதியானவர்களாக உள்ளனர். இதுதான் பெண்ணியம் காட்டும் உறுதி. அதை ஆசிரியர் பாத்திரங்கள் வழி கொண்டு வந்திருக்கிறார். பெண்களிடம் அரிதாகக் காணக்கிடைக்கும் இந்த உறுதியை இந்தக் கதையின் பாத்திரங்களிடம் படைத்திருப்பதன் மூலம் இயல் வாழ்வில் பெண்களுக்கான பாதையாக எது இருக்கவேண்டும் என்று காட்ட நூலாசிரியர் பிரேமா அவர்கள் விரும்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, பரிதவிப்பு என்ற கதையின் நாயகியும் எனக்கான காற்று என்ற கதையின் நாயகியும் இத்தகைய உறுதியானவர்கள் என்ற வகைமையில் வரக்கூடிய பெண் பாத்திரங்களாக உள்ளனர். பரிதவிப்பு கதையில் நாயகி தன் அம்மாவிற்காகச் சிறுநீரங்கத்தைத் தானம் கொடுத்ததற்காக காதலனைப் பிரிய நேர்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக வாழ்வது என்ற உறுதியாக முடிவெடுக்கிறாள். மீண்டும் தன் காதலன் வந்து திருமணம் செய்து கொள்ளக் கேட்ட போதும் அதை அவள் ஏற்பதில்லை. இது போன்ற உறுதி பொதுவாக, ஆண்களிடம் இருப்பதாக இதுவரைச் சமூகம் எண்ணி வந்ததை மாற்றி அது பெண்ணிடமும் இருப்பதாக இந்தக் கதை காட்டுகிறது. அதைத் தவிர பெண் தனக்கான பொறுப்பாகச் சிலவற்றைத் தானே ஏற்பதும் ஒரு விடுதலையான பெண்ணின் பாத்திரத்தை இந்தக் கதை வரைந்து காட்டுகிறது.

மற்றொரு கதையான எனக்கான காற்று என்ற கதையின் நாயகி ஒரு பாடகி. காதலித்து மணந்த கணவன் குடிக்கு அடிமையாவதுடன் தன் மகனும் குடிக்கு அடிமையானதைப் பார்த்துப் பொறுக்காமல் விவாகரத்தைத் தேர்ந்தெடுப்பது பெண்ணுக்கான உறுதியான முடிவாக உள்ளது. அது தவிர, தன்னுடைய சுயமான காற்றைச் சுவாசிக்க இது போன்ற உறுதியான முடிவு தேவை என்று பெண் தீர்மானிப்பது குறித்து இந்தக் கதைத் தெளிவாகக் காட்டுகிறது.

தன்னிலை என்பது மற்றமையால் விளக்கப்படுகிறது என்பதுதான் பொதுவான விளக்கம். அதுவும் பெண்மை என்ற பாலினத்தின் தன்னலை ஆண்மை என்ற தன்னிலையின் மூலமாக விளக்கப்படுவதாக, நிறைவடைவதாக உளவியலாளர்களின் அவதானிப்பாக உள்ளது. ஆனால் பெண் அந்தத் தன்னிலையைக் குறித்து விழிப்புணர்வு அடைந்து தன்னுடைய தன்னிலை, மற்றமையால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதைப் புரிந்து அதிலிருந்து விடுவித்துக் கொண்டு தன் சுயம் சார்ந்த தன்னிலையை வளர்த்தெடுத்து அதற்கான மற்றமையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதுதான் பெண்ணியலாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அது போன்ற பெண்களை இந்தக் கதைகளின் பாத்திரங்கள் மூலம் காணமுடிகிறது. பெண் மைய ஆளுமைகளாக, பெண்ணாகுதல் என்ற வினையை நிகழ்த்துபவர்களாகப் பெண்கள் உருவாகவேண்டும் என்பதற்கான அடிப்படைதான் பெண்ணியத்தின் சாரமாக இருப்பதாகப் பல பெண்ணியலாளர்கள் கருதுகிறார்கள். அதற்கான எடுத்துக்காட்டுகளாக இது போன்ற உறுதி கொண்ட பெண்களைப் படைப்பதை பெண்ணியக் கருதுகோள்களைக் கொண்டவர்களின் பிடிப்பாக உள்ளது.

2.அப்பாவியானவர்கள்

இந்தக் கதைகளின் அடுத்த வகைமையிலுள்ள பெண்கள் அப்பாவியானவர்கள். இவர்கள் பெரிதும் தன்னுணர்வின்றி எதேச்சையான முடிவை எடுப்பவர்களாக அதனால் வரும் விளைவுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போக்கு பிறரைப் பாதிப்படையச் செய்துவிடுவதாக உள்ளது. ஆனால் சமூகத்தில் இத்தகைய பெண்களின் இயல்பு ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. பெண்ணின் சுயம் சார்ந்த போக்குகளை விமர்சிக்கும் நிலையில்தான் எப்போதும் சமூகம் உள்ளது. அத்தகைய பெண் இயல்புகளையும் அதனால் விளையும் பாதிப்புகளையும் குறித்து சில கதைகள் விரிவாகப் பேசுகின்றன.

