திருநீலசதிர்-நீலம் என்பது கடலைக் குறிக்கிறது. சதிர்-அதில் நடக்கும் பல்வேறு சாகசங்களைக் குறிக்கிறது.
இலங்கை தமிழ் அகதிகள் மற்றும் பிற நாட்டு பயணிகள் கள்ளத் தோணியில் இலங்கையிலிருந்து ஐரோப்பா வரைப் பயணிப்பது குறித்தது இந்த நாவல்.
இரு நண்பர்கள் இந்தப் பயணத்தில் அனுபவிப்பதை ஒரு நண்பனின் பார்வையில் பதிவு செய்கிறது நாவல்.
ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
மற்றொருவர் பிரான்சைச் சார்ந்த செய்தியாளர்.
இலங்கை தமிழர்களின் சிக்கலை மூன்றாவது நபரின் பார்வையிலிருந்து அறிவது போல் எழுதப்பட்டிருக்கும் நாவல்.
இலங்கையில் போர் முடிவுற்ற பின் இருக்கும் பதற்றமான சூழ்நிலை குறித்து நாவல் பதிவு செய்கிறது.
விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குவது போன்ற மாயையில் இலங்கைத் தமிழர்கள் வாழ்வது குறித்து நுட்பமாகப் பதிவு செய்கிறது நாவல்.
விடுதலைப் புலிகளின் தலைமை இனி இயங்கவில்லை என்பதை ஏற்க முடியாமல் அதே போன்ற ஒரு நடைமுறைக்குள் வாழ்வதில் இருக்கும் பாதுகாப்பைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் வீறுகொண்டு எழும் என்ற நம்பிக்கையையும் மட்டுமே தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாவல் காட்டுகிறது.
ஐரோப்பா மட்டுமே விடிவு தரும் உலகம் என்பது இலங்கைத் தமிழர்களின் எண்ணமாக இருப்பதை இந்த நாவல் பிரதிபலிக்கிறது.
ஒரு பெரிய படகு போல் இருக்கும் சரியான தொழில் நுட்ப வசதியில்லாத சிறிய தோணியில் 40 பேர் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் சாகசத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் இறந்துபோகிறார்கள்.
குறிப்பாக, 20 பேர் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார்கள். மேலும் சிலர் கடல் பயணச் சிரமத்தைத் தாங்க இயலாமல் இறக்கிறார்கள்.
மீதி இருப்பவர்கள் ஐரோப்பிய கரையை அடைகிறார்கள்.
இந்த நாவல் மொபி டிக் நாவலை ஒத்து இருப்பது போல் தோன்றியது.
மொபி டிக் குறித்து டெல்யூஜ் கட்டாரி தங்களது ஆயிரம் பீடபூமிகள் நூலில் எல்லைநீக்கம், எல்லையாக்கம் பற்றிய சிந்தனையைக் கூறுகையில் விளக்குகிறார்கள்.
அதனை உருவாக்கம் becoming என்ற தத்துவம் குறித்து விளக்குவதில் விரிவாக mobi dick நாவல் குறித்துப் பேசுகிறார்கள்.
இந்த நாவலில் கடற் பயணம் மரணத்துடனான நெருங்கிய பரிமாற்றமாக இருக்கிறது.
மரணமாக உருவாகுதல் என்பது போல் சொல்லலாம். becoming death.
வாழ்ந்திருந்தால் அதிசயம். இறப்பைத்தான் பயணம் முழுக்க அந்தப் பாத்திரங்கள் வாழ்ந்து செல்கின்றன.
வாழ்தல் அசாதாரணமாகவும் இறத்தல் சாதாரணமாகவும் மாறிவிட்ட பயணம் அது.
மொபி டிக்காக உருவாகிவிட்டால் ஒரு புதிய வாழ்நிலை சாத்தியம். இங்கு மரணமாக உருவாகிவிட்டால் வாழ்வே சாத்தியம் இல்லை.
ஏன் இனப்பிரச்சினை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான அதிகாரப் போராக இருக்கிறது?
இனம் என்பது ஓர் அடையாளம். அடையாளம் என்பது பன்மைத்துவம் கொண்டது. மொழி அடையாளம், இட அடையாளம், பாரம்பரிய அடையாளம் இப்படி பல அடையாளங்கள் ஒன்றிணைந்து இன அடையாளம் வருகிறது. ஒரு கூட்டுத் தொகுப்பாக இருக்கிறது. assemblage. agencyment.
இந்தப் பன்மைத்துவம் ஒருங்கிணைக்கும் கருவியாக இருக்கிறது.
