Sunday 24 May 2015

தற்காலத் தமிழப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்


(சாகித்ய அகாடமி நடத்திய நாரி சேத்னா என்ற கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை)



ஆண்மை/பெண்மை என்ற பாலின வேறுபாட்டை ஏற்கமுடியாது என்று ஜூடித் பட்லர் என்ற பெண்ணியலாளர் கூறியிருக்கிறார்.
நாம் ஆண்/பெண் எழுத்தாளர் என்ற வேறுபாட்டைத் தவிர்க்கலாம்.
பொதுவாக எழுத்தாளர்கள் சந்திக்கும் சவால்கள் என்பதாகப் பார்க்கலாம்.
தமிழின் இலக்கியங்களைப் பின்தொடர்ந்த போது 5 சவால்கள் முக்கியமாக உள்ளது புரிந்தது

1.மொழி பற்றியது
2.பாலின அடையாளத்தின் சார்பானது
3.பின் நவீனத்துவ வடிவம்/உள்ளடக்கம் தொடர்பானது
4.அரசியலின் பின்னணி குறித்தது
5.தத்துவத்தை எதிர்கொள்ளலை முன்வைத்தது

I.மொழி:

1.தொல்மொழி, செவ்வியல் மொழி, நடப்பு மொழி-அடையாளப்படுத்துதல்
2.அகமொழித் தேடல்
3.வாசிப்பின் முறைமையை வகுத்தல்

1.தொல்மொழி, செவ்வியல் மொழி, நடப்பு மொழி-அடையாளப்படுத்துதல்

தொல்மொழி என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஒரு சங்க இலக்கியப் பாடலைப் பார்ப்போம்:

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

இந்தப் பாடல் உருவாவதற்கு முன் இருந்த மொழி எப்படி இருந்திருக்கும். ஓர் ஓசை, சந்தம், நயம், லயம், உணர்ச்சி எல்லாம் இருந்திருக்கும் அந்த மொழி தொல்மொழியாக இன்று பார்க்கப்படும். அது போன்ற ஒரு மொழி இந்தப் பாடலில் உள்ள செவ்வியல் மொழியாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் மொழியை அடையாளப்படுத்துவது ஒரு சவால்.

தொல்மொழியைக் கொண்ட படைப்பின் அவசியம் வெறும் அருங்காட்சியகப் பொருளாக மாறுதல் என்றாகிறது.
செவ்வியல் மொழி, இனப் பெருமையின் அடிப்படையாக, அடையாளமாக நிலவுகிறது.
நடப்புமொழி பெரும்பாலும் உள்ளீடற்று நிறமிழந்து செறிவிழந்து செயலூக்கம் இன்றி சருகாகிறது.

2.அகமொழித் தேடல்

''நனவிலி, மொழி போல் கட்டமைக்கப்பட்டுள்ளது'' என்ற லக்கானின் பிரபலமான வாக்கியத்தை நினைவில் கொண்டு மொழியைப் பின்தொடர்ந்தால் அகமொழி என்ற படைப்புமொழி பற்றிய தேடல் தமிழ்ப் படைப்புகளில் அதிகம் இல்லை.

அகமொழியைத் தேடுவதும் அதைக் கண்டடைவதும் அதற்கான அவசியத்தைக் கொண்டிருப்பது பற்றிய சிந்தனையும் முதன்மை சவாலாகக் கொண்டுவிடலாம்.

அகமொழியை அறிய நகுலன் எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

தன்மிதப்பு
-நகுலன்

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்

இந்தக் கவிதையில் பென்சில் சீவுவதும் தலையைச் சீவுவதும் ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. பென்சில் சீவுவது இயல் உலகில் நடந்தால் தலையை சீவுவது அகஉலகில் நடக்கிறது. இப்படி தலையைச் சீவும் கற்பனையையும் தன்மிதப்பால் சமாளித்துவிட முடியும் என்று ஒரு பாத்திரம் எண்ணுவது கவிதையாகியிருக்கிறது. இப்படி ஒரு அகமொழிக்கானத் தேடலை படைப்புகளிலும் நமக்குள்ளும் ஏற்படுத்திக் கொளவது ஒரு சவால்.

