Monday, 18 October 2021

குறுங்கதைகள்-சொர்க்கம்





அந்தக் குழந்தை தவழ்ந்து தக்காளிச் செடி அருகே வந்தது. ஒரு தக்காளியைப் பறித்தது. அந்தப் பழம் குழந்தையின் நழுவிக் கீழே விழுந்தது. குழந்தை அதை மீண்டும் எடுக்கப் போனது. அப்போது தக்காளி நடக்கத் தொடங்கியது. குழந்தை மீண்டும் தக்காளியைப் பின் தொடர்ந்தது. தக்காளி வேகமாக நடந்தது. அழகான ஒரு சோலைக்குள் நுழைந்தது. குழந்தை வருகிறதா என்று பார்த்தது. குழந்தை அங்கும் வந்துவிட்டது. சோலையில் ஒரு பெரிய நாவல் மரம் இருந்தது. அதன் கீழே நாவல் பழங்கள் கொட்டிக் கிடந்தன. தக்காளி அதை எடுத்து குழந்தைக்குக் கொடுத்தது. குழந்தை அதைச் சுவைத்துப் பார்த்துச் சிரித்தது. சோலைக்குள் தக்காளி குழந்தையுடன் சுற்றி வந்தது. அங்கே ஒரு நரி படுத்திருந்தது. குழந்தை வருவதைப் பார்த்து தனது தீய எண்ணத்திற்கு ஊக்கம் கொடுத்தது. தக்காளி இதைக் கவனித்துவிட்டது. நரியிடம் சென்று குழந்தையை நரி நன்றாகப் பார்த்துக் கொண்டால் அது சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றது தக்காளி. சொர்க்கத்தில் என்ன இருக்கிறது என்றது நரி. அதற்குத் தேவையான உணவு. நட்புடன் பழக பிற நரிகள். அது ஏமாற்றித் திரிய பிற விலங்குகள் எல்லாமே இருக்கின்றன என்றது தக்காளி. அதன் பேச்சை எப்படி நம்புவது என்றது நரி. தக்காளி அந்த நாவல் மரத்தின் மீது ஏறி கீழே குதித்தால் நம்புவதாக நரி சொன்னது. தக்காளி மரத்தின் மீது ஏறி கீழே குதித்தது. எந்தச் சேதாரமும் இல்லாமல் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் அதற்கு ஈடாகத் தனக்குச் சொர்க்கத்தைத் தக்காளிப் பெற்றுத் தரவேண்டும் என்றது நரி. சில நாட்கள் நகர்ந்தன. நரி குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொண்டது. இருந்தாலும் இந்தக் குழந்தையை வளர்த்து என்ன பயன் தான் எப்போதோ அனுபவிக்கப் போகும் சொர்க்கத்திற்காக இப்போதே நல்ல நரியாக ஏன் இருக்கவேண்டும் என எண்ணியது. தக்காளி அதனிடம் தீய எண்ணம் தலைதூக்குவதைப் புரிந்துகொண்டது. நரி இப்போதே சொர்க்கத்திற்குப் போய்விட்டுத் திரும்பவும் இங்கே வரலாம் என்றது தக்காளி. அது எப்படி நடக்கும் என்றது நரி. ஒரு முட்புதரைக் காட்டி இதற்குள் நுழைந்து மறுபக்கம் வந்தால் நடக்கும் எனக் கூறியது தக்காளி. அதற்குள் நுழைந்த நரி சொர்க்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது. மறுபக்கம் வரவே இல்லை.


 

 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...