Thursday, 22 July 2021

குறுங்கதைகள்-பாதரசக் குதிரை

     



    அந்தப் பலைவனத்தின் நடுவில் ஒரு பெரிய கண் இருந்தது. அந்தக் கண்ணின் மையத்தில் நீலமாய் ஒரு திரவம். அடர்த்தியாய், பளபளப்புடன் நெளிந்தது. மணல் அதில் ஒட்டவில்லை. லேசாகக் காற்று அடித்தால் வளையம் போல் நெகிழ்ந்தது; சேர்ந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் நீரோடை போலவும் அது தெரிந்தது. பெரும் தண்ணீர் தாகத்துடன் நடந்து கொண்டிருந்த குதிரை அந்த நீல திரவத்தைக் கண்டதும் வேகமாக ஓடிவந்தது. அந்தத் திரவத்தைப் பருகியது. அதன் அடர்த்தியையும் மீறி குதிரையால் அதைப் பருக முடிந்தது. முழு திரவத்தையும் பருகிவிட்ட குதிரை கொஞ்சம் தடுமாறியது. சிறிது நேரத்தில் வெள்ளை குதிரையின் நிறம் நீலமாகத் தொடங்கியது. அந்தத் திரவத்தின் நிறம் அதன் உடலில் வந்திருந்தது. அதே போன்ற பளபளப்புடன். குதிரை இப்போது நெளியத் தொடங்கியது. காற்றின் திசைக்கேற்ப அதன் அசைவுகள் இருந்தன. நீளமானது. சுருங்கியது. உயரம் குறைந்தது; கூடியது. குதிரை அந்தத் திரவத்தின் அடர்த்தியைப் பெற்றது. பாலைவன மணலில் நீலக் குதிரை நடந்தது. அந்தப் பெரிய கண்ணைச் சுற்றி சுற்றி வந்தது. மையத்தில் நின்றது. குதிரை உருகத் தொடங்கியது. மீண்டும் நீல திரவம் கண்ணின் மையத்தில் வளைந்து நெளிந்தது.

(ஓவியம் என்னுடையது)

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...