Monday, 11 January 2016

கட்டுப்படுத்தும் சமூகத்தில் பிறக்கும் ரட்சிப்பு:ஜில் டெல்யூஜ்ஜை ஆண்டனியோ நெக்ரி எடுத்த பேட்டி -மொழிபெயர்ப்பு


மொழிபெயர்ப்பு:முபீன் சாதிகா
(பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்:மார்ட்டின் ஜ்யுகின்)


('புது எழுத்து' 15ஆம் ஆண்டு சிறப்பிதழில் வெளியானது)

ஜில் டெல்யூஜ் சென்ற நூற்றாண்டின் மாபெரும் தத்துவவியலாளர். அவரது 'எதிர் இடிபல்' 'ஆயிரம் பீடபூமிகள்' போன்ற பல நூல்கள் இன்றும் பல்வேறு வகையான ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன. அரசியல், தத்துவம், சினிமா, இலக்கியம் என்று அவர் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவரை ஆண்டனியோ நெக்ரி என்ற இத்தாலியைச் சேர்ந்த மார்க்சிய சோஷலிசவாதி பேட்டி கண்டார். நெக்ரி 'பேரரசு' என்ற நூலை மைக்கேல் ஹார்ட்டுடன் இணைந்து எழுதியிருக்கிறார். பல வருட சிறை வாழ்க்கையும் இடதுசாரி தீவிரவாத நிலையும் அவரைப் பண்படுத்தியிருக்கின்றன. பூக்கோ, டெரிடா, ஜில் டெல்யூஜ் போன்ற தத்துவவியலாளர்களுடன் அவர் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

நெக்ரிஉங்கள் அறிவுலக வாழ்வில் அரசியலின் சிக்கல் எப்போதுமே இருந்துவருவதாகவே தெரிகிறது. ஹியும் பற்றிய நூலிலிருந்து பூக்கோ பற்றிய நூல் வரை நீங்கள் பங்கெடுத்திருக்கும் பல்வேறு இயக்கங்கள் (சிறைக்கைதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இத்தாலிய பிரிவினைவாதிகள், பாலஸ்தீனர்கள்) ஒரு புறம், நிறுவனங்களில் ஏற்படும் நிரந்தரச் சிக்கல்கள் மற்றொரு புறம், ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தொடரவும் உங்கள் பணியில் இரண்டுக்கும் இடையில் ஏற்படும் பரிமாற்றமும் இருந்துகொண்டே வருகிறது. அரசியல் பற்றிய கேளவியில் தொடர்ந்து இருக்கும் கவனத்தின் ஆணிவேர்கள் எவை? அது எப்படி உங்கள் வளரும் பணியில் விடாப்பிடியாக இருந்தது? இயக்கத்திற்கும் நிறுவனத்திற்குமான உறவு ஏன் எப்போதுமே சிக்கலாக இருக்கிறது?

டெல்யூஜ்: நான் எதில் அதிகமான ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்றால் பிரதிநிதித்துவத்தைவிட கூட்டுப் படைப்புகளில்தான். ''சட்டங்கள் நியதிகளை'' மீறி நிறுவனங்களில் முழுமையான ஒழுங்கின் இயக்கம் இருக்கிறது. சட்டத்தைப் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் மிகவும் படைப்பூக்கமான எண்ணத்தை நான் ஹியுமில் கண்டேன். நான் தொடக்கத்தில் அரசியலைவிட சட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். பாலியல் தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றி மாசோக்கிலும் நிறுவனங்கள் பற்றி சேத்-திலும் முமையான தலைகீழாக்கப்பட்ட கருத்தாக்கங்கள் வெளிப்படுவதே நான் அதிகம் விரும்பியவை. இன்றைய காலகட்டத்தில் ஃப்ரான்கொய் ஈவால்ட்டின் சட்டம் பற்றிய தத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்வது என்பது மிகவும் அடிப்படையானது என்று கருதுகிறேன். சட்டம் அல்லது சட்டங்கள் (முதல் சொல் உள்ளீடற்ற கருத்து, இரண்டாவது சொல் விமர்சனமற்ற கருத்துகள்) அல்லது சமநிலைச் சட்டம் அல்லது உரிமைகள் என்னை ஆர்வப்படுத்துவது இல்லை, மாறாக சட்டவியல்தான் என்னை ஆர்வப்படுத்துகிறது. இந்தச் சட்டவியலின் நோக்கம் சட்டத்தை உருவாக்கிக் கொண்டேசெல்வது, இதை நீதிபதிகள் உருவாக்குவதாக நாம் விட்டுக்கொண்டிருக்கக் கூடாது. குடியாண்மை சட்டத்தைப் படிப்பதைவிட சட்ட அறிக்கைகளை எழுத்தாளர்கள் படிக்கவேண்டும். ஏற்கனவே நவீன உயிரியியலுக்குச் சட்ட அமைப்பை உருவாக்க எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நவீன உயிரியலில் இருப்பதெல்லாம், அது உருவாக்கும் புதிய சூழல்கள், அது சாத்தியப்படுத்தும் புதிய நிகழ்வுகளுக்கான வழிகள் போன்ற அனைத்துமே சட்டவியலை ஒட்டியுள்ளதுதான். இதற்காக நல்ல தகுதி படைத்த அறிவாளிகள் என்று அழைக்கப்படுகிற அறவியல் குழு தேவையில்லை, ஒரு பயனர் குழு போதும். இங்குதான் நாம் சட்டத்திலிருந்து அரசியலுக்கு நகர்கிறோம்.கத்தாரி மூலமும், பூக்கோ  மூலமும், எலை சம்பார் மூலமும். நான், எனது தனிப்பட்ட பங்கிற்காக, மே-68[1]இயக்கத்தை ஒட்டி நிகழ்ந்த அரசியலில் நகர்ந்து குறிப்பிட்ட சில பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டேன், 'எதிர்-இடிபல்' நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை அரசியல் தத்துவத்தைப் பற்றிய நூல்.

நெக்ரி:68-நிகழ்வுகளை நீங்கள் காலந்தவறிய வெற்றியாக, வழமையாதலுக்கு எதிரான விடியலாக எடுத்துக்கொண்டீர்கள். நீங்கள் நீட்ஷே பற்றி எழுதியதிலும் சிறிது நாட்களுக்குப்பிறகு எழுதிய ''சில்லிடலும் குரூரமும்'' என்ற நூலிலும் அரசியலுக்குப் புதிய பொருள் அளித்தீர்கள்-அதற்கு சாத்தியம், நிகழ்வு, ஒருமை என்று. நிகழ்காலத்தோடு எதிர்காலம் முறிவுகொள்ளும் நிகழ்புள்ளியை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் அதன் விழிப்பில் நிறுவனங்கள் மாற்றமுறவேண்டும் என்றீர்கள். ஆனால், '68-நிகழ்வுக்குப் பிறகு நீங்கள் உங்கள் அணுகுமுறையை  சற்று மாற்றிக் கொண்டீர்கள்: ''சிறுபான்மை உலகமயமாவது'' வெளியாக மட்டுமேயாகும்போது, நாடோடிச் சிந்தனை எப்பொழுதும் காலத்தில் தன்னெழுச்சியான எதிர்-வழமையாதல் என்ற வடிவத்தை எடுக்கிறது என்பதாக. இந்தக் காலந்தவறியதின் உலகமயத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

டெல்யூஜ்: அதாவது, உருவாகுதலுக்கும் வரலாறுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டிற்கான சாத்தியத்தைக் குறித்து மிகஅதிகமான விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறேன். ''வரலாறற்ற மூட்டத்தில்'' இருந்து எப்பொழுதுமாக விடுபடுவதை விட வேறெதுவும் முக்கியமில்லை என்று நீட்ஷே கூறியிருக்கிறார். இது நித்தியத்துவத்தையும் வரலாறையும்  அல்லது சிந்தனையையும் செயல்பாட்டையும் எதிர்ப்பதல்ல:நிகழ்வுகள் நடக்கும் வழிமுறைகள் பற்றியும், நிகழ்வுகள் அதற்குள்ளாகவே உருவாகுதலைப் பற்றியும்  நீட்ஷே பேசுகிறார். வரலாறு எதை உள்வாங்குகிறது என்றால் குறிப்பான சூழல்நிலையில் நிகழும் நிகழ்வுகள் எப்படி வழமையாக்கப்படுகிறது என்ற வழிமுறைகளைத்தான்; அந்த நிகழ்வின் உருவாகுதல் என்பது வரலாற்றின் நோக்கெல்லைக்கு அப்பாலுள்ளது. வரலாறு பரிசோதனைக்குரியதல்ல, அது உத்தேசமாக வரலாற்றிற்கு அப்பால் உள்ள சிலவற்றை சாத்தியமாக்கும் எதிர்மறையான முன்நிபந்தனைகளின் தொகுதி. வரலாறு இல்லாமல் இப்பரிசோதனை நிர்ணயமற்றது, எந்தவொரு முன்நிபந்தனையும் இல்லாதது, ஆனால் பரிசோதிப்பதே வரலாறு அல்ல. க்ளியோ, பெகை தங்களது சிறந்த தத்துவ நூலில் வரலாற்றின் நிகழ்வுகளை இரு வகையாகப் பார்ப்பதைச் சுட்டியிருக்கிறார்கள். ஒன்று, நிகழ்வின் போக்கைப் பின்தொடர்வது, வரலாற்றில் அது எப்படி நடந்திருக்கும் என்று சேகரிப்பது அதன் தயாரிப்பு எப்படிப்பட்டது அது எப்படி வரலாற்றில் மட்கிப் போகிறது என்று பார்க்கும் பார்வை ஒன்று. மற்றொன்று, நிகழ்விற்குள் திரும்பப் போய், உருவாகுதலில் பாத்திரமேற்பது போல் பாவித்து, அதற்குள்ளேயே அத்தருணத்திலேயே இளமையாகவும் முதுமையாகவும் வளர்ந்து, அதன் கூறுகள் அல்லது ஒருமைகளில் செல்வது. உருவாகுதல் வரலாற்றின் பகுதி அல்ல, வரலாறு தருவது முன்நிபந்தனைகளின் தொகுதியை மட்டுமே, இருந்தபோதிலும் தற்பொழுது, ஒருவர் ''உருவாகுதல்'' என்பதிலிருந்து விலகிச்செல்ல வேண்டும், அதாவது, புதிய ஏதோ ஒன்றை படைக்க. இதைத்தான் நீட்ஷே காலந்தவறுதல் என்றார். மே 68 என்பது உருவாகுதலின் தெளிந்த நிலையைக் காட்டும் ஓர் ஆர்ப்பாட்டம், ஒரு வெடிப்பு. இந்தக் காலகட்டத்தில் புரட்சியின் பயங்கரங்களைப் பற்றி கண்டிப்பது ஒரு பாணியாகிவிட்டது. அது புதிதல்ல. இன்று ஸ்டாலின் பற்றிய எதிர்வினை போலத்தான் க்ராம்வெல் மீதான எதிர்வினையாக ஆங்கில வீறுணர்வுவாதம் இருந்தது. புரட்சிகள் தீமையான விளைவுகளைத் தருபவை என்று கூறுகிறார்கள். ஆனால் வரலாற்றில் புரட்சிகள் மாறியிருப்பதையும் மக்கள் புரட்சிகள் காரணமாக உருவாகியிருப்பதையும் தொடர்ந்து இரு வேறு கருத்துகளாகப் பார்க்காமல் அவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இவை இரு வகையான மக்களைப் பற்றியதாக உள்ளன. மனிதர்களின் ஒரே நம்பிக்கை என்பது புரட்சிகர உருவாகுதலில் உள்ளது: அவர்களின் அவமானத்தைத் துடைத்தெறியும் ஒரே வழி அல்லது சகிக்க முடியாத ஒன்றுக்கு மறுமொழி கொடுப்பது.