எடுத்துக்காட்டாக, கள்ளிப் பாதையும் நுணாப் பூவும் என்ற கதையில் வந்த சிறுமி, ஓர் அப்பாவியான பெண். அவளுக்குச் சமூகத்தின் சூது வாது தெரியாது. ஆனால் அவள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் போது அதை எதிர்ப்பது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அதனால் அவள் காப்பாற்றப்படுகிறாள் என்பதை இந்தக் கதை ஆழமாக விளக்குகிறது. அந்தச் சிறுமியின் அப்பாவியான குணாம்சத்தின் மீது ஏற்பட்ட தாக்குதலை அவள் அதே விளையாட்டுத்தனத்துடன் சமாளித்துவிடுவதும் அதற்காகப் பின் வருந்துவதும் ஓர் இயல்பான பெண்ணின் போக்காக இந்தக் கதை காட்டுகிறது. அப்பாவித்தனம் என்பது பெண்ணின் இயல்பு என்றும் அதுதான் பெண்ணின் குணாம்சத்தில் ஆணைக் கவரக்கூடியது என்றும் இதுவரையிலான ஆண் மைய சமூகத்தின் அடிநாதக் கருத்தாக இருந்திருக்கிறது. அதனைப் பெண்ணுக்குச் சாதகமாக மாற்றி இந்தக் கதையில் எழுதப்பட்டிருக்கிறது. அப்பாவியாக இருந்தாலும் தனக்கு ஊறு நேர்ந்தால் அதை எதிர்க்கவும் துணியக் கூடிய அப்பாவித்தனமாக ஒரு பெண் இருக்கிறாள் என்பது பல சிறுமிகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஒரு படிப்பினை போல் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. 

            மற்றொரு எடுத்துக்காட்டு அக்கினி மனசு கதையில் வரும் நாயகி. காதலித்து மணந்த கணவனுடன் குடும்பம் நடத்துகையில் வறுமை வாட்டுகிறது. இருந்தாலும் கணவனிடம் தனக்கு பிரியாணி தேவை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி அதை அவன் வாங்கி வராததால் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறாள். ஓர் அப்பாவியான பெண்ணின் உள்ளத்தில் உள்ள குழந்தைத்தனமான பிடிவாதம் குறித்து இந்தக் கதை குவிமையப்படுத்துகிறது. அந்த நாயகியின் பொறுப்பற்றத்தனத்தைக் காட்டும் அதே வேளையில் பெண்ணின் இயல்பான அப்பாவித்தனம் குறித்து கதை அடிக்கோடிடுகிறது.

            அதே போல் ‘பிரம்மாண்டம்’ கதையின் நாயகியும் முதிய பெண்மணி. ஆனால் அமெரிக்காவுக்குத் தனியாகச் சென்று சேர்வது குறித்த கதை. அப்பாவியான பெண், அதனால் தனக்குத் துணையாக கடவுள் முருகன் இருப்பதாக எண்ணும் பெண்ணாகக் கதை காட்டுகிறது. மற்றொரு கதை மணிமேகலை காப்பியத்தின் ஒரு காட்சியைக் கதையாக்கி உள்ள இது தான் காதலா? என்ற கதை. இதில் மணிமேகலை அப்பாவியாக இருந்தாலும் நிதானமாக தன் உணர்வுகளைக் கையாளக் கூடிய பெண் என்பதைச் சித்தரித்த கதை.

பெண்மையின் குணாம்சங்களாக ஆண் மைய கதையாடல்களின் மூலம்தான் இதுவரைப் பலவும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அப்பாவியாக இருப்பது, தன் விருப்பத்திற்கு நடந்துகொள்வது போன்றவை ஆணின் குணாம்சமாக, சுதந்திரமாக வரையறுக்கபட்டிருக்கிறது. ஆனால் அது பெண் செய்யும் போது அவள் விமர்சிக்கப்படவேண்டியவளாகிறாள். அவள் ஆணின் நடத்தையைப் பிரதிபலிக்க முடியாது என்பதுதான் ஆண் மைய சமூகம் சொல்லும் ஒரு கருத்தாக்கம். அதனால் அந்த அளவுகோலை வைத்து பெண்ணின் குணத்தை அளப்பதோ அல்லது அவளுக்கான சட்டகங்களை உருவாக்குவதோ முறையாக இராது என்பதுதான் பெண்ணியத்தின் அடிநாதமான கருத்து.

