Tuesday 10 August 2021

குறுங்கதைகள்-கடவுளான கலிவர்*






கலிவர் ஓர் அழகான நகரத்தை நிர்மாணிக்கப் பல தீவுகளைத் தேடிச் சென்றார். ஓர் அருமையான தீவைக் கண்டு அதில் தான் நினைத்தவாறு ஒரு நகரத்தைக் கட்டமைத்தார். அதில் புழங்குவதற்கு வேற்றுக்கிரகத்திலிருந்து இரண்டு அங்குல உயரமான மனிதர்களை வரவழைத்தார். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக அந்தத் தீவில் வாழ்ந்து வந்தனர். கலிவரைக் கண்டு அச்சமும் வியப்பும் அடைந்தனர். அத்தனை பெரிய உருவம் கொண்ட உயிரினம் அவர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அவர்களுக்குள் கலந்து பேசி பலத் திட்டங்களைத் தீட்டினர். இவ்வளவு பெரிய உயிரினம் தங்களை நன்றாக வைத்திருந்தாலும் எல்லா நேரத்திலும் அதே போல் அது இருக்கும் என எதிர்பார்க்க முடியாது என அவர்கள் எண்ணினர். மேலும் காத்தலும் அழித்தலும் ஒரே கடவுளுக்குரிய செயல்பாடாக இருக்கலாம் என அவர்களின் மூத்தவர்கள் கூறினர். தங்கள் இனத்தில் கடவுளாவதற்கு உரியதான உத்திகளில் சிலவற்றைக் கூறினர். தங்கள் கிரகத்திலிருந்து எடுத்து வந்த வேரை உண்ணக் கொடுத்தால் அந்த உயிரினம் கல்லாக மாறிவிடும். அதன் பிறகு அதன் கடவுளாக வணங்கலாம் என்றனர். அவர்கள் இனத்தில் இப்படித்தான் கல்லாகும் பல கடவுள்கள் அருள் பாலிப்பதாக உறுதி கூறினார். இதனால் கலிவரைக் கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சி வந்து சேராது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் கலிவருக்கு வேரை உண்ணுவதற்காக எடுத்து வந்து அது தங்கள் இனத்தின் அமிர்தம் என்றும் அவர்களின் இனத்திற்கு கலிவர் செய்த நன்மைக்குப் பதிலாகப் பரிசாக அளிப்பதாவும் கூறி அவருக்கு உண்ணக் கொடுத்தனர். கலிவரும் அதை மகிழ்ச்சியாக உண்டார். சில மணித்துளிகளில் கலிவர் கல்லாக சமைந்தார். கடவுளான கலிவருக்கு வேற்றுக்கிரகவாசிகள் மந்திரங்கள் கூறி விழுந்து வணங்கினர்.


*ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய கலிவர் பயணங்கள் கதையில் வந்த கதாபாத்திரமான கலிவர் இங்கு மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...