Thursday, 19 August 2021

குறுங்கதைகள்-பறவை





இந்த ஓடுதான் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. இதிலிருந்து வெளியே வர இந்த முட்டையை உடைக்கவேண்டும். அதன் பின் இதிலிருந்து பறந்து போய்விடலாம். யாராவது இதை உடைத்து நம்மை வெளியே எடுத்தால் பெரும் ஆசுவாசமாக இருக்கும். இப்படி எல்லாம் அந்தச் சிறுபறவை எண்ணிக் கொண்டிருந்த போது முட்டை உடைந்தது. வெளியே அந்தப் பறவை எதிர்பார்க்காத வகையில் ஒரு கழுகு அமர்ந்திருந்தது. அந்தச் சிறுபறவையைத் தூக்கிச் செல்லும் ஆக்ரோஷம் அதனிடம் இருந்தது. அந்தச் சிறுபறவை கழுகிடம் தன்னை விட்டு விட கெஞ்சியது. கழுகு அதற்கு ஈடாக அது வளர்ந்த பிறகு இடும் முட்டைகள் அனைத்தையும் தனக்கே தரவேண்டும் என்றது. உயிர் பிழைப்பதற்காக அதற்கு ஒத்துக் கொண்டது சிறுபறவை. வளர்ந்த பின் அந்தக் கழுகைச் சந்திக்கக்கூடாது என எண்ணிக் கொண்டது. வளர்ந்துவிட்ட அந்தச் சிறுபறவை தன் கூட்டில் முட்டை இட்டு வைத்திருப்பதைக் கழுகு அறிந்துகொண்டு அங்கு வந்தது. இதைப் பார்த்துவிட்ட அந்தச் சிறுபறவை கழுகை விரட்ட பாம்பிடம் சென்று தன்னைக் கழுகிடம் காப்பாற்ற மன்றாடியது. அதற்குப் பாம்பும் முட்டைகள் வேண்டும் என்று கேட்டது. பறவையும் ஒத்துக் கொண்டது. கழுகும் பாம்பும் சண்டையிட்டன. அப்போது சிறுபறவை தன் முட்டைகளைக் கொண்டு போய் மலை உச்சியில் வைத்தது. மீண்டும் அவைகளிடம் சிக்காமல் இருக்க மலைப் பொந்தில் வாழ்ந்துவந்தது. அங்கிருந்து பார்த்த போது இனி தன் உலகம் இப்படி தனிமையான ஒன்றாக இருந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டு பறவை பெரும் துயரத்தில் வீழ்ந்தது. வாழ்வதற்காக என்னன்ன மலினமான நடத்தையைத் தான் மேற்கொள்ள வேண்டியிருந்தது என எண்ணி வருந்தியது. உடனே முட்டைகளை எடுத்துக் கொண்டு போய் கழுகிற்கும் பாம்பிற்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மலை உச்சிக்கு வந்து கீழே பாய்ந்து இறந்தது. 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...