நெக்ரி:நீங்கள் எழுதிய 'ஆயிரம் பீடபூமிகள்' நூல் மாபெரும் தத்துவ நூலாக நான் கருதுகிறேன். அதே நேரத்தில் அது தீராத சிக்கல்களின் அட்டவணையாகவும் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக அரசியல் தத்துவத்துறையில் அப்படி இருக்கிறது. அதில் வரும் இருமை முரண் சொற்களான- செயலும் திட்டமும், ஒருமையும் தன்னிலையும், தொகுப்பும் நிறுவனமும், போக்கின் கூறுகளும் உபகரணங்களும்/உத்திகளும் நுண்மையும் விரிவும் போன்றவை-கோட்பாட்டக்கம் செய்யும் ஆச்சரியமான விருப்பத்தினாலும் தீவிரமான நினைவூட்டல்களின் பிரகடனங்களாலும் இவை எல்லாம் எப்போதுமே திறந்திருக்கும் என்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து இவை மீண்டும் திறக்கப்படுகின்றனஅதற்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை அதற்கு ஆதரவாகத்தான் உள்ளது...ஆனால் சில சமயங்களில் எனக்கு அவல ஒலியைக் கேட்பது போல் தோன்றுகிறது, சில புள்ளிகளில் ''போர் எந்திரம்'' எங்கு செல்கிறது என்பது தெளிவாக இல்லை.

டெல்யூஜ்: நீங்கள் சொல்வது என்னுள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நானும் ஃபிலிக்ஸ் கட்டாரியும் இன்னும் மார்க்சியர்களாக இருக்கிறோம் என நினைக்கிறேன், நாங்கள் இருவருமே இரு வேறு வழிகளில்எந்த ஒரு தத்துவமும் முதலாளித்துவம் பற்றியும் அதன் வளர்ச்சிப் பற்றியும் ஆய்வு செய்யவேண்டும் என்று நாங்கள் நினைப்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். எங்களுக்கு மார்க்ஸிடம் ஆர்வமூட்டக்கூடியதாக இருப்பது என்னவென்றால் அவருடைய ஆய்வில் முதலாளித்துவம் ஓர் உள்ளுறைந்த அமைப்பாகவும் அது தொடர்ந்து தனது எல்லைகளை மீறி வருவதையும் மீண்டும் விரிவான வடிவத்தில் அவற்றைத் தாண்டி வருவதையும், ஏனெனில் அதன் அடிப்படை எல்லையே மூலதனம்தான் என்பதுமே'ஆயிரம் பீடபூமிகள' பல திசைகளில் சென்றாலும் அவற்றில் மூன்று முக்கியமாக உள்ளது: முதலாவது, எந்த ஒரு சமூகமும் அதன் போக்குகளின் கூறுகளால் விளக்கம் பெறுவதைப் போல அதன் முரண்பாடுகளால் விளக்கம் அடைவதில்லை. அது எல்லா இடங்களிலும் பரவுகிறது, போக்குகளின் கூறுகள் வடிவம் பெறும் ஒரு தருணத்தையோ மற்றொரு தருணத்தையோ பின் தொடர்வதும் பார்க்க முயற்சிப்பதும் பெரும் ஆர்வத்தைத் தருவதாக உள்ளது. இப்போது ஐரோப்பாவை பாருங்கள். மேற்கத்திய அரசியல்வாதிகள் அதனைக் கட்டமைக்க பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள், தொழில்நுட்பவாதிகள் ஒழுங்கான ஆட்சியையும் விதிகளையும் அமைக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள், இருந்தாலும் இளைஞர்கள், பெண்களின் எழுச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது சாத்தியப்பட்டதற்கு எளிமையான காரணம் சில தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன (''தொழில்நுட்பமயமாக இயலாத'' விளைவுகளினால்) இந்த ஐரோப்பா தொடங்கப்படுவதற்கு முன்பே முழுவதுமாகக் கிழக்கிலிருந்து வந்த இயக்கங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒருவர் கருதினால் அது நகைப்புக்குரிய ஒன்றாகக் கவனிக்கப்படவேண்டும். இவை முதன்மையான போக்கின் கூறுகள். ஆயிரம் பீடபூமிகளில் மற்றொரு திசை உள்ளது. அது போக்கின் கூறுகளை ஆய்வது மட்டும் அல்ல, அவற்றின் முரண்பாடுகளை ஆய்வது. வர்க்கங்களைப் பற்றியதல்ல சிறுபான்மைகளைப் பற்றியது. பிறகு இறுதியாக, மூன்றாவது திசை, ''போர் எந்திரங்களின்'' குணாம்சங்களைக் கண்டறிவது பற்றியது, அது போரைப் பற்றியதல்ல ஆனால் சில வகையான ஆக்கிரமிப்பை, எடுத்தாள்வதை, காலவெளி அல்லது புதிய காலவெளியை: புரட்சிகர இயக்கங்கள் (அரேபிய உலகில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு எப்படி தனது காலவெளியைக் கண்டுபிடித்தது பற்றி மக்கள் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை) கண்டுபிடிப்பது பற்றியது. அத்துடன் கலை இயக்கங்கள் கூட அந்தப் பொருளில் போர் எந்திரங்கள்தான்.

நீங்கள் இவை அனைத்திலும் ஓர் அவலம் அல்லது துக்க ஒலி கேட்பதாகச் சொல்கிறீர்கள். அது ஏனென்று என்னால் சிந்திக்க முடிகிறது. பிரைமோ லெவி 'மனிதனாக இருப்பதில் அவமானம்' என்று நாஜி சித்திரவதை முகாம்கள் பற்றி விளக்கி எழுதிய எல்லா பத்திகளும் என்னை ஆட்படுத்தின. சிலர் நம்மை நம்பவைப்பது போல நாஜிசத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதாக அது இல்லை, மாறாக நாம் அனைவருமே அதன் கறையைக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான். அதிலிருந்து தப்பியவர்கள் கூட உயிர் வாழ்வதற்காகவே அவற்றுடன் சமரசம் செய்யவேண்டியிருந்தது. நாஜிக்களாக மாறுவதிலுள்ள அவமானம், அதிலிருந்து விலக இயலாதது, அதை எப்படித் தடுப்பது என்று அறியாமல் இருந்தது, அதனுடன் சமரசம் செய்தது, இவை எல்லாமே பிரமோ லெவி, எதை ''சாம்பல் பகுதிகள்'' என்று அழைத்தாரோ அவை.. மனிதனாக இருப்பதில் அவமானம் அடையவேண்டிய மிக அற்பமான தருணங்களும் உள்ளன: வக்கிரமான சிந்தனை வரும் முகத்தில், அமைச்சர்களின் பேச்சை பொழுதுபோக்காகக் கேட்கும் பொழுதுகளில் ''கிளுகிளுப்பான மக்கள்'' பேசும் அவதூறுகளில். இதுதான் தத்துவத்திற்கு பெரும் ஆற்றலைத் தரும் ஊக்கமாக உள்ளது, அதுதான் தத்துவத்தை அரசியலாக உருவாக்குகிறது. முதலாளித்துவத்தில் ஒரே ஓர் அம்சம்தான் சர்வதேசத்திற்கும் உரியது, அது சந்தை. சர்வதேச அரசு இல்லை, ஏனெனில் சர்வதேச சந்தையில் அரசுகள்தான் மையங்களாக வியாபார பீடங்களாக உள்ளன என்பதுதான் முக்கிய காரணம். ஆனால் சந்தை என்பது சர்வதேசமயமாக்காது, அது ஒருபடித்தானதாக்குகிறது. அது சொத்தையும் துயரத்தையும் பயக்கும் அசாதாரணமான பொறி. மனித உரிமைகளுக்கு உரிய கவனம் தரப்படுவதை முற்போக்கு முதலாளித்துவத்தின் ''ஆனந்தங்கள்' என்று புகழ்வதற்கு நாம் தள்ளப்படக்கூடாது. அந்தக் கவனமும் முதலாளித்துவத்தின் ஓர் உள்ளார்ந்த அம்சம்தான். எந்த ஒரு ஜனநாயக அரசும் மையத்திலிருந்து அதன் ஒரு பகுதிவரை மனித துயரத்தை உண்டாக்குவதிலிருந்து விலகிச் செல்லும் சமரசத்தில் இல்லை. எது அதிகமான அவமானம் என்றால் நம்முள்ளேயே கூட உருவாகுதல்களைக் கையாள்வதற்கான வழிகள் இல்லை அல்லது அதை விட கூடுதலாக அவற்றைத் தூண்டுவதற்கான வழிகளும்கூட நம்மிடம் இல்லை. எப்படி ஒவ்வொரு குழுவும் மாற்றம் பெறும் அது எப்படி வரலாற்றுக்குள் வீழ்ந்து போகும் என்பது தொடர்ந்த 'கவனம்' பெற்றுள்ளது. பாட்டாளிகளைச் சுற்றி அவர்கள் விழிப்புணர்வின் நிலையை அடைவதற்கு எந்த ஒரு பிம்பமும் இனி இல்லை.

