Wednesday, 30 July 2025

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

 



(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை)


எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இலக்கியப் படைப்பாக்கங்கள் வழி நனவுநிலையைப் பின்தொடர்வது அதனைக் குறித்த விளக்கத்தைக் கண்டறிய உதவும். மனிதர்களின் பல செயல்களிலும், கருத்துகளிலும், சிந்தனைகளிலும் கண்டுபிடிப்புகளிலும் கூட நனவுநிலை வெளிப்படலாம். ஆனால் இலக்கியப் படைப்பாக்கங்கள் வழி வெளிப்படும் போது நனவுநிலையை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக உள்ளது. காரணம் மொழியின் விளக்கத்தால் அது வெளிப்படுகிறது என்பதாலாகும். நனவுநிலை என்பது என்ன என்ற கேள்வி இன்று இயற்பியலாளர்களால், உயிரியல் ஆய்வாளர்களால், வேதியியல் அறிஞர்களால் எழுப்பப்படும் ஒன்றாக உள்ளது. நனவுநிலையைக் குறித்து இன்று பல வகையான விளக்கங்கள் தோன்றியிருந்தாலும் அறிவியல் பூர்வமான விளக்கமாக மருத்துவத் துறையோ பிற துறைகளோ ஏற்கும் அளவுக்கான வரையறைகள் இன்னும் சொல்லப்படவில்லை. ஆனால் நனவுநிலைதான் எல்லா உளவியல் நகர்வுகளுக்கும் பின்னணியில் இருக்கிறது என்பதை எல்லாத் துறைகளும் ஏற்கின்றன. அத்தகைய நனவுநிலை எங்கிருக்கிறது, எப்படிச் செயல்படுகிறது ஏன் அதை வரையறுக்க முடியவில்லை என்பது குறித்து குழப்பமே மிஞ்சியிருக்கிறது. இந்தக் கட்டுரையில் மா.அரங்கநாதன் அவர்களின் படைப்பாக்கங்களில் வெளிப்படும் நனவுநிலையின் அம்சங்களைப் பின்தொடரலாம். அதன் மூலம் நனவுநிலையின் உள்ளார்ந்த அமைப்பை அறிய முனையலாம்.

நனவுநிலை குறித்து சதர்லேண்டின் உளவியல் அகராதி சொல்லும் விளக்கத்தைக் காணலாம்:

உணர்தல்கள், சிந்தனைகள், உணர்வுகள், விழிப்புணர்வு. நனவுநிலையை அறிந்திருப்பது போன்ற அறிவுக்கூர்மையற்ற சில சொற்களாலன்றி நனவுநிலை என்ற சொல்லை விளக்குவது சாத்தியமற்றது. நனவுநிலையை சுயவிழிப்புணர்வுடன் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள்—நனவுடன் இருப்பது என்பது புற உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதாகும். நனவுநிலை என்பது ஆர்வமூட்டும் மழுப்புகின்ற தோற்றப்பாடாகும். எனவே அது என்னவென்றும் அது என்ன செய்கிறது என்றும் அல்லது அது எப்படி உருக்கொண்டது என்றும் சொல்வது சாத்தியமற்றது. அதைப் பற்றி வாசிப்பதற்குத் தரமான எதுவும் எழுதப்படவில்லை (1989)[1].

நனவுநிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவரும் அதைப் பற்றிப் பல நூல்களை எழுதியவருமான டேவிட் சால்மர்ஸ் நனவுநிலை என்பதை நனவுநிலையின் அனுபவங்கள் மூலம் அதை அறிவது என்கிறார்: ‘உணரும் போதும், சிந்திக்கும் போதும் செயல்படும் போதும் அந்த வினைகளுக்கான காரணத்தையும் தகவல்களையும் ஆய்ந்தறியும் முறைமை ஒன்று தொடர்கிறது. இந்த முறைமை அறியாத இருளில் எப்போதும் இருப்பதில்லை. அந்த முறைமை ஓர் உள்ளார்ந்த அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அது அறிவார்ந்த முகமை என்று அழைக்கக்கூடிய வகையில் ஓர் உணர்தலைத் தருகிறது. இந்த உள்ளார்ந்த அறிவு முகமைதான் நனவுநிலை அனுபவம்’[2] (விழிப்புணர்வு கொண்ட மனம், 4).

நனவுநிலை என்று சொல்லப்படுவது விழிப்புணர்வு, உள்ளார்ந்த உணர்தல், புலன் கடந்த அறிவு, உள்ளுணர்வு உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பதாகவே இங்குக் கொள்ளப்படுகிறது.

படைப்பாக்கமும் நனவுநிலையும்

படைப்பாக்கமும் நனவுநிலையும் வேறு வேறாக இதுவரைக் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. படைப்பு என்பது சொல்லால் ஆனது மட்டும் இல்லை. அது நனவுநிலையின் பிரதிநிதி. நனவுநிலையின் அறிகுறிகளாக இருப்பவைச் சொற்கள். அவை நினைவிலிருந்து உருவாகி வருகின்றன. பெரும்பாலும் கடந்தகாலத்தை அவைச் சார்ந்திருக்கின்றன. நினைவுக் கிடங்கு என்பதுதான் நனவுநிலையால் செயல்படுத்தப்படுகிறது. அந்த நினைவுக் கிடங்கும் மொழியாகவே இருக்கிறது. அதாவது மொழியை வேறு வகையில் சேமித்து அதிலிருந்து மொழியைப் பயன்படுத்த முடியாது. அதனால் நனவுநிலையானது நனவிலியையும் உள்ளிணைத்தது. அதனால்தான் அது மொழி போல் உள்ளது. அந்த வகையாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மொழியானது படைப்பாக மாறும் இடத்தில் புறவய சக்திகளின் தாக்கம் உருவாகிறது. புறச் சக்திகளும் மொழிதலாகவும் கதையாடலாகவும் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதில் தான் சமூகத்தின் அனைத்துக் கூறுகளும் உள்ளன.

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ரோஜர் பென்ரோஸ் அறிவியலில் மனித நனவுநிலை குறித்து பல ஊகங்களையும் வர்ணனைகளையும் அளித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நனவுநிலை என்பது அண்டத்தின் ஒரு பகுதி. மனித நனவுநிலையையும் அதன் விளைவான மனித அறிவுநிலையையும் விளக்கும் இயற்பியல், உயிரியல் அல்லது கணக்கியல் கோட்பாடு இன்னும் உருவாகவில்லை. மேலும் அவர் நனவுநிலையின் விளக்கமாகச் சொல்வது: நம் ‘மனதில்’ (அதாவது நனவுநிலையில்) ஒரு பருப்பொருளற்ற ‘ஒன்றைக்’ கொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் புற பருப்பொளால் ஆன புற உலகால் தூண்டப்படுகிறது. மறுபுறம் அதனால் தாக்கமுறுகிறது…ஒரு விரிவான கட்டுப்படுத்தும் அமைப்புடன் இயையும் செயல்படாத உறுப்பு. அது தானாக ‘எதுவும்’ செய்வதில்லை…மாறாக, தெய்வீக அல்லது மறைபொருள் சார்ந்த ஏதோ ஓர் தோற்றப்பாடு. அது கருத்தாக்கம் சார்ந்ததாகவும் இருக்கலாம். அது மனிதகுலத்திற்கு இன்னும் தெளிவாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.’[3] 

நனவுநிலை என்பது ஒரு மாயாஜாலம் போன்ற வித்தையைக் காட்டுவதான பண்பைத்தான் கொண்டிருக்கிறது. மனித மூளை எந்த ஒரு புலன் அனுபவத்தையும் எப்படி அனுபவிக்கிறது? அதன் விளைவு ஏன் குறிப்பிட்ட ஒரு வகையில் இருக்கிறது? அதன் பின்னணி எந்த உடலியல் அமைப்பிலிருந்து உருவாகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இன்னும் அறிவியல் தேடி அடையவில்லை. அந்த விடைகள்தான் படைப்பாக்கத்தில் செயல்படும் நனவுநிலையைக் குறித்த முழுமையான விளக்கமாக இருக்கும். தத்துவம் நனவுநிலையைத் தெய்வீக அனுபவத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது. அல்லது அதன் விளைவுகளைக் கோட்பாடுகளாக்குகிறது.

அறிவு அல்லது மனம் என்ற இயக்கம் உடலின் உள்ளிலும் புறத்திலும் செயல்படுவதாகவும். மனித புலனுணர்வு மூலம் அதன் தடயங்கள் வெளிப்படுவதாகவும் புறத்தில் செயல்படும் அரூபமான கட்புலனாகா தோற்றப்படாகவும் உள்ளிலும் புறத்திலும் புலனுணர்வுகளின் தூண்டல்களை இணைக்கும் புள்ளியாகவும் கருதப்படுவதுதான் நனவுநிலை எனலாம். இத்தகைய நனவுநிலையின் செயல்பாடுகளை மா.அரங்கநாதன் அவர்களின் இலக்கிய படைப்புகள் வழி பின் தொடரும் போது அதனைப் பற்றி இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கதைகளின் கட்டுடைப்பு

மா.அரங்கநாதன் எழுதிய சிறுகதைகளில் சில தமிழவன், ஜமாலன் போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸின் கதை சொல்லும் உத்தியுடன் ஒத்துப் போவது போல் இருக்கிறது. அத்தகைய கதைகளைக் கட்டுடைப்பு செய்து வாசிப்பது அவற்றின் பொருளாம்சத்தை அறிய பெரிதும் துணை புரியும். மேலும் நனவுநிலை எப்படி இந்தக் கதைகளில் வெளிப்படுகிறது என்பதையும் இதன் மூலம் அறிய முடியும்.

’செட்டி வளாகம்’

மா.அரங்கநாதன் எழுதிய ‘செட்டி வளாகம்’ ஒரு குறிப்பிடத்தக்கக் கதை. இந்தக் கதையில் ஒரு மருத்துவருக்கும் ஒரு நோயாளிக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் கதை தொடர்கிறது. மருத்துவர் (முத்து)கறுப்பன், முருகக் கடவுள் மீது அபிமானம் கொண்டவர். மயில் போன்ற பறவைகள் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவருடைய குடும்பத்தில் பிணக்கு இருக்கிறது. இறுதியில் மருத்துவர் விமான விபத்தில் இறந்துபோகிறார். இந்தக் கதையைக் கொண்டு செலுத்தும் அம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் கொள்ளலாம்:

-மருத்துவர்(கறுப்பன்)

-நோயாளி(அகத்தியலிங்கம்-ஜோதிடம் தெரிந்தவர்)

-மயில் அல்லது பறவை-விமானம்

.......

