Wednesday 9 January 2013

அழித்தனன் அழிந்தனன்


கிறிச்சீடும் கிள்ளை மொழியோ பிறழும் ஆயுத ஒலிகேட்டு. வாளும் வேலும் பழஞ்சேனைகளுக்கானதால் புதிதாய் பொலியும் எடையில்லா பருமையும் கொண்டு விரைந்து நிகழும் ஆற்றல் உள்ளதுமான சிறு கை எந்திரம் படைத்து ஏமாப்பு கொள்ளத் துணிந்த கருமமதில்.

குருதி வழிந்த சிறு நீள் வட்ட உருளை கொழித்திருக்கும் இரும்பின் மணம் கலந்து நெகிழ்வைக் கூட்டிடும். செம்மையும் கருமையும் இறுகும் நீராய் திவலைகள் வீழ்ந்திருக்க. உயிர் பாய்ந்த சுவடுகள் தெறித்ததின் சான்றுகள் மறைந்த சதுக்கமாய் அவ்விடம் உறையும். ஆயுதம் ஒரு கணம் கண் சிமிட்டி நகைக்கும். மரணம் பறித்த உவகையில் துள்ளும். விசையிடம் கற்று வேகத்தில் பயின்று இலக்கை எட்டும் வித்தை தெரிந்ததில் அழிவும் அற்புதமாய் அடங்கிற்று. வினையும் எதிர்வினையும் அடர்ந்த இயல்பின் தன்மையாய் ரசம் ஆடிற்று. இன்மையாக்கலை நிகழ்த்திய கருவி வகை பிரிப்பில் சேரும். படைகலனின் மூலம் தேடி பாதை விரியும். கிளியும் குரலெடுத்து இயம்பும்:
1.சிறுகுறு வகை: குறை தூரம் கடக்க வல்ல ஆற்றல். குறி தாக்கும் துல்லியம். ஒரு கணத்தில் சில தசம அடி தாண்டும். பொருளில் படும் இடம்சார்ந்து எடை மாறும்.
2.சிறுபெரு வகை: நீட்டலும் இன்றி குறுக்கலும் அன்றி இடை பாயும். அடையும் எல்லை கழுகுக் கண் பாவை. நாழிகை நுனியில் பல தூரம் கடக்கும். நிலை எட்டும் அம்பின் கணையாய்.
3.நீள் வகை: கண் கொத்தும் குறிப்பை கணத்தில் சேரும் கலன். எதிர் நோக்கும் காணா இமைப்பில் மறையும். நிறை கூடும். தொகை பெருக்கும்.
4.இயங்கும் எடை வகை: குடி அழிக்கும் நோக்கில் மலையும் காடும் தாண்டி செயல்படும். குழுவாய் முயன்று தகர்க்கும். கோட்டையும் உடையும். இறுமாப்பு பெருக.

கிளி கடிந்தது வன்மத்தில். அலகும் கூர்ந்து செப்பும். மருளும் மாந்தர் பகை போக்க வெளி சமைத்ததோ. உந்தும் தள்ளும் உடன் மடியும் இரையதனை கண்ட துதி தேவையோ. சிறு குழவி கரம் பற்றினாலும் உறுதியாகும் சாக்காடு. பயனிலா போகமாய் ஆக்குவது ஏனோ.

கிளி விளி கேட்டு சினமும் இறுக்க வதியும் கூட்டை நொறுக்கும் ஆர்வம் கிளம்பும். உடன் கொஞ்சும். பைங்கிளி அகத்தின் ஈரம் காட்டும். மானமில் செயலதனை சுட்டும். கிளியைக் கொல்ல ஆயுதம் ஏந்திய வீரமோ என இளிவும் தாக்க முதிரா சலிப்பு சேரும்.

தத்தை மீண்டும் தொடரும். கொலைத் தொழில் நடந்தேறும் குறிப்பதனை உற்று நோக்கும். துறவின் மாட்சிமை பொருந்திய மூப்பின் உடல் சிதைந்ததை சொல்லி விழிநீர் பெருக்கும். மதம் மயங்கிய களிற்றின் நிலை போல் அழுத்தும் அலகை பற்றியதும் மாறிய தீரத்தை கண்ணுற்ற பிணி தீருமோ.

ஆயுதம் தாங்கிய மரணம். உயர் இடம் மாறி திடமாய் வல்லடியுறும். நிகழும் எனும் நேரம் சார் பொருளை மறு உருவாக்கல் செய்யும். விதிகளில் சிக்காமல் துடிப்பை நிறுத்தும் சங்கதி அறிய. ஆளும் பிம்பம் மறைய. கூர்மை சிதைக்கும் ஆடியை. நொறுங்கும் கண்ணில் உடல், பொருள், ஆவி இழக்க.