நெக்ரிஎப்படி சிறுபான்மை உருவாகுதல் என்பது ஆற்றல் கொண்டதாக இருக்கும்? எப்படி எதிர்ப்பு என்பது எழுச்சியாக உருவாகும்? உங்களைப் படிக்கும் போது அந்தக் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை, ஆனாலும் அந்தக் கேள்விகளைக் கோட்பாட்டு ரீதியாகவும் அனுபவரீதியாகவும் மறுவடிவமாக உங்களின் நூல்கள் உத்வேகத்தையும் சக்தியையும் எனக்கு எப்போதும் அளித்தன. மேலும் கற்பனையைப் பற்றி அல்லது ஸ்பினோஜாவில் இருந்தப் பொதுக் கருத்துகள் பற்றி நான் படித்த போதும் மூன்றாம் உலக நாடுகளில் எடுக்கப்படும் புரட்சிகர திரைப்படங்களில் கால-பிம்பம் பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்த போதும் மற்றும் பிம்பத்திலிருந்து கட்டுக்கதை வரையான பாதையையும் அரசியல் நடைமுறைகளையும் உங்களுடன் உள்வாங்கிய போதும் நான் இந்தக் கேள்விகளுக்கான பதிலை ஏறக்குறைய கண்டுபிடித்துவிட்டேன்...அல்லது நான் தவறாகப் புரிந்துகொள்கிறேனா? பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் செயலூக்கம் பெறுவதற்காகக் காட்டும் எதிர்ப்புக்கு வழி இருக்கிறதா, சகிக்கமுடியாதது என்று சொல்லப்படுவது தீர்மானகரமாக நீக்கப்படுமா? ஒருமையின் திரள்களும் அணுக்களும் ஒருங்கிணைந்து நாமெல்லாம் முன்வந்து அதிகாரம் ஒழுங்கமைக்கப்படுவதற்கான வழி ஏதாவது இருக்கிறதா அல்லது நீதியியல் முரண்பாடு நிறுவும் அதிகாரம் விளக்குவதாக ஒழுங்கமைக்கப்படும் அதிகாரத்தை நாம் ஏற்கவேண்டியதாக இருக்குமா?

டெல்யூஜ்: சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையிலுள்ள வேறுபாடு அளவு சார்ந்தது அல்ல. ஒரு சிறுபான்மை, பெரும்பான்மையை விடப் பெரியதாக இருக்கலாம். பெரும்பான்மையை எப்படி விளக்கலாம் என்றால் அது உறுதியான மாதிரி: உதாரணமாக ஒரு சராசரி ஐரோப்பிய நகரம்சார் ஆண்...ஆனால் ஒரு சிறுபான்மைக்கு மாதிரி என்று எதுவும் இல்லை, அது ஒரு உருவாகுதல், அது ஒரு செயல்முறை. பெரும்பான்மை என்று யாரும் இல்லை என்று ஒருவர் சொல்லலாம். ஒவ்வொருவரும் ஒரு வழியிலோ மற்றொன்றிலோ,  சிறுபான்மை உருவாகுதலில் பீடிக்கப்படுவார்கள் அவர்கள் அதைப் பின்தொடர்ந்தால் அவர்களைப் திசை அறியாத பாதைகளுக்கு இட்டுச் செல்லும். சிறுபான்மை தனக்கான மாதிரிகளை உருவாக்கும் போது அது பெரும்பான்மை ஆக விரும்புகிறது, பெரும்பான்மை ஆகவேண்டியிருக்கிறது, வாழவும் அல்லது வளரவும் (உதாரணமாக ஓர் அரசைக் கொண்டிருக்க அங்கீகாரம் பெற அதன் உரிமைகளை நிலைநாட்ட). ஆனால் அதன் அதிகாரம் அது படைப்பைக் கையாள்வதிலிருந்து வருகிறது, அது ஓரளவுக்கு மாதிரிக்கு உரியதாகிறது, ஆனால் அதன் மீது சார்ந்திருப்பதில்லை. ஒரு மக்கள் திரள் என்பது எப்போதுமே படைக்கப்பட்ட சிறுபான்மை, அது பெரும்பான்மையை ஈட்டும் போதும் அப்படியே இருக்கும், ஒரே சமயத்தில் இரண்டுமாகவும் அது இருக்கும் ஏனெனில் ஒரே தளத்தில் இரண்டுமே வாழ்ந்திருப்பதில்லை. மகா கலைஞர்கள் (பிரபலமான கலைஞர்கள் அல்லாமல்) ஒரு மக்கள் திரளை நிலைநிறுத்துபவர்களாவும் அப்படி அமைக்கையில் அவர்கள் ''மக்கள் திரள் இன்மையை' கண்டறிபவர்களாகவும் இருக்கிறார்கள். மல்லார்மே, ரிம்பாட், க்ளீ, பெர்க் போன்றவர்கள். திரைப்படத்தில் ஸ்ட்ராப் போன்றவர்கள். கலைஞர்கள் ஒரு மக்கள் திரளை நிலைநிறுத்த மட்டுமே முடியும், அவர்களது செயல்களின் அடித்தளம்வரை செல்லவேண்டிய தேவைவரும்., அவர்களை உருவாக்குவது அவர்களது வேலை அல்ல, அவர்களால் முடியவும் முடியாது. கலை என்பது எதிர்ப்பு: அது மரணத்தை, அடிமைத்தனத்தை, முறைகேட்டை, அவமானத்தை எதிர்க்கிறது. ஆனால் ஒரு மக்கள் திரள் கலை பற்றி கவலைப்பட முடியாது. எப்படிப்பட்ட அல்லல்களுக்கு இடையில் எப்படி ஒரு மக்கள் திரள் படைக்கப்படுகிறது? ஒரு மக்கள் திரள் படைக்கப்பட்டால் அது அதன் மூலத்திலிருந்துதான் படைக்கப்படுகிறது, ஆனால் தொலைவில் அது கலையுடன் ஓர் இணைப்பைக் கொள்கிறது (லுவரில் கூட பெரும் அல்லல் இருப்பதாக கேரல் கூறுகிறார்) அல்லது அது அதன் குறையை நிறைவாக்க கலையுடன் இணைகிறது. கற்பனாவாதம் சரியான கருத்தல்ல. அது ஒரு மக்கள் திரளும் கலையும் பகிர்ந்து கொள்ளும் பெரும்பாலான ''பட்டியலிடப்படல்''. நாம் பெர்க்ஸனின் பட்டியலிடப்படும் கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கு அரசியல் பொருளைத் தரவேண்டும்.

நெக்ரி:நீங்கள் பூக்கோ பற்றிய நூலிலும் என்ஐஏ தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியிலும் மூன்று வகையான அதிகாரங்களைப் பற்றி கோடிட்டு காட்டுகிறீர்கள்: இறையாண்மை அதிகாரம், ஒழுங்குறுதலின் அதிகாரம், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மேலாண்மையை நோக்கிச் செலுத்தப்படும் "தொடர்புறுதலின்"கட்டுப்பாடு. மூன்றாவது சூழல் என்பது ஆதிக்கத்தின் துல்லியமான வடிவம், கற்பனையையும் பேச்சையும் கூட கட்டுப்படுத்தும்,  ஆனால் மற்றொரு பக்கம், எந்த ஒரு மனிதனும், எந்து ஒரு சிறுபான்மையும், எந்த ஓர் ஒற்றைத்துவமும், முன்பு எப்போதும் இருந்ததை விட ஆற்றலுடன் வெளிப்படுத்துவதும் அதன் காரணமாக பெருமளவு சுதந்திரத்தை மீட்டெடுப்பதும் நடக்கிறது. மார்க்சிய கற்பனாவாதமான 'க்ரண்ட்ரைஸி'ன் கம்யுனிசம் சுதந்திர தனிநபர்களுக்கான நேர்எதிர் நிறுவனத்தின் வடிவத்தை எடுக்கிறது. அதைச் சாத்தியப்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தால் அது கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட கம்யுனிசம் சாத்தியமான வாய்ப்பா? தொடர்புறும் சமூகத்தில் அது எப்போதும் இருப்பதை விட குறைந்த கற்பனாவாதமாக உள்ளதா?

