Monday 24 February 2020

டெல்லி தருணங்கள்


இண்டிகோ விமானத்தில் டெல்லிக்குப் பயணம். எனக்கு நடு இருக்கைதான். ஆனால் பக்கத்தில் அமர வந்தவர்கள் இண்டிகோ விமானத்தின் பணியாளர்கள். அவர்கள் எனக்கு ஜன்னலோர இருக்கையைக் கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்துகொண்டார்கள். இண்டிகோ விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்குத் தனியாக நூறு ரூபாய்க் கொடுக்கவேண்டும். டெல்லி சென்றடைந்தவுடன் குளிர் கொஞ்சம் அதிகம் இருந்தது. நான் கொண்டு சென்ற பை வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகிவிட்டன. அதன்பின் டாக்ஸி பிடித்து ஒய்.டபிள்யு.சி.ஏ சென்றடைந்துவிட்டேன். இரவு அங்கேயே உணவு.

டெல்யூஜ் கருத்தரங்கம் முதலில் அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெறும் என்று சொல்லி அதன் அருகில் இருக்கும் ஒய்.டபுள்யு.சி.ஏ விடுதியில் தங்கச் சொன்னார்கள். கடைசி நிமிடத்தில் கருத்தரங்க இடம் தொழில் வளர்ச்சி மையம், வசந்த் கஞ்சுக்கு மாற்றப்பட்டதால் ஒரு மினி பேருந்தில் தினமும் அழைத்துச் சென்று கொண்டு வந்து விட்டார்கள். அதனால் காலையில் 7 மணிக்கே எல்லோரும் அருகில் இருக்கும் ஓர் இடத்தில் கூட வேண்டியிருந்தது. பங்கேற்பாளர்கள் 20 பேர் ஜன்தர் மன்தர் வாசலில் கூடிவிடுவோம். பேருந்து வரும், எங்களை அழைத்துச் செல்லும். குடியரசுத் தலைவர் மாளிகை, பல நாடுகளின் தூதரகங்கள் என்று கடந்து 18 கி.மீ பயணம். 8.30 மணிக்குக் கொண்டு சேர்த்துவிடுவார்கள். 9 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கிவிடும். முதல் ஒரு மணி நேரம் வெளிநாட்டுப் பேராசிரியர்களின் கட்டுரைகள் அதன் பிறகு கலந்துரையாடல் அதன் பின் தேநீர் இடைவேளை. அதன் பின் 11 மணிக்கு பங்கேற்பாளர்களின் கட்டுரை வாசிப்பு. அது ஒரு மணிக்கு முடியும். அதன் பின் உணவு இடைவேளை. மூன்று நாட்கள் இப்படித்தான் கழிந்தது.

இரண்டாவது நாள் தோழிகளுடன் சில இடங்களைப் பார்க்கக் கிளம்பினோம். ஜன்தர் மன்தர், கன்னாட் ப்ளேஸ், பாலிகா பஜார் எல்லாம் பார்த்துவிட்டு இந்தியா கேட் வந்தோம். அங்கேயும் பார்த்து படங்களை எடுத்துக் கொண்டு விடுதி திரும்ப 8 மணி ஆகிவிட்டது.

இறுதிநாள் மதிய இடைவேளையின் போது பேராசிரியர் கென்னத் சூரினுக்கு உடல்நலம் கெட்டது. அவருக்குத் தொடர் வாந்தி பேதி ஆகிவிட்டது. அவர் பலவீனமாகிவிட்டார். அப்படியே படியில் அமர்ந்துவிட்டார். அவருடைய மனைவி அவருக்கு மாற்று உடைகளை எடுத்து வரப் போய்விட்டார். எலுமிச்சை ஜூஸ் கொடுத்தோம். இருந்தாலும் அவருக்குப் பிரச்னை தீரவில்லை. என்னிடம் எலக்ட்ரால் என்ற நீர்ச்சத்தைக் கூட்டும் ஒரு தூள் இருந்தது. அதைப் போட்டுக் கொடுத்தேன். அதன் பின் அவரைத் தூக்கி தங்கும் அறைக்கு அனுப்பிவிட்டோம். அவருடைய நிலைமை எனக்குப் பெரும் துக்கத்தைத் தந்தது.

பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் பேராசிரியர்கள் மினரல் நீரை மட்டுமே குடிப்பார்கள். அது அவர்களுக்குக் கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அதைக் கேட்க முடியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் ஒருவர் உடல்நலம் கெட்டு பாதிக்கப்படுவார் என்று நான் கனவு கண்டதால் எங்கள் விடுதியில் கொடுத்த மினரல் நீரை எடுத்துப் போய் பேராசிரியர் டேனிடம் காலையிலேயே கொடுத்துவிட்டேன். மதியம் பேராசிரியர் சூரினுக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. அதன் பின் உடல்நலம் தேறிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். ட்ரம்பைக் குறித்து விமர்சித்ததால் முகநூலில் அவர் எழுத மூன்று வாரங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நான் அவருடைய நலம் பற்றி விசாரித்ததற்குப் பதிலளிக்க முடியாமல் இருக்கிறார் என அவருடைய மனைவி தெரிவித்தார். அமெரிக்காவில் இருக்கும் பேராசிரியர் அவர்.

மதுரையிலிருந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கார்த்திக் வந்தார். அவர் டெல்யூஜ் குறித்து காட்டிய ஆர்வம் உற்சாகம் தந்தது. அஸ்ஸாம் தேஜ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் அன்பரசன் வந்திருந்தார். டெல்லியில் தமிழில் பேச ஆட்கள் கிடைத்தது நல்ல அனுபவமாக இருந்தது.

கருத்தரங்கம் முடிந்து ஞாயிறு ஏர் இந்திய விமானத்தில் மதியம் புறப்பட்டு மாலை வந்துவிட்டேன். அம்மா, அப்பாவின் மரணத்திற்குப் பின் செல்லும் பயணம் இது. கிளம்புவதற்கு முன் உற்சாகம் இன்றி பெரும் துக்கமாக இருந்தது. அங்கு சென்ற பின் அமைதியாக இருந்தது. வரும் போது வானிலை மைய அதிகாரி புவியரசன் விமானத்தில் உடன் பயணம் செய்தார். மேலும் ஒரு வயதான அம்மையார் தனியாக டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார். அவருக்கு உதவியது இதமாக இருந்தது.



Sunday 23 February 2020

டெல்லி-டெல்யூஜ் கருத்தரங்கம்







டெல்யூஜ் கருத்தரங்கம் இந்த முறை பெரும் நெருக்கடிகளைத் தாண்டி டெல்லியில் நடந்தது. இதை நடத்த ஜாமியா பல்கலைக்கழகம் முன்வந்தது எதிர்பாராத உதவி போல் இருந்தது. தொழில் வளர்ச்சி மையம் கருத்தரங்கை நடத்துவதற்கான இடத்தை அளித்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் இந்தக் கருத்தரங்கத்திற்கான நிதி உதவியை அரசிடமிருந்து பெற முடியாமல் போய்விட்டது. அதனால் வெளிநாட்டு பேராசிரியர்கள் அவர்கள் செலவிலேயே வந்து போகவேண்டியிருந்தது. அதனால் சிலர் வராமல் இருந்துவிட்டார்கள். எப்போதும் இந்தக் கருத்தரங்கத்திற்கு வரும் பேராசிரியர்கள் டேனியல் ஸ்மித், கென்னத் சூரின், ஆன் சுவங்யா, ஜாஃப் ப்ராட்லி, அலக்ஸ் டீக் க்வாங் லீ, ஜெனல் வாட்சன் டாட்சியா ஹைகாகி ஆகியோரைத் தவிர அமெரிக்காவிலிருந்து லியோனர்ட் லாலர், ஸ்லோவினியாவிலிருந்து ஈவா பஹாவேக், தைவானிலிருந்து செபஸ்டியன் ஹைசியல் ஹூ லியு, ஜப்பானிலிருந்து தோஷியா உய்னோ ஆகியோர் வந்திருந்து பல கட்டுரைகளை வழங்கினார்கள். முதல் இரண்டு நாட்கள் வெளிநாட்டுப் பேராசிரியர்களுடன் நம் நாட்டு பேராசிரியர்கள் இருவரும் கட்டுரைகளைக் கொடுத்து அவற்றை விளக்கி அவற்றுக்குப் பிறகான சிந்தனைகள் குறித்து அலசும் முகாம் நடக்கும். சென்னையில் மட்டுமே என்னால் முகாமில் கலந்துகொள்ள முடிந்தது. மும்பையிலும் கலந்து கொள்ள இயலவில்லை. இங்கும் கலந்துகொள்ள இயலவில்லை.