இன அடையாளத்திற்கான பிரச்னை என்பது இனத்திற்கான அதிகாரம் குறித்த பிரச்னையாகவே பொதுவாக மாறிவிடுகிறது.
இட எல்லையாக குறுக்கப்படுவதும், சிறுபான்மை/பெரும்பான்மை என்ற எண்ணிக்கை சார்ந்து பார்க்கப்படுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் பிரிக்கப்படுவதும் அதிகாரத்திற்கான வேட்கையை ஏற்படுத்தும் காரணிகளாகின்றன.
எந்த ஓர் இனப்பிரச்னை என்றாலும் எல்லை வரையறுப்பு இதில் முதன்மை பெறுகிறது.
தமிழ்/மற்றவை, தமிழ் அல்லாத பிற இனம் கொண்டிருக்கும் அதிகாரம் இனப்பிரச்னையின் அடிப்படையாகிறது.
தமிழ் என்ற எல்லை வரையறுப்பு இடம் சார்ந்ததாக, இடம் சார்ந்த அதிகாரமாக பொருளாகிறது.
இனப்பிரச்னையின் விளைவாக டெல்யூஜ், கட்டாரி குறிப்பிடுவது நாடோடி வாழ்வு. nomadism.
இடம் சார்ந்த அடையாளம் மறுக்கப்படுகையில் நாடோடி வாழ்வு மட்டுமே எஞ்சுகிறது.
அதைத்தான் இந்த நாவல் இந்தப் பயணத்தில் காட்ட நினைக்கிறது.
ஈழம் என்ற இனத்தின் எல்லை கொடுத்திருக்கவேண்டிய பலம் அல்லது இன்பம் ஐரோப்பாவுக்கு மாற்றப்படுகிறது.
ஈழத்தின் எல்லையை ஐரோப்பாவுக்குள் வைத்துப் பார்த்து இனத்தின் பாதுகாப்பை, அதிகாரத்தைப் பெறுவதற்கான சொர்க்கம் போல் ஓர் மாற்று இடமாகக் கற்பனை செய்யப்படுகிறது.
நாடோடிகளுக்கான அதிகாரத் தேடலாக இனப்பிரச்னை மாற்றப்படுகிறது.
இந்த நாவலில் பயணிப்பவர்கள் நாடோடி வாழ்வின் சிக்கலுக்குள் ஆட்பட்டவர்கள்.
ஐரோப்பா நிலைத்த வாழ்வைத் தரும் என்ற கற்பனையில் இருப்பவர்கள்.
ஈழத்தில் கிடைத்திருக்க வேண்டிய வாழ்வு ஐரோப்பாவில் கிடைப்பதாக இடமாறப்பட்ட வாழ்வாக இருப்பதை இந்த நாவல் காட்டுகிறது.
ஈழத்தில் தமிழாக இந்துவாக இருப்பது எகிப்து அருகில் இஸ்லாமியம் சார்ந்ததாகவும் இத்தாலிக்கு அருகில் கிறித்துவம் சார்ந்ததாகவும் பெயர் மாற்றம் பெறும் படகின் நிலை போல்தான் நாடோடி வாழ்வின் நிலையும் இருக்கும் உண்மைதான் நாவலில் வெளிப்படுகிறது.
இனப்பிரச்னை என்பது போர் எந்திரம்.
அதிகாரத்தின் பரவலுக்கான எந்திரம்.
அரசு உருவாக்கத்திற்கான எந்திரம்.
நாவலில் கழுகின் காலில் ஒளிப்பதிவு கருவி கட்டிவிட்டு ட்ரோன் போல் பாவிக்கப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் இனப்போராளிகளிடம் இருக்கின்றன.
விமான நிலையம் அதிகாரத்தின் பெருமையாக குறிப்பிடப்படுகிறது.
இனப்பிரச்னை போர் எந்திரமாக இருப்பதற்கு மற்றொரு உதாரணம் பலியிடல் சடங்குகள் நடப்பது.
விடுதலைப் புலிகளின் தலைமையே பலியிடப்பட்டப் பின்னும் போர் தொடர்ந்திருப்பதாக நாவல் காட்டுகிறது.
இனப்பிரச்னை போர் எந்திரம் என்பதால்தான் இந்த வகையிலான பொருள் இதில் உருவாகிறது.
போர் எந்திரம் உருவாக்கும் அதிகாரத்திற்கான அரசுக்கான தீர்வு குறித்த பயணம் தொடரும் என்பதாக இந்த நீல சதிரைப் பொருள் கொள்ளலாம்.
(உயிர் எழுத்து, ஜூலை 2021 இதழில் வெளிவந்த மதிப்புரை)
No comments:
Post a Comment