3.தனித்தன்மையானவர்கள்

சில பெண்களுக்கு மட்டுமே தனித்தன்மையான சில குணாம்சங்கள் அமையும், அத்தகைய குணாம்சங்களை சில கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக மானுடம் வென்றதம்மா என்ற கதையில் வரும் நாயகி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உணவு கொடுப்பது என்ற செயல் அவளுடைய மனிதத் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. தன் குடும்பத்தின் நலத்தையும் மீறி அவள் இதைச் செய்கிறாள். மேலும் வயதானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடத்தை என்பது ஆணைவிட பெண்ணுக்கே உடனடியாக வரும் என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது.

            மற்றொரு எடுத்துக்காட்டாக, எனக்கு நீ மனைவி அல்ல என்ற கதையில் தன் கணவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவனுடைய மனைவி பாத்திரம் படும்பாடும் அவள் முழுமையாக அவனுக்கு ஆறுதலாக, குடும்பத்தைத் தாங்கி நிற்பதும் அவளுடைய தனித்தன்மையான குணாம்சமாக இந்தக் கதை காட்டுகிறது. அவளை ஒரு தாயாக அவளுடைய கணவன் மதிக்கிறான். இது போன்ற குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே இருப்பதை இந்தக் கதை மிகவும் விளக்கமாகக் காட்டியிருக்கிறது.

            இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதை எங்களோட கதை என்ற தலைப்புக் கதை. இதில் ஒரு கதை இல்லை பல கதைகள் உள்ளன. அதாவது பல பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு போல இந்தக் கதை உள்ளது. இந்தக் கதையை வாசித்தால் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளை வாசித்தது போன்ற உணர்வு ஏற்படும். இந்தக் கதையில் மொத்தம் எட்டு பெண்களின் கதை இடம்பெறுகிறது. ஒவ்வொன்றும் ஒரு தனிக் கதை போல் உள்ளது. இந்தக் கதையில் பெண்ணுக்கான வேலைகளை இன்னும் வீடு தீர்மானித்து வைத்திருக்கிறது என்பதில் தொடங்குகிறது பெண்ணுக்கான இடம் என்ற எதிர்ப்புணர்வின் குரல். பெண் வெளியில் வேலை செய்தாலும் அவளுடைய உடைமைகளைக் கணவன் உட்பட பலரும் எடுத்துப் பயன்படுத்துவது பற்றி அடுத்த எதிர்ப்பு தொடர்கிறது. அடுத்தது மிகவும் கொடுமையான கதை. மகளையே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் தன் கணவன் பற்றி ஒரு பெண்ணின் தீரா புலம்பல். இது முதல் கதை போல் இருந்தாலும் ஒரு பெண்ணின் வலிமையான உள்ளார்ந்த எதிர்ப்பாக உள்ளது. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலையை இந்தக் கதை காட்டுகிறது. அடுத்து குடும்பப் பொருளாதாரம் வீட்டின் பெரியவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறித்து ஒரு பெண் காட்டும் தீவிரமான எதிர்ப்பாக ஒலிக்கிறது. கணவன் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் கண்டிக்க முடியாமல் மனைவி படும்பாட்டைச் சொல்கிறது அடுத்த குரல். ஒரு பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிதாக எடுக்க முடியாமல் இருக்கிறாள். மற்றொரு பெண் வயதான பின் யாரும் துணை இல்லாத நிலையில் திருமணத்திற்கு வற்புறுத்தும் ஒருவரை மணக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாள். வேறொரு பெண் இரண்டாவது திருமணம் செய்து அதுவும் துயரத்தில் முடிந்ததைக் கூறுகிறாள். பெண்களின் வாழ்வு திருமணம் மூலம் பல வகையான இன்னல்களுக்கு ஆளாவதை இந்தக் கதைகளின் தொகுப்பாக உள்ள ஒரே கதை கூறுகிறது.

            பெண்களின் சுயமாகத் தீர்மானித்து தங்கள் வாழ்வைக் கொண்டு செலுத்த சமூகத்தின் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. ஆண்களுடனான உறவு பெரும்பாலான சமயங்களில் கேடில் முடிகிறது. பெண்கள் தனியாக வாழ்வது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது. குடும்பத்திலும் தங்கள் குரல் ஒலிக்கச் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் கொண்டவர்களாவும் ஆண்களைப் போன்ற ஒழுங்கற்ற வாழ்வுக்கும் ஏங்க முடியாத நிலையைக் கொண்டவர்களாகவும் பெண்கள் பெரும் துயருக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை வரையறுக்கிறது.

