Saturday 7 August 2021

குறுங்கதைகள்-பாம்பின் கால்





அவள் அருகே நெளியும் குளிர்ச்சியான கறுப்பும் நீலமும் கலந்த சிறுகோடுகள், புள்ளிகள், வளைவுகள் கொண்ட அந்தப் பாம்பின் தோல் அவளுக்கு மிகவும் பிடித்தது. அந்தப் பாம்பைத் தொடவேண்டும் என ஆவல் கொண்டாள். அவளை நோக்கி அது சீறியது. அவள் நகர்ந்து கொண்டாள். உன் தோல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் உன்னுடன் இருந்துவிடட்டுமா என்று கேட்டாள். நீ மனித இனம் உன்னுடன் நான் வாழ்ந்தால் என் இனம் என்னைச் சேர்க்காது என்றது அது. யாருக்கும் தெரியாமல் உன் புற்றுக்குள் நான் இருந்துகொள்கிறேன். உன் இனம் உறங்கும் போது பழங்களைப் பறித்து நான் உண்டுவருகிறேன் என்றாள். அவளுக்காக மனம் இரங்கி தன் புற்றில் வாழ இடம் கொடுத்தது. அடுத்த நாள் அவள் பழம் பறிக்கச் சென்றாள். அவள் வர காலதாமதம் ஆனது. பாம்பு பெரிதும் கவலையுறத் தொடங்கியது. தான் மனித இனத்தின் குணாம்சத்திற்கு மாறி வருவது போல் தோன்றியது. இதை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர எண்ணியது. அவள் திரும்பி வரும்போது ஒரே கொத்தாக கொத்தி அவளைக் கொன்று விடவேண்டும் எனத் திட்டமிட்டது. அவள் பாம்புக்காக எலிகளையும் தவளைகளையும் பிடித்துக் கொண்டுவந்திருந்தாள். பாம்பால் அவளைக் கொல்ல முடியவில்லை. அவள் நிம்மதியாக உறங்கினாள். பாம்புக்கு இருப்புக் கொள்ளவில்லை. தான் மனித குணாம்சத்திற்கு மாறிக் கொண்டிருப்பது தன் இனத்திற்கு ஆகாது. தன் இனம் தன்னைப் புறக்கணிக்கப் போவதைப் பாம்பால் ஏற்கமுடியவில்லை. புற்றை விட்டு வெளியே வந்தது. தூரத்தில் கிரி ஒன்று நிற்பதைப் பார்த்தது. வேகமாகச் சென்று அதன் காலடியில் விழுந்தது.

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...