Wednesday 25 August 2021

குறுங்கதைகள்-கை





அன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்தவுன் சாலையில் யாரோ ஒருவருடைய பாதி கை துண்டிக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்தேன். அதிர்ச்சி அடைந்து உடனே வீட்டுக்குச் சென்று கதவை மூடிக்கொண்டேன். ஒரே குழப்பமாக இருந்தது. யாருடைய கையாக இருக்கும். அணிந்திருந்த உடையுடன் அந்தக் கை வெட்டுப்பட்டிருந்தது. காவல் துறையில் புகார் அளித்தால் வீணான வம்பு வந்து சேருமே என்ற எண்ணம் மேலோங்கியது. பலரும் கவனித்திருப்பார்கள் நாம் மட்டும் ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கைக்கு உரியவன் இறந்துவிட்டிருப்பான் என எண்ணி சங்கடமாக இருந்தது. வீட்டுக்கு மேலே சென்று என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என நினைத்தேன். சாலையில் நான் பார்த்த போதிருந்த பாதி கை இப்போது முழு கையாக வளர்ந்திருந்தது. என் கண்களுக்கு மயக்கம் வந்துவிட்டது என எண்ணி கீழே வந்துவிட்டேன். இருந்தாலும் ஆர்வமிகுதியால் மீண்டும் போய்ப் பார்த்தேன். கை மட்டுமல்ல தோளும் வளர்த்திருந்தது. அத்துடன் உடையும் இருந்தது. இது எப்படி நடக்கும் என சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்தேன். எந்த மாற்றமும் இல்லை. கீழே போய்விட்டு சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தேன். உடலின் மேல் பாகம் முழுக்க வந்துவிட்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் கீழ் பாகமும் வளர்ந்துவிட்டிருந்தது. நான் பார்க்கும் போது வளராத உடல் பார்க்காத போது எப்படி வளர்கிறது என ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து போய்ப் பார்த்தேன். முழு உடலும் வளர்ந்துவிட்டிருந்து. அவன் அங்கே தூங்குவது போல் படுத்திருந்தான். அருகில் செல்லத் தயங்கி மெதுவாகச் சென்றேன். அவன் எதுவுமே நடக்காதது போல் எழுந்து அமர்ந்திருந்தான். அவனிடம் சென்று விசாரிக்கப் போனேன். அவன் மணி என்ன என்று கேட்டான். 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...