            பெண்களின் துயர் மிகுந்த வாழ்வு பெரும்பாலும் சுயமாக எடுத்த முடிவுகளால் ஏற்படுவதல்ல. ஆண்களாலும் பெற்றோராலும் மற்றோராலும் ஏற்படுவதாக உள்ளது. இத்தகைய வாழ்வை ஏற்று அதில் உழல்ந்து இறுதி வரைப் போராடி எந்த ஒரு பயனையும் பெறாது வாழ்வை முடிப்பவர்களாகப் பல பெண்கள் உள்ளனர். இந்த வகையான வாழ்வு குறித்த கேள்விகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த இது போன்ற கதைகள் தேவைப்படுகின்றன. பெண்மை என்பது உருவாகுதல் என்பார்கள் டெல்யூஜ், கத்தாரி. அதாவது பெண் என்ற நிலையை அடைதல் என்பது சமூகத்தால் இன்ன பிற அம்சங்களால் தடை செய்யப்பட்டு, மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் மீண்டும் பெண்ணாகும் நிலையை அடைந்தால்தான் சமூகத்தின் ஒடுக்கு முறை அகலும் என்ற கருத்தைக்கூற அந்தத் தத்துவவியலாளர்கள் இப்படி ஒரு கருத்தாக்கத்தை எடுத்துக் கூறுகிறார்கள். ஆண் கூட பெண்ணாகலாம். ஏனெனில் பெண் என்பது ஒரு மூலக்கூறு நிலை. பெண் மூலம்தான் படைப்பும், காப்பும், வளர்ப்பும் சாத்தியமாகிறது. அத்தகைய பெண் என்ற நிலையை அடைவது என்பதற்கான தடைகளையும் அதிகாரப் பரிவர்த்தனைகளையும் அறிந்து விழிப்புணர்வு அடைவது பற்றித்தான் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளும் பேசுகின்றன.

            இதைத் தவிர இந்தக் கதைகளில் ஆண்களின் பல்வேறு தீய குணங்கள் பற்றிய தீவிரமான வர்ணனைகளும் விமர்சனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆண்களின் பல குறைகளும் பல கதைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஆண்களின் இயல்பு குறித்த பெண்ணின் பார்வையாக இந்தக் கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களில் மிகவும் சில பாத்திரங்கள் மட்டுமே அதிகாரத்தைப் பிரயோகிக்காத, தவறான நடத்தைகளைக் காட்டாத, குழப்பம் இல்லாத குணாம்சம் கொண்டவைகளாக உள்ளன. பெண் மைய சிந்தனையில் ஆண்மை என்பது இத்தகைய குறை உடையதாகவும் இயல்பைக் கொண்டதாகவும் இருப்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. மேலும் ஆண்களின் இருப்பு என்பது பெண்களைச் சார்ந்து இருப்பதாகவும் பல கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இயல் உலகில் கூட இது போன்ற பெண்களைச் சார்ந்த வாழ்வை ஆண்கள் கொண்டிருப்பது வெளித்தெரியாமல் இருப்பதைப் பற்றிய ஒரு குரலாக இந்தக் கதைகளின் குரல் ஒலிக்கிறது. பெண்களின் ஆற்றலின் முன் ஆண்கள் சாதாரணர்களாக மாறிவிட்டதையும் இந்தக் கதைகள் ஆழமாகக் காட்டுகின்றன. மேலும் பெண்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆண்களுக்கும் பயனளிப்பதாக இருப்பதையும் முன்னெடுக்கக்கூடிய கதைகளாக இவை உள்ளன.

            மொத்தத்தில் இந்தக் கதைகள் பெண்ணியத்தை ஒலிக்கச் செய்யும் பிரதிகளாக உள்ளன. கதைகள் மிகவும் சுருக்கமாக உள்ளன. மேலும் விரிவாக இந்தக் கதைகளை எழுதினால் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்கும். 

Friday 9 August 2024

கேசவதி (சிறுகதை)

    


    

    அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட கூந்தல் இல்லை. அவன் போய் வரும் வழியில் பல பெண்களைப் பார்த்தான். சிலருக்கு நீளமான கூந்தல் இருந்தாலும் அவர்களிடம் பேச கூச்சமாக இருந்தது. அவனுக்கு பெற்றோர் இல்லை. அதனால் எப்போதும் நண்பர்களிடம்தான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான். அவனுடைய நண்பர்களிடம் தன் ஆசையை ஒரு நாள் சொன்னான். அவனுடைய நண்பர்கள் அவனுக்காகப் பெண் பார்த்தனர்.