(முத்து)கறுப்பன் மருத்துவர்.

கறுப்பனின் தந்தை லண்டனில் படிக்கும்போது ஆங்கிலப் பெண்ணை மணக்கிறார்.

திருமணத்திற்கு பறவை காரணம்

பறவை வைத்திருந்த பெண் ஆபத்திலிருந்த தந்தையைக் காப்பாற்றி மணந்துகொள்கிறாள்.

மருத்துவரின் அறைக்கு மயில் வருகிறது

முருகக்கடவுளின் வாகனம் மயில்.

சீன சோதிடத்தில் நோயாளி எடுத்த சீட்டிலும் பறவை வருகிறது.

மருத்துவரின் மனைவியும் மகனும் சொத்தின் மீது ஆசை வைத்திருக்கிறார்கள்.

மருத்துவர்/சித்தர்/கடவுளின் தூதர்

பறவை/மயில்/விமானம்

பறவையால் திருமணம்

(விமானத்தால்)பறவையால் மரணம்

...

போன்ற அமைப்புகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது.

முருகக் கடவுளின் அற்புதம் போன்ற ஒரு மருத்துவர் பறவையின் அனுகூலத்தால் பயத்தை, இன்ன பிற எதிர்மறைகளை எதிர்கொள்கிறார். சித்தரின் அனுபவம் போன்று பறவையுடனான உறவை மருத்துவர் பாத்திரமான கறுப்பன் பாத்திரம் கருதுகிறது. நோயாளியான அகத்தியலிங்கம் மருத்துவர் கறுப்பனின் அச்சம் குறித்து கவனத்தில் கொண்டுவரும் பாத்திரம். மரணத்தை எதிர்கொண்டு மருத்துவரிடம் வருகிறது. மருத்துவரின் மரணம் குறித்த செய்தி தன்னிடம் வந்தது போல் புரிந்துகொள்கிறது.

முதலில் இந்தக் கதை போர்ஹேஸின் கதை போன்ற கட்டமைப்பை எப்படிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். இதில் இரு புள்ளிகள் நகர்கின்றன. ஒன்றையொன்று வெட்டுகின்றன. ஆனால் அந்த வெட்டும் புள்ளியில் வாசகர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து வந்துவிட்டதை அறியாத வகையில் ஒரு மாயாஜாலம் கதைக்குள் நிகழ்கிறது. மருத்துவரைப் பார்க்க வரும் நோயாளி மரணத்தை ஒத்திப் போட முடிகிறது. ஆனால் நோயாளிக்கு மரணத்தை ஒத்திப்போட்ட மருத்துவர் மரணமடைகிறார். இந்த இரு கதைகளும் மரணம் என்ற புள்ளியில் சந்திக்கின்றன. நோயாளியின் கதையாக வாசிக்கப்படும் கதை மருத்துவரின் கதையாக உருமாறிவிடுகிறது. நோயாளிXமருத்துவர் என்ற இரட்டை எதிர்மை காலம்Xகாலன் என்ற இரட்டை எதிர்மையாக மாறிவிடுகிறது.  

நோயாளி இங்கு ஒரு பாத்திரம் என்பதை விட முன்னுணர்தலை அறிவிக்கும் ஒலி என்று கொள்ளலாம். ஏனெனில் மருத்துவரின் குடும்பம் ஒரு பறவையால் காப்பாற்றப்படுகிறது. அந்தப் பறவையால் மரணமும் அடையும் என்பதைச் சொல்ல வரும் பாத்திரமாகிறது நோயாளி பாத்திரம். எனவே நோயாளியின் பாத்திரம் படைப்பின் நனவுநிலையாக ஒரு மருத்துவரின் வாழ்வைத் தொடர்கிறது. இயல் வாழ்வில் பறவையின் நேசம் பெற்றவர்கள் அதே பறவையால் (விமானத்தால்) உயிரிழந்த சம்பவங்களைக் கொண்டு இந்தக் கதை இயல் உலகின் நனவுநிலையையும் கதையின் நனவுநிலையையும் இணைக்கிறது. கதையில் நிகழும் மரணமும் இயல் வாழ்வின் மரணமும் நனவுநிலை மூலம் இணைக்கப்பட்டு வாசகரிடம் கடத்தப்படுகிறது.  

...

ஜேம்ஸ்டீனும் செண்பகராமன்புதூர்க்காரரும்

மா.அரங்கநாதன் எழுதிய கதைகளில் மற்றொர் அழுத்தமான கதை இது. இதிலும் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று புனைவு. மற்றொன்று உண்மை. இரண்டு தளங்களிலும் கதை நிகழ்கிறது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து உருவான இந்தப் பிரதியை வாசிக்கையில் இந்தப் பிளவை அறிவது கதையின் பொருளாம்சத்தை அறிவதாக அமைகிறது.

இந்தக் கதையில் இருக்கும் அம்சங்களைக் கீழ்க்கண்டவாறு குறித்துக்கொள்ளலாம்:

-செண்பகராமன்புதூரிலிருந்து அமெரிக்காச் சென்ற முத்துக்கறுப்பன்

-ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் டீன்

-கடிதம் எழுதும் ஹாஃப்மேன்

-செண்பகராமன்புதூரில் கடிதங்களைப் பெறும் ஆண்டிப்பிள்ளை

...

உண்மைச் சம்பவம், ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் மரணம் அடைந்தது

புனைவு, முத்துக்கறுப்பனும் விபத்தில் மரணம் அடைவது

உண்மை: ஜேம்ஸ் டீன் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்

புனைவு: முத்துக்கறுப்பனும் இதையே சொன்னது

உண்மை:ஜேம்ஸ் டீன் வானவெளியில் கலப்பதை விரும்பியவர்

புனைவு:முத்துக்கறுப்பனும் அதையே சொன்னது

இந்தக் கதையில் உண்மையும் புனைவும் இணையும் புள்ளி, ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் மரணம் அடையும் இடத்தில்தான். அது உண்மையில் நடந்த சம்பவம். ஆனால் புனைவுக்குள் அந்த மரணம் வெறும் சம்பவமாக நடக்கவில்லை. முத்துக்கறுப்பன் பாத்திரத்தின் விருப்பத்தின் பேரில் நடந்தது போல் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் டீன் நட்சத்திரங்களுடன் கலக்கவேண்டிய ஒரு நபர் என்பதால் இனி நடிக்கவேண்டியதில்லை என்ற முத்துக்கறுப்பனின் விருப்பம் புனைவாக மாறி உண்மையின் சம்பவத்தை எழுதியிருக்கிறது. ஜேம்ஸ் டீன் மரணமடைய விருப்பப்பட்ட செண்பகராமன் புதூர்க்காரரான முத்துக்கறுப்பன் அதற்குத் தண்டனையாக அதே போன்று அகால மரணமடைந்துவிடுகிறார். ஜேம்ஸ் டீனின் மரணம் முத்துக்கறுப்பனுக்குத் தான் வாங்கிய கடனை நினைவுக்குக் கொண்டுவருகிறது. மரணத்திற்கு முன் கடனைத் தீர்த்தல் என்பதாக முத்துக்கறுப்பன் பாத்திரம் அதை நினைவில் கொண்டுவருகிறது. ஜேம்ஸ் டீன் என்ற உண்மை நடிகருடன் எந்தத் தொடர்பும் இல்லாத முத்துக்கறுப்பன் என்ற பாத்திரத்தை இணைத்து வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கும் ஜேம்ஸ் டீனின் மரணம் என்ற உண்மையுடன் புனைவு கலக்கப்பட்டிருக்கிறது. முத்துக்கறுப்பன் பாத்திரம் மூலம் மறைந்திருந்த, மெய்நிகரான நனவுநிலை எழுச்சி பெற்று உண்மையான மரணத்துடன் கதையின் மரணத்தை இணைத்துவிடுகிறது. ஜேம்ஸ்டீன் விபத்தில் மரணமடைவார் என்று முன்னுணர்ந்து சொன்ன படைப்பின் நனவுநிலை கதைக்குள் புகும் போது முத்துக்கறுப்பனுக்கும் அதே போன்ற மரணத்தைச் சம்பவிக்கச் செய்து அதை இயல்பாக்க முயல்கிறது. 

நனவுநிலையும் அப்பாலை அனுபவங்களும்

நனவுநிலையின் அப்பாலை அனுபவங்களாக உள்ளுணர்வு, தொலைபார்வை, தொலை நுகர்வு, முன்னுணர்வு உள்ளிட்ட புலனுணர்வு மீறிய பண்புகளைக் குறிக்கலாம். அதில் குறிப்பாக உள்ளுணர்வு எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருப்பது.

மயிலாப்பூர் என்ற சிறுகதையை எழுத்தாளர் மா.அரங்கநாதன் 1987ல் எழுதியிருக்கிறார். இந்தக் கதை ஒரு பேரழிவிற்குப் பிறகான ஒரு நகரத்தைச் சித்தரிக்கிறது. இந்தக் கதையில் இரு பாத்திரங்கள் மட்டுமே வருகின்றன. அவருடைய எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பெறும் முத்துக்கறுப்பன் பாத்திரத்துடன் காயத்ரி என்ற பெண் பாத்திரமும் மட்டுமே இந்தக் கதையில் இடம்பெறுகிறார்கள். சென்னையின் மயிலாப்பூரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் வர்ணிக்கிறது கதை. இந்தக் கதையை வாசிக்கக் கதைக்குள் இருக்கும் தகவல்களைத் தவிர கதைக்கு வெளியே இருக்கும் தகவல்களையும் உள்ளிணைக்க வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எழுத்தாளர் மா.அரங்கநாதன் முன்னுணர்வு கொண்டவர். நடக்கப் போகும் சில இயற்கை பேரழிவுகளைப் பற்றி அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது. கதையின் முதல் வரி இப்படித் தொடங்குகிறது: ‘ஒரு மின்வெட்டுப் போல்தான் அது வந்து போயிற்று.’ இந்த வரியில் ‘அது’ என்ற ஒரு சொல்தான் முழு கதையையும் நடத்திச் செல்கிறது. அந்த இடத்தில் எல்லாமே அழிந்து போய்விட்டதற்கான சாட்சியங்களாக உள்ளன. கட்டடங்கள், பூங்காக்கள், விடுதிகள் எல்லாமே அழிந்து தூசு படிந்து உள்ளதை வர்ணிக்கிறது கதை.

