Sunday 17 October 2021

குறுங்கதைகள்-நட்பு

 




அவன் வாகனம் பழுதானதால் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். இரவு வேளை யாரும் நடக்காத இடத்தில் ஒருவன் நின்றுகொண்டிருப்பது தூரத்திலிருந்து தெரிந்தது இவனுக்குக் கிலேசத்தைக் கொடுத்தது. இவன் மெதுவாக நடந்தான். அவன் இவனருகே வந்தான். இவனிடம் வந்து பள்ளியில் படித்த நண்பன்தானே என்று கேட்டான். இவனுக்கும் அவனை அடையாளம் தெரிந்தது. இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். அவன் குடும்பத்தைப் பற்றி இவன் விசாரித்தான். தனது குடும்பம் ஒரு வாகன விபத்தில் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் தான் மட்டும் தப்பியதாகவும் சொன்னான். சுடுகாடு அருகில் வந்தவுடன் தான் புறப்படுவதாகவும் பிறகு சந்திப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். சமீபத்தில்தான் இவனும் குடித்துவிட்டு இரவில் ஓட்டியதில் ஒரு வாகனம் இவன் மீது மோதாமல் இருக்க ஒரு பெரிய விபத்தில் சிக்கி சின்னாபின்னமானது. இவன்தான் அந்த விபத்துக் காரணம் என்பது இதுவரை வெளியாகவில்லை. இவனும் அது பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டியதும் இவனுக்கு மறந்துவிட்டது. அடுத்த நாளும் இரவு நேரத்தில் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான். இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். ஒரு வாரமாக இது ஒரு வழக்கமாகியது. இரு நாட்களில் தனது வாகனம் வந்துவிடும் எனவும் அடுத்தநாள் மட்டுமே இப்படி தான் வரப் போவதாக இவன் அவனிடம் சொன்னான். அடுத்தநாள் இவன் நடந்து வரும்போது அவனைக் காணவில்லை. அவன் நிற்கும் இடத்தில் வந்து இவன் சிறிது நேரம் நின்றான். அவன் வரவில்லை. இவன் கிளம்பிவிட்டான். அவனிடம் தொடர்பு எண் வாங்காதது தவறு என எண்ணிக் கொண்டான். சுடுகாடு அருகே சென்று பார்த்தான். அந்தப் பக்கம் எந்தத் தெருவும் வீடும் இல்லை. அவன் எந்தப் பக்கம் போகிறான் என இதுவரை தான் அறிந்துகொள்ளவில்லையே என நொந்து கொண்டான். அன்று அவனைக் காணாதது பெரும் குறையாக இருந்தது. அவனை எப்படிச் சந்திப்பது என எண்ணிப் பார்த்தான். அடுத்த நாள் அவனைச் சந்தித்து அவன் வீட்டு முகவரி வாங்கவேண்டும் என உறுதி செய்துகொண்டான். வேகமாக நடந்து சுடுகாடு அருகே வந்தான். அப்போது சுடுகாட்டின் கதவுகள் திறந்தன. அவன் வெளியே வந்தான். எப்போதும் இருப்பதை விட அதிக உயரமாக இருந்தான்.  கையில் ரத்தம் வழிந்தது. கண்கள் தீ போல் இருந்தன. இவனைப் பார்த்து அவன் சிரித்தச் சிரிப்பில் அந்தப் பகுதியே அதிர்வது போல் உணர்ந்தான். இவனருகே அவன் வந்தான். இவன் ஓடத் தொடங்கினான். அவன் பின் தொடர்ந்தான். எதிரில் ஒரு மின்விளக்குக் கம்பம் இருப்பது தெரியாமல் போய் இவன் அதில் மோதி கீழே விழுந்து இறந்தான்.

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...