Tuesday 27 July 2021

குறுங்கதைகள்-ஓசையின் நயம்


 




        இளம் வயதில் அவளுக்கு ஒரு கர்வம் இருந்தது. தன் குரலைக் கேட்பவர்கள் தன்னிடம் ஆட்படுவார்கள் என்று இறுமாப்பு அடைந்தாள். அவள் குரல் ஒலித்தால் உலகத்தின் அடுத்த பக்கத்திற்குக் கேட்கும். அவ்வளவு பெரிய குரல். அந்த ஓங்கி ஒலிக்கும் குரல் பால் பேதமின்றி இருந்தது. ஆணாகவும் இல்லை. பெண்ணாகவும் இல்லை. வேறு எந்தப் பாலைச் சார்ந்தும் இல்லை. அத்தகைய பெருங்குரலில் அவள் ஒரு முறை பிரகடனம் செய்தாள். தான் விரும்பியவரை விரும்பியவாறு மணம் புரியப் போவதாகச் சொன்னாள். பல இளம் ஆண்கள் பெரும் அச்சம் கொண்டனர். அந்தக் குரலில் தாங்கள் ஒழித்துக் கட்டப்படுவோம் என அஞ்சினர். அவளும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தாள். அவனை மணம் புரிந்தபின் அவன் செவித்திறன் இல்லாதவன் எனத் தெரிந்துகொண்டாள். அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. ஓர் இரவு அவன் உறங்கும் போது அவள் பெருங்குரலெடுத்து அவன் பெயரை அவன் காதுகளில் ஒலித்தாள். அப்போதுதான் உறக்கம் கலைந்த அவன் உலகத்தின் ஒலிகள் மெல்லியதாகக் கேட்பதை உணரத் தொடங்கினான். அவள் மீண்டும் பெருங்குரலெடுத்து அவனை அழைத்தாள். இவ்வளவு இனிமையான மென்மையான குரலை அதுவரை தான் கேட்கவில்லையே என நினைத்து புளங்காகிதம் அடைந்தான். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பது மட்டுமே இனி தன் வாழ்நாள் முழுக்கச் செய்யவேண்டும் என நினைத்தான். அப்போது பெரும் இடியோசை முழங்கியது. அவள் காதைப் பொத்திக் கொண்டாள். உலகத்தின் இடி கூட இவ்வளவு மெல்லியதாக இனிமையானதாக ஒலிப்பது அவனுக்கு அருமையாக இருப்பதாகச் சொன்னான். தன் குரலால் எந்தப் பயனும் இல்லை என முதல் முறையாக உணர்ந்தாள் அவள்.

 

 

3 comments:

நாடிலி (சுகன்யா ஞானசூரி) said...

அருமை தோழர் 💐 வாழ்த்துக்கள் தோழர்.

Nagendra Bharathi said...

Thunderous applause to this story

Mubeen Sadhika said...

சுகன்யா ஞானசூரி அவர்களுக்கும்ஃ நாகேந்திர பாரதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...