1987ல் மயிலாப்பூரில் கோயில், குளம், கடைகள், போக்குவரத்து நெரிசல் என்று எல்லாமுமாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் அவை எல்லாமே காணாமல் போய்விட்டன. மனிதர்களே இல்லாத இடம் எப்படியிருக்குமோ அப்படிக் கதைக்குள் மயிலாப்பூர் இருக்கிறது. எப்போதுமே நெரிசலான மயிலாப்பூரில் பேரழிவுக்குப் பிறகு எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டுகிறது கதை

எப்போதோ தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு பேரழிவு தாக்கப் போவதை முன்கூட்டியே கணித்து எழுதப்பட்ட கதை இது. 1987ல் இந்தக் கதையின் பொருள் ஒரு பேரழிவு வரப் போவதைக் குறித்துப் பேசுகிறது என்பதாக இருக்கும். இந்தக் கதை வெறும் ஒரு கற்பனையைப் பேசிவிட்டுச் சென்றுவிட்டதாகக் கருதப்படும் ஆனால் அது முன்னுணர்வாக எப்போது மாறியிருக்கிறது என்றால் 2004ல் சுனாமி வந்த போது இந்தக் கதையின் பொருள் மாறுகிறது

எழுத்தாளர் மா.அரங்கநாதன் ஜோசியம் பார்ப்பதில் வல்லவர். ஆனால் அவருக்கு ஜோசியம் பார்ப்பதில் இருந்தத் திறமையை விட முன்னுணர்வின் திறன் மிக அதிகமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு சுனாமி வரவிருப்பதற்கான காட்சி வடிவத்தை ஒரு கதை காட்டியிருக்கிறது முன்னுணர்வு குறித்து அறிய மனித நனவுநிலை பற்றிய விளக்கங்கள் அவசியமாகின்றன.

எர்வின் ஷ்ராடிங்கரின் ஒரு குறிப்பிடத்தக்க விளக்கம் இங்கு நினைவுகூரத்தக்கது. “நனவுநிலை என்பது ஒருமையாக வெளிப்படும் உடனடி அனுபவம் என்பதே சாத்தியம், அதன் பன்மைத்துவம் மறைந்திருப்பதாகும்; பன்மைத்துவம் ஒரு மறைவினால் ஒருமைத்துவத்தில் பல அம்சங்களாக வெளிப்படும் ஒன்றாகும்,’ என்கிறார் ஷ்ராடிங்கர்.[4]

நனவுநிலையில் பன்மைத்துவம் என்று ஷ்ராடிங்கர் கூறுவதில் முன்னுணர்தலும் ஒன்றாக உள்ளது. அதன் மூலம் நடக்கப் போவதை முன் கூட்டியே காட்சி வடிவங்களாகத் தெரிவது சிலருக்குள் இருக்கும் திறன். அந்த வகையான திறனை வைத்து எழுத்தாளர் மா.அரங்கநாதன் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.

நனவுநிலை பற்றிப் பேசுகையில் மனித மூளையின் எதிர் வினைகள் குறித்து ஆராய வேண்டியிருக்கிறது. ஏனெனில் மனித மூளைதான் பல புலனுணர்வுகளைத் திறனாய்ந்து கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. ஆனால் மூளையின் செயல்பாடு உடலுக்குள் மட்டுமே இருப்பதாகக் கருத முடியுமா என்ற கேள்வி எழுகிறது

உடலுக்குப் புறத்திலும் அறிவின் செயல்பாடு நடப்பதாகப் பல அறிவியலாளர்களும் தத்துவவியலாளர்களும் கருதுகிறார்கள். மயிலாப்பூர் கதையில் என்னாகிறது என்றால் இயக்கம் நின்று போன மாநகரக் காட்சி பருப்பொருளில் கலந்திருப்பதாகிறது. அங்கு இயக்கத்தில் இருப்பவை கரப்பான் பூச்சிகளே. அது அழிவுக்கும் முன்பும் பின்பும் இருப்பவை. இதிலிருந்து ஒரு பொறி எழுத்தின் ஆன்மாவுக்கு வந்து சேர்கிறது. இந்தக் கதை எழுதுவதற்கான பொறியாகவே அது இருக்கிறது. பல்லாயிரமாக இருந்தப் பூச்சிகள் பேரழிவுக்குப் பின் எண்ணிக்கையில் குறைந்து அங்கும் இங்கும் நகர்கின்றன. பேரழிவு வரவிருப்பதை அறிவித்திருப்பவை போல் அவற்றின் பெருக்கமும் சுருக்கமும் இருந்திருக்கிறது. கதையில் அதைப் பற்றிய குறிப்பும் பல இடங்களில் வருகிறது

பேரலையின் எழுச்சியில் நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டிருந்த நீரும் பொங்கி வெளியே வந்திருக்கிறது. அதில் இருந்த கரப்பான் பூச்சிகள் தரைக்கு வந்திருக்கின்றன. இது பேரழிவைக் குறிக்கும் குறிப்பைப் புரிந்துகொள்ள உதவுவதாக உள்ளது. ஏனெனில் புறத்தில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் உடலில் இருக்கும் மூளையுடன் கொள்ளும் தொடர்பு விசித்திரமானதாக அறிய முடியாததாக இதுவரை இருந்து வந்துள்ளது.

     புறத்தின் தூண்டல் மூலம் மூளை எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கிறது என்றாலும் புறத்தில் இருக்கும் பருப்பொருள் நனவுநிலையை முழுமையாக்குகிறது. எனவே பருப்பொருளில் நிலவும் இதுவரை பெயரிடப்படாத இயக்கம், விசை அல்லது பரிமாற்றம் மனித நனவுநிலையை நடத்திச் செல்கிறது என்று ஆண்டி கிளார்க்கும் டேவிட் சால்மர்ஸும் கூறுகிறார்கள்[5].

கரப்பான் பூச்சிகள், கடலின் அமைப்பு, கடற்காற்று போன்ற பல வகையான பொருள்கள் கதையில் ஒரு விநோதமான இயக்கத்தைக் கொண்டிருக்கின்றன. பேரழிவுக்கு முந்தைய நிலையையும் பிந்தைய நிலையையும் பதிவு செய்பவையாக அவை உள்ளன இந்தக் கதைக்குள் எங்குமே மயிலாப்பூர் என்ற இடத்தின் பெயர் வரவில்லை. அதே போல் பேரழிவு நிகழ்ந்த காலமும் வரவில்லை. மற்றொன்றைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதாவது நனவுநிலை என்பது ஒவ்வொரு கணமும் மறைந்து தோன்றுவது. ஹென்றி பெர்க்சன், ‘நனவுநிலை உடனடியாகக் கடந்து போனதிலும் வரக்கூடிய எதிர்காலத்திலும் பரவி நிற்பது. கடந்ததில் சாய்ந்து கொண்டு வருவதில் வளைந்திருப்பது என்கிறார்.[6]

மயிலாப்பூர் என்ற இடத்தில் பேரழிவு நடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக வந்த ஒரு தகவல் 1987 என்ற காலத்தைக் காட்டுவதாகக் கொண்டால் 2004ல் அது நடந்தது என்ற காலத்தில் அது உண்மையாகிறது. அதாவது கடந்ததில் சாய்ந்துகொண்டு வருவதில் வளைந்து ஓர் உண்மைத் தகவலை எழுத்தாளரின் நனவுநிலை பெற்றிருக்கிறது. அந்தத் தகவலைப் பெற்ற நேரம் என்பதைத்தான் ‘சமயம்’ (Duration) என்று ஹென்றி பெர்க்சன் குறிப்பிடுகிறார்[7].

எர்வின் ஷ்ராடிங்கர் சொல்லும் ஒரு கருத்தை நினைவுகூரலாம்: ‘எல்லா நரம்புத் தூண்டல்களும் விழிப்புணர்வுடன் நடப்பதில்லை. அவற்றில் பல அகத் தூண்டல்களாகவும் புறத்தூண்டல்களாகவும் உள்ளன. உடலியல் ரீதியான முக்கியத்துவத்தையும் காலத்துடனான விளைவுகளையும் அகத்தில் நடந்தாலும் அது புறச் சூழல்களை மாற்றும்படியும் இருக்கும்…ஏதோ ஓர் உயிரியல் ரீதியான அனுபவம் மீண்டும் நடைபெறவே நடைபெறாது.[8] அப்படிப்பட்ட அனுபவம்தான் இந்தக் கதைக்குள் நிகழ்ந்திருக்கிறது. நனவுநிலையின் காலவெளியைக் காட்டிய முன்னுணர்வு மயிலாப்பூர் என்ற கதையாக நின்று நிலைக்கும்.

முடிவாக, மா.அரங்கநாதனின் கதைகள் பலவற்றில் இது போன்ற நனவுநிலையின் ஊடாட்டம் கொண்ட கதைகள் உள்ளன. அவற்றைக் கட்டுடைத்து நனவுநிலையின் பரிமாணத்தை வெளிக் கொண்டுவந்தால் எழுத்தாக்கம் கொண்டிருக்கும் தூண்டுதல் பற்றியும் அதன் அடிப்படைக் குறித்தும் அறிய முடியும். ஏனெனில் நனவுநிலை முன்னுணர்தல், தொலைபார்வை, டெலிபதி போன்ற பலவற்றின் மூலம் வெளிப்படுகிறது. அதனால் இந்தத் திறன் கொண்ட எழுத்து ஆளுமையான மா.அரங்கநாதனின் படைப்புகளில் நனவுநிலையைப் பின் தொடர்வதன் மூலம் அறிவியலின் விளக்கங்களை அறிவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன.

…………..

பயன்பட்ட நூல்கள்

முதன்மை ஆதாரம்:

மா.அரங்கநாதன் படைப்புகள், நற்றிணை பதிப்பகம், சென்னை, 2016.

இரண்டாம் நிலை ஆதாரம்:

ஜமாலன், யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம்:அரங்கநாதன் படைப்புகள்-ஒரு வாசிப்பு, சிற்றேடு கட்டுரைத் தொகுப்பு, பெங்களூர், 2017.

மூன்றாம் நிலை ஆதாரங்கள்:

Books

1. Bergson, Henri. Time and Freewill, (tr) F.L .Pogson, George Allen & Unwin Ltd. London, 1910.

2 Bergson, Henri.  Mind and Energy – Lectures and Essays, trans, H.Wildon Carr,Henry Holt and Company, New York,, 1920,

3.Chalmers, David. The Conscious Mind, Oxford University Press, 1996.

