Monday 25 October 2021

குறுங்கதைகள்-மீன்





அவன் அந்த அழகிய மீனைத் தொட்டியுடன் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது இன்னும் வளரும் என்பதால் பெரிய தொட்டியாக வாங்கிவிட்டான். அந்த மீனை வளர்ப்பது குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டான். வீட்டுக்குக் கொண்டு வைத்தப் பின் அதன் குணாம்சம் மாறியது. அவனைக் கண்டால் அதற்குப் பிடிக்கவில்லை. அவன் தொட்டியில் தண்ணீர் மாற்றுவது உணவு வைப்பது போன்ற எல்லா வேலைகளையும் செய்து வந்தான். ஒரு நாள் மீன் அவனிடம் பேசியது. நீயாகப் பிறந்திருக்க வேண்டிய என்னைத் தந்திரமாக மீனாகப் பிறக்கச் செய்துவிட்டு மீனாகப் பிறந்திருக்க வேண்டிய நீ என்னை ஏமாற்றிவிட்டாய். உன்னை நான் விடப் போவதில்லை என்றது மீன். என்ன செய்யப் போகிறாய்  என்று கேட்டான் அவன். பொறுத்திருந்து பார் என்றது மீன். அவனுடைய நண்பன் ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். அந்த மீனின் அழகில் மயங்கி அதனைத் தன் வீட்டுக்கு எடுத்துப் போவதாகக் கூறினான். உடனே அதற்குச் சம்மதித்து மீனை எடுத்துக் கொடுத்துவிட்டான். அந்த மீனை எடுத்துப் பாத்திரத்தில் போட்டான் நண்பன். மீன் பேசியது. உன்னிடம் ஓர் உதவி தேவை என்றது. அவனுக்கு மீன் பேசுவது ஆச்சரியமாக இருந்ததால் என்ன செய்யவேண்டும்  என்றான் நண்பன். என்னை வெட்டி குழம்பாக்கி உன் நண்பனிடம் கொண்டு போய்க் கொடுக்கவேண்டும் என்றது. அதற்கு அவனும் ஒத்துக் கொண்டான். மீன் குழம்பு செய்து எடுத்துப் போய் அவனிடம் கொடுத்தான். தான் வளர்த்த மீன் தன்னை பழி வாங்கப் போவதாகச் சொன்னது. இப்போது குழம்பாகி வந்திருக்கிறது  என உற்சாகத்தோடு அதனைச் சாப்பிட்டான். உள்ளே போன மீன் சொன்னது என்னை உண்டதால் நீ மீனாகவும் நான் நீயாகவும் ஆகப்போகிறோம். இது புரியாமல் என்னை நீ உண்டுவிட்டாய் என்றது. அவனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. காலியாக இருந்த மீன் தொட்டியில் இறங்கிப்படுத்துக் கொள்ளவேண்டும் போல் அவனுக்கு இருந்தது. அதில் இறங்கியவுடன் அவன் மீனாகிவிட்டான். அவனிலிருந்து பிரிந்த மீன் மனிதனாகி மீனாகிவிட்ட அவனை வளர்த்தது.  

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...