3.வாசிப்பின் முறைமையை வகுத்தல்

இதை சசூரின் கருத்தாக்கத்தின் படி மொழியானது இடுகுறித்தன்மை வாய்ந்தது. குறி(sign) குறிப்பான், குறிப்பீடு என்ற இருமையால் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையிலான உறவு இடுகுறித்தன்மை வாய்ந்தது என்கிறார்.
இது சொன்மை, பொருண்மை என்ற தொல்காப்பியம் கூறும் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒன்று.
உதாரணமாக மரம் என்ற பதத்தை எடுத்துக் கொள்ளலாம். மரம் ஒலி மரம் கருத்து அல்லது பொருள். சொல்பவருக்கு ஒரு மரம் கேட்பவருக்கு ஒரு மரம். படைப்பில் ஒரு மரம். கிளைத்துப் பரவும் பொருள் போல் படைப்பிலும் பொருள் கிளைத்துப் பரவுகிறது.

வாசித்தலின் சொல்லாடல் உற்பத்தி செய்யும் படைப்பு மற்றொரு படைப்பாக இருப்பதை அறிதலும் அந்த வாசிப்பு முறையை பயில்தலும் அடுத்த சவாலாக இருக்கும்.

II.பாலின அடையாளச் சார்பு

1.பாலினம் என்பது ஒரு நிகழ்த்துதல்
2.உடல்சார் அனுபவங்களைப் படைத்தல்
3.வரலாற்றுப் போக்குகள் மூலம் பாலினத்தைப் புரிந்துகொள்ளல்

1.பாலினம் என்பது ஒரு நிகழ்த்துதல்

பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்படுவது.
பாலியலின் தற்செயலான விளைவல்ல பாலினம்.
பாலியலை உறுதிப்படுத்தும் ஒன்றும் அல்ல.
பாலியலுக்கும் கலாச்சார கட்டமைவான பாலினத்திற்கும் அடிப்படையான தொடர்பின்மை உள்ளது.
இருபால் உறவின்(Heterosexuality) நிறுவனத்தை மையமாக வைத்து பாலினம் அறியப்படுகிறது.
ஆண்மை, பெண்மை, பிற பாலுமை, இவை எல்லாமே வேறுபாடுகளின் அடிப்படையில் உருவானவை.
ஓர் உடலில் இவை இருப்பதாக ஊன்றுவது ஓர் கற்பிதம்.
உடல் பொதுவானது. பாலுமைகளின் கூட்டுத் தொகுப்பு அது.
இதற்குக் காரணம் இருபால் உறவுதான் அதிகாரத்தையும் சொல்லாடலையும் உற்பத்தி செய்கிறது.
இந்தப் புரிதல் இருந்தால் பாலினத்தின் சிக்கலை எழுத்தில் தவிர்க்கலாம்.
ஆண் எதிர்ப்பு என்பது மட்டுமே பெண்ணியம் அல்ல.
ஜூலியா கிறிஸ்தவா சொல்லும் கருத்தாக்கத்தை வைத்து பாலினத்தை விளக்கினால் இன்னும் தெளிவடையலாம். குழந்தை தாயின் சேவையைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது அதற்குத் தன்னிலை என்பது முழுமையாக உருவாக நிலை உள்ளது. மொழியைக் கற்கும் போது தன்னிலை ஒன்றை உருவாக்கவேண்டியத் தேவை எழும் போது கலாச்சாரத்தால் நிர்பந்திக்கப்படும் போது கலாச்சாரத்தின் மொழியில் இருக்கும் பாலினத்தைத் தேர்வு செய்யும் நெருக்கடி ஏற்படுகிறது. தாயின் கண் கொண்டு தன்னைப் பார்த்தது தன்னிலை கொண்டு எல்லாவற்றையும் பார்க்கவேண்டியிருக்கிறது. தன்னை கட்டமைக்க பிறன்மையை நாடுகிறது. அப்போது கலாச்சாரத்தின் மொழியில் இருக்கும் பாலினத்தையும் தேர்கிறது. அந்த இடத்தில் பாலினம் என்ற நிகழ்த்துதல் தொடங்குகிறது. இதுதான் சமூகம் கட்டமைப்பதாக பாலினம் உள்ளதை அறிவது.
பாலினச் சார்பை அடையாளப்படுத்திக் கொள்வதுதான் முதல் சவால்.
2.உடல்சார் அனுபவங்களைப் படைத்தல்
லிங்கமையமொழியின் பிறன்மை போலாகத்தான் பெண்மைய மொழி இடம்பெற முடியும்.
இருபால் உறவின் போதாமை குறித்த மேலதிகப் பதிவுகளாவது படைப்பின் மந்தநிலையாக மாறிவிடும். பாலின உருவாக்கலைப் புரிந்து கொள்ளாமல் அதனால் ஏற்பட்ட விளைவின் மீது விமர்சனம் வைப்பதாக படைப்பது முழுமையாகாது.
இதை உணர்ந்து படைப்பது ஒரு சவால்.