ஒரு நண்பனுடன் அவனுடைய கிராமத்திற்குச் சென்றிருந்தான். அப்போது அங்கு ஒரு குலதெய்வ விழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவில் ஒரு பெண் தெய்வத்தைக் குலதெய்வமாகக் கும்பிட்டனர். அந்தப் பெண் தெய்வத்தின் வரலாறு பற்றி ஒரு பாட்டி கூறிக் கொண்டிருந்ததை அவளருகே அமர்ந்து அவன் கேட்டான். எங்க தெய்வம் அது. அதுக்குப் பேரு கேசவதி. அவளுக்கு நீளமா முடி இருக்கும். ஒரு தெரு வரைக்கும் போகும் முடி. அதைப் பாத்து சனம் பிரமிச்சு போய் நின்னுரும். அவளை கண்ணாலம் கட்டிக்க யாரும் வரல. வந்தவன் எல்லாம் முடிய பாத்து பயந்து ஓடிப் போய்ட்டான். கோயில்ல போய் முடி குடுக்கறதா அவ அம்மா நேந்துகிட்டா. பொண்ணைக் கூட்டிட்டுப் போய் மொட்டை அடிச்சா. கோயில்ல சுருண்டு விழுந்த அவ முடி அப்படியே பாம்பா மாறி படமெடுத்து ஆடுச்சு. அம்மாக்காரிக்குக் கண்ணு இருட்டிட்டு வந்துடுச்சு. மொட்டையான கேசவதி அப்படியே குளத்துல மூழ்கி செத்துப் போயிட்டான்னு சொல்றாங்க. காணாம போயிட்டதா சொல்றாங்க. எங்க கேசவதி அதுக்குப்பறம் இந்த ஊருக்கு எல்லாமே நல்லதுதான் செஞ்சா. விளையாத நிலம் விளைஞ்சது. கண்ணாலம் ஆகாத பொண்ணுங்களுக்கு கண்ணாலம் ஆச்சுது. வர்சா வர்சம் கேசவதிக்கு அல்லாரும் சேந்து விழா எடுக்கலாம்னு ரோசனை பண்ணி இத்தனை வர்சமா பண்ணிட்டு வந்திருக்கோம். இதுல யாராவது ஒரு பொண்ணு முடிய காணிக்கையா குடுப்பா. அப்போதான் கேசவதிக்கு மனசாறும்,’ என்று அவள் சொல்லி முடித்தாள்.

அந்தக் கதையைக் கேட்டதிலிருந்து சன்னதம் வந்தது போல் இருந்தது அவனுக்கு. அருகில் இருந்த கிராமத்தில் ஒரு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணை அவள் கூந்தலுக்காகவே யாரும் மணமுடிக்கவில்லை என்று நண்பன் அப்போது சொல்லக் கேட்டான்.  இவனுக்கு உடனடியாக அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அங்கே கிளம்பிப் போனான்.

நண்பனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களுக்கு நல்ல உபசரிப்பைத் தந்தனர். பெண்ணை அவள் அறையில் சென்று பார்த்து வரச் சொன்னார்கள். இவனும் அந்த அறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டான். பாம்பைப் போல் மிக நீளமாக அந்த அறை முழுவதும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது அவளுடைய தலைமுடி. அவனுக்கு அவளுடன் எப்படிப் பேசுவது என்று தயக்கமாக இருந்தது.

ஆனால் அவள்தான் தான் தேடி வந்த கேசவதி என்று முடிவு செய்துவிட்டான். அவளை அந்தக் கிராமத்தின் குலதெய்வம் போலவே அவனுக்குப் பாவிக்கத் தோன்றியது. அவளிடம் ஏன் இத்தனை நீள முடி வளர்த்தாள் என்று கேட்டான். அது கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்டதாக அவள் சொன்னாள். வெட்டிவிட்டால் இன்னும் பெரிதாக வளரும் என்று யாரோ சொன்னதால் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னாள். இனி எப்போதும் வெட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் நண்பன் அவளுடைய தலைமுடியின் நீளத்தை வைத்துக் கொண்டு எப்படி இவன் குடும்பம் நடத்துவான் என்று கேள்வி எழுப்பினான். அவள் கேசவதியின் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாள்; அவளைத் திருமணம் செய்ய அந்தக் குலதெய்வமே தன்னை அனுப்பியிருக்கிறது என்றான் இவன். இருந்தாலும் அந்த முடியை வைத்துக் கொண்டு தின நடவடிக்கைகளே சாத்தியமில்லை, தலைமுடியை வெட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னான் நண்பன். முடியை வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டதாகத் தெரிவித்தான் இவன்.

மணப்பெண்ணோ திருமணம் நடக்கவிருப்பதே பெரிய விஷயம் அதற்குத் தலைமுடி பெரும் அவஸ்த்தையாக இருப்பதாகக் கருதி  தலைமுடியை வெட்டிவிடச் சொன்னாள். இருந்தாலும் இவ்வளவு தலைமுடி வைத்துக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட தன் ஆசை சரியானதில்லையோ என்று சில சமயங்களில் அவளுக்குள் தோன்றியது.