4.Deleuze, Gilles, Difference and Repetition, (trans) Paul Patton, Columbia University Press, New York, 1994.

5..Penrose, Roger. The Emperor’s New Mind Oxford University Press, 1990.

6.Schrodinger, Erwin. What is Life and Mind and Matter. Cambridge University Press, 1944.

7.Sutherland, Norman Stuart. The Interanational Dictionary of Psychology, Continuum, 1989.

 

Journals

Clark, Andy, and David Chalmers. “The Extended Mind.” Analysis, vol. 58, no. 1, 1998, pp. 7–19. JSTOR, http://www.jstor.org/stable/3328150. Accessed 11 Nov. 2024.

 

 

 

 

 



[1] The having of perceptions, thoughts, and feelings; awareness. The term is impossible to define except in terms that are unintelligible without a grasp of what consciousness means. Many fall into the trap of confusing consciousness with self-consciousness—to be conscious it is only necessary to be aware of the external world. Consciousness is a fascinating but elusive phenomenon: it is impossible to specify what it is, what it does, or why it evolved. Nothing worth reading has been written about it. (Sutherland 1989)

[2] When we perceive, think, and act, there is a whir of causation and information processing, but this processing does not usually go on in the dark. There is also an internal aspect; there is something it feels like to be a cognitive agent. This internal aspect is conscious experience. Chalmers 4

 

[3] It appears that we have, in 'mind' (or, rather, in 'consciousness'), a nonmaterial 'thing' that is, on the one hand, evoked by the material world and, on the other, can influence it… consciousness is merely a passive concomitant of the possession of a sufficiently elaborate control system and does not, in itself, actually 'do' anything… Alternatively, perhaps there is some divine or mysterious purpose for the phenomenon of consciousness possibly an ideological one not yet revealed to us- Penrose. Emperors New Mind, 213.

 

 

[4] The only possible alternative is simply to keep to the immediate experience that consciousness is a singular of which the plural is unknown; that there is only one thing and that what seems to be a plurality is merely a series of different aspects of this one thing, produced by a deception- Schrodinger, Mind and Matter,89.

[5] We see that extended cognition is a core cognitive process, not an add-on extra  -Clark & Chlamers, The Extended Mind, 12.

[6] It spans in immediate past and imminent future. Leaning on the past bending on the future- Bergson,H.,Mind-Energy – Lectures and Essays, trans, H.Wildon Carr, 1920, Henry Holt and Company, New York, P.9

 

[7] Duration is the form which the succession of our conscious states assumes when our ego lets itself live, when it refrains from separating its present state from its former state.-Bergson, Time and Free Will, p.100.

[8] Not every nervous process, nay by no means every cerebral process, is accompanied by consciousness. Many of them are not, even though physiologically and biologically they are very much like the 'conscious' ones, both in frequently consisting of afferent impulses followed by efferent ones, and in their biological significance of regulating and timing reactions partly inside the system, partly towards a changing environment.. Many of them are not, even though physiologically and biologically they are very much like the 'conscious' ones, both in frequently consisting of afferent impulses followed by efferent ones, and in their biological significance of regulating and timing reactions partly inside the system, partly towards a changing environment. Schordinger, Erwin. What is life?, p.95.

Friday, 29 November 2024

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

 


ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விளக்கத்தை உருவாக்க இயலாதவாறான சுதந்திரமான படைப்பாக்கங்களாக அவருடைய ஓவியங்கள் உள்ளன. அவருடைய வண்ணங்களில் அழுத்தமான நீலம், சிவப்பு, பழுப்பு, பச்சை, மரகத நிறம், இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல நிறங்கள் கூடியும் கலந்தும் ஓர் இசைக் கோர்வை போல் கித்தானில் ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால் இந்த வண்ணங்கள் நேரடியான பொருளையும் மறைமுகமான பொருளையும் காலம் கடந்து நிற்கும் பொருளையும் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அரூப ஓவியங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறது. உலகின், வாழ்வின் எல்லா அம்சங்களையும் யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இதில் புரியாமை குறித்த கேள்வி எங்கு எழுகிறது என்றால் பல ஓவியங்களும் ஸ்தூலமான பொருளாம்சத்தைக் கொடுக்கின்றன, அரூப ஓவியங்கள் கொடுப்பதில்லை என்ற கருத்திலிருந்து இந்தப் புரியாமை என்ற கருத்து உருவாகிறது. ஆனால் எந்தப் படைப்பைப் பற்றியும் தொடர்ந்து சிந்தித்தால் அது குறித்த பல விளக்கங்கள் உருவாகும்.

ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

1.அரூப வகையைச் சார்ந்தவை

2.தாறுமாறான பொருளைத் தருபவை

3.இயற்கையின் மற்றொரு வடிவமாக உள்ளவை

என்ற மூன்று வகைமையில் பிரித்துப் பொருளை அறியக்கூடிய வகையில் உள்ளன.

1.அரூப வகைமை

அரூப வமைமையிலான ஓவியங்கள் பல பொருளாம்சங்களைக் கொண்டவை. சுதந்திரமான பொருளாம்சங்களை உருவாக்கிக் கொண்டே செல்லக்கூடிய தகவமைவைப் பெற்றவை. மேலும் இந்த அரூப வகைமையைச் சார்ந்த ஓவியர்களில் ஜேசன் பொல்லாக்கிலிருந்து இன்னும் பல மேலைநாட்டு ஓவியர்கள் குறிப்பிடத்தக்க ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். நம் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிமூலம் போன்றவர்களும் அரூப ஓவிய வகைமைகளை வரைந்திருக்கிறார்கள். அச்சுதன் கூடலூரும் அரூப ஓவிய வகைமையைச் சார்ந்தவர். ஆனால் ஓவியர் விஸ்வம் அவர்களின் அரூப வடிவிலான ஓவியங்கள் ஸ்தூலமான புலனறிவு சார்ந்த பொருளாம்சங்களைத் தொடர் உற்பத்தி செய்யக்கூடிய வகைமையிலானவையாக உள்ளன. அரூப ஓவியங்கள் பொதுவாக இயற்கையின் காட்சிகளையும் ஆன்மீகத்தின் அடிப்படையையும் குறிப்பதாக இதுவரையிலான அரூப ஓவியங்களைச் சங்கேதவிலக்கம் செய்து எழுதிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

     அரூப ஓவியங்கள் மட்டுமல்லாமல் எல்லா ஓவியங்களிலும் அவற்றில் காணப்படும் கோடுகள், வண்ணத்தின் பயன்பாடுகள், உருவங்கள், வடிவங்கள் என்று பலவற்றைக் கணக்கில் எடுத்தே பொருள் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் இதுவரை ஓவியங்களைப் பார்த்த அனுபவமும் எந்த ஓர் ஓவியத்தை அறிவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள் பின்னப்படுத்தப்பட்ட குறுக்கும் மறுக்குமான தூரிகையின் கீற்றுகளால் நிரப்பப்பட்டவையாக உள்ளன. மேலும் ஒவ்வொரு முறையும் ஒரு வகையான படிமத்தை அவை ஏற்படுத்துகின்றன. அதனால் அரூப வகைமையின் முழுமையான குணாம்சங்களைக் கொண்டவையாக ஓவியர் விஸ்வத்தின் படைப்புகள் உள்ளன.

2.தாறுமாறான பொருளைத் தருபவை

     அரூப ஓவியங்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் அவை தாறுமாறான பொருளைத் தருபவையாக உள்ளன. இதற்குக் காரணம் வாழ்வின் ஒழுங்கற்ற நிலையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகளிலும் இந்தக் குணாம்சத்தைப் பார்க்க முடிகிறது. மேலும் அந்த ஒழுங்கின்மை பார்ப்பவர்களின் உலகத்தில் இருக்கும் ஒழுங்கின்மையுடன் உறவு கொள்கிறது. அந்த ஒழுங்கின்மை அவர்களின் வாழ்வின் பொருத்தமான கணங்களில் வெளிப்படும் குழப்பத்தை முன்வைப்பது போலும் உள்ளது.

          இந்த ஒழுங்கின்மைக் கொண்ட படைப்பாக்கம் ஓர் ஒளிக்கற்றை போல பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. அது கனவின் ஒளிக்கற்றைப் போலவும் கற்பனையில் ஊடாடும் ஒளிச்சிதறல் போலவும் உள்ளது. ஓவியர் விஸ்வத்தின் படைப்புகளில் உமிழப்படும் ஒளிக்கற்றையும் பன்மைத்துவ அடுக்கல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றின் குறுக்குமறுக்கான நகர்வைப் பின்தொடர்தல் பல பொருள் படிமங்களை உருவாக்குபவையாக உள்ளன. இயற்கை ஒழுங்குடன் இருப்பதான கற்பனை அந்தத் தாறுமாறைக் கண்டு அதிர்ச்சியைத் தருகிறது. காட்டின் தாறுமாறு அதிர்ச்சி தருவது போல, மேகங்களன் திரளில் உள்ள தாறுமாறு போல ஓவியர் விஸ்வத்தின் ஓவியங்களின் தாறுமாறும் காணப்படுகிறது.  

ஜியோமிதியின் வடிவங்கள் நெருக்கி உருவாக்கப்பட்டவைப் போல் இந்த அரூப ஓவியங்களின் தாறுமாறான பண்பு உள்ளது. அதன் காரணமாக ஒரு நவநெகிழித் தன்மையைக் கொண்டவையாக இவைக் காணப்படுகின்றன. ஓவியர் விஸ்வர் அவர்களின் படைப்புகளில் இந்த வகையான நெகிழித் தன்மையின் ஊடாகப் பரவும் தாறுமாறான குணாம்சத்தைப் பார்க்க முடிகிறது.

3.இயற்கையின் மற்றொரு வடிவமாக உள்ளவை

  ஓவியர் விஸ்வம் அவர்களின் ஓவியங்களை ஐம்பூதங்களின் வகைமையைச் சார்ந்தவையாகப் பிரிக்கும் வகையில் அவற்றின் பொருளாம்சத்தை விரிவுபடுத்தலாம். நீலம் என்றால் வானத்தின் நீலமும் கடலின் நீலமும் குளத்தின் நீலமும் நதியின் நீலமும் இன்ன பிற நீலங்களும் கலந்த நீரின் தன்மையை எதிரொலிப்பவையாக இருக்கின்றன. அவற்றைக் காணும் போது இயற்கையின் அருபத்தை, நீரின் அரூபத்தைச் சிந்தும் வகையில் இருப்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. நீலம் என்பது வெறும் ஒரு வண்ணமாக மட்டும் அல்லாமல் ஏன் இயற்கையின் அரூபங்களாக அது காட்சி தருகிறது என்றால் அந்த வண்ணத்தைக் கண்ட மரபார்ந்த பார்வை இயற்கையின் பல வண்ணங்களோடு அதை ஒப்பிட முயற்சிக்கிறது.  

அக்னியின் சிவப்பு கோபமாக, எரிதழலாக, பெருவெடிப்பாக, எரிமலையாக, இயற்கையின் அத்தனை கோபத்தின் அரூப வடிவாகங்களாவும் பூக்களாக, செவ்வானமாக, சூரியனாக இன்னும் பல இதமான செம்மையின் ரூபமாகவும் உள்ளதைக் காண முடிகிறது. எனவே இயல்பான உணர்ச்சிகளின் போக்குகளையும் அவற்றின் வெளிப்பாடுகளையும் வண்ணங்களாக மாற்றுவது போன்ற பண்பை ஓவியர் விஸ்வம் அவர்களின் ஓவியங்கள் கொண்டிருக்கின்றன.

சாம்பல் நிறத்திலான படைப்புகள் வானத்தின் மேகமூட்டத்தைக் குறிப்பதைப் போலுள்ளன. மழையின் உக்கிரத்தைக் காட்டுபவை போலவும் ஒளியற்ற உலகத்தின் மற்றொரு பக்கமாகவும் இருளின் வாசலில் நிற்க வைப்பவை போலவும் இந்த ஓவியங்கள் உள்ளன. இடியும் மின்னலும் மூண்டு விடக்கூடிய வானத்தைத் தொடர்ந்து முன்வைப்பவையாக இந்த ஓவியங்கள் உள்ளன.

மொத்தத்தில் ஓவியர் விஸ்வர் அவர்களின் படைப்புகள் நிலத்தின் குணாம்சத்தையும் நீரின் பாய்வையும் காற்றின் அலைதலையும் அக்னியின் பீறிடலையும் வானத்தின் பெருவெளியையும் தாறுமாறாகக் காட்டும் அரூப ஓவியக் கற்றைகள் என்று சொல்லலாம். நகரத்தின் ஒழுங்கின்மை போல சிலவும் மண் மறைத்த கிராமம் போல சிலவும் மாயத்தன்மைய இந்த ஓவியங்கள் பெருக்கி இருக்கின்றன.

 

 

 

Wednesday, 21 August 2024

பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு






(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை)


பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரேமாவின் படைப்பாக்கமும் பெண்ணியம் சார்ந்தே அவருடைய இந்தச் சிறுகதைத் தொகுப்பான எங்களோட கதையில் உள்ளது. பல்வேறு வாழ்வியல் நிலைகளில் பெண்கள் படும் பாட்டை இந்தத் தொகுப்பின் பத்து கதைகளில் எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள பெண்களை கீழ் வரும் வகையில் வரிசைப்படுத்தலாம்:

1.உறுதியானவர்கள்

2.அப்பாவியானவர்கள்

3.தனித்திறன் கொண்டவர்கள்

………………

1.உறுதியானவர்கள்

இந்த வகைமையில் உள்ள பெண்கள் தங்களின் முடிவைத் தானே எடுக்கும் நிலையில் இருப்பவர்களாக இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர்களிடம் பொறுப்பு உள்ளது. மேலும் ஆண்களைச் சார்ந்து நிற்கக் கூடாது என்ற எண்ணத்தில் உறுதியானவர்களாக உள்ளனர். இதுதான் பெண்ணியம் காட்டும் உறுதி. அதை ஆசிரியர் பாத்திரங்கள் வழி கொண்டு வந்திருக்கிறார். பெண்களிடம் அரிதாகக் காணக்கிடைக்கும் இந்த உறுதியை இந்தக் கதையின் பாத்திரங்களிடம் படைத்திருப்பதன் மூலம் இயல் வாழ்வில் பெண்களுக்கான பாதையாக எது இருக்கவேண்டும் என்று காட்ட நூலாசிரியர் பிரேமா அவர்கள் விரும்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, பரிதவிப்பு என்ற கதையின் நாயகியும் எனக்கான காற்று என்ற கதையின் நாயகியும் இத்தகைய உறுதியானவர்கள் என்ற வகைமையில் வரக்கூடிய பெண் பாத்திரங்களாக உள்ளனர். பரிதவிப்பு கதையில் நாயகி தன் அம்மாவிற்காகச் சிறுநீரங்கத்தைத் தானம் கொடுத்ததற்காக காதலனைப் பிரிய நேர்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக வாழ்வது என்ற உறுதியாக முடிவெடுக்கிறாள். மீண்டும் தன் காதலன் வந்து திருமணம் செய்து கொள்ளக் கேட்ட போதும் அதை அவள் ஏற்பதில்லை. இது போன்ற உறுதி பொதுவாக, ஆண்களிடம் இருப்பதாக இதுவரைச் சமூகம் எண்ணி வந்ததை மாற்றி அது பெண்ணிடமும் இருப்பதாக இந்தக் கதை காட்டுகிறது. அதைத் தவிர பெண் தனக்கான பொறுப்பாகச் சிலவற்றைத் தானே ஏற்பதும் ஒரு விடுதலையான பெண்ணின் பாத்திரத்தை இந்தக் கதை வரைந்து காட்டுகிறது.

மற்றொரு கதையான எனக்கான காற்று என்ற கதையின் நாயகி ஒரு பாடகி. காதலித்து மணந்த கணவன் குடிக்கு அடிமையாவதுடன் தன் மகனும் குடிக்கு அடிமையானதைப் பார்த்துப் பொறுக்காமல் விவாகரத்தைத் தேர்ந்தெடுப்பது பெண்ணுக்கான உறுதியான முடிவாக உள்ளது. அது தவிர, தன்னுடைய சுயமான காற்றைச் சுவாசிக்க இது போன்ற உறுதியான முடிவு தேவை என்று பெண் தீர்மானிப்பது குறித்து இந்தக் கதைத் தெளிவாகக் காட்டுகிறது.

தன்னிலை என்பது மற்றமையால் விளக்கப்படுகிறது என்பதுதான் பொதுவான விளக்கம். அதுவும் பெண்மை என்ற பாலினத்தின் தன்னலை ஆண்மை என்ற தன்னிலையின் மூலமாக விளக்கப்படுவதாக, நிறைவடைவதாக உளவியலாளர்களின் அவதானிப்பாக உள்ளது. ஆனால் பெண் அந்தத் தன்னிலையைக் குறித்து விழிப்புணர்வு அடைந்து தன்னுடைய தன்னிலை, மற்றமையால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதைப் புரிந்து அதிலிருந்து விடுவித்துக் கொண்டு தன் சுயம் சார்ந்த தன்னிலையை வளர்த்தெடுத்து அதற்கான மற்றமையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதுதான் பெண்ணியலாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அது போன்ற பெண்களை இந்தக் கதைகளின் பாத்திரங்கள் மூலம் காணமுடிகிறது. பெண் மைய ஆளுமைகளாக, பெண்ணாகுதல் என்ற வினையை நிகழ்த்துபவர்களாகப் பெண்கள் உருவாகவேண்டும் என்பதற்கான அடிப்படைதான் பெண்ணியத்தின் சாரமாக இருப்பதாகப் பல பெண்ணியலாளர்கள் கருதுகிறார்கள். அதற்கான எடுத்துக்காட்டுகளாக இது போன்ற உறுதி கொண்ட பெண்களைப் படைப்பதை பெண்ணியக் கருதுகோள்களைக் கொண்டவர்களின் பிடிப்பாக உள்ளது.

2.அப்பாவியானவர்கள்

இந்தக் கதைகளின் அடுத்த வகைமையிலுள்ள பெண்கள் அப்பாவியானவர்கள். இவர்கள் பெரிதும் தன்னுணர்வின்றி எதேச்சையான முடிவை எடுப்பவர்களாக அதனால் வரும் விளைவுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போக்கு பிறரைப் பாதிப்படையச் செய்துவிடுவதாக உள்ளது. ஆனால் சமூகத்தில் இத்தகைய பெண்களின் இயல்பு ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. பெண்ணின் சுயம் சார்ந்த போக்குகளை விமர்சிக்கும் நிலையில்தான் எப்போதும் சமூகம் உள்ளது. அத்தகைய பெண் இயல்புகளையும் அதனால் விளையும் பாதிப்புகளையும் குறித்து சில கதைகள் விரிவாகப் பேசுகின்றன.

எடுத்துக்காட்டாக, கள்ளிப் பாதையும் நுணாப் பூவும் என்ற கதையில் வந்த சிறுமி, ஓர் அப்பாவியான பெண். அவளுக்குச் சமூகத்தின் சூது வாது தெரியாது. ஆனால் அவள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் போது அதை எதிர்ப்பது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அதனால் அவள் காப்பாற்றப்படுகிறாள் என்பதை இந்தக் கதை ஆழமாக விளக்குகிறது. அந்தச் சிறுமியின் அப்பாவியான குணாம்சத்தின் மீது ஏற்பட்ட தாக்குதலை அவள் அதே விளையாட்டுத்தனத்துடன் சமாளித்துவிடுவதும் அதற்காகப் பின் வருந்துவதும் ஓர் இயல்பான பெண்ணின் போக்காக இந்தக் கதை காட்டுகிறது. அப்பாவித்தனம் என்பது பெண்ணின் இயல்பு என்றும் அதுதான் பெண்ணின் குணாம்சத்தில் ஆணைக் கவரக்கூடியது என்றும் இதுவரையிலான ஆண் மைய சமூகத்தின் அடிநாதக் கருத்தாக இருந்திருக்கிறது. அதனைப் பெண்ணுக்குச் சாதகமாக மாற்றி இந்தக் கதையில் எழுதப்பட்டிருக்கிறது. அப்பாவியாக இருந்தாலும் தனக்கு ஊறு நேர்ந்தால் அதை எதிர்க்கவும் துணியக் கூடிய அப்பாவித்தனமாக ஒரு பெண் இருக்கிறாள் என்பது பல சிறுமிகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஒரு படிப்பினை போல் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. 

            மற்றொரு எடுத்துக்காட்டு அக்கினி மனசு கதையில் வரும் நாயகி. காதலித்து மணந்த கணவனுடன் குடும்பம் நடத்துகையில் வறுமை வாட்டுகிறது. இருந்தாலும் கணவனிடம் தனக்கு பிரியாணி தேவை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி அதை அவன் வாங்கி வராததால் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறாள். ஓர் அப்பாவியான பெண்ணின் உள்ளத்தில் உள்ள குழந்தைத்தனமான பிடிவாதம் குறித்து இந்தக் கதை குவிமையப்படுத்துகிறது. அந்த நாயகியின் பொறுப்பற்றத்தனத்தைக் காட்டும் அதே வேளையில் பெண்ணின் இயல்பான அப்பாவித்தனம் குறித்து கதை அடிக்கோடிடுகிறது.

            அதே போல் ‘பிரம்மாண்டம்’ கதையின் நாயகியும் முதிய பெண்மணி. ஆனால் அமெரிக்காவுக்குத் தனியாகச் சென்று சேர்வது குறித்த கதை. அப்பாவியான பெண், அதனால் தனக்குத் துணையாக கடவுள் முருகன் இருப்பதாக எண்ணும் பெண்ணாகக் கதை காட்டுகிறது. மற்றொரு கதை மணிமேகலை காப்பியத்தின் ஒரு காட்சியைக் கதையாக்கி உள்ள இது தான் காதலா? என்ற கதை. இதில் மணிமேகலை அப்பாவியாக இருந்தாலும் நிதானமாக தன் உணர்வுகளைக் கையாளக் கூடிய பெண் என்பதைச் சித்தரித்த கதை.

பெண்மையின் குணாம்சங்களாக ஆண் மைய கதையாடல்களின் மூலம்தான் இதுவரைப் பலவும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அப்பாவியாக இருப்பது, தன் விருப்பத்திற்கு நடந்துகொள்வது போன்றவை ஆணின் குணாம்சமாக, சுதந்திரமாக வரையறுக்கபட்டிருக்கிறது. ஆனால் அது பெண் செய்யும் போது அவள் விமர்சிக்கப்படவேண்டியவளாகிறாள். அவள் ஆணின் நடத்தையைப் பிரதிபலிக்க முடியாது என்பதுதான் ஆண் மைய சமூகம் சொல்லும் ஒரு கருத்தாக்கம். அதனால் அந்த அளவுகோலை வைத்து பெண்ணின் குணத்தை அளப்பதோ அல்லது அவளுக்கான சட்டகங்களை உருவாக்குவதோ முறையாக இராது என்பதுதான் பெண்ணியத்தின் அடிநாதமான கருத்து.

3.தனித்தன்மையானவர்கள்

சில பெண்களுக்கு மட்டுமே தனித்தன்மையான சில குணாம்சங்கள் அமையும், அத்தகைய குணாம்சங்களை சில கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக மானுடம் வென்றதம்மா என்ற கதையில் வரும் நாயகி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உணவு கொடுப்பது என்ற செயல் அவளுடைய மனிதத் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. தன் குடும்பத்தின் நலத்தையும் மீறி அவள் இதைச் செய்கிறாள். மேலும் வயதானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடத்தை என்பது ஆணைவிட பெண்ணுக்கே உடனடியாக வரும் என்பதையும் இந்தக் கதை காட்டுகிறது.

            மற்றொரு எடுத்துக்காட்டாக, எனக்கு நீ மனைவி அல்ல என்ற கதையில் தன் கணவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவனுடைய மனைவி பாத்திரம் படும்பாடும் அவள் முழுமையாக அவனுக்கு ஆறுதலாக, குடும்பத்தைத் தாங்கி நிற்பதும் அவளுடைய தனித்தன்மையான குணாம்சமாக இந்தக் கதை காட்டுகிறது. அவளை ஒரு தாயாக அவளுடைய கணவன் மதிக்கிறான். இது போன்ற குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே இருப்பதை இந்தக் கதை மிகவும் விளக்கமாகக் காட்டியிருக்கிறது.

            இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதை எங்களோட கதை என்ற தலைப்புக் கதை. இதில் ஒரு கதை இல்லை பல கதைகள் உள்ளன. அதாவது பல பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு போல இந்தக் கதை உள்ளது. இந்தக் கதையை வாசித்தால் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளை வாசித்தது போன்ற உணர்வு ஏற்படும். இந்தக் கதையில் மொத்தம் எட்டு பெண்களின் கதை இடம்பெறுகிறது. ஒவ்வொன்றும் ஒரு தனிக் கதை போல் உள்ளது. இந்தக் கதையில் பெண்ணுக்கான வேலைகளை இன்னும் வீடு தீர்மானித்து வைத்திருக்கிறது என்பதில் தொடங்குகிறது பெண்ணுக்கான இடம் என்ற எதிர்ப்புணர்வின் குரல். பெண் வெளியில் வேலை செய்தாலும் அவளுடைய உடைமைகளைக் கணவன் உட்பட பலரும் எடுத்துப் பயன்படுத்துவது பற்றி அடுத்த எதிர்ப்பு தொடர்கிறது. அடுத்தது மிகவும் கொடுமையான கதை. மகளையே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் தன் கணவன் பற்றி ஒரு பெண்ணின் தீரா புலம்பல். இது முதல் கதை போல் இருந்தாலும் ஒரு பெண்ணின் வலிமையான உள்ளார்ந்த எதிர்ப்பாக உள்ளது. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலையை இந்தக் கதை காட்டுகிறது. அடுத்து குடும்பப் பொருளாதாரம் வீட்டின் பெரியவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறித்து ஒரு பெண் காட்டும் தீவிரமான எதிர்ப்பாக ஒலிக்கிறது. கணவன் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் கண்டிக்க முடியாமல் மனைவி படும்பாட்டைச் சொல்கிறது அடுத்த குரல். ஒரு பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிதாக எடுக்க முடியாமல் இருக்கிறாள். மற்றொரு பெண் வயதான பின் யாரும் துணை இல்லாத நிலையில் திருமணத்திற்கு வற்புறுத்தும் ஒருவரை மணக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாள். வேறொரு பெண் இரண்டாவது திருமணம் செய்து அதுவும் துயரத்தில் முடிந்ததைக் கூறுகிறாள். பெண்களின் வாழ்வு திருமணம் மூலம் பல வகையான இன்னல்களுக்கு ஆளாவதை இந்தக் கதைகளின் தொகுப்பாக உள்ள ஒரே கதை கூறுகிறது.

            பெண்களின் சுயமாகத் தீர்மானித்து தங்கள் வாழ்வைக் கொண்டு செலுத்த சமூகத்தின் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. ஆண்களுடனான உறவு பெரும்பாலான சமயங்களில் கேடில் முடிகிறது. பெண்கள் தனியாக வாழ்வது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது. குடும்பத்திலும் தங்கள் குரல் ஒலிக்கச் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் கொண்டவர்களாவும் ஆண்களைப் போன்ற ஒழுங்கற்ற வாழ்வுக்கும் ஏங்க முடியாத நிலையைக் கொண்டவர்களாகவும் பெண்கள் பெரும் துயருக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை வரையறுக்கிறது.

            பெண்களின் துயர் மிகுந்த வாழ்வு பெரும்பாலும் சுயமாக எடுத்த முடிவுகளால் ஏற்படுவதல்ல. ஆண்களாலும் பெற்றோராலும் மற்றோராலும் ஏற்படுவதாக உள்ளது. இத்தகைய வாழ்வை ஏற்று அதில் உழல்ந்து இறுதி வரைப் போராடி எந்த ஒரு பயனையும் பெறாது வாழ்வை முடிப்பவர்களாகப் பல பெண்கள் உள்ளனர். இந்த வகையான வாழ்வு குறித்த கேள்விகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த இது போன்ற கதைகள் தேவைப்படுகின்றன. பெண்மை என்பது உருவாகுதல் என்பார்கள் டெல்யூஜ், கத்தாரி. அதாவது பெண் என்ற நிலையை அடைதல் என்பது சமூகத்தால் இன்ன பிற அம்சங்களால் தடை செய்யப்பட்டு, மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் மீண்டும் பெண்ணாகும் நிலையை அடைந்தால்தான் சமூகத்தின் ஒடுக்கு முறை அகலும் என்ற கருத்தைக்கூற அந்தத் தத்துவவியலாளர்கள் இப்படி ஒரு கருத்தாக்கத்தை எடுத்துக் கூறுகிறார்கள். ஆண் கூட பெண்ணாகலாம். ஏனெனில் பெண் என்பது ஒரு மூலக்கூறு நிலை. பெண் மூலம்தான் படைப்பும், காப்பும், வளர்ப்பும் சாத்தியமாகிறது. அத்தகைய பெண் என்ற நிலையை அடைவது என்பதற்கான தடைகளையும் அதிகாரப் பரிவர்த்தனைகளையும் அறிந்து விழிப்புணர்வு அடைவது பற்றித்தான் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளும் பேசுகின்றன.

            இதைத் தவிர இந்தக் கதைகளில் ஆண்களின் பல்வேறு தீய குணங்கள் பற்றிய தீவிரமான வர்ணனைகளும் விமர்சனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆண்களின் பல குறைகளும் பல கதைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஆண்களின் இயல்பு குறித்த பெண்ணின் பார்வையாக இந்தக் கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களில் மிகவும் சில பாத்திரங்கள் மட்டுமே அதிகாரத்தைப் பிரயோகிக்காத, தவறான நடத்தைகளைக் காட்டாத, குழப்பம் இல்லாத குணாம்சம் கொண்டவைகளாக உள்ளன. பெண் மைய சிந்தனையில் ஆண்மை என்பது இத்தகைய குறை உடையதாகவும் இயல்பைக் கொண்டதாகவும் இருப்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. மேலும் ஆண்களின் இருப்பு என்பது பெண்களைச் சார்ந்து இருப்பதாகவும் பல கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இயல் உலகில் கூட இது போன்ற பெண்களைச் சார்ந்த வாழ்வை ஆண்கள் கொண்டிருப்பது வெளித்தெரியாமல் இருப்பதைப் பற்றிய ஒரு குரலாக இந்தக் கதைகளின் குரல் ஒலிக்கிறது. பெண்களின் ஆற்றலின் முன் ஆண்கள் சாதாரணர்களாக மாறிவிட்டதையும் இந்தக் கதைகள் ஆழமாகக் காட்டுகின்றன. மேலும் பெண்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆண்களுக்கும் பயனளிப்பதாக இருப்பதையும் முன்னெடுக்கக்கூடிய கதைகளாக இவை உள்ளன.

            மொத்தத்தில் இந்தக் கதைகள் பெண்ணியத்தை ஒலிக்கச் செய்யும் பிரதிகளாக உள்ளன. கதைகள் மிகவும் சுருக்கமாக உள்ளன. மேலும் விரிவாக இந்தக் கதைகளை எழுதினால் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்கும். 

Friday, 9 August 2024

கேசவதி (சிறுகதை)

    


    

    அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட கூந்தல் இல்லை. அவன் போய் வரும் வழியில் பல பெண்களைப் பார்த்தான். சிலருக்கு நீளமான கூந்தல் இருந்தாலும் அவர்களிடம் பேச கூச்சமாக இருந்தது. அவனுக்கு பெற்றோர் இல்லை. அதனால் எப்போதும் நண்பர்களிடம்தான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான். அவனுடைய நண்பர்களிடம் தன் ஆசையை ஒரு நாள் சொன்னான். அவனுடைய நண்பர்கள் அவனுக்காகப் பெண் பார்த்தனர்.

ஒரு நண்பனுடன் அவனுடைய கிராமத்திற்குச் சென்றிருந்தான். அப்போது அங்கு ஒரு குலதெய்வ விழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவில் ஒரு பெண் தெய்வத்தைக் குலதெய்வமாகக் கும்பிட்டனர். அந்தப் பெண் தெய்வத்தின் வரலாறு பற்றி ஒரு பாட்டி கூறிக் கொண்டிருந்ததை அவளருகே அமர்ந்து அவன் கேட்டான். எங்க தெய்வம் அது. அதுக்குப் பேரு கேசவதி. அவளுக்கு நீளமா முடி இருக்கும். ஒரு தெரு வரைக்கும் போகும் முடி. அதைப் பாத்து சனம் பிரமிச்சு போய் நின்னுரும். அவளை கண்ணாலம் கட்டிக்க யாரும் வரல. வந்தவன் எல்லாம் முடிய பாத்து பயந்து ஓடிப் போய்ட்டான். கோயில்ல போய் முடி குடுக்கறதா அவ அம்மா நேந்துகிட்டா. பொண்ணைக் கூட்டிட்டுப் போய் மொட்டை அடிச்சா. கோயில்ல சுருண்டு விழுந்த அவ முடி அப்படியே பாம்பா மாறி படமெடுத்து ஆடுச்சு. அம்மாக்காரிக்குக் கண்ணு இருட்டிட்டு வந்துடுச்சு. மொட்டையான கேசவதி அப்படியே குளத்துல மூழ்கி செத்துப் போயிட்டான்னு சொல்றாங்க. காணாம போயிட்டதா சொல்றாங்க. எங்க கேசவதி அதுக்குப்பறம் இந்த ஊருக்கு எல்லாமே நல்லதுதான் செஞ்சா. விளையாத நிலம் விளைஞ்சது. கண்ணாலம் ஆகாத பொண்ணுங்களுக்கு கண்ணாலம் ஆச்சுது. வர்சா வர்சம் கேசவதிக்கு அல்லாரும் சேந்து விழா எடுக்கலாம்னு ரோசனை பண்ணி இத்தனை வர்சமா பண்ணிட்டு வந்திருக்கோம். இதுல யாராவது ஒரு பொண்ணு முடிய காணிக்கையா குடுப்பா. அப்போதான் கேசவதிக்கு மனசாறும்,’ என்று அவள் சொல்லி முடித்தாள்.

அந்தக் கதையைக் கேட்டதிலிருந்து சன்னதம் வந்தது போல் இருந்தது அவனுக்கு. அருகில் இருந்த கிராமத்தில் ஒரு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணை அவள் கூந்தலுக்காகவே யாரும் மணமுடிக்கவில்லை என்று நண்பன் அப்போது சொல்லக் கேட்டான்.  இவனுக்கு உடனடியாக அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அங்கே கிளம்பிப் போனான்.

நண்பனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தான். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களுக்கு நல்ல உபசரிப்பைத் தந்தனர். பெண்ணை அவள் அறையில் சென்று பார்த்து வரச் சொன்னார்கள். இவனும் அந்த அறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டான். பாம்பைப் போல் மிக நீளமாக அந்த அறை முழுவதும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது அவளுடைய தலைமுடி. அவனுக்கு அவளுடன் எப்படிப் பேசுவது என்று தயக்கமாக இருந்தது.

ஆனால் அவள்தான் தான் தேடி வந்த கேசவதி என்று முடிவு செய்துவிட்டான். அவளை அந்தக் கிராமத்தின் குலதெய்வம் போலவே அவனுக்குப் பாவிக்கத் தோன்றியது. அவளிடம் ஏன் இத்தனை நீள முடி வளர்த்தாள் என்று கேட்டான். அது கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்டதாக அவள் சொன்னாள். வெட்டிவிட்டால் இன்னும் பெரிதாக வளரும் என்று யாரோ சொன்னதால் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னாள். இனி எப்போதும் வெட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் நண்பன் அவளுடைய தலைமுடியின் நீளத்தை வைத்துக் கொண்டு எப்படி இவன் குடும்பம் நடத்துவான் என்று கேள்வி எழுப்பினான். அவள் கேசவதியின் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாள்; அவளைத் திருமணம் செய்ய அந்தக் குலதெய்வமே தன்னை அனுப்பியிருக்கிறது என்றான் இவன். இருந்தாலும் அந்த முடியை வைத்துக் கொண்டு தின நடவடிக்கைகளே சாத்தியமில்லை, தலைமுடியை வெட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னான் நண்பன். முடியை வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டதாகத் தெரிவித்தான் இவன்.

மணப்பெண்ணோ திருமணம் நடக்கவிருப்பதே பெரிய விஷயம் அதற்குத் தலைமுடி பெரும் அவஸ்த்தையாக இருப்பதாகக் கருதி  தலைமுடியை வெட்டிவிடச் சொன்னாள். இருந்தாலும் இவ்வளவு தலைமுடி வைத்துக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட தன் ஆசை சரியானதில்லையோ என்று சில சமயங்களில் அவளுக்குள் தோன்றியது.

திருமணத்தன்று அவள் முடி பாதி வெட்டிவிடப்பட்டது. அதைத் தூக்கிக் கொண்டு நடப்பதே அவளுக்குச் சிரமமாக இருந்தது. அவள் முடியை வெட்டியதைக் கண்டவுடன் அவனுக்கு மிகவும் துக்கமாகிவிட்டது. திருமணம் முடிந்து அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அவளுடைய தலைமுடியின் கனமும் அதனால் அவள் படும் சிரமமும் அவனுக்குப் பரிதாபத்தைக் கொடுத்தன. ஆனாலும் அவள் குலதெய்வத்தின் மறுபிறப்பு என்ற கருத்து மட்டும் அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

திருமணத்தின் போது வெட்டிய அவள் தலைமுடி சில நாட்களிலேயே மீண்டும் அசுர வளர்ச்சி அடைந்தது. அவனுக்கு அவளைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவனுக்கு ஒரு தெய்வத்துடன் குடும்பம் நடத்துவது போல் தோன்றியது. அது அவனை வேறோர் உலகத்திற்குக் கொண்டு செல்வது போல் இருந்தது. இருந்தாலும் அவளுடைய சிரமத்தைப் போக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுள் மேலோங்கியது.

அவன் அலுவலகம் சென்ற பின் ஒவ்வொரு நாளும் அவள் பல மருத்துவர்களைச் சந்தித்து தன் பிரச்னையைச் சொன்னாள். அவளுக்குச் சில மருந்துகளும் ஆலோசனைகளும் தரப்பட்டன. ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் அவன் தன் மனைவி குலதெய்வத்தின் மறுபிறப்பாகவே தான் கருதுவதாகச் சொன்ன போது சிலர் சிரித்தார்கள். அவன் அதைப் பற்றி அதிகம் வெளியில் பேச முடியாதபடி ஆகிவிட்டது.

அவள் நம்பிக்கைத் தரும் கோயில்களுக்குச் சென்றாள். அங்கு தவத்தில் இருந்த சில சாமியார்களிடம் தன் சிக்கலைச் சொன்னாள். அவர்களில் சிலர் அமைதியாகப் புன்னகைத்தார்கள். சிலர் கண் திறந்தும் பார்க்கவில்லை. ஒரு மலைக் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தாள். ஒரு சாமியார் அவள் அருகில் வந்தமர்ந்தார். மனதில் கலக்கம் வழியில் தயக்கம் அம்மைக்கு என்ன சிக்கல் என்று கேட்டார். அவள் சிக்கலைத் தயங்கி தயங்கிச் சொன்னாள். அவர் ஒரு களிம்பை எடுத்துக் கொடுத்தார். அதைத் தடவினால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தலைமுடியின் வளர்ச்சியால் அவளுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மருந்துகளை வாங்கிவந்தாள். சாமியார் கொடுத்த களிம்பைத் தடவிவிட்டுத் தூங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் தலைமுடி தங்க நிறமாக மாறியிருந்தது. அது மட்டும் இல்லாமல் முடியின் அடர்த்தியும் குறைந்து அளவாக இருந்தது. அவளது தலைமுடி அவளால் மிகவும் எளிதாகக் கையாள ஏதுவாகவும் இருந்தது. ஆனால் தங்க நிறத்தில் மாறிவிட்டதுதான் அவளுக்கும் அவனுக்கும் ஏற்க முடியாதபடி இருந்தது. அவள் களிம்பைத் தடவியதைக் குறித்து அவனிடம் பரிசீலித்திருக்க வேண்டும் என்று அவளைக் கடிந்து கொண்டான். அவளுக்கு அவளுடைய மதிப்பே தெரியவில்லை என்று எண்ணி குமைந்தான்.

இதற்கு மீண்டும் வைத்தியம் பார்க்கவேண்டும் என்று நினைத்தான். அலுவலகம் சென்றவுடன் அவன் எதிர்பார்க்காத உயர் பதவிக்கு அவனைப் பரிந்துரைப்பதாக மேலாளர் கூறினார். அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். வீட்டுக்கு வந்து மனைவியுடன் அந்தச் செய்தியைப் பரிமாறிக் கொண்டான். அவளுக்குத் தலைமுடியின் நிறம் மாறிய கவலைதான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அதை கருமையாக்க செயற்கை நிறங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எதற்காக வருந்த வேண்டும் என்று சொல்லி மருத்துவர் அனுப்பிவிட்டார்.

இருந்தாலும் மனைவிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அதற்குரிய ஆலோசனைகள் யாராவது தருவார்கள், கவலை வேண்டாம் என்று சமாதானப்படுத்தினான். பல மருத்துவர்களையும் அழகுக் கலை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றான். ஆனால் எதுவும் தீர்வாகாது என்று புரிந்துகொண்டான். அந்த சாமியாரை எங்குத் தேடிக் கண்டுபிடிப்பது என்று எண்ணி சோர்வடைந்தாள் அவள். மீண்டும் ஒரு முறை அந்த மலைக் கோவிலுக்கும் சென்றுவந்தாள்.

மனைவியின் வருத்தத்தை அவனால் போக்க முடியவில்லை. அவன் மனைவியின் முடியைத் தடவி இத்தனை அழகான முடி யாருக்குமே இல்ல. நீ ஏன் கவலைப்படற? என்று கேட்டான். இருந்தாலும் எனக்கிருந்த அந்தக் கறுப்பு முடிதான் வேணும் என்றாள் அவள். சரி வந்துரும் கவலைய விடு என்றான். உனக்கு இந்த முடி அதைவிட அழகா இருக்குது என்று சொன்னான். அவள் முறைத்துப் பார்த்தாள். அப்போது அவன் ஊரிலிருந்து அலைபேசியில் பேசினார்கள். அவனுக்குச் சேர வேண்டிய சொத்தை அவன் சொந்தங்கள் அவனுக்கே விட்டுக் கொடுத்துவிடுவதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் கூறினார். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. பாரு உனக்கு தங்க நிறத்துல முடி மாறின பிறகு எனக்கு பதவி உயர்வு வந்தது. இப்போ பூர்வீக சொத்தும் வந்துருச்சு. இப்பவும் ஏன் வருத்தப்படற? என்று அவளைச் சமாதானப்படுத்தினான். குலதெய்வம் கேசவதிதான் அவளுடைய முடியின் நிறத்தை மாற்றி அதற்கு ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

ஒரு நாள் அண்டை வீட்டுக்காரி அவளுடைய குழந்தையை எடுத்து வந்தாள். அப்போது அவள் கூந்தலுக்கு சாம்பிராணி புகைப் போட்டுக் கொண்டிருந்தாள். அண்டை வீட்டுக்காரி அவளருகே வந்து நின்று குழந்தைக்கு உடல்நலமில்லை என்றாள். அவள் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தாள். சளி, ஜுரம்  என்றாள் அவள். மருத்துவரிடம் காட்ட இவள் கூறினாள். அவள் ஆம் என்று தலையாட்டிவிட்டு இவளது கூந்தலைத் தடவி மிகவும் அழகாக இருப்பதாகச் சொல்லிவிட்டு சாம்பிராணி வாசத்தை குழந்தையின் முகத்தருகே கொண்டு சென்றாள். அவளது தலைமுடியைத் தடவிய கையை தன் குழந்தையின் தலையிலும் தடவினாள். மிகவும் சோர்வாக இருந்த குழந்தை மெதுவாகக் கண் திறந்து பார்த்தது. உன் கூந்தலுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்குதுன்னு நினைக்கறேன். பாரேன் குழந்தை இவ்வளவு நேரம் கண்ணே முழிக்கல. இப்போ உடனே கண் திறந்து பாக்கறான், என்றாள் அவள். இவள் சிரித்துக் கொண்டாள். அவளுக்கு இவள் தலைமுடி மீது பொறாமையாக வந்தது.

அண்டை வீட்டுக்காரி சென்ற பின் பால் கொண்டு வருபவன் வந்தான். இவள் உள்ளே இருந்து பாத்திரத்தை எடுத்து வந்தாள். மாடு எங்கேயோ காணம போயிடுச்சுமா என்றான் அவன். ஒரு மாடுதான். நாளைக்குள்ள கிடைச்சா பால் கொண்டு வருவேன். இல்லைன்னா என்னை எதிர்பாக்காதீங்க என்று சொன்னான். இவள் கிடைச்சுடும் என்று சொல்லிவிட்டு அவன் பாலை ஊற்றிய பின் உள்ளே வந்துவிட்டாள். அவனும் புறப்படத் திரும்பியவன் வீட்டு வாசலில் அவளது தங்க நிற முடி ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்து வைத்துக் கொண்டான். அது அவனுக்கு ஒரு பொக்கிஷம் போலத் தோன்றியது. வீட்டுக்கு வந்தான். மாடு வந்துச்சா என்று மனைவியிடம் கேட்டான். இல்ல என்றாள் அவள். இந்தா என்று தலைமுடியை நீட்டினான். என்னாதிது என்றாள் அவள். பால் ஊத்தற வீட்டு அம்மாவோட தலைமுடி. தங்க நிறத்துல எவ்வளவு அழகா இருக்குது பாரேன் என்றான். அவளும் அதை ரசித்துப் பார்த்துவிட்டு பத்திரமாக ஒரு சிறிய பெட்டியில் போட்டு வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள். காணமல் போன மாடு வந்து நின்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் பெரும் ஆசுவாசமாக இருந்தது.

அவர்கள் மகன் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தான். புள்ளைக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா நம்ம கஷ்டம் ஓரளவு தீந்துடும் என்று மனைவி சொன்னாள். ஆமா எத்தனையோ எடத்துக்கு போயிட்டு வந்துட்டான். இதுவரைக்கும் கிடைக்கல. இன்னைக்கு என்னாகுதோ என்று பால்காரன் சொன்னான். தூரத்தில் மகன் வருவது தெரிந்தது. இருவரும் வாசலிலேயே நின்றிருந்தார்கள். மகன் சிரித்துக் கொண்டே வந்தான். என்னாச்சுப்பா என்று அம்மா கேட்டாள். அம்மா வேலை கிடைச்சிடுச்சும்மா என்றான். அவன் அம்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. இப்போதாம்மா வேலைக்கு வரச் சொல்லி சொன்னாங்க என்றான். அவன் அப்பாவுக்குப் பெருமிதமாக இருந்தது. இரவு கணவன் மனைவி இருவரும் படுத்திருந்தார்கள். அந்த முடி கொண்டு வந்ததிலிருந்து எல்லாமே நல்லதா நடக்குதுங்க என்றாள் அவள். ஆமா நான் சொல்லலாம்னு இருந்தேன். நீயே சொல்லிட்ட என்றான் அவன். அந்த முடி முழுக்க நமக்குக் கிடைச்சா எவ்வளவு நல்லாருக்கும் என்றாள் அவள். ஆமா குடுப்பாங்க, தூங்கு பேசாம என்று சொல்லிவிட்டு அவன் உறங்கிவிட்டான்.

வெகு நாட்களுக்குப் பின் அவள் தாய்மை அடைந்திருந்தாள். இத்தனை நாட்களாக அவள் கூந்தலின் அவஸ்த்தையால் அவள் பட்டபாடு முடிந்து இப்போதுதான் அவளால் தாய்மை அடைய முடிந்திருந்தது. அதுவும் தங்கநிற முடி அவளுக்கு வாய்த்தப் பின்தான் அவளுக்கு தாய்மை பாக்கியம் கிடைத்திருப்பதாகவே அவள் கணவன் நினைத்தான்.

 அவளுக்குக் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் கிராமத்தில் குலதெய்வ விழா இருந்தது. அதற்குப் போயாகவேண்டும் என்று இருவரும் கிளம்பினார்கள். அங்குக் கோவிலருகில் அந்தப் பாட்டி அமர்ந்து கேசவதிக்கு யாராவது முடி காணிக்கைக் கொடுக்கணும். அப்போதான் அவ மனசாறும் என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.

சட்டென்று மனைவியை கேசவதி வா கோயிலுக்குப் போகலாம் என்று அழைத்தான். அவனுக்கு அந்தக் குலதெய்வத்தின் கதையில் மூழ்கிவிட்டது போல் இருந்தது. கணவன் மனைவி இருவரும் கோயிலுக்கு வந்தார்கள். அவர்களின் அண்டை வீட்டுக்காரியும் அந்த விழாவுக்கு வந்திருந்தாள். பால்காரன் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். காலையில் குலதெய்வத்திற்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், குங்குமம் அபிஷேகங்கள் நடந்தன. அவற்றை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு குளத்தருகே மனைவியை அமரச் சொன்னான். குலதெய்வம் கேசவதிதான் அங்கு அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்து மனைவியைப் பார்த்தான்.

எதற்காக இங்கு அமர அவன் சொல்கிறான் என்று அவள் கேட்டாள். நான் உன் முடிய காணிக்கையா கேசவதிக்குக் குடுக்குறதா வேண்டிகிட்டேன். அதான் என்றான். ஐயோ வேண்டாம் என்றாள் அவள். இல்லை வாக்கு மாறக்கூடாது, தெய்வக்குத்தம் ஆயிடும் என்றான் அவன். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரியும் பால்காரன் குடும்பத்தினரும் அருகே வந்து நின்றார்கள். வேண்டுதலை நிறைவேத்திடுங்க என்று அவர்களும் சொன்னார்கள். அவளுக்கு வேறு வழியில்லாமல் அமைதியானாள். மனைவியின் முடியைக் காணிக்கையாகக் கொடுக்க அவனே போய் ஒரு நாவிதரை அழைத்து வந்தான்.

அண்டை வீட்டுக்காரிக்கும் பால்காரன் குடும்பதிற்கும் அந்த முடியில் கொஞ்சம் கிடைத்தால் போதும் என்ற பேராசை நிரம்பி வழிந்தது. நாவிதர் கத்தி எடுத்து முடியை வழிக்கத் தொடங்கினார். அப்படியே கற்றையாக முடி கீழே விழுந்தது. அவள் அதை வருத்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அந்த முடி அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய பாம்பாக மாறி படமெடுத்தது. அண்டை வீட்டுக்காரியும் பால்காரக் குடும்பமும் குளத்தருகே நின்றிருந்த பலரும் தெறித்து ஓடினார்கள். அந்தப் பாம்பு அப்படியே வாயைப் பெரிதாகப் பிளந்து மனைவி அருகே நின்றிருந்த அவனை விழுங்கியது. அதைப் பார்த்த அவன் மனைவி குளத்தில் விழுந்து காணாமல் போனாள்.

 

 (சீர்-ஜூலை-செப்டம்பர் 2024ல் வெளியான சிறுகதை)

 

 

 

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...