Thursday, 22 July 2021

குறுங்கதைகள்-பறத்தல் பற்றிய நினைவு

 



அன்று பறக்க எண்ணியிருந்தேன். அவன் அருகே இருந்ததால் பறக்கவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தான். அவனிடம் பறத்தலில் உள்ள எல்லா நன்மைகளையும் கூறியிருந்தேன். பறத்தலின் பரவசம் ஏனோ அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் பறத்தல் மூலம் பல அண்டங்களைத் தாண்டிச் செல்லமுடியுமா என்பதை மீண்டும் மீண்டும் அவன் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தான். ஒரு முறை பெயர் தெரியாத ஓர் அண்டத்தைப் பற்றிக் கூறி அங்குப் போகவேண்டும் என்றான். இருவரும் பறந்து கிளம்பினோம். அந்த அண்டத்தைச் சென்றடைய சிறிது காலம் பிடித்தது. அங்குச் சென்று சேர்ந்தவுடன் அவன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. அங்கு நீர் இல்லை, மரம், செடி, கொடி இல்லை. அங்கிருக்கும் கற்களைக் கையில் வைத்திருந்தால் நீராகிவிடும். அதைப் பருகலாம். மணலை மரம் போல் வடித்து மூச்சுக்காற்றை ஊதினால் மரம் உருவாகிவிடும். கற்களைக் கோர்த்துத் தேவையானவற்றைச் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த வேலை அவனுக்குச் சலிப்பளித்தது. வேறிடம் தேடலாம் என்றான். இம்முறை போனது தலைகீழ் பூமி. நீர் இருந்தது. தொட்டால் மறைந்தது. மரம், செடி, கொடிகளும் அப்படியே. இது அவனைப் பெரும் அலைச்சலுக்கு ஆட்படுத்தியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்றான். மீண்டும் புதிய இடம். நடுவில் பொய்கை. சுற்றி நிலம். அந்த இடம் ஓரளவு பிடித்திருந்தது. அந்த நீரைப் பருகியவுடன் பறக்கும் நினைவு காணாமல் போனது.

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...