திருமணத்தன்று அவள் முடி பாதி வெட்டிவிடப்பட்டது. அதைத் தூக்கிக் கொண்டு நடப்பதே அவளுக்குச் சிரமமாக இருந்தது. அவள் முடியை வெட்டியதைக் கண்டவுடன் அவனுக்கு மிகவும் துக்கமாகிவிட்டது. திருமணம் முடிந்து அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அவளுடைய தலைமுடியின் கனமும் அதனால் அவள் படும் சிரமமும் அவனுக்குப் பரிதாபத்தைக் கொடுத்தன. ஆனாலும் அவள் குலதெய்வத்தின் மறுபிறப்பு என்ற கருத்து மட்டும் அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

திருமணத்தின் போது வெட்டிய அவள் தலைமுடி சில நாட்களிலேயே மீண்டும் அசுர வளர்ச்சி அடைந்தது. அவனுக்கு அவளைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவனுக்கு ஒரு தெய்வத்துடன் குடும்பம் நடத்துவது போல் தோன்றியது. அது அவனை வேறோர் உலகத்திற்குக் கொண்டு செல்வது போல் இருந்தது. இருந்தாலும் அவளுடைய சிரமத்தைப் போக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுள் மேலோங்கியது.

அவன் அலுவலகம் சென்ற பின் ஒவ்வொரு நாளும் அவள் பல மருத்துவர்களைச் சந்தித்து தன் பிரச்னையைச் சொன்னாள். அவளுக்குச் சில மருந்துகளும் ஆலோசனைகளும் தரப்பட்டன. ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் அவன் தன் மனைவி குலதெய்வத்தின் மறுபிறப்பாகவே தான் கருதுவதாகச் சொன்ன போது சிலர் சிரித்தார்கள். அவன் அதைப் பற்றி அதிகம் வெளியில் பேச முடியாதபடி ஆகிவிட்டது.

அவள் நம்பிக்கைத் தரும் கோயில்களுக்குச் சென்றாள். அங்கு தவத்தில் இருந்த சில சாமியார்களிடம் தன் சிக்கலைச் சொன்னாள். அவர்களில் சிலர் அமைதியாகப் புன்னகைத்தார்கள். சிலர் கண் திறந்தும் பார்க்கவில்லை. ஒரு மலைக் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தாள். ஒரு சாமியார் அவள் அருகில் வந்தமர்ந்தார். மனதில் கலக்கம் வழியில் தயக்கம் அம்மைக்கு என்ன சிக்கல் என்று கேட்டார். அவள் சிக்கலைத் தயங்கி தயங்கிச் சொன்னாள். அவர் ஒரு களிம்பை எடுத்துக் கொடுத்தார். அதைத் தடவினால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தலைமுடியின் வளர்ச்சியால் அவளுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மருந்துகளை வாங்கிவந்தாள். சாமியார் கொடுத்த களிம்பைத் தடவிவிட்டுத் தூங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் தலைமுடி தங்க நிறமாக மாறியிருந்தது. அது மட்டும் இல்லாமல் முடியின் அடர்த்தியும் குறைந்து அளவாக இருந்தது. அவளது தலைமுடி அவளால் மிகவும் எளிதாகக் கையாள ஏதுவாகவும் இருந்தது. ஆனால் தங்க நிறத்தில் மாறிவிட்டதுதான் அவளுக்கும் அவனுக்கும் ஏற்க முடியாதபடி இருந்தது. அவள் களிம்பைத் தடவியதைக் குறித்து அவனிடம் பரிசீலித்திருக்க வேண்டும் என்று அவளைக் கடிந்து கொண்டான். அவளுக்கு அவளுடைய மதிப்பே தெரியவில்லை என்று எண்ணி குமைந்தான்.

இதற்கு மீண்டும் வைத்தியம் பார்க்கவேண்டும் என்று நினைத்தான். அலுவலகம் சென்றவுடன் அவன் எதிர்பார்க்காத உயர் பதவிக்கு அவனைப் பரிந்துரைப்பதாக மேலாளர் கூறினார். அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். வீட்டுக்கு வந்து மனைவியுடன் அந்தச் செய்தியைப் பரிமாறிக் கொண்டான். அவளுக்குத் தலைமுடியின் நிறம் மாறிய கவலைதான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அதை கருமையாக்க செயற்கை நிறங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எதற்காக வருந்த வேண்டும் என்று சொல்லி மருத்துவர் அனுப்பிவிட்டார்.

இருந்தாலும் மனைவிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அதற்குரிய ஆலோசனைகள் யாராவது தருவார்கள், கவலை வேண்டாம் என்று சமாதானப்படுத்தினான். பல மருத்துவர்களையும் அழகுக் கலை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றான். ஆனால் எதுவும் தீர்வாகாது என்று புரிந்துகொண்டான். அந்த சாமியாரை எங்குத் தேடிக் கண்டுபிடிப்பது என்று எண்ணி சோர்வடைந்தாள் அவள். மீண்டும் ஒரு முறை அந்த மலைக் கோவிலுக்கும் சென்றுவந்தாள்.

