Wednesday, 28 July 2021

குறுங்கதைகள்-பேச்சு

 




        பள்ளி விடுமுறை என்பதால் காட்டுக்குள் இருக்கும் குன்றைப் பார்க்கக் கிளம்பினான். தன்னுடன் படிக்கும் யாரையும் அங்குக் கூட்டிச் செல்லக்கூடாது என்பதுதான் அவனது திட்டம். புதர் மண்டிய அந்தக் குன்றில் ஏறினான். அது அதிக உயரமில்லை. அதன் உச்சிக்கு வந்துவிட்டான். அந்தக் குன்றின் மேலே ஒரு துளை இருந்தது. அதற்குள் என்ன இருக்கும் என எட்டிப் பார்த்தான். அங்கே பாம்பு மனிதர்கள் ஏதோ சடங்கைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியிலிருந்து அவனால் கண்களை விலக்கவே முடியவில்லை. எவ்வளவு நேரம் கடந்தது எனத் தெரியாமல் அவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது பாம்புப் பெண் ஒருத்தி இவனைப் பார்த்துவிட்டாள். இவன் அதிர்ந்து போனான். அவளுடைய பார்வை இவனுக்குள் ஊடுருவியது. அச்சத்தில் அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். வீடு வந்து சேர்ந்த பின்னும் அந்தக் கண்கள் அவனைப் பின் தொடர்ந்தன. மகனின் அச்ச முகம் கண்டு பெற்றோர் விசாரித்த போது அவனால் பேச முடியவில்லை. பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று காட்டியும் அவனைப் பேச வைக்க முடியவில்லை. முயற்சிகளைக் கைவிட்டு பேச்சுத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளியில் சேர்த்தார்கள். எப்படியோ படித்து ஏதோ ஒரு வேலைக்குப் போனான். ஆனால் அந்தக் கண்களை மீண்டும் பார்க்கவேண்டும் என்பது மட்டும் அவனுக்குள் ஆழமாக வளர்ந்திருந்தது. ஒரு விடுமுறை நாளில் மீண்டும் அந்தக் குன்றைக் காணச் சென்றான். அதே துளை வழி பார்த்த போது அதே சடங்கு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் இவனைப் பார்த்துவிட்டாள். இவனுக்கு அச்சமாக இல்லை. இவன் சிரித்தான். அவள் இவனைத் துளை வழியாக உள்ளே இழுத்துக் கொண்டாள். இவன் அம்மா என்று அலறினான்.

 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...