Thursday 16 January 2014

மரம் விளையும் பதம்






















‘துணையின்றி தனித்திருக்கும் அகம்
முன் நிற்கும் விருட்சமாய்’
‘கிளை கதைக்கும் பரவலில்
முகிழ்க்கும் தண்மையாய்’

‘கொல்லும் வெறுப்பாய் பூத்துவிட்ட
நிதியை காட்சியில் வைக்க’
‘துளைக்கும் வண்டும் இனிதென
வாழும் கூட்டை கொண்டே’

’இச்சையாவும் வீண் எனும் பயிராய்
களையாகி சொக்கியதே’
‘விழைவும் ஆற்றலும் உள் கனன்று
மலர் எனவும் கனி எனவும் முளைத்ததுவே’

‘உணர் அறி புலன் கோரும் யாவும்
குறையென பெற்றிடின்’
‘தாவும் மந்தியும் மிழற்றும் கிள்ளையும்
தஞ்சமென அணைக்கும் பேற்றுடனே’

‘உற்றும் சுற்றும் விலக்கி தன்னிலை
விரிக்க வந்து நின்ற தன்மையதே’
‘முன்னிலையில் செவியுற்று நிலைத்த
கோலமாய் தாங்கிய வேரென’

‘தொடர்பும் அணுவாய் தொடரலும்
துகளாய் மாறும் பரிமாற்றத்தில்’
‘கானமும் பாரமாய் கூவலும் 
துயரினதாய் ஆற்றுவித்தலின் பொருளாக’

‘உரியதும் கொள்ளாத உரித்ததும்
நிலையாத கர்மமென ஆகி’
‘தினையாக உள்ளதுமாய் தகையும்
திறத்தினதாய் தகவு கொண்டே’

‘ஆவினோடு அனைத்தும் இழந்தும்
கதியில்லா தடத்தில் எதிர்வருமே சுவனமாய்’
‘ஒற்றையாய் நிற்றலும் தோப்பின்
தாவரமாய் மிகஉரைத்து போக்கிய துயராய்’

‘விளையும் பழமாய் காத்திருக்கும் 
சுகமென தான் தங்கும் தன்னிலை’
‘முளைத்து இலைவிரித்து பரவி
உருக்கும் குளிரினதாய் தன்மை’

‘பருவம் காணும் கடந்ததும் உருவழிந்த
திண்ணமாய் மெய் மிக விரும்பி’
‘வித்தாய் உறங்கி நெடுவெண் கிடையாய்
நின்று நிகழ்ந்த உரமாய்’

‘குருதியும் நீராய் உண்டு வளர்ந்து
புனலில் செழித்த காயமுடன் சேர்ந்து’
‘பச்சையும் வனமாய் பூத்திருக்க தனிப்
பெரும் தண்டாய் நிலைத்திருக்கும் களம்’

‘குறையும் குற்றுயிரும் விளம்பிய கிளவியாய்
முகர் சுருங்கி குனிந்திருக்க’
‘நிறையும் பெருமையும் பேறாய் பெற்ற
செவியோடே ஞாலத்தில் விழித்திருக்க’

‘உறவற்ற சித்திரத்தின் வண்ணக் கோடாய்
விரிந்து பொருள் கூடும் மையத்து’
‘இனமும் சாறும் இருந்தும் தனிமை
இலங்கிய வெளியில் வளியாய் பேச’

‘துண்டான உள்ளமும் துடிக்கும் 
சிந்தையும் ஒன்றாய் கருகி விழ’
‘உணர்வும் நீர்மமாய் உணவும் ஆவியாய்
அறிந்திட்ட நிலையில் எளிதின் விருப்பாய்’

‘அறமெனும் புனைவும் பகர்ந்திட்ட காதையில்
பாவையாய் ஆடும் விளக்கத்தைச் சொல்ல’
‘பூக்கும் காயும் நகைக்கும் கூத்தில்
ஆதாரம் காணும் திருச்சுவையாய் பெயர்க்கும்’

‘எரிந்த நெஞ்சும் கரிந்த உடலும் 
காட்சியின் அங்கமாய் மொழிந்திருக்க’
‘பூத்த நெருப்பும் உள்கவிய தண்மை
போலே நகைக்கும் தரவாய் சொல்லே’

‘என்பும் இனி தண்டாய் மெலிய
காலும் நிலமதில் படர ஞாயிறைத் தேடிய முகத்துடன்’
‘மண் இணையும் கல்லாய் மாற உணர்வற்று
கூடி உறியும் நீரும் ஆவியாய் பிரிய’

‘இடம் மாறும் இனத்தின் பால் எனவே
துன்பமும் நீளா இம்மையை கடந்து’ 
‘இன்மையும் நிகராகி இச்சையற்று விலக
துளியன்ன பொருளாய் இகத்தில் கரைந்த’


'காவ்யா' பொங்கல் மலரில்(ஜனவரி-மார்ச் 2014) வெளியான எனது கதை கவிதை.







4 comments:

Unknown said...

Really a nice one.

Mubeen Sadhika said...

Thank you so much N Ramanathan Ramanathan.

Anonymous said...

வணக்கம்

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும் படி மிக அழகு.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mubeen Sadhika said...

நன்றி ரூபன்

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...