Wednesday 25 August 2021

குறுங்கதைகள்-யானை


 



சுள்ளி பொறுக்குவதற்காக அந்தக் காட்டிற்