கருத்தரங்கத்தில் பல பங்கேற்பாளர்களின் கட்டுரைகள் இடம்பெறும். ஒரே சமயத்தில் நான்கு பங்கேற்பாளர்கள் வெவ்வேறு அரங்கங்களில் கட்டுரைகள் வாசிப்பார்கள். அந்த அரங்கங்களில் வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவர் தலைமை வகிப்பார். ஓர் அரங்கத்தில் நான்கு கட்டுரையாளர்கள் கட்டுரை வாசிக்க நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் வாசித்த பின் அது குறித்த கலந்துரையாடல் நடக்கும். வெளிநாட்டுப் பேராசிரியர்களும் அந்தக் கட்டுரைகளைக் கேட்டு கருத்துரைப்பார்கள்.
இந்த முறை என் கட்டுரை ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திராவிட கட்சிகள் எதிர்கொள்வது’ பற்றியது. என் அரங்கத்திற்கும் தென்கொரிய பேராசிரியரும் மார்க்ஸிய ஆய்வாளருமான அலெக்ஸ் டீக் க்வாங் லீ தலைமை வகித்தார். நான் கட்டுரையை வாசிக்கவில்லை. பவர் பாயிண்ட் ஸ்லைட்கள் போட்டு அவற்றை விளக்கிச் சொல்லிவிட்டேன். வந்திருந்த அனைவருக்கும் முதலில் நாம் சொல்லும் விஷயம் புரியவேண்டும். அடுத்து வெளிநாட்டுப் பேராசிரியர்கள் அதனை உள்வாங்கிக் கருத்துச் சொல்லவேண்டும். இதனால் நான் இப்படிச் செய்தேன். என் கட்டுரை எதைக் குறித்தது என திராவிட அரசியல் புரியாதவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது. பேராசிரியர் அலெக்ஸ் அருமையாக இருந்ததாகச் சொன்னது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. பேராசிரியர் டேனியல் ஸ்மித் என் கட்டுரையைக் கேட்பதற்காகவே வந்திருந்தது பெருமையாக இருந்தது. அவரும் என் கட்டுரையைப் பாராட்டினார். மேலும் அதனை வளர்த்தெடுப்பதற்கான சில கருத்துகளைச் சொன்னார்.

தேநீர் இடைவேளையும் மதிய உணவு இடைவேளையும் சாப்பிடுவதை விட அந்தப் பேராசிரியர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் பங்கேற்பாளர்கள், நாட்டின் பிற கல்லூரிகள் பல்கலைக் கழகங்களிலிருந்து வந்திருப்போருடன் பேசுவதற்கான நேரமாக எப்போதும் இருக்கும். இந்த முறையும் பல பேராசிரியர்களுடன் பேச முடிந்தது. பேராசிரியர் அலெக்ஸ் என் பங்கேற்பு குறித்து முகநூலில் பகிர்ந்ததில் என் கட்டுரை சிறப்பாக இருந்ததாக பதிவிட்டது பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேலும் அவர் பாராசைட் குறித்து நான் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் தருமாறு கேட்டிருக்கிறார். அவர் மற்றும் மற்றொரு பேராசிரியருடன் என்னுடைய கருத்தையும் இணைத்து ஒரு கட்டுரை எழுதி ஒரு சர்வதேச இதழில் பிரசுரிக்கக் கேட்டிருக்கிறார்.

இந்தக் கருத்தரங்கத்தில் நான்கு கட்டுரைகள் குறித்து முக்கியமாகச் சொல்லவேண்டியிருக்கிறது. முதலாவது பேராசிரியர் டேனியல் ஸ்மித் ’காலத்தின் தூய வடிவமும் பொய்மையின் சக்தியும்: காலம் மற்றும் உண்மை குறித்து டெல்யூஜின் கருத்தை முன்வைத்து’ ஒரு கட்டுரையை வாசித்தார். இதில் காலம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று டெல்யூஜ் கூறிய கருத்தை ‘தத்துவம் என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து எடுத்து மறுவிளக்கம் தந்திருக்கிறார்.

அடுத்து கருத்தரங்கத்தை நடத்தும் ‘டெல்யூஜ் இந்தியா குழுமத்தின்’ துணை அமைப்பாளரும் சண்டிகர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான மீனு குப்தா எழுதிய, ’கனடாவின் வைஷேஷிகா சூத்திரத்தை டெல்யூஜின் அடிப்படையில்  வாசித்தல்’ என்ற கட்டுரையில் அணு, இயக்கம், மனித அறிவின் தன்மை, ஆத்மா இவற்றை டெல்யூஜின் உறுப்புகளற்ற உடல் மற்றும் பெர்க்சனின் கோட்பாடுகளைக் கொண்டு வாசிப்பதற்கான சாத்தியங்களைக் காட்டியிருந்தார்.

