Friday 20 August 2021

குறுங்கதைகள்-அம்பலாதன் வரலாறு

 




இது பல நூறாண்டுகளுக்கு முன் நடந்த கதை. அம்பலாதன் எனும் தச்சன் தன் குல தெய்வத்திற்குக் கோயில் கட்டி அங்கு உயர்வகை எட்டி மரத்தை நடவிரும்பினான். அந்தக் குலதெய்வம் அவனுடைய கனவில் வந்து பல ஆயிரம் கஜங்களுக்கு அப்பால் இருக்கும் எட்டி மரத்தைக் காட்டி அதன் விதையை எடுத்துவந்து வளர்க்குமாறு சொல்லிவிட்டதால் அந்த இடத்திற்குச் செல்லப் பயணப்பட்டான். அவனுக்குச் சித்த மருத்துவமும் பல மொழிகளும் தெரியும். தான் கனவில் கண்ட அந்த மரம் இருக்கும் வனத்தை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். அங்கு இருந்தவர்கள் ஒரு மரத்திற்காக ஊர் விட்டு ஊர் வந்திருக்கும் அம்பலாதனை விநோதமாகப் பார்த்தனர். அந்த ஊரில் சில நாள் தங்கியிருந்த அவன் அங்குப் பல நோயாளிகளை மூலிகை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்தினான். இவன் வருகையையும் அதன் நோக்கத்தையும் இவனுடைய மருத்துவ அறிவையும் குறித்து அரசனிடம் சிலர் போய்ச் சொல்லியிருக்கிறார்கள். அரசன் அவனை அழைத்து வரச் சொல்லி நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்த தன் மகளைக் குணப்படுத்தினால் அவன் நினைத்தது நடக்கும் என அரசன் கூறுகிறான். அரசனின் மகள் திருமண ஏக்கம் கொண்டு நோய்வாய்ப் பட்டிருப்பதைப் புரிந்துகொண்ட அம்பலாதன் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கச் சொல்லுகிறான். அரசன் அவனையே அவளுக்குத் திருமணம் செய்துவைத்து அவள் உடல்நலம் தேறுகிறாளா என்று பார்க்க முடிவு செய்கிறான். ஆனால் அம்பலாதனுக்கு தன் ஊரில் தான் கட்டி வரும் கோயிலும் அதில் வைத்து வளர்க்கப் போகும் எட்டி மரம் மட்டுமே கவனத்தில் இருந்தது. அரசனிடம் தன் நிலையைக் கூறினான். தன் நாட்டிலிருந்து எந்தப் பொருளையும் யாருக்கும் தான் தருவதாக இல்லை என்றும் தன் மகளைத் திருமணம் புரியாமல் அவன் அங்கிருந்து போக முடியாது என்றும் அப்படிச் செய்தால் அவனைச் சிறை வைக்க வேண்டியிருக்கும் என்றும் கூறிவிட்டான். அவனுக்கும் வேறு வழியில்லாமல் திருமணம் புரிந்தான். ஆனால் ஒரு நாள் தன் ஊருக்கு எப்படியும் சென்று விடவேண்டும் எனத்  தீர்மானத்தில் இருந்தான். ஓர் இரவு எல்லோரும் தூங்கும் போது அந்தக் காட்டிற்குச் சென்று அந்த எட்டி மரத்தின் விதைகளை எடுத்துக் கொண்டு தன் ஊருக்குப் பயணப்பட்டுவிட்டான். காலையில் அம்பலாதனைக் காணாத அரசன் அவன் எங்கிருந்தாலும் அவனைக் கொன்றுவிட உத்தரவிட்டான். அவனுடைய ஆட்கள் அம்பலாதனைத் தேடிக் கொண்டு புறப்பட்டனர். அம்பலாதன் ஊர் வந்து சேர்ந்தான். தனக்குத் திருமணம் நடந்ததையோ மற்ற எந்த அனுபவங்களையுமோ யாரிடமும் கூறாமல் தன் கோயில் வேலைகளைத் தொடர்ந்தான். அங்கு எட்டி விதைகளைப் போட்டு வைத்தான். ஒரு வருடம் கழிந்திருக்கும் மரம் வளர்ந்துவிட்டிருந்தது. அவனும் கோயிலை நல்ல முறையில் பராமரித்துவந்தான். அரசனின் ஆட்கள் அவன் எப்படியும் எட்டிமரத்தை எடுத்து வந்திருப்பான் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அவன் கோயிலில் வளர்ந்திருந்த எட்டி மரத்தைப் பார்த்தனர். அது அவனுடையதுதான் என்று புரிந்துகொண்டனர். எட்டி மரத்தின் வேரைப் பார்த்தனர். ஒன்று வடக்கு நோக்கி வளர்ந்திருந்தது. அதை மட்டும் வெட்டி ஒரு மாந்திரீகனிடம் கொடுத்து அம்பாலதனுக்குச் செய்வினை வைக்கச் சொல்லி வற்புறுத்தினர். அவனும் செய்வினை வைத்தான். அம்பலாதன் பித்துப் பிடித்து அந்த மரத்தை வெட்டிவிட்டு கோயில் கிணற்றில் பாய்ந்து இறந்து போனான்.

 

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...