ஜனனி-லா.ச.ராவின் கதை(பெண் தெய்வ புராணம்-பெண்ணின் புராணம்-தாய்மை அற்ற நிலை-பாலியல் விடுதலை)

3.வரலாற்றுப் போக்குகள் மூலம் பாலினத்தைப் புரிந்துகொள்ளல்

பாலினத்தின் பின்னணியில் இயங்கும் உளவியல் வரலாற்றுப் போக்குகளைக் கண்டுகொண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான புனைதலை முன்வைப்பது மற்றொரு சவாலாகிறது.

ஏனெனில் பாலினத்தை அடையாளப்படுத்த கூடா பாலியலிலிருந்து தன்பால்விருப்பு வரையான  பாலியல் சிக்கல்களை வரலாற்று ரீதியில் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். இந்த உணர்தலுக்குள் செயல்படும் படைப்புகளை உருவாக்குதல் இருபால் எழுத்தாளர்களின் சவாலாக இருக்கும்.

டோனால்டல் பார்த்தல்மி, ஸ்நோவொயிட் என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஸ்நோவொயிட் என்ற புராணத்திற்கு எதிரான பகடி இது. பனி வெண்மை பெண், இளவரசனைத் தேடிச் சென்றடைவது என்பதற்கு பதிலாக கறுப்பு நிறப் பெண்ணையும் ஸ்நோவொயிட்டாகப் படைத்து இணையாக்கும் செயலை இந்தப் பிரதி செய்திருக்கிறது. இந்த வகையில்தான் பாலினத்தின் மீதான விமர்சனத்தை பகடியாக்கி வைக்கமுடியும் என்று காட்டிய ஒரு நாவல் அது.

பின்நவீனத்துவ வடிவம்/உள்ளடக்கம்

1.பல வகைமைகள்
2.பொருளின்மை-நவீனத்துவத்தின் சிக்கல்
3.படைப்பின் புரிதல் தன்மை

1.பல வகைமைகள்

பெருங்கதையாடல், போலச் செய்தல், பகடி, அழித்தெழுதப்பட்ட பிரதி, மாயாஜால நடப்பியல் போன்ற பல்வேறு வகைமைகள் பின்நவீனத்துவ இலக்கிய வகைமைகளாக உள்ளன. அந்த வகைமையில் தமிழில் எழுதப்படுவதுதான் சவால்.

போர்ஹேஸ் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கதைகளைத்தான் எழுதினார். ஆனால் அவருடைய எழுத்துகளுக்குள் இருக்கும் ஆற்றல் பல இலக்கியவாதிகள் அவரைப் பின் தொடர வைத்தது.

கோணங்கி, பிரேம், தமிழவன், போன்ற எழுத்தாளுமைகளின் புனைவுக்குள் இருக்கும் சொல்லாடலை புரிந்துகொள்வதன் மூலமும் பின்நவீனத்துவ புனைவுகளை உருவாக்கலாம்.

2.பொருளின்மை-நவீனத்துவத்தின் சிக்கல்

பொருளின்மையும் படைப்புதான் என்பது பின்நவீனத்துவத்தின் குணாம்சத்தில் ஒன்று.

பெக்கெட் அபத்தவாதத்தின் அடிப்படையில் படைத்தார். அவருடைய எழுத்துகளில் இருக்கும் பொருளாம்சம் எப்போதும் பின்நவீன குணாம்சங்களைக் கொண்டதாகவே இருக்கிறது.

3.படைப்பின் புரிதல் தன்மை

பின்நவீன இலக்கியங்கள் புரிவதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு உள்ளது. இது அடுத்த சவால்.

இந்த இலக்கியங்கள் எந்த வகைமையில் புரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றால் நவீன இலக்கியங்களின் வகைமையில் புரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் எந்த ஓர் உழைப்பும் இன்றி எல்லா படைப்புகளும் புரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் இந்த வகையான எதிர்பார்ப்புக்கு அடிப்படை வணிகம் சார் எழுத்துகளும் அந்த வகைமையை தீவிர இலக்கியத்திற்குள் செலுத்தும் இடைநிலை எழுத்துகளும்தான்.