அடுத்து பிரெஞ்சு பேராசிரியர் ஆன் சுவங்யா எழுதிய ‘சூழலியலுக்குத் திரும்பிய மீமெய்யியல்’ என்ற கட்டுரை. இதில் மீவாழ்வியல் என்பது உணர்நிலைக்கான இயங்குதளமாகிவிடுகிறது என்றும் வெறும் சங்கேதங்களாக மாற்றப்பட்டு கண்காணிக்கப்படுகின்ற மனித இருப்பு வடிவங்கள் பதிவுறுத்தும் இடங்களாக இருப்பவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் விளக்கினார்.

அடுத்து ஒரு பங்கேற்பாளர் பெர்க்சனின் கோட்பாட்டை நாராயண குருவின் தத்துவங்களில் பொருத்தி ஒரு கட்டுரை வாசித்தார்.
இந்த நான்கு கட்டுரைகளும் எனக்கு ஒன்றை உணர்த்தின. சென்ற முறை கருத்தரங்கத்தில் நான் ‘உள்ளுணர்வு தொடர்புறுத்தத்தின் ஒரு செயல்பாடு’ என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் உள்ளுணர்வு எப்படி விழிப்படைகிறது அதன் செயல்பாடு குறித்து எப்படி பெர்க்சனும் டெல்யூஜும் விளக்குகிறார்கள் என்று சுட்டிக்காட்டி இருந்தேன். இந்தக் கட்டுரையை பேராசிரியர் டேனியல் ஸ்மித் மற்றும் பேராசிரியர் ஆன் சுவங்யாவுக்கும் அனுப்பி அவர்களுடைய கருத்துகளைப் பெற்றிருந்தேன். மேலும் பேராசிரியர் மீனு குப்தாவும் என் கட்டுரையை அனுப்பப் பெரிதும் கேட்டுக் கொண்டார் என்பதற்காக அவருக்கும் அனுப்பியிருந்தேன். இந்தக் கருத்தரங்கங்களில் எல்லோருடைய கட்டுரைச் சுருக்கத்தையும் ஒரு சிறு கையேடாக வெளியிடுவார்கள். அதில் இடம்பெற்றிருந்த என் கட்டுரையின் சுருக்கத்தைப் பலர் படித்திருக்கலாம். இதில் நான் உள்ளுணர்வு என்பது ஒரு கணத்தில் நிகழ்வது அதற்கும் நேரத்திற்கும் தொடர்பில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். மேலும் உள்ளுணர்வு மூலம் தொடர்புறுத்தம் சாத்தியப்பட்டால் கண்காணிப்பு இயந்திரங்கள் செயல் இழந்து போகும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இதை வாசித்த பேராசிரியர்கள் அதில் அவர்கள் எனக்குச் சொன்ன கருத்துகளைக் கொண்டு நேரம் குறித்த கட்டுரையாகவும் இடம் அல்லது வெளி குறித்த கட்டுரையாகவும் அடுத்த கட்ட கட்டுரைகளை இந்தக் கருத்தரங்கத்தில் சமர்ப்பித்தார்கள். இந்தியாவைச் சேர்ந்த இருவர் அதனை இந்திய தத்துவத்தில் அடையாளம் காணக்கூடிய இடங்களைச் சுட்டிக்காட்டி கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

எனக்கு இரு பெரும் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. உள்ளுணர்வு குறித்து நான் வெறும் ஒரு செயல்பாட்டு வடிவத்தைச் சமர்பித்ததால் அதன் வளர்ச்சி குறித்து தத்துவ நிலையிலும் அறிவியல் நிலையிலும் அடுத்த கட்டத்தைக் கண்டடைந்து எழுத வேண்டியிருக்கிறது. அடுத்து இதனை அணுகுவதற்கான பொருத்தமான முறையான தத்துவ, அறிவியல் முறைமைகளைப் பயின்று அதனை வெளிபடுத்துவது. என் கட்டுரை இந்த வகையில் அடுத்த கட்ட வளர்ச்சியைக் கண்டது என்பதால் மட்டுமல்ல நம் மனித இனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே உள்ளுணர்வு சார்ந்த இயக்கமாக மட்டுமே இருக்கப் போகிறது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக இந்தக் கருத்தரங்கத்தில் நான்கு கட்டுரைகள் வாசிக்கப்பட்டது நிம்மதியைத் தந்தது.  