மனைவியின் வருத்தத்தை அவனால் போக்க முடியவில்லை. அவன் மனைவியின் முடியைத் தடவி இத்தனை அழகான முடி யாருக்குமே இல்ல. நீ ஏன் கவலைப்படற? என்று கேட்டான். இருந்தாலும் எனக்கிருந்த அந்தக் கறுப்பு முடிதான் வேணும் என்றாள் அவள். சரி வந்துரும் கவலைய விடு என்றான். உனக்கு இந்த முடி அதைவிட அழகா இருக்குது என்று சொன்னான். அவள் முறைத்துப் பார்த்தாள். அப்போது அவன் ஊரிலிருந்து அலைபேசியில் பேசினார்கள். அவனுக்குச் சேர வேண்டிய சொத்தை அவன் சொந்தங்கள் அவனுக்கே விட்டுக் கொடுத்துவிடுவதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் கூறினார். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. பாரு உனக்கு தங்க நிறத்துல முடி மாறின பிறகு எனக்கு பதவி உயர்வு வந்தது. இப்போ பூர்வீக சொத்தும் வந்துருச்சு. இப்பவும் ஏன் வருத்தப்படற? என்று அவளைச் சமாதானப்படுத்தினான். குலதெய்வம் கேசவதிதான் அவளுடைய முடியின் நிறத்தை மாற்றி அதற்கு ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

ஒரு நாள் அண்டை வீட்டுக்காரி அவளுடைய குழந்தையை எடுத்து வந்தாள். அப்போது அவள் கூந்தலுக்கு சாம்பிராணி புகைப் போட்டுக் கொண்டிருந்தாள். அண்டை வீட்டுக்காரி அவளருகே வந்து நின்று குழந்தைக்கு உடல்நலமில்லை என்றாள். அவள் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தாள். சளி, ஜுரம்  என்றாள் அவள். மருத்துவரிடம் காட்ட இவள் கூறினாள். அவள் ஆம் என்று தலையாட்டிவிட்டு இவளது கூந்தலைத் தடவி மிகவும் அழகாக இருப்பதாகச் சொல்லிவிட்டு சாம்பிராணி வாசத்தை குழந்தையின் முகத்தருகே கொண்டு சென்றாள். அவளது தலைமுடியைத் தடவிய கையை தன் குழந்தையின் தலையிலும் தடவினாள். மிகவும் சோர்வாக இருந்த குழந்தை மெதுவாகக் கண் திறந்து பார்த்தது. உன் கூந்தலுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்குதுன்னு நினைக்கறேன். பாரேன் குழந்தை இவ்வளவு நேரம் கண்ணே முழிக்கல. இப்போ உடனே கண் திறந்து பாக்கறான், என்றாள் அவள். இவள் சிரித்துக் கொண்டாள். அவளுக்கு இவள் தலைமுடி மீது பொறாமையாக வந்தது.

அண்டை வீட்டுக்காரி சென்ற பின் பால் கொண்டு வருபவன் வந்தான். இவள் உள்ளே இருந்து பாத்திரத்தை எடுத்து வந்தாள். மாடு எங்கேயோ காணம போயிடுச்சுமா என்றான் அவன். ஒரு மாடுதான். நாளைக்குள்ள கிடைச்சா பால் கொண்டு வருவேன். இல்லைன்னா என்னை எதிர்பாக்காதீங்க என்று சொன்னான். இவள் கிடைச்சுடும் என்று சொல்லிவிட்டு அவன் பாலை ஊற்றிய பின் உள்ளே வந்துவிட்டாள். அவனும் புறப்படத் திரும்பியவன் வீட்டு வாசலில் அவளது தங்க நிற முடி ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்து வைத்துக் கொண்டான். அது அவனுக்கு ஒரு பொக்கிஷம் போலத் தோன்றியது. வீட்டுக்கு வந்தான். மாடு வந்துச்சா என்று மனைவியிடம் கேட்டான். இல்ல என்றாள் அவள். இந்தா என்று தலைமுடியை நீட்டினான். என்னாதிது என்றாள் அவள். பால் ஊத்தற வீட்டு அம்மாவோட தலைமுடி. தங்க நிறத்துல எவ்வளவு அழகா இருக்குது பாரேன் என்றான். அவளும் அதை ரசித்துப் பார்த்துவிட்டு பத்திரமாக ஒரு சிறிய பெட்டியில் போட்டு வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள். காணமல் போன மாடு வந்து நின்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் பெரும் ஆசுவாசமாக இருந்தது.

