Sunday 22 August 2021

குறுங்கதைகள்-மாயப்பெண்





மலையில் தேன் எடுக்க அவன் வந்திருந்தான். அடர்த்தியான காட்டில் தேனடைகளைப் பார்த்து அவற்றைச் சாக்கில் நிரப்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் ஏறியிருந்த மரத்தின் அடியில் ஒரு பெண் துள்ளிக் குதித்து ஓடி மறைந்தாள். அவன் இந்தப் பூலோகத்தில் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைத் தேடிப் பார்க்க முடிவு செய்தான். அந்த மலை முழுக்கத் தேடிப் பார்த்தான். அங்கு யாரும் இல்லை. அந்தப் பெண் எப்படி அங்கு வர முடியும் என பல முறை யோசித்துப் பார்த்தான். தான் பார்த்த காட்சி உண்மையா பொய்யா எனவும் பல முறைச் சிந்தித்தான். இருந்தாலும் அவளை மறக்கவே முடியாமல் திணறினான். இருந்தாலும் இறுதியாக ஒரு முறை குகைகளில் தேடி விடலாம் என வேகமெடுத்து ஓடினான். சோர்ந்து போய் ஒரு குகையின் வாசலில் படுத்தான். அதன் பக்கத்தில் யாரோ ஓடுவது போல் ஒலி கேட்க அமைதியாகச் சுற்றிப் பார்த்தான். புதரின் மறைவில் இரு கண்கள் தெரிந்தன. மெதுவாகப் பதுங்கி அந்தப் புதரின் மறைவில் இருந்ததை இரு கைகளால் தாவிப் பிடித்தான். அது ஓர் அழகான மான் குட்டி. இத்தனை நேரம் தான் மான் குட்டியைத்தான் தேடினோமா என்று சலித்துக் கொண்டான். இருந்தாலும் அந்த மான் குட்டியைத் தூக்கிப் பார்த்த போது அதை வளர்க்கலாமா என்று நினைத்தான். அது அவனிடம் ஒட்டிக் கொண்டது. அதைத் தடவிப் பார்த்து தோளில் வைத்துக் கொண்டான். சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டதால் காட்டை விட்டுச் செல்லவேண்டும் என்று புறப்பட்டான். மானிலிருந்து பிரிந்தப் பெண் அவன் செல்வதைப் பார்த்து புன்னகைத்து மறைந்தாள்.

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...