Saturday 15 February 2020

பாரசைட்: கொரியப் படமும் தமிழ் நினைவுகளும்



சமீபத்தில் ஆஸ்கர் வென்ற கொரிய படமான பாரசைட் ஆங்கில சப்டைட்டில் இல்லாமலேயே புரிந்துகொள்ள ஏதுவாக, தமிழில் குறிப்பாக, சென்னையின் கலாச்சாரத்தைப் பகிர்வது போலவே இருக்கிறது. சென்னையின் வறுமை, சென்னையில் ஓடிய மழை வெள்ளத்தின் பாதிப்பு, சென்னையின் சுயநலம், சென்னையின் அசுத்தம் என பலவற்றை கொரிய மொழியில் பார்த்தது போல் இருந்தது.

இந்தப் படம் ஒரே ஒரு புலனுணர்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. நுகர்தல் என்ற ஒரு புலனுணர்வுதான் இதில் கதையின் பல முடிச்சுகளை உருவாக்கவும் நீக்கவும் செய்கிறது. வாசனை, நாற்றம் என்ற நல்-அல் நுகர்தலின் முக்கியத்துவத்தைப் படம் பூதாகரமாக்கியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆண்டான்-அடிமை என்ற முதலாளித்துவ சிந்தனையை அப்பட்டமாகக் காட்டிய படமாகவும் இருக்கிறது.

ஒரு முதலாளியின் வீட்டில் ஒட்டுண்ணிகளாக வாழ வருபவர்கள் வாழ்நாள் முழுக்க ஒட்டுண்ணிகளாக இருந்துவிடுவார்கள் எனும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது படம். முதலாளியின் மகளுக்கு ஆசிரியர் வேடம் பூண்டு வரும் இளைஞன் அங்கு தன் தங்கையை முதலாளியின் மகனுக்கு ஓவிய ஆசிரியராகவும், தாயை வீட்டை நிர்வகிப்பவராகவும், தந்தையை ஓட்டுநராகவும் தான் அறியாத அந்நியர்களைப் போல் அந்த வீட்டில் வேலைகளுக்குச் சேர்த்துவிடுகிறான். ஏற்கனவே அந்த வேலைகளில் இருந்தவர்களை ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி துரத்தி அடிக்கிறது இந்தக் குடும்பம். அங்கு ஏற்கனவே வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த பெண், தன் கணவரை அதே வீட்டின் பங்கரில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறாள். இதை இந்தக் குடும்பம் அறிந்து கொள்ள நேர்கிறது. அப்போது இரு குடும்பங்களுக்கும் இடையில் ஒட்டுண்ணிகளாக யார் இருப்பது என்ற போராட்டத்தில் வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த பெண்ணும் இந்த இளைஞனின் தங்கையும் கொல்லப்படுகிறார்கள்.

முதலாளியின் மகனுடைய பிறந்தநாளின் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் சண்டையில் இளைஞனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. பங்கரில் ஒளிந்திருந்து வெளியே வந்து தன் மகளைக் கொன்ற அந்தப் பெண்ணின் கணவரையும் முதலாளியையும் கொன்றுவிட்டு அதே வீட்டின் பங்கரில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்கிறார் அந்த இளைஞனின் தந்தை. அந்த இளைஞனும் அவனது தாயும் அவரைத் தேடுகிறார்கள். அப்போது அந்த பங்கரின் அடியிலிருந்து அவர் விளக்கை அணைத்துப் போடும் முறைமையிலிருந்து சாரணரின் மொழியாக அது இருப்பதைப் புரிந்துகொண்டு அவரை மீட்கப் போராடப் போவதாக உறுதி அளிக்கிறான் இளைஞன்.