இறப்பும் உயிர்ப்பும் வேகத்திலும் கூர்மையிலும் குறிபார்த்தலிலும் இறுதி காணும் திடுமென்று உயிர்த்தலற்ற பொழுதும் எட்ட. உந்தித் தள்ளிய உந்தலின் வேட்கை உயிரின் விருப்பம் அறிந்திருக்க.


கொடியதாய் குத்தியும் கிழித்தும் உட்புகும் திறத்தினதாய் திடம் கொண்ட உலோகம் இயங்க. சிறுபொறி பறக்கும். ஒலியும் வெடிக்கும். தூரத்தின் வகையில் சாவும் இடம் செறிந்து
1.முனைதள்ளி: அணுகலும் அகலலும் இன்றி மத்தியில் நிலை கொண்டது.
2.முனையவெளி: குறுகிய இடைவெளியில் ஸ்திரமானது.
3.முனைபுள்ளி: வெளிப்பட்டவுடன் வாகை சூடும் இடம் பற்றியது.

கணத்தில் பொழியும் பண் நிறை கோளங்களை அரசனும் பவனி வர துளைத்தது ஒன்று. விழி நீர் பெருக்கி துவண்டனன் சிறு கொடியாய். படையும் அறியவில்லை காரணமும். முன் செலுத்தும் வித்தை கொண்ட மாயவகை சார்ந்த திட்டமதில். எஃகின் வலி பெருக்கும் கூர்மை விசையது. பேய் வெண்தோல் பிளந்து செவ்வரி ஓடி ஊற்றெடுத்தது. அதிர்ந்த துளிகள் தெறித்தன அங்குமிங்கும். நீரன்ன வெம்மையில் திரண்ட ஒழுகலாய். கொட்டும், ஊற்றும் செம்புனலென. மண்ணுடன் தான் கலந்த கறையாக செங்களம் விரித்து ஈர்க்கும். நாறும் மணம் புலவித் திறத்தை புகைத்தது. வெறியின் பித்தாய் வீசியது. காற்றும் கலந்து இறுகியது. நீர்த்ததும் வளி போன்றதும் வெளியேறியதில் கலந்தது துடிப்பு. விழி காணா படலம் ஆவியின் வெம்மையாய் பரவும். வலிந்து பறித்த ஆற்றலும் நகைத்து கோண. முள்ளன்ன தொடுவலி உணரா மேன்மை பொறிகொண்ட பேரானந்தமாய்.

ரௌத்திரம் பழகிய கிளி செய்வதறியா பதைப்பில் மிழற்றி களிப்பும் பொங்கும் உவகை போல் கொப்பளிக்கும் சுரப்பும். செந்நிறம் பெற்று அனல் கொண்டு தகிக்கும். வேறு இடமும் புதிய கணமும் நேர்வித்த விளைவில். பல்லுயிர் பெருக்கி எண் கொடுக்க. உருள் திரள்கள் எத்தனை எத்தனை என விண்மீனாய் சிமிட்டும். அரசும் வீழ கொடியும் காய, ஆதியின் மகனும் வாழா நிலையதனை காணவும் உளதோ இன்னும். இனிக்கும் சுவை கூட்டும் நிலையற்ற வாழ்வதனில் இருப்பதும் இருப்பதான கருத்துமாய் இடையீட்டில் ஊசலாடி மௌனம் கவ்வும் சூதில் முற்றும் பெற ஆகிவந்த கருவி.

பிள்ளைப் பட்சி தீட்டும் உபாயம் மறைபொருளாய் விளங்கிற்று. எப்படியும் அக்கருவி எடுத்து பறந்தோடும் வித்தை ஒன்றை புனைந்தது அது. தன் இனம் சேர்த்து படை திரட்டி மீளும் திறமாய் அது இருக்க. பழி தீர்க்கும் மோகம் உன்மத்தமாகி நுடங்கும்.

கிளி உடைத்தது கூடு. தேடிப் பறந்ததது கலனுக்காக. அவள் இடம் வந்து சேர கண்டது காட்சியை.

தந்தையும் தனயனும் தலைவனும் வெற்றுடம்பாய் நீண்ட பொழுதில் தன் உறவு விடுத்த அவள் மயங்கும் புலனாய் கொண்ட கலன். நன்றி உணரா நன்றறிந்து அழுத்திய பொறியில் நில்லாது பொழிந்த கூர் வட்டுகள் சாய்த்தன விநாடியில். தீதும் இன்றி தீயதாய் உருவமைந்த எதுவும் இன்றி நன்றாய் மாறிய திறமும் இன்றி.

ஆய்ந்தறிந்து தகவமைத்த சான்றோனும் மரண ஆட்டம் முடிவிலா தொடரானதாய் ஆற்றாமல் தன் பெயர் ஈந்த கருவியை ஒழிக்கும் புது விடை காணாது திரும்ப, கிளி அழுத்தி விசை தெறித்து மூச்சையும் நிறுத்தினனே.



மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...