டெல்யூஜ்: நாம் நிச்சயமாக ''கட்டுப்படுத்தப்படும்'' சமூகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் அவை ஒழுங்குறுத்தல் சார்ந்ததாக இனியும் இல்லை. பூக்கோ எப்போதும் ஒழுங்குறுத்தல் சமூகங்கள் பற்றிய கோட்பாட்டாளராகப் பார்க்கப்படுகிறார். மற்றும் அந்தச் சமூகங்களின் முதன்மை தொழில்நுட்பம் என்பது அடைத்து வைத்தல் (மருத்துவமனைகளிலும் சிறைகளிலும் மட்டும் அல்ல, பள்ளிகளில், தொழிற்சாலைகளில், படைகளில் கூட). ஆனால் அவர்தான் முதன் முதலாக ஒழுங்குறுத்தல் சமூகங்களிலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்பதைச் சொன்னவர். நாம் அவற்றை விட்டு வந்துவிட்டோம். நாம் கட்டுப்படுத்தப்படும் சமூகங்களுக்குச் செல்கிறோம். இவற்றில் மக்கள் அடைத்து வைக்கப்படுவது இல்லை. ஆனால் தொடர் கட்டுப்பாடு மூலமாகவும் உடனடி தொடர்புறுத்தல் மூலமாகவும் செயல்படுகின்றன. பர்ரோஸ்தான் இதை முதலில் சொன்னார். மக்கள் தொடர்ந்து சிறைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்: அந்த நிறுவனங்கள் குலைந்து கொண்டிருக்கின்றன. அவை தோற்கும் போராட்டத்தில் இருப்பதால் குலைந்து கொண்டிருக்கின்றன. புதிய வகையான தண்டனைகள், கல்வி, நலச் சேவைகள் மறைமுகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. திறந்த மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கே வரும் நலச் சேவைகள் போன்றவை இப்போது வந்திருக்கின்றன. கல்வி மூடப்பட்ட இடமாக இருந்தது மிகவும் குறைந்து வருகிறது, உழைக்கும் இடத்திலிருந்து வேறுபட்டதாக அதுவும் ஒரு மூடப்பட்ட இடமாக இருப்பதும் ஆனால் இரண்டுமே மறைந்துகொண்டிருப்பதும் உழைப்பாளி-பள்ளிக் குழந்தைகளுக்கு மற்றும் அரசு அலுவலர்-மாணவர்களுக்கு அஞ்சத்தக்க தொடர் பயிற்சிகளை அளிப்பவையாகவும் தொடர் கண்காணிப்பைக் கொண்டவையாக மாறிக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இதை கல்வி சீர்திருத்தமாகச் சொன்னாலும் அது பள்ளியின் சீர்குலைவுதான். கட்டுபாடுள்ள அமைப்பில் எதுவுமே அதிக காலத்திற்குத் தனியாக விடப்படுவதில்லை. இத்தாலியில் பகுதி நேர வேலையை வீட்டிலேயே நடத்திக் கொள்ளலாம் என்பது பற்றி நீங்களே நீண்ட காலத்திற்கு முன் பரிந்துரைத்திருந்தீர்கள். அதன் பின் அது பரவியது(புதிய வடிவங்களில் உற்பத்திப் பொருள் பரவலாக்கப்படுவதும் பங்கிடப்படுவதும் நடந்தது). ஒவ்வொரு சமூகமும் ஒரு வகையான எந்திரத்தை எதிர்கொள்வது பற்றி பார்க்கமுடியும். எளிமையான இயக்கம் உள்ள எந்திரங்களை இறையாண்மை சமூகங்களும், வெப்ப இயக்கம் உள்ள எந்திரங்களை ஒழுங்குறுத்தல் சமூகங்களும், தொடர்புகட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் கணினி எந்திரங்களை கட்டுப்படுத்தும் சமூகங்களும் எதிர்கொண்டதைப் பார்க்க முடியும். ஆனால் எந்திரங்கள் எதையும் விளக்குவதில்லை, ஒழுங்கமைக்கப்படும் தொகுப்பு வரிசையின் ஓர் உறுப்பாக இருக்கும் எந்திரங்களை ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது. எதிர்வரும் முடிவற்ற கட்டுப்பாடுள்ள திறந்த சமூகங்களோடு ஒப்பிடும் போது கடுமையான அடைத்து வைக்கப்பட்ட மூடிய சமூகங்கள் மகிழ்வான கடந்தகாலமாகப் பார்க்கப்பட்டன. ''தொடர்புறுத்தலின் சர்வதேசமயம்'' பற்றிய தேடல் நம்மை நடுங்க வைக்கிறது. கட்டுபடுத்தப்படும் சமூகங்கள் முழுவதுமாக உருவாவதற்கு முன்பே குற்றத்தின் வடிவங்களும் அல்லது எதிர்ப்புகளும் (இரண்டும் வேறுவேறானவை) தோற்றமெடுப்பதும் உண்மை. உதாரணமாக, கணினி களவுகளும் வைரஸ்களும் வேலை நிறுத்தங்கள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட 'நாசவேலைகளையும்" (எந்திரங்களின் ''அடைப்புகள்'') ஒத்திருந்தன. கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தொடர்புறு சமூகங்கள் தடைகளுக்கான வடிவங்களுக்குக் கொண்டுசென்று அதனால் கம்யுனிசம் மீண்டும் வர பாதை திறக்கப்படும் என்பது ''சுதந்திரமான தனிநபர்களின் நேர்எதிர் நிறுவனங்கள்'' என்று அறியப்படுமா என்று கேட்கிறீர்கள். இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. அது சிறுபான்மையினர் வெளிப்படையாகப் பேசுவதற்கு எதுவும் செய்யப் போவதில்லை. பேச்சும் தொடர்புறுத்தலும் ஒருவேளை சிதைந்திருக்கலாம். தற்செயலாக அல்லாமல் இயல்பாகவே அவர்கள் பணத்தால் ஊடுருவப்பட்டிருக்கிறார்கள். நாம் பேச்சைக் கடத்தவேண்டும். தொடர்புறுத்தலைவிட படைப்பாக்கம் என்பது எப்போதுமே வேறுபட்டது. தொடர்புறுத்தமுடியாத இடைவெளிகளையும், தடுப்பான்களையும் உருவாக்கிக் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பவேண்டும்.

நெக்ரி:உங்களின் மற்ற நூல்களைவிட பூக்கோ பற்றிய நூலிலும் மடிப்புகள் நூலிலும் தன்னிலையாக்கத்தின் சிக்கல் குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறது. உள்ளுக்கும் புறத்துக்கும் இடையிலான இடையறாத இயக்கம்தான் தன்னிலை. இந்தத் தன்னிலை என்ற கருத்தியலின் அரசியல் விளைவுகள் என்ன? இந்தத் தன்னிலை வெளிப்புறத்தில் குடியுரிமையாகச் சுருக்கப்படாவிட்டால், அது குடியுரிமையைக் கட்டாயமாகவும் உயிர்ப்புடனும் முதலீடு செய்யமுடியுமா? அது ஒரு புதிய தீவிரவாத செயல்முறையியலை உருவாக்க சாத்தியமாகுமா? உலகத்திற்கு ஒரு ரட்சிப்பைத் தருவதாகவோ புரட்சிகர அமைப்பாகவோ ஆகுமா? நிகழ்வின் உன்னதங்கள் மற்றும் தன்னிலையின் அரசியல் எதை வரலாற்றுக்குள் எடுத்துச் செல்லும்? ஆற்றலுடையதாய் இருந்தாலும் எந்த ஓர் அடிப்படை இல்லாவிட்டாலும் கூட அது மொத்தத்துவமாகது நாம் எப்படி ஸ்பினோஜா சொல்வது போல் முழுமையான ஓர் இனத்தை உண்டாக்குவது?

டெல்யூஜ்: தன்னிலையாக்கம் எனும் செயல்பாட்டின் மூலம் தனிநபர்களும் குழுக்களும் தன்னிலைகளாக பல வழிகளில் நிலைபெறுவதைப் பார்ப்பது நிச்சயமாகப் பொருளாம்சம் மிக்கது. அந்தச் செயல்பாடுகளில் எது முக்கியமாக இருக்கிறது என்றால் அறிவின் நிறுவன வடிவத்தையும் அதிகாரத்தின் ஓங்கிய வடிவங்களையும் புறக்கணித்து அவர்கள் எந்த அளவு வடிவமைக்கப்படுகிறார்கள் என்பதே. அதிகாரத்தின் புதிய வடிவங்களை அவர்கள் தோற்றுவித்தாலும் அல்லது அறிவின் புதிய வடிவங்களில் இணைந்தாலும் அதுவும் முக்கியமானதே. ஒரு தருணத்தில் உண்மையாக தன்னெழுச்சியான கலக இயல்பைக் கொண்டிருந்தாலும் கூட. ''தன்னிலை'' என்பதோடு எதுவும் தொடர்புடையதில்லை. அதாவது கடமைகள், அதிகாரம், அறிவு என்பதில் முதலீடு செய்யப்படுவதாக இல்லை. ஒருவர் தன்னிலையாக்கச் செயல்பாட்டிற்கு பதிலாக, புதியவகை நிகழ்வுகள்பற்றி சரிநிகராகவும் நன்றாகவும் பேசலாம்: நிகழ்வுகள் அவற்றை உருவாக்கும் சூழ்நிலைகளை அல்லது அவற்றை கொண்டுசெலுத்தும் நிலமைகளை விவரிக்காமல் விளக்கப்படமுடியாது. ஒரு தருணத்தில் அவை தோற்றம் பெறும். அந்தத் தருணம்தான் முக்கியமானது அந்த வாய்ப்பை நாம் கைப்பற்றவேண்டும். அல்லது நாம் எளிமையாக மூளையைப் பற்றிப் பேசலாம்: மூளை உள்ளும் புறமும் நடக்கும் இரு வழி தொடர் இயக்கத்தின் இடையில் உள்ள எல்லை, அதாவது இரண்டுக்கும் இடையிலுள்ள ஒரு சவ்வு. அல்லது அது அறிவியலுக்குரியது. ஒருவர் ஏன் இந்த வழியில் அல்லது மற்றொரு வழியில் சிந்திக்கிறார் என்பதைக் கண்டறிவது, புதிய மூளைப் பாதைகளை தெளிவது, புதிய சிந்தனைகளைக் கண்டுபிடிப்பது போன்றவை நுண்ணிய அறுவை சிகிச்சை மூலம் கூட விளக்கப்பட முடியாததுதான். தன்னிலையாக்கம், நிகழ்வுகள் மற்றும் மூளைகள் என்பவை எல்லாமே ஓரளவில் ஒன்றுதான் என்றே நான் நினைக்கிறேன். என்ன நாம் உலகின் மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம், நாம் இந்த உலகத்தை இழந்துவிட்டோம், நம்மிடமிருந்து இந்த உலகம் பறிக்கப்பட்டுவிட்டது. நாம் உலகத்தை நம்பினால் எத்தனை தெளிவற்றதாக இருந்தாலும் அதைப் படியச் செய்வோம், அது கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லும், எத்தனை சிறியதான பரப்பும் கொள்ளளவும் இருந்தாலும் புதிய காலவெளிகளைக் கண்டுபிடிப்போம். இதைத்தான் நீங்கள் ரட்சிப்பு என்கிறீர்கள். நம்முடைய ஒவ்வொரு இயக்கத்தை வைத்தும் நாம் கட்டுப்பாட்டுக்கு எதிராக இருக்கும் திறன் பெற்றிருக்கிறோமா அல்லது அதற்கு அடிபணிந்துவிட்டோமா என்பதை அளக்கமுடியும். அதற்கு நமக்கு படைப்பும் ஒரு மக்கள் திரளும் வேண்டும்.