முதலாளியின் வீடு சொர்க்கம். இந்த இளைஞனின் இருப்பிடம் நரகத்திற்கும் கீழானது. சிறுவனான முதலாளியின் மகன் தன்னுடைய ஓவிய ஆசிரியை, ஓட்டுநர், வீட்டை நிர்வகிக்கும் இளைஞனின் தாய், இளைஞன் எல்லோர் மீதும் ஒரு குறிப்பிட்ட நாற்றம் அடிப்பதாகக் கூறுகிறான். அது என்ன நாற்றம் என்றால் சப்-வேக்களில் வாழும் மக்கள் மீது வீசும் நாற்றம் என்கிறார் முதலாளி. அதைப் பொறுக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். வண்டி ஓட்டும் போது முதலாளி அந்த நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் நெளிவதைக் கவனிக்கும் ஓட்டுநர் ஆத்திரமும் கோபமும் அடைகிறார். அப்போதே முதலாளியைக் கொல்லும் ஆவேசமும் அவருக்குள் உதிக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்தும் துணிவும் மனநிலையும் அவருக்கு இல்லை.
மகளைக் கொன்றுவிட்ட பின் அந்த இடத்தில் ஏற்பட்ட சண்டையின் காரணத்தை அறிந்து இளைஞனின் குடும்பத்தைக் காவலர்களிடம் முதலாளி ஒப்படைத்துவிடுவார் என்ற பயத்திலும் தன் மனைவியும் மகனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசையிலும் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் முகம் சுளித்துக் கொண்டிருந்த ஆத்திரத்திலும் முதலாளியை ஓட்டுநர் கொன்றுவிடுகிறார்.
ஆண்டான்-அடிமை என்பதன் விரிவாக்கமாக முதலாளி-ஒட்டுண்ணி என்பதாக ஒரு தளத்தைப் படம் உருவாக்குகிறது. அடுத்த தளம் நாற்றம் என்ற புலனுணர்வு பற்றியதாக இருக்கிறது. கீழானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீது வீசும் நாற்றம் என்ற புலனுணர்வின் அரசியல் குறித்து இந்தப் படம் எடுத்த பார்வை நுட்பமானது. மேலும் இந்த நாற்றம் பற்றி நம் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து உயர்சாதி மக்கள் இப்போது கூட இது போன்ற எண்ணத்தை வைத்திருக்கிறார்கள் என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

நேரடியான படம். எந்தச் சிக்கலான முடிச்சுகளையும் கேள்விகளையும் வைக்கவில்லை. பொருளாதாரத்தில் கீழான மக்களின் அறம் சார்ந்த தேடல்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. மழை வெள்ளத்தில் கழிவு நீர் கால்வாய் நீரில் நீந்தி மீளும் குடும்பம் மீது என்ன வாசம் இருக்கும்? இது போன்ற பல குடும்பங்களை தினம் தினம் நாம் சந்திக்க முடிகிறது. ஆனால் இது போல் அவர்களை வைத்திருக்கும் இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதாரம் குறித்த குற்றவுணர்வு இல்லாதச் சமூகமாகத்தான் கொரியாவும் தமிழகமும் (மட்டுமல்லாமல் எந்த ஒரு முதாலளித்துவ சமூகமும்) இருக்கிறது என்பது படத்தின் வேராக இருப்பதை ஒப்புநோக்க முடிகிறது.

Sunday 2 February 2020

சைக்கோ-திரைப்படம் குறித்து....





நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்கத்திற்கு சென்று பார்த்த படம்.
வழக்கம் போல் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் தான்.
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் தண்டனைக் கொடுத்ததற்காக மாணவன் கொலை செய்து பழி வாங்குகிறான்.

