Friday 23 July 2021

குறுங்கதைகள்-அவன் பெயர் முருகன்


 



    முதல் முறை அவனைப் பார்த்தபோது கண்ணைக் கொட்டக் கொட்ட விழித்து லேசாகச் சிரித்தான். அதன் பின் அவனை நெடுநாள் காணவில்லை. பிறிதொரு முறை மயில்களை ஓட்டி வந்தான். அவனிடம் மயில்கள் மயங்கித் திரிந்தன. ஒன்றின் மீது ஏறி அமர்ந்தான். அவனை ஏற்றிக் கொண்டு அது பறந்துபோனது. யார் இவன், எதற்காக என் கண்ணில் அடிக்கடி தென்படுகிறான் என நினைத்தேன். அதற்குப் பிறகு அவனை மறந்தும் போய்விட்டிருந்தேன். அது அமாவாசை இரவு. சட்டென்று கண் விழித்துக் கொண்டது. எழுந்து வெளியே வந்தேன். அவன் தூரத்தில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் செல்லவேண்டும் போல் இருந்தது. அவன் சிரித்தான். எனக்குப் பல நாட்களாகச் சேர்த்து வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவன் அமைதியாகப் பார்த்து அழவேண்டாம், நான் வந்துவிட்டேன் அல்லவா என்றான். அவனை ஊடுருவிப் பார்த்தேன். அவன் லேசாகப் பின்னோக்கி நகர்ந்து வானத்தைச் சுட்டினான். அங்கு பாதி நிலவு சிரித்துக் கொண்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த நிலவு எப்போது வந்தது..சட்டென்று அமாவாசை இரவில் நிலவு எப்படி முளைக்கும் என திகைப்பாக இருந்தது. நிலவொளியில் அவனைத் தேடினால் அவனைக் காணவில்லை. அவன் நின்ற இடத்தில் சென்று பார்த்த போது ஒரு மயில் தோகை கிடந்தது. அதைத் திருப்பிப் பார்த்தேன். முருகன் என எழுதியிருந்தது.

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...