***********



[1]மே-68 இயக்கம் என்பது பிரான்சில் நிகழ்ந்த கம்யுனிஸ்ட் புரட்சிமாணவர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவுஜீகிள் கம்யுனிஸ்டுகள்தலைமையில் நிகழ்ந்த புரட்சி அதில் பங்குபெறாத அறிவுஜீகளே இல்லைகுறிப்பாக சார்த்தர் முதல் அல்தூஸர் வரைஎல்லோரும்கம்யுனிஸ்டுகளாக மார்க்சியர்களாக இருந்தவர்கள்அப்பொழுது பூக்கோகத்தாரி தெல்யுஸ் இன்னும் பலர் அதில் பங்கு பெற்றனர்.. அந்தப்புரட்சி இறுதியில் கம்யுனிஸ்டுகளின் சமசரத்தால் தோல்வியடைந்ததுஅதன்பின் இந்த அறிவு ஜீவிகள் புரட்சிவிடுதலைமாற்றம்,நிறுவனம்கட்சிஇயக்கம் ஆகிய அனைத்திலும் நம்பிக்கை இழந்தனர்இவர்கள் அனைவரது கோட்பாடுகளும் இத்துயரத்தின்எதிர்விளைவாக உருவானதே.

 http://www.generation-online.org/p/fpdeleuze3.htm

Friday, 2 October 2015

இளைஞர் எழுத்துகளின் எதிர்காலம்

சாகித்ய அகாடமியும் லேடி டோக் கல்லூரியும் இணைந்து நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை





இளைஞர்களது எழுத்துகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க அடிப்படையான அலகுகளாக இங்கு எடுத்துக் கொள்ளும் கருதுகோள்கள்:

1.கலாச்சார உணர்ச்சிசார் படைப்புத்துவம் கொண்ட படைப்புகள் உருவாவது ஆக்கமுள்ள இலக்கியமாகுமா
2.பின்நவீனத்துவ வடிவம் குறித்த கற்பனை போதுமானதாக உள்ளதா
3.தத்துவச் சிந்தனை அவசியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா

இந்த மூன்று அடிப்படை அலகுகளைக் கொண்டு எதிர்காலத்தில் இளைஞர்களின் எழுத்துகள் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிக்க முயலலாம்.
---

I.கலாச்சார-உணர்ச்சிசார் படைப்புத்துவம்

தமிழில் கலாச்சார உணர்வுகளின் அடிப்படையில் படைப்புத்துவம் நிகழ்கிறது. தமிழ் இலக்கியத்தில் உணர்வுகளின் அடிப்படையில் ஓர் வரலாற்றைப் பார்த்தால் கலாச்சார உணர்வுகளின் அடிப்படையில் உருவாகும் படைப்புத்துவத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடேன்ப

என்ற தொல்காப்பியத்தின் விதி, இலக்கியத்தில் ஆளப்படும் உணர்வுகளைப் பற்றியதாக உள்ளது. அது வாழ்விலும் பொருந்திப் போகிறது. இந்த உணர்வுகள் அகம் மற்றும் புறம் சார்ந்தவை என்று பிரிக்கப்படுகின்றன. அவற்றில் அகம் சார்ந்தவை 32 மெய்ப்பாடுகளாகக் கூறப்படுகின்றன. இவை அனைத்துமே இலக்கியத்தில் ஆளப்படவேண்டியவையாக உள்ளன. இவை மென்மையான உணர்வுகளாகவும் வன்மையான உணர்வுகளாகவும் உள்ளன. இவற்றை விதி சார்ந்து இலக்கியத்தில் கையாளும் போது படைப்பின் உணர்வுகளாகிவிடுகின்றன.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் குறிப்பாக, திருக்குறளில் இந்த உணர்வுகள் அறம்சார்ந்த உணர்வுகளாக வெளிப்படுகின்றன. அதன் பின் காப்பியங்களில் காவிய உணர்வுகளாக நிலைபெறுகின்றன. அவை மிகை உணர்வுகளாகவும் மாறிவிடுகின்றன. ஏனெனில் சமூக மதிப்புகளை ஒரு குறிப்பிட்ட போக்கில் நகர்த்த இந்த வகையான மிகை உணர்வுகள் அவசியமாகின்றன.(கற்பை சோதித்தால் வெகுண்டெழுதல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற இருபாலியல் அமைப்பை இறுக்கமான அமைப்பாக மாற்ற வேட்கையின் உணர்வுகளுக்கான விதிகளை அமைத்தல்)

அதன் பின் பக்தி இலக்கியங்கள் உருவாகின்றன. சமயங்களின் எழுச்சியை முன்னெடுக்க அவை காரணமாகின்றன. அவற்றை அடியொற்றி இறை உணர்வுகளாக அவை பரிணமிக்கின்றன. அந்த உணர்வுகளில் தொல்காப்பியம் கூறிய அகம் சார் உணர்வுகளும் வன்மையாக வெளிப்படுகின்றன. ஆனால் அகத்தின் பால் மடைமாற்றப்பட்ட இறை உணர்வுகளாக அவை தோற்றம் பெறுகின்றன. அவை மத உணர்வுகளாகவும் சமய உணர்வுகளாகவும் தற்போது எச்சமாகியிருக்கின்றன.

அதன் பிறகு விளிம்புநிலை மனிதர்களின் உணர்வுகளாக சிற்றிலக்கியங்களில் விரிபவை, பேரிலக்கியங்களின் குறிப்பாக காப்பியங்களின் உணர்வுகளைப் போலச் செய்பவையாக இருக்கின்றன. அதன் பின் காலனியாக்கத்தில் உணர்வுகளின் இடம்பெயர்தல் நடக்கிறது. அது நாட்டு விடுதலை என்ற உணர்வில் நிலைபெற்றதாக வீறுணர்வு வகைமைக்குள் அடங்கிவிடுகிறது. திராவிட அரசியலின் உள்வாங்குதல் இயல்பு வாழ்வில் பெருகிவிட்ட காலகட்டம் என்பதால் உணர்வுகளின் செயற்கை தன்மை நீடித்திருந்தது.

ஊடகங்களில் வெளிப்பட்ட மலின உணர்வுகளாக அவை திசை மாறின. அந்த உணர்வுகள் வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட இதழ்களில் தட்டை நிலையை எய்தின. அந்த உணர்வுகளின் உறைந்த நிலை இன்றும் ஒரு தளத்தில் இருக்கிறது. அதற்கு எதிரான உணர்வுப் போக்குகளை சிறுபத்திரிகைகளும் சீரிய இலக்கியங்களும் கைக்கொள்ளத் தொடங்கி அவற்றின் அங்கீகாரத்தை வணிகம்சார் கலை வடிவங்களில் தேடுகின்றன.

இன்றைய பொருளாதார தாராளமயம், தகவல் தொழில்நுட்ப சுதந்திரம்,  உணர்வுகளுக்கு வெளிப்பாட்டைத் தந்திருக்கின்றன. அலைபேசிகளில் பகிர்ந்துகொள்ளும் உணர்சித்திரங்களாக அவை இன்று பெருக்கப்படுகின்றன.

தமிழில் உணர்வின் வரலாற்றிற்கான அடிப்படை கட்டமைப்பிற்காக இருப்பவற்றை இரண்டு காரணிகளைக் கொண்டு ஆராயலாம்.
1.மரபின் சாயல் 2.பாலின வேறுபாடு

1.மரபின் சாயல்

மனித மரபணுவில் தேங்கியிருக்கும் நினைவின் ஆதாரம் தொடர் சங்கிலியாய் இணைக்கப்படுகிறது. அகம் மற்றும் புறம் சார் உணர்வுகளும் இந்த மரபணு மூலம் தமிழ் மொழி உருமாற்றிய வகைமையை உள்வாங்கி இலக்கியம் வழி தடம் கொள்கின்றன. இதனால் மரபியலானது உணர்வின் வரலாற்றைத் தேக்கி மறுஉற்பத்தி செய்து படைப்பில் குறிப்பாக இலக்கியத்தில் பதிவாகக் காரணமாக அமைகிறது. அவ்வப்போது பிறழ்வு எனப்படும் ம்யுட்டேஷனும் உணர்வின் மாதிரியை சற்று மாற்றுகிறது.

மரபான உணர்வுகளாக இருப்பவை தன்னியல்பான உணர்வுகளாகக் கருதப்பட்டுவிடுகின்றன. சக்தி சொட்டுப் பொறியியல் எனப்படும் க்வாண்டம் உயிரியலின் கருத்துப்படி வினை ஊக்கிகளான ஹார்மோன்கள் உடலை இயக்கி படைப்புக்குள் மொழியைப் படியவைக்கின்றன. மரபியல் கூறுகள் புதிய மாற்றுகளை உணர்வுகளுக்குள் பதியவைத்துக் கொள்வதும் அதை படைப்பாக மாற்றுவதும் வெகு குறைவாகவே நடக்கிறது.

பொதுவான குணாம்சங்களை வைத்து உணர்வுகளை கட்டமைப்பதும் அவற்றை பாரம்பரியச் சொத்தாக சேகரித்து வைப்பதும் படைப்புகளின் நிலவரமாக உள்ளது. உதாரணமாக தாய்மை, என்றால் பேரன்பு. தாய்மையின் வடிவத்தில் வேறு சில வகைமைகள் என்பதாகவே படைப்புகள் பெருக்கப்படுகின்றன. கருணை என்ற அம்சத்தினை முன்வைத்த படைப்புகளாகவே தொடர்ந்திருக்கின்றன.

மரபியல் ரீதியாக உருவாகும் உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை அடைவது முதல்படி. புலனுணர்வுகளின் வழியாக சமூகப் பரப்பின் உணர்ச்சிகள் கைக்கொள்ளப்படுவதை அறிவது அடுத்த படி. உணர்வுகளின் உடல்களாக உருவாகுதல் எப்படி சாத்தியப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது மற்றொரு படி.

உதாரணமாக மனுஷி பாரதி என்ற இளம் கவிஞர் எழுதிய கவிதை ஒன்றைப் பார்க்கலாம்.

(மனுஷி பாரதியின் கவிதை)

உன் அருகாமை தேவைப்பட்டபோது….
உன் அருகாமை வேண்டி நின்றேன்
நீ என் அருகில் இல்லை.
மிகப்பெரிய துயரம் ஒன்று
நிதானமாகக் கொன்று கொண்டிருந்தது
என்னைக்
கொலைகள் செய்து பழக்கப்பட்ட முகபாவத்துடன்.
அன்பின் வாசனையோ
கருணையின் நிழலோ
சிறிதும் அறிந்திராத துயரம்
அது.
ஒரு மாயச் சுழலைப் போல
உள்ளே இழுத்துச் சென்று கொண்டிருந்தது
என்னை.
ஊழிக் காலத்தின் கடைசி நிமிடங்கள் போல
பதற்றத்துடன் நகர்ந்துகொண்டிருந்தன
நாட்கள்.
அந்த மாபெரும் துயரத்தில் இருந்து
என்னை மீட்டுச் செல்வாய் என்று
கைகளை நீட்டியபடி காத்துக் கொண்டிருந்தேன்.
என் கை தொடும் தூரத்தில்தான்
நீ இருந்தாய்.
அப்போது
வேறு சிலரோடு சுவாரஸ்யமாக
உரையாடிக் கொண்டிருந்தாய்.
உன் உரையாடலும் பேச்சும்
கலையைப் பற்றியும்
கவிதையைப் பற்றியதுமாக இருந்தது.
உன்னைச் சிறந்த கலைஞன் என்று 
சொல்லிக் கொண்டாய்.
சன்னமான குரலில்
மீண்டும் மீண்டும்
உன்னை அழைத்துக் கொண்டே இருந்தேன்.
துயரச் சுழல் என்னை உள்ளிழுத்துச் செல்வதை
நீ பார்த்துக் கொண்டே இருந்தாய்.
உன் அருகாமை தேவைப்பட்டபோது
நீ என் அருகில் இல்லை.
என் குரல் தொடும் தூரத்தில்
ஓர் இசையைக் கேட்டபடி லயித்திருந்தாய்...

1.பெண்மை என்பதே மரபுசார் குணாம்சமாகக் கொள்ளப்படுகிறது.
2.அன்பு, கருணை என்ற குணாம்சங்கள் தொடர்ந்திருக்கும்  மரபியல் அம்சங்களை வெளிப்படையாகக் காட்டும் க்விதை.
3.நீ, நான் என்பவை பெண் மற்றும் ஆண் என்றே வாசக வரம்பானது உட்செறித்துக் கொள்வதும் மரபியல் குணாம்சத்தின் வெளிப்பாடுதான்.
4.மரபியல் உணர்வுகளுக்குள் விழிப்படையாமல் இருந்துகொண்டு படைபபாக்கத்தை நிகழ்த்துவதில் சுய பரிசோதனைக்கான களம் உருவாவதில்லை.

2.பாலின வேறுபாடு

பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்படுவது. பாலினம் என்பதே ஒரு நிகழ்த்துதல்தான். பாலியலின் தற்செயலான விளைவல்ல பாலினம். பாலியலை உறுதிப்படுத்தும் ஒன்றும் அல்ல. பாலியல் உடல்களுக்கும் கலாச்சார கட்டமைவான பாலினத்திற்கும் அடிப்படையான தொடர்பின்மை உள்ளது. இருபால் உறவு என்ற நிறுவனத்தை மையமாக வைத்து பாலினம் அறியப்படுகிறது. ஆண்மை, பெண்மை, பிற பாலுமை, இவை எல்லாமே வேறுபாடுகளின் அடிப்படையில் உருவானவை. ஓர் உடலில் இவை இருப்பதாக ஊன்றுவது ஓர் கற்பிதம். உடல் பொதுவானது. பாலுமைகளின் கூட்டுத் தொகுப்பு அது. இரு பால் உறவின் விருப்பினால் பாலினமானது கட்டப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இருபால் உறவுதான் அதிகாரத்தையும் சொல்லாடலையும் உற்பத்தி செய்கிறது. இந்தப் புரிதல் இருந்தால் பாலினத்தின் சிக்கலை எழுத்தில் தவிர்க்கலாம். பெண்ணியவாதம் பெண்ணுக்கும் பெண் எழுத்துக்கும் மட்டுமே உரியதல்ல. அது பொதுவானது. மேலும் ஆண் எதிர்ப்பு என்பது மட்டுமே பெண்ணியம் அல்ல. எல்லா பாலினங்களையும் உள்ளடக்கியதுதான் பெண்ணியம். பாலினச் சார்பை அடையாளப்படுத்திக் கொள்வதுதான் முதல் சவால்.

பாலினம் இன,நிற,வர்க்க,பால்,தேச எல்லைகளை ஊடுருவியிருப்பதாகப் புரிந்துகொண்டால் எழுத்தின் குணாம்சம் மாறும். தன்னிலையைக் கற்றல் என்ற நிலையில் குழந்தை சமூக மொழியை உள்வாங்குவதும் அதன் காரணமாகப் பாலினம் நிகழ்த்தப்படுவதும் இன்னும் படைப்பாகவில்லை. இந்த காலகட்டத்தில்தான் உணர்வுகளின் ஆதிக்கம் மொழிவழியாக உடலரசியலை நிகழ்த்தத் தொடங்குகிறது.

ஆண்மை என்பது பொது என்றும் பெண்மை என்பது தனிப்பட்டது என்றும் தொடர் சித்திரமாக படைப்புகளில், கருத்தாக்கங்களில் செயல்படுகிறது. உடல்சார் அனுபவங்களைப் படைத்தல் என்பதுதான் பெண்ணிய மொழி என்பதாக அடையாளப்படுத்துவதில் ஆண் என்ற பகுப்பின் அதீத கற்பனையான பெண் உடலை உள்வாங்குதலாக மாறுகிறது. லிங்கமையமொழியின் பிறன்மை போலாகத்தான் அது இருக்க முடியும்.

பாலினம் நிறுவப்படுவதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதோடு அதற்குப் பின்னணியில் இயங்கும் உளவியல் வரலாற்றுப் போக்குகளைக் கண்டுகொண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான புனைதலை முன்வைப்பது மற்றொரு சவாலாகிறது. ஏனெனில் பாலினத்தை அடையாளப்படுத்த கூடா பாலியலிலிருந்து தன்பால்விருப்பு வரையான  பாலியல் சிக்கல்களை வரலாற்று ரீதியில் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். இந்த உணர்தலுக்குள் செயல்படும் படைப்புகளை உருவாக்குதல் அனைத்துப் பாலின எழுத்தாளர்களின் சவாலாக இருக்கும். பாலினம் என்பது ஒரு பன்மை போக்கு. அதன் உணர்வுக் களங்கள் ஒரு சார்பானவையாக இருப்பதை அறிதலே சமூகவயமாவதிலிருந்து தவிர்ப்பதற்கான தொடக்கமாக இருக்கும்.

மற்றொரு உதாரணமாக கவிஞர் அனார் எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு-அனார்

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி...மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கவ்வி
ஆற அமர ஆசையாய்..என்ன சுவையாய்..
கொன்று.............
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி
நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலை முகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை
முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்களின் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கிறது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படையுடன்
மித மிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது...

1.பெண் சிலந்தி என்பது பெண்ணாகவும் இருக்கலாம்.
2.பெண்மையின் குணாம்சங்களைத் தொகுத்திருப்பதாக இங்குக் கொள்ளலாம்.
3.பெண் விடுதலை உணர்வு, சிலந்தியின் விடுதலை உணர்வாகிவிட்டது
4.விடுதலை உணர்வு என்பதற்கு ஒரு சமூக வரையறை அல்லது கலாச்சார தொனி கொண்டிருப்பதை கவிதைக்குள்ளிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது
5.பெண்மை என்பதற்கான கட்டுபடுத்தப்பட்ட இயக்கத்திலிருந்து விடுபடுவதற்கான முறைமைகளைக் காட்டுகிறது இக்கவிதை.
6.பெண்மை என்பதற்கான விடுபடுதல்கள் வெறும் கட்டுப்பாடுகளாகக் கொண்டுவிடுகையில் இந்த வகையான படைப்பாக்கம் சாத்தியப்படும்

---
மற்றொரு இளம் கவிஞர் நிஜந்தன்தோழன் எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.
தொண்டைக்குள் சிக்குண்ட முள்ளென
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுகள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..
எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்
காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
உன்னில் சலனங்களை
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை
விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.
1.ஆண்மையின் ஒரு வகை வெளிப்பாடகவே இதை வாசிக்கத் தூண்டும்
2.பாலினத்தின் சமூகவயமாக்கலில் விளையும் ஒரு குரலாக இது உள்ளது.
3.ஏற்கனவே புரிந்துகொள்ளப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட உணர்வுகளின் மற்றும் ஒரு தொகுப்பு இது.
                
கலாச்சார உணர்ச்சிசார் படைப்புகள் தொடர்ந்து உணர்ச்சிப் பூர்வமான மனித ஆளுமையைக் கட்டமைக்கவே பயன்படுகின்றன. அதற்கு அடுத்த கட்ட படைப்புகளை உருவாக்க இயல்பிலேயே உண்ர்வுகளைப் பற்றிய அறிதல் சாத்தியமாகவேண்டும்.

II.பின்நவீனத்துவ வடிவம் குறித்த கற்பனை

உலக இலக்கியங்கள் பலவற்றையும் வாசித்த அனுபவம் கிடைக்கும் போது உருவாகும் இலக்கியம் ஒரு புதிய முனையைக் கொண்டிருக்கலாம். தமிழில் அநேகமாக எதார்த்த வகை சிறுகதைகளும் நாவல்களும் அதிகமாக எழுதப்படுகின்றன. அவையும் திரும்பத் திரும்ப ஏதோ ஓர் அறிந்த உணர்வை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுபவையாகவும் கிளர்த்துபவையாகவும் உள்ளன. அதனால் பன்மொழி இலக்கியங்களின் அறிமுகம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இதுவரை அறியாத ஓர் வாசிப்பனுவத்தையும் படைப்பனுவத்தையும் தரும்.

சில பன்மொழி இலக்கியங்கள் பற்றி இங்கு குறிப்பிடலாம். அந்த்வாந்த் எஸுபெரி எழுதிய 'லிட்டில் பிரின்ஸ்' என்ற ''குட்டி இளவரசன்''. இந்த நாவல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் கருத்தில் மிகவும் கடினமாகப் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. ஒரு விமானி தன் விமானத்தை ஒரு பாலைவனத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறங்க வேண்டியிருக்கிறது. அங்கு யாருமற்ற தனிமையில் ஒரு குட்டி சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவன் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவன். அவன் மட்டுமே தனியாக அந்த கிரகத்தில் இருக்கிறான். அவன் பல கிரகங்களைப் பார்த்து வருவதற்காக பூமிக்கு வந்திருக்கிறான். அவன் பூமியில் பார்த்த அனைவரும் சுயநலம் கொண்டிருப்பதையும் அதிகாரத்தின் வெறி கொண்டு விளங்குவதையும் கண்டு தன் இடத்திற்கே திரும்பிவிட விரும்புகிறான். அவனை ஒரு பாம்பு தீண்டிவிடுகிறது. ஆனாலும் அவன் காணாமல் போகிறான். அவன் தன் கிரகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கருதிக் கொண்டு அநத விமானி தன் விமானத்தை சரி செய்து பயணத்தைத் தொடர நினைக்கிறார். அந்த சிறுவனை மீண்டும் காணவேண்டும் என்ற நம்பிக்கைக் கொண்டிருக்கிறார். எதார்த்த வகை நடையில் எழுதப்பட்டாலும் இந்தக் கதையோ அதன் பொருளோ இதுவரை படித்திராத ஒரு வாசிப்பைக் கொடுக்கின்றன. பல பொருள் அடுக்குகளைக் கொண்டதாக இந்தக் கதை உள்ளது.

இது போன்ற கதைகளும் இன்னும் லூயிஸ் கேரோல் எழுதிய 'லுகிங் த்ரூ க்ளாஸ்' என்ற 'ஆடியினூடே' என்று மொழிபெயர்க்கப்பட்ட கதையும் ரால்ட் டால் எழுதிய கதைகளும் சிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் ஏற்ற கதைகளாக உள்ளன.

மிலரோட் பாவிச் எழுதிய 'டிக்ஷனரி ஆப் கஜார்ஸ்', இரு நூல்களாக உள்ள நாவல். அதில் ஒரு வரியைப் படித்தால் அதில் வரும் ஒரு சொல்லுக்கு அந்த நூலின் வேறொரு பகுதியில் பொருள் இருக்கும். அங்கிருந்து அந்த நாவலைப் படிக்கலாம். அந்த இடத்தில் வரும் வரியில் இருக்கும் ஒரு சொல்லின் பொருள் மற்றொரு பகுதியில் இருக்கும். அங்கிருந்து அந்த நாவலைத் தொடரலாம். இந்த வகையாக எழுதப்பட்ட இந்த நாவல் வடிவத்திலும் பொருளிலும் இதுவரை வாசித்திராத ஓர் அனுபவத்தைத் தருகிறது.

உம்பர்ட்டோ ஈகோ என்ற இத்தாலிய எழுத்தாளர் எழுதிய ஃபூக்கோஸ் பெண்டுலம் என்ற நாவல் ஏழு வருடங்கள் ஆய்வு செய்து எழுதப்பட்ட ஒன்று. நிலத்திற்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் ஓடிக் கொண்டிருக்கும் விசைப் பாதைகளைத் தக்கவைத்து பூமியின் இயக்கத்தைப் பாதுகாக்கும் சித்தர்கள் போன்ற ஒரு குழுவைப் பற்றி எழுதப்பட்ட கதை. வரலாற்றை எழுதுவது போல எழுதப்பட்ட கதை. கதையின் வரலாறா அல்லது வரலாற்றின் கதையா என்ற மயக்கத்தைத் தருவதாக உள்ளது.

பி.எஸ்.ஜான்சன் எழுதிய நாவல்கள், சாமுவேல் பெக்கெட்டின் நாவல்கள், ஜார்ஜ் லூயி போர்ஹே எழுதிய கதைகள் பின் நவீனத்துவ வடிவங்களுக்கு மிகச் சிறந்த உதாரணங்களாக உள்ளன. அதே போல் ஜோஸ் சரமேகோ, இடாலோ கால்வினோ, போன்றோரின் நாவல்களும் குறிப்பிடத்தக்க பின்நவீனத்துவ வகைமைகளாக இருக்கின்றன.

ஆனால் இந்த வகையான பன்மொழி இலக்கிய அறிமுகம் இல்லாததனால் பின்நவீனத்துவ வடிவம் குறித்து இளைய எழுத்தாளர்கள் சோதனை ரீதியாகவும் எழுத இயலாத நிலை இருக்கிறது. உதாரணமாக அபிலாஷ் சந்திரன் எழுதிய ஒரு கதை, 'கொலை' என்ற தலைப்பில் உள்ளது. விபத்தில் நடந்த மரணத்திற்காக பொறுப்பேற்க வைக்கப்படும் ஒரு நபர் தன்னை இளவயதில் தாக்கிய ஒரு நபரை கொலை செய்துவிட்டு தண்டனையை ஏற்கும் கதை. இந்த கதை எழுதப்பட்ட விதமும் கதைக்கருவும் ஏற்கனவே கேட்ட, தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது.
ஜி.முருகன் எழுதிய 'மஹாவிஜயம்' எனற ஒரு கதை. கடவுள் மீண்டும் வருவதைப் பற்றியது. இது ஏற்கனவே தெரிந்த ஒரு கதைதான். இது அனைவரிடமும் இருக்கும் கதை. அதில் கடவுள் போல் ஒருவர் வருவது எப்படி கண்டும் காணாமல் விடப்படுகிறது என்பதாகக் கதை சொல்லிச் செல்கிறது. எதார்த்த வகையில் எழுதப்பட்ட நையாண்டி கதை இது. புதுமைப்பித்தன் ஏற்கனவே இது போன்ற கதைகளை எழுதிவிட்டார். இன்றைய இளைய சமூகம் இது போன்ற எழுத்துகளின் அறிமுகத்திற்குப் பின்னாலும் திரும்பவும் அதையே படைக்கிறது.

எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதிய சில கதைகள் பின் நவீனத்துவ வடிவங்களை உள்வாங்கியிருக்கின்றன. 'இரவு மணி 11.59' என்ற சிறுகதை இத்தகைய ஒரு வடிவத்தைத் தாங்கியிருக்கிறது. மெய்நிகர் உலகின் பாத்திரங்களோடு இணைத்து புனையப்பட்ட கதை இது. ஏற்கனவே இவர் சில்வியா என்ற பெயரில் பின்நவீனத்துவ கதைகளை எழுதியிருக்கிறார். தற்போது எழுதி வரும் கதைகளும் முக்கியமான கதைகளாக உள்ளன. திசேரா என்ற எழுத்தாளரின் கதைகளும் இது போன்ற ஒரு பின்நவீனத்துவ வடிவத்தைக் கொண்டிருப்பதைக் கவனிக்கவேண்டும்சண்முக விமல்குமார் எழுதிய கவிதைகளும் இது போன்ற வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.

பின்நவீனத்துவ வடிவம் பற்றிய ஒரு கற்பனையைப் பெற பன்மொழி இலக்கிய ஆக்கங்கள் குறித்த அறிமுகம் தேவை. அது இளைய எழுத்தாளர்களிடம் குறைவாக உள்ளது. உரையாக எழுதத் தெரிந்தால் கதை உருவாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பன்மொழி ஆக்கங்களைப் படிக்கும் போது அந்த படைப்புக்குரிய கற்பனையும் உழைப்பும் பற்றிய கருத்து உருவாகும். அதற்கான தேவை இப்போது அதிகமாக இருக்கிறது. மாயாஜால எதார்த்தம், பெருங்கதையாடல், பகடி, புதிர், குறைந்தபட்ச படைப்பு, அதிகபட்ச படைப்பு என்று பல வடிவங்கள் உள்ளன. அவற்றை இளைய எழுத்துகள் கைக்கொள்ளவேண்டும்.

ஒரு நூற்றாண்டு தனிமை, டான் கவிக்ஸாட், போன்ற படைப்புகள் பின்நவீனத்துவ நாவலின் வகைமைகளுக்கு முன் உதாரணமாக உள்ளன. இந்த நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம் தமிழில் வந்த தாண்டவராயன் கதை, விஷ்ணுபுரம் போன்ற படைப்புகளில் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்..

III.தத்துவச் சிந்தனை

தாக்கம் அல்லது பாதிப்பு என்பதுதான் உணர்ச்சிக்கு முக்கியமான காரணி. உணர்வுகள் தனித்துவமானவை உயிர்வரைவுத் தன்மையுள்ளவை. உணர்ச்சிகள் சமூகவயமானவை. பாதிப்பு அல்லது தாக்கம் என்பது தனிப்பட்ட உணர்வுகளுக்கு முந்தைய நிலையில் இருப்பவை. உணர்வுகள் அனுபவத்தினை சார்ந்து புரிந்துகொள்ளப்படக்கூடியவை. உணர்ச்சிகள் பொதுவானவை. விதிகளுக்கு உட்பட்டவை. தாக்கம் என்பது அழுத்தமான முன்னுணர்வு சார்ந்தது. அதனை மொழி மூலமாக பெயர்த்துச் சொல்லிவிட முடியாது. ஒரு தாக்கம் காரணமாக உணர்வு உருவாகிறது. சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட தன்னுணர்வாக இருக்கும் கலாச்சார உணர்ச்சி அதனைக் குறிப்பிட்ட மாதிரியில் செலுத்தி வெளிப்படுத்துகிறது. இது போன்ற நுட்பமான புரிதல்களைக் கொண்டு படைப்பாக்கம் நிகழ்ந்தால் அதன் பொருள் ஒரு தத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

அழகியல் உணர்வாகவோ, பேருண்மைகளின் தேடலாகவோ, மாயமாகவோ, மந்திரமாகவோ, யோகமாகவோ, புராணமாகவோ ஏதோ ஒரு வகையில் தத்துவச் சிந்தனை படைப்பிற்குள் இருக்கவேண்டியது அவசியமாகிறது. நேரடியான பொருளை எந்த உழைப்பும் இன்றி புரிந்துகொள்ளக் கூடிய பொருளைத் தரும் படைப்புகளில் தத்துவச் சிந்தனைக்கு இடமின்றி போகும்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் காப்கா எழுதிய இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று உருமாற்றம்(மெட்டாமார்ஃபஸிஸ்) என்ற நாவல். விலங்கும் மனிதனும் இணைந்து உருமாறியதை வாசிக்கையில் விலங்கும் மனிதனும் குணாம்சங்களில் பொதுவாக இருப்பதையும் மாறி மாறிப் பயணிப்பதையும் அறிய முடிகிறது. பெரும்பான்மை உணர்வுகளை மறுத்து அதற்கு எதிரான ஓர் உருமாற்றத்தை, தகவியலை இந்த நாவல் ஏற்படுத்தியது.

நகுலன் எழுதிய ஒரு கவிதையை இங்குப் பார்க்கலாம்.

எல்லைகள்-நகுலன்
அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லைத் தாண்டாமல் நின்றால் ''அவன்
அதுவாகும் விந்தை'' நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

மனிதனும் விலங்கும் கலந்து உருவாகும் உருமாற்றத்தைச் சொல்லும் ஒரு கவிதை இது. அல்லது மனிதனிடம் இருக்கும் விலங்கு குணாம்சங்களைச் சுட்டிச் செல்லும் ஒனறு என்றும் கூறலாம்.

இந்த வகையான தத்துவச் சிந்தனை இருப்பதால் வாசிப்பனுவமானது மாற்றி அமைக்கப்படுகிறது. புதிதான ஓர் அனுபவமாகக் கட்டப்படுகிறது. அந்தப் புனைவோ, கவிதையோ கோரும் உருமாறுதல் வாசிப்பில் சாத்தியப்படுகிறது. இது போன்ற தத்துவச் சிந்தைனையைக் கொண்டிருக்கும் இளைய எழுத்துகள் தமிழில் அரிதாகவே உள்ளன. இவற்றின் தேவை இப்போது அதிகம் உள்ளது.

மற்றொரு கவிதை நேசிமித்திரன் எழுதியது.

லேசர் பொன்வண்டுகளும் மாரீசப் பெண்ணும்-நேசமித்திரன்

நீர்ச்சிலந்தி கண்கள்
நெய்தபடி இருக்கிறது நீத்தார்
கடனொப்ப ஆகாயம் பார்த்த சொற்களுடன்
ஆதிக் குகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்
 
நடுக்கடலின் நங்கூரம்
லேசர் பொன்வண்டுகள் மொய்க்கும்
நடனத்தரையில்
சொட்டு உதிரம்....
துளிர் -சருகு குழப்பத்தில்
தேவாலயத்தின் பாதி எரிந்த மெழுகை ஏற்றுகிறது ஏதுமற்ற மற்றுமோர் கரத்தின்
பிரார்த்தனை
பேழைக்குள் உறங்குகிறது தைலமிட்ட உடல்
யுகங்கடந்து தீண்டும் கருந்துளை சூரியனுக்கு
தன் மத்தகம் சிதறச் சிதற கொலுசொலித்து
மயன் செய்த குளம்போக காத்திருக்கிறாள்
மாரீசப் பெண்
 

1.மாரீசன் என்ற புராணப் பாத்திரத்தின் அடியொற்றி பெண்ணாக உருமாறுகிறது இங்கு.
2.புராணங்களின் நவீன சொல்லாடலாக கவிதை மாறியிருக்கிறது.
3.இந்தக் கவிதையில் புராணமும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய குறிப்பும் இணைந்து இருப்பதைக் காணமுடிகிறது.
4.புடமிட்ட உடல்கள் அண்டங்களின் அழிவு வரை காத்திருப்பதைச் சொல்லும் ஒரு வரி.
5.மாயன் என்ற ஆதி இனத்தின் குளத்தில் செவ்வாய் கிரகத்துப் பெண் இறங்குவது போல் ஒரு கற்பனையை இறுதியில் சொல்லிச் செல்கிறது கவிதை.
6.புராணத்தின் கூறுகளை எடுத்து வேற்றுக்கிரகச் செய்திகளுக்குள் புனைந்து இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
7.முன்னோர்களின் இறுதிச் சடங்கும் பூமிக்கு மீண்டும் வரப்போகும் இறை குமரனை தரிசிக்கக் காத்திருக்கும் பிரார்த்தனையும் இதில் அவநம்பிக்கைக் கொண்டவர்களாக வேற்றுக்கிரகவாசிகள் இருப்பார்கள் எனற கற்பனையும் கொண்டு உருவான நாடகீயத்தைப் பற்றி புனையப்பட்டிருக்கிறது இக்கவிதை.

விமர்சனத் துறையில் இளையவர்களின் எழுத்துகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இல்லை. ரசனைபூர்வமான விமர்சனங்களையே அதிகம் காண முடிகிறது. படைப்பைக் கட்டுடைத்து வாசிக்கும் பயிற்சி மிகவும் குறைவாக உள்ளது. இலக்கியத்தை மட்டும் அல்ல சக மனிதர்கள், நடப்பியல் சம்பவங்களையும் கட்டுடைக்கும் அவசியம் இருப்பதை முதிய சமூகமும் உணராததால் இளைய சமூகத்திற்கு அதைக் கொண்டு செல்லவில்லை. மேலும் விமர்சனத்தில் ஆழந்த ஈடுபாடு கொண்டிருந்தால் அதற்கு பின்னணியாக தத்துவ நூல்களைப் படிக்கவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது போன்ற ஒரு தேடல் இளைய விமர்சகர்களிடம் காண முடியவில்லை.

  • கலாச்சார உணர்ச்சிசார் படைப்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆக்கத்தைக் கொடுப்பவையா என்பது சந்தேகமே. உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கும் படைப்புகளே ஆக்க இலக்கிய வகையாக உள்ளன.

  • பன்மொழி இலக்கிய அறிமுகம் இல்லாத எழுத்துகள் மீண்டும் மீண்டும் ஒரே வகையிலான வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

  • தத்துவச் சிந்தனையைத் தவிர்த்து எழுதப்படும் எழுத்துகள் வாசிப்பனுவத்தில் எந்த ஓர் உழைப்பையும் கோருவதில்லை.

இந்த முடிவுகளைத்தான் இளைய எழுத்துகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்த போது பெறமுடிந்தது.

உதவிய நூல்கள்:

1.தொல்காப்பியம்-பேராசிரியர் உரை
2.மனுஷி பாரதி கவிதைகள்(முகநூலிலிருந்து)
3.அனார் கவிதைகள்(வலைப்பூவிலிருந்து)
4.நிஜந்தன்தோழன் கவிதைகள்(முகநூலிலிருந்து)

1.The Cultural Politics of Emotion-Sarah Ahmed, Routledge, 2012
2.After Darwin:Animals, Emotions and the Mind, Edited by Angelique Richardson, Amsterdam, 2013
3.Darwin and Derrida on Human and Animal Emotions:The Question of shame As a Measure of Ontological Difference-Linda Williams























மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...