அரசியல்

1.உடலரசியல் சார்ந்தது
2.உணர்வரசியல் சார்ந்தது
3.உயிர் அரசியல் சார்ந்தது
1.உடலரசியல் சார்ந்தது

உடலரசியல் என்பது மொழியானது உடலை கட்டமைப்பதும் உடலானது மொழியை புலனறிவாக மாற்றுவதும் என்ற தொடர் இயக்கம் குறித்த ஒன்றைப் பற்றியது.

உடலரசியல் என்பதைப் பற்றி எழுத்தாளர் ஜமாலன் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார்.

இயல் உடல் என்பதாகப் பொருள் கொள்ளாமல் இதன் அரசியலைப் பார்க்கவேண்டும். அடக்கப்பட்ட வேட்கையின் அரசியல் அது.

டோரிஸ் லெஸ்ஸிங் எழுதிய 'கோல்டன் நோட்புக்' என்ற நாவல் ஐந்து நிறங்களைக் கொண்ட நூல்களை ஒன்றிணைத்தது போன்ற ஒன்று. கருப்பு நூல் போர் அனுபவங்களைப் பற்றியது, சிவப்பு நூல் மார்க்சிய கட்சியில் அந்த நாவலின் முதன்மை பெண் பாத்திரத்தின் அனுபவங்கள் பற்றியது, மஞ்சள் நூல் அந்தப் பாத்திரம் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றியது நீல நூல் அந்தப் பாத்திரத்தின் சொந்த அனுபவங்கள் பற்றியது இந்த ஐந்தையும் இணைக்கும் நூல் பொன்னிறத்திலானது. துண்டாகிப் போன வாழ்வை ஒட்ட வைத்தது போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது அந்த நாவல். உடலரசியலின் ஆழ்ந்த சிக்கல்களைக் குறுக்கு மறுக்காக அந்த நாவல் நெய்திருக்கிறது.

2.உணர்வரசியல் சார்ந்தது

உணர்வரசியல் என்பதை உணர்வின் பரிமாணங்களைப் போலச் செய்தலாக இணையானதாக ஒப்புமை உள்ளதாக உருவகிப்பதாக இலக்கியம் காட்டுகிறது.

அழகியல், ஒழுக்கவியல், நீதியியல் சார்ந்து உணர்வரசியல் இயங்குகிறது. அதன் தாக்கம் மற்றும் பாதிப்பு என்பதை இலக்கியம் பகிர்கிறது.
தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலின் அடிப்படையில் வரையறுக்கலாம்.

உணர்வரசியலில் நுட்பமாக இருப்பது உள்ளுணர்வு. உணர்வரசியலின் வீச்சை அறிவது அடுத்த சவால்.

மார்சியா அரைட்டா என்ற கவிஞரின் ஒரு கவிதை:

பொத்தான்களும் எழுத்துகளும்

அழுது தள்ளலாம். அனுமதிக்கு அடையாளமாய்...
இரவில் மான் வந்து படுக்கையை மேயலாம்.
மொழி பெயர்ப்பை எழுதுவது கடிதங்களிலிருந்து விலகவும் விடுபட்டு ஒதுங்கவும்
காஃபி மேஜையின் மீதிருக்கும் நூல்கள் பேச்சைப் பரிந்துரைக்கின்றன
முக்கியமற்றுப் போவதை என்னால் ஏற்கமுடியாது. ஒருவரை ஒருவர் நினைவூட்டிக் கொளவோம்
தூண்டப்படுதலுக்காக, நம் வாக்கியங்களை முடிக்க, தெளிவாக
எழுத. நூல்களும் தீவுகளும் காலணிகளும் கோட்டைகளும்.
நான் எப்போதும் அனாதையாக உணர்கிறேன்.

இந்தக் கவிதையில் இருக்கும் எல்லாப் பொருள்களுமே தனிமையின் உணர்வை குறியிடுபவை போல மாற்றப்பட்டிருக்கின்றன. அல்லது அந்தப் பொருள்களின் தனிமை போலவும் இதை வாசிக்கலாம். பொருளுக்கும் மனிதனுக்கும் இடையிலான வேறுபாட்டைக் களைந்த நிலை இது. இந்த வகையான தனித்த உணர்வுக்கான அரசியலை அறிவது ஒரு சவால்.

3.உயிர் அரசியல் சார்ந்தது

உயிர் அரசியல் என்பது பொருளாதார அரசியல் ஓட்டங்களினால் வாழ்தல் உருமாறுவது பற்றியது.