அவர்கள் மகன் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தான். புள்ளைக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா நம்ம கஷ்டம் ஓரளவு தீந்துடும் என்று மனைவி சொன்னாள். ஆமா எத்தனையோ எடத்துக்கு போயிட்டு வந்துட்டான். இதுவரைக்கும் கிடைக்கல. இன்னைக்கு என்னாகுதோ என்று பால்காரன் சொன்னான். தூரத்தில் மகன் வருவது தெரிந்தது. இருவரும் வாசலிலேயே நின்றிருந்தார்கள். மகன் சிரித்துக் கொண்டே வந்தான். என்னாச்சுப்பா என்று அம்மா கேட்டாள். அம்மா வேலை கிடைச்சிடுச்சும்மா என்றான். அவன் அம்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. இப்போதாம்மா வேலைக்கு வரச் சொல்லி சொன்னாங்க என்றான். அவன் அப்பாவுக்குப் பெருமிதமாக இருந்தது. இரவு கணவன் மனைவி இருவரும் படுத்திருந்தார்கள். அந்த முடி கொண்டு வந்ததிலிருந்து எல்லாமே நல்லதா நடக்குதுங்க என்றாள் அவள். ஆமா நான் சொல்லலாம்னு இருந்தேன். நீயே சொல்லிட்ட என்றான் அவன். அந்த முடி முழுக்க நமக்குக் கிடைச்சா எவ்வளவு நல்லாருக்கும் என்றாள் அவள். ஆமா குடுப்பாங்க, தூங்கு பேசாம என்று சொல்லிவிட்டு அவன் உறங்கிவிட்டான்.

வெகு நாட்களுக்குப் பின் அவள் தாய்மை அடைந்திருந்தாள். இத்தனை நாட்களாக அவள் கூந்தலின் அவஸ்த்தையால் அவள் பட்டபாடு முடிந்து இப்போதுதான் அவளால் தாய்மை அடைய முடிந்திருந்தது. அதுவும் தங்கநிற முடி அவளுக்கு வாய்த்தப் பின்தான் அவளுக்கு தாய்மை பாக்கியம் கிடைத்திருப்பதாகவே அவள் கணவன் நினைத்தான்.

 அவளுக்குக் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் கிராமத்தில் குலதெய்வ விழா இருந்தது. அதற்குப் போயாகவேண்டும் என்று இருவரும் கிளம்பினார்கள். அங்குக் கோவிலருகில் அந்தப் பாட்டி அமர்ந்து கேசவதிக்கு யாராவது முடி காணிக்கைக் கொடுக்கணும். அப்போதான் அவ மனசாறும் என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.

சட்டென்று மனைவியை கேசவதி வா கோயிலுக்குப் போகலாம் என்று அழைத்தான். அவனுக்கு அந்தக் குலதெய்வத்தின் கதையில் மூழ்கிவிட்டது போல் இருந்தது. கணவன் மனைவி இருவரும் கோயிலுக்கு வந்தார்கள். அவர்களின் அண்டை வீட்டுக்காரியும் அந்த விழாவுக்கு வந்திருந்தாள். பால்காரன் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். காலையில் குலதெய்வத்திற்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், குங்குமம் அபிஷேகங்கள் நடந்தன. அவற்றை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு குளத்தருகே மனைவியை அமரச் சொன்னான். குலதெய்வம் கேசவதிதான் அங்கு அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்து மனைவியைப் பார்த்தான்.

எதற்காக இங்கு அமர அவன் சொல்கிறான் என்று அவள் கேட்டாள். நான் உன் முடிய காணிக்கையா கேசவதிக்குக் குடுக்குறதா வேண்டிகிட்டேன். அதான் என்றான். ஐயோ வேண்டாம் என்றாள் அவள். இல்லை வாக்கு மாறக்கூடாது, தெய்வக்குத்தம் ஆயிடும் என்றான் அவன். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரியும் பால்காரன் குடும்பத்தினரும் அருகே வந்து நின்றார்கள். வேண்டுதலை நிறைவேத்திடுங்க என்று அவர்களும் சொன்னார்கள். அவளுக்கு வேறு வழியில்லாமல் அமைதியானாள். மனைவியின் முடியைக் காணிக்கையாகக் கொடுக்க அவனே போய் ஒரு நாவிதரை அழைத்து வந்தான்.

அண்டை வீட்டுக்காரிக்கும் பால்காரன் குடும்பதிற்கும் அந்த முடியில் கொஞ்சம் கிடைத்தால் போதும் என்ற பேராசை நிரம்பி வழிந்தது. நாவிதர் கத்தி எடுத்து முடியை வழிக்கத் தொடங்கினார். அப்படியே கற்றையாக முடி கீழே விழுந்தது. அவள் அதை வருத்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அந்த முடி அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய பாம்பாக மாறி படமெடுத்தது. அண்டை வீட்டுக்காரியும் பால்காரக் குடும்பமும் குளத்தருகே நின்றிருந்த பலரும் தெறித்து ஓடினார்கள். அந்தப் பாம்பு அப்படியே வாயைப் பெரிதாகப் பிளந்து மனைவி அருகே நின்றிருந்த அவனை விழுங்கியது. அதைப் பார்த்த அவன் மனைவி குளத்தில் விழுந்து காணாமல் போனாள்.

 

 (சீர்-ஜூலை-செப்டம்பர் 2024ல் வெளியான சிறுகதை)

 

 

 

பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு

(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை) பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரே...