Monday 23 August 2021

குறுங்கதைகள்-சொல்







தினம் ஒரு சொல் அவளுக்கு ஏதோ ஒரு தொடர்பிலிருந்து வந்து சேரும். அது எப்படி அவள் வாழ்க்கையோடு பொருள் கொடுப்பதாக இருக்கிறது என்று தேடி கண்டுபிடிப்பாள். அப்போது மற்றொரு சொல் வந்து சேர்ந்துவிடும். அவளால் சில சொற்கள் எப்படிப் பொருள் கொடுக்கும் என அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்கிறது. இந்தச் சொற்கள் வருவது நின்று போகுமோ என சில சமயங்களில் அவள் அச்சப்பட்டிருக்கிறாள். ஏனெனில் அவற்றின் பொருளைக் கொண்டுதான் அவளுக்கு என்ன நடக்கவிருக்கிறது என பல முறை அறிந்துகொண்டிருக்கிறாள். அன்று வந்தச் சொல்லின் பொருள் பூனை என்றிருந்தது. பூனை போல் பதுங்க வேண்டுமோ எனவும் இரவில் கண் விழித்து பகலில் தூங்க வேண்டுமோ எனவும் பலவாறு குழம்பி பூனை மீது வைக்கும் பிரியத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அடுத்த நாள் எலி என்ற பொருள்படும் சொல் வந்தது. பூனை எலியைப் பிடிக்க வரும் என்ற பொருள் பொருத்தமாக இருந்தது. அடுத்த நாள் பால் என்ற சொல் வந்தது. பூனைக்குப் பால் ஊற்றினால் எலியைப் பிடிக்கத் தெம்பிருக்கும் எனப் பொருளை வளர்த்தாள். அடுத்த நாள் பொறி என்ற சொல் வந்தது. பூனை எலியைப் பிடிக்காவிட்டால் பொறி வைத்துப் பிடிக்கலாம் என சமாதானமடைந்தாள். அடுத்த நாள், இரவு என்ற சொல் வந்தது. பூனை எலியை இரவு பிடிக்கலாம் என எண்ணிக் கொண்டாள். அடுத்த நாள் இருள் என்ற சொல் வந்தது. பூனைக்கு இருளில் கண்கள் நன்றாகத் தெரிவது போல் எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனப் புரிந்துகொண்டாள். அடுத்த நாள் தோல்வி என்ற பொருள்படும்படி ஒரு சொல் வந்தது. பூனை எலியைப் பிடிக்க முடியாமல் தோற்றுவிட்டது என எண்ணிக் கொண்டாள். அடுத்த நாள், சாவு என்ற சொல் வந்தது. பூனை சாகுமோ எலி சாகுமோ என்ற யோசனையிலேயே இருந்தாள். இரவு கடும் இருளில் பூனை போல் பதுங்கி அவள் வீட்டுக்கு வந்தவன் அவளைக் கொன்றுவிட்டு மரணம் என எழுதிவிட்டுச் சென்றான்.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...