இயல் வாழ்வும் அரசியல் வாழ்வும் கலந்த நிலையை உயிர் அரசியல் எனலாம்.
இலக்கியத்தில் தமிழில் புறம் சார்ந்து பார்க்கப்பட்டது.
மனிதனுக்குக் கீழே இயற்கையை வைப்பது அரசியல். மனிதனுக்குக் கிழே மனிதனையும் எல்லா உயிர்களையும் வைப்பது பற்றி அறிவது உயிர் அரசியல்.

உயிர் அரசியல் சார்ந்த படைப்பு, அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஒன்றாக இருக்கும். இதைக் கைக்கொள்வது ஒரு சவால்.

சங்க இலக்கியத்தில் திணை என்பது உணர்வின் எதிரொலிப்பாகவும் இயற்கையை மொழியில் உள்வாங்குவதாகவும் உள்ளது. மனிதன் இயற்கை மீதான அதிகாரத்தை மொழி வழியிலிருந்து தொடங்கியிருப்பதும் இயற்கைக்கான இடத்தையும் விட்டுக் கொடுத்திருப்பதும் இந்த சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.

தத்துவத்தை எதிர்கொள்ளல்

1.படைப்பு உருவாக்கும் தத்துவம்
2.மதங்களைக் கட்டுடைத்தல்
3.அறிவியலைப் பகுத்தல்

1.படைப்பு உருவாக்கும் தத்துவம்

காஃப்காவின் இலக்கியத்தை ஆய்வு செய்யும் ஜில் டெல்யூஜ் அதை ஒரு சிறுவாரி இலக்கியம் என்று கூறுகிறார்.

அதற்கு என்ன காரணம் என்றால் அது பெரும்பான்மை இலக்கியத்திற்கு எதிரான அரசியல் கூறுகளைக் கொண்டிருக்கிறது என்பதால்.

இது போன்ற கூறுகளை மௌனியின் கதைகளில் இருப்பதாக ஜமாலன் எழுதியிருக்கிறார்.

படைப்பு இத்தகைய ஓர் தத்துவத்தை முன்வைப்பதற்கு என்ன காரணம் என்றால் எழுத்தாளரின் அனுபவம், மொழி, வடிப்பு என்று கூறலாம்.

இந்த வகையான தத்துவ அறிமுகத்தைப் பெற்று அதை படைப்பில் எழுதுவது இங்கு ஓர் சவாலாக இருக்கிறது.

2.மதங்களைக் கட்டுடைத்தல்

மதங்களை கட்டுடைத்தல் என்பது தத்துவத்தின் முக்கியச் செயல்பாடு.
இந்தச் செயல்பாட்டில் ஈடுபடுவது சமூக வரையறைகளை மாற்றிப் படைக்க உதவும். அதற்கான முனைப்பு மிகவும் அவசியம்.

இன்றைய சூழலில் பெரிய சவாலாக இருப்பது மதங்களின் சொல்லாடலைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதும் கையாள்வதுமாக இருக்கிறது. மதச்சார்பின்றி படைப்பை உருவாக்குதல் என்ற முயற்சிதான் சவாலாகக் கொள்ளமுடியும்.

சல்மான் ருஷ்டி சாத்தானிக் வெர்சஸ் என்ற நாவலை எழுதியது மதக்கட்டுடைத்தலாக உள்ளது. இஸ்லாமிய வரலாற்றின் மறைவுப் பக்கங்களை எழுதி அம்மதத்தின் மீதான வாசிப்பை அந்த நாவல் முன்வைத்தது.

3.அறிவியலைப் பகுத்தல்

அறிவியலின் எல்லையையும் அதற்குள் செயற்படும் கருத்தாக்கத்தையும் தத்துவ ரீதியில் பாகுபடுத்திப் பார்த்தல் அடுத்த ஒரு சவால்.

அதில் இன்றைய இணையதளம் வரையிலான செயற்பாடுகளைக் கொள்ளலாம்.

மனிதத் திறனின் மதிப்பீடுகளையும் உள்ளடக்கி உருவாக்கும் அறிவியலைத் தத்துவம் மூலம் பகுத்தாய்வது பெரும் விளைவுகளைத் தரும். இத்தகைய சோதனையை இலக்கியங்களிலும் மேற்கொள்வது சவாலாக இருக்கும்.

இந்த சவால்களை எதிர்கொண்டால் செழுமையான கூர்மையான படைப்புகள் சாத்தியம்.

















மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...