சுய இன்பத்தைக் கண்டித்ததற்காக ஆசிரியரை எட்டாண்டுகள் சிறையில் வைத்திருக்கிறான். அவரைக் கொலை செய்யாமல் அவருக்குப் பதிலாக 14 இளம் பெண்களைக் கொலை செய்கிறான். கொல்லப்பட்ட இளம்பெண்கள் எல்லோருமே அவனுடைய ஆசிரியரைப் போலத்தான் கருதிக் கொள்கிறான். கதையின் நாயகியை அவனால் கொல்ல முடியவில்லை. கதையின் நாயகன் சரியான நேரத்தில் வந்து அவளைக் காப்பாற்றிவிடுகிறான். சிறையில் பல ஆண்டுகள் வைத்திருந்த ஆசிரியரைக் கொன்று தப்பிக்கிறான் கொலைகாரன். அவனைக் குழந்தை என்கிறாள் கதையின் நாயகி. அவன் குழந்தைப் பருவத்தில் அடைந்த காயத்திற்கு மருந்திட்டு அவனைக் காப்பாற்றி இருக்கவேண்டும் என்கிறாள்.
நேரடியான கதை. தொடக்கத்திலேயே கதை என்ன சொல்ல வருகிறது எப்படி முடியப் போகிறது என்பதைக் கூறிவிடுகிறது. கதையின் நாயகன் நாயகியைக் காப்பாற்றிவிடப் போகிறான் என்ற ஆசுவாசத்திற்குப் பின் எதற்காகக் கொலைகள் நடக்கின்ற என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் படத்தை ஹாலிவுட்டின் மிகவும் பெயர்பெற்ற துப்பறியும் திரைப்படங்களை எடுத்த ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கிற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் இயக்குநர். அவரும் சைக்கோ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படம்தான் ‘சிகப்பு ரோஜாக்கள், ‘மூடுபனி’ போன்ற திரைப்படங்களை எடுக்க ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால் அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் ஒரே ஒற்றுமை தொடர் கொலைகள். அதுவும் இளம்பெண்களின் கொலைகள். இளம் வில்லன் இளம் பெண்களைக் கொல்வதற்குக் காரணம் பாலியல் அழுத்தம் என்பதாகவே முதலில் புரியும். ஆனால் காரணம் அதுவல்ல என்பது தொடர்ந்து பார்க்கும் போது தெரிகிறது.
மாணவப் பருவத்தில் சுய இன்பம் அனுபவித்ததற்காக, வில்லனுக்கு கிறித்துவ ஆசிரியைத் தினம் 60 பிரம்படிகள் என்று தண்டனைக் கொடுக்கிறார். அவன் அதன் பின் முரட்டுத் தனமாக மாறுகிறான் என்பதற்காக சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அப்போது ஒரு காவலர் அவனைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வளர்ந்த பின் அவரைக் கொன்று அவருடைய சீருடையை சிறையில் இட்டு வைத்திருக்கிறான். ஆசிரியையும் சிறையில் வைத்துவிடுகிறான்.
பெண்கள் ஒழுக்கத்தை வற்புறுத்துபவர்களாகவும், ஆசிரியைகளாகவும் மட்டுமே வில்லனுக்குத் தெரிகிறது. பல மாணவர்களுக்கு முன் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை சிறையில் வைத்துவிட்டு அவருக்குப் பதிலாக அவரையே கொல்வது போல் பல பெண்களைக் கொல்கிறான் வில்லன். சிகரெட் பிடிக்கும் ஆசிரியை ஒழுக்க சீலியாக முன் வைக்கப்படுவதைக் கேள்வி கேட்க முடியாமல் தண்டனை வழங்குவதுதான் மனப்பிறழ்வு. சைக்கோத்தனம். நன்மைக்குள் ஒளிந்திருக்கும் தீமையைக் கொல்லல்தான் சைக்கோத்தனம்.ஆனால் இதில் மாணவனை ஒழுங்குப் பாதைக்குக் கொண்டு வர எண்ணும் ஆசிரியரின் நடவடிக்கை நன்மை சார்ந்தது. அதை ஏற்க முடியாமல் கொல்லும் மாணவனின் செயல் தீமை சார்ந்தது. இது பொதுபுத்தியில் இருப்பது. ஆனால் மாணவனிம் குற்றம் முழுமையான தீமையைக் கொண்டு வந்திருக்குமா என்றால் இல்லை. நாயகி கேள்வி கேட்பது போல அது பெரும் குற்றம் ஆகாது. இருந்தாலும் நன்மைக்கும் தீமைக்கும் வரையறை செய்திருக்கும் பாலியல் விதிகள் கிறித்தவ மதத்தின் அடிப்படைகளாக விளங்கியிருக்கின்றன. பாலியல் வரலாறு குறித்து எழுதிய ஃபூக்கோவும் விக்டோரியன் காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் விதிகளில் சுய இன்பம் காணுதல் இருபால் உறவு என்ற நிறுவனமயத்திலிருந்து விலக்கப்பட்டதாக இருப்பதை விளக்குகிறார். கிறித்தவ மதத்தில் ஊறிய ஆசிரியை மாணவ சமூகத்திலிருந்து வில்லனை விலக்கி வைப்பது பெரும் தீமையை மாணவனின் மனதில் உருவாக்கிவிடுகிறது. ஆசிரியையைச் சிறையில் வைத்து சமூகத்திலிருந்து விலக்கி வைக்கிறான்.  மேரி மாதாவிடம் தன் குற்றங்களுக்காச் சடங்கு நடத்தி மன்னிப்பு கோருகிறான்.
இந்தப் பொருள் சைக்கோ திரைப்படத்தில் ஓர் அடுக்கு. மற்றொர் அடுக்கு பௌத்த மதத்தின் பொருள். வில்லனின் பெயர் அங்குலிமால். பௌத்தரின் சீடரான அங்குலிமாலா மாணவர் பருவத்தில் சிறந்த கல்வியாளராக இருந்த போது சிலரின் பொறாமையால் அவரது ஆசிரியர் அவரை ஆயிரம் சுண்டு விரல்களைக் கொண்டு வருமாறு கூறி துரத்திவிடுகிறார். அவர் அவற்றைப் பெற பலரையும் கொலை செய்து சுண்டு விரல்களை எடுத்துக் கொள்கிறார். புத்தரின் வரவால் மனம் திருந்தி சீடராக மாறுகிறார். இந்தக் கதையிலும் வில்லன் நாயகனின் உதவியாளருடைய சுண்டுவிரலை எடுத்துக் கொள்கிறான்.  மேலும் கதையின் நாயகனின் பெயர் கௌதம்.  நாயகனிடம் தான் தோல்வி அடைந்துவிட்டதாகக் கதறுகிறான். ஆனால் இயக்குநர் மிஸ்கின் புத்தராகக் கற்பனை செய்திருப்பது நாயகியைத்தான் என்கிறார்.
நன்மையை முன் வைக்கும் நாயகனுக்கு அதற்கான பணி செய்வது மட்டுமே கொடுக்கப்பட்ட பாத்திரம். ஒரு facilitator. அவ்வளவுதான்.  நன்மையின் உலகம் பெரியது. அது குருட்டுத் தனமாகவும் நன்மையைச் செய்யும். அதற்கு ஒளி தேவை இல்லை. தீமையின் உலகம் சிறியது. இருளானது. குருட்டுத்தனமானது என்று நம்பப்பட்டது. அதில் ஒளியாக வரக்கூடியது தாயின் அன்பும் கருணையும் அரவணைப்பும். வெறும் வெற்று  உடல் ஒழுக்கத்தை வற்புறுத்தும் பெண்களிடம் இதைக் காணமுடியாது. நன்மையின் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே நல்லவர்களாகிவிட முடியாது. நன்மைக்குள் தீமையின் பங்கையும் உள்ளிணைக்கவேண்டும். அதனைக் காணத்தான் கண்கள் வேண்டும்.  அதனால்தான் நாயகி தாயின் அன்பை நல்குவதாகக் கண்ட பின் தற்கொலை செய்துகொள்கிறான் வில்லன். தீமை விலகியது நன்மையாக மாறியது. பெண்களைக் கொல்பவன் சைக்கோ என்பதாக சுருங்கிய பொருளைக் கொள்ளாமல் விரிந்த பொருளில் எடுக்கப்பட்டத் திரைப்படம்.
நாயகனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கம் கறுப்புக் கண்ணாடி பத்திரிகையாளர் தமிழ்வாணனின் கண்ணாடியை ஒத்திருக்கிறது. துப்பறிவதற்கான கண்களாக தமிழ் வரலாற்றில் இருந்ததால் அந்தக் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது. வானொலியில் பேசுவதன் மூலம் சில செய்திகளைக் குறிப்பிட்ட சிலர் புரிந்துகொள்ள-இங்கு கதையின் நாயகன் புரிந்துகொள்ள, முன்வைப்பது மிகவும் அரிதாக நடப்பது அதனை நாயகி பயன்படுத்துவது போல் காட்டியிருப்பது நுண்ணுணர்வைச் சார்ந்தது. நித்யா மேனன் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடித்தாலும் அவரை முன்னாள் முதல்வரின் வேடத்தில் ஒரு படத்தில் நடிப்பதை நினைவு கூறத்தக்க வகையில் விலக்கப்பட்டச் சொற்களைச் சொல்ல வைப்பது அதீத திமிரைக் காட்டுவது என்பதாகவும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில் சக்கர நாற்காலியில் பயணித்ததைப் போல பயணிக்க வைப்பதும் ஏன் இந்த ஒப்புமை என்பது போன்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் அவருக்கு கமலாதாஸ் என்ற பெயரிட்டிருப்பதும் கூட. ஆசிரியையாக நடித்த ப்ரிதம் சக்கரவர்த்திதான் படத்தின் திறப்புச் சாவி. அற்புதமான நடிப்பு.
  இயக்குநரின் முந்தைய படங்கள் காவல்துறையின் மீது நம்பிக்கை வைக்கக் கோருவது போன்ற முயற்சிகளாக இருந்தன. இந்தப் படம் காவல்துறை செயல்படுவது மிகுந்த சிரமமானது என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
#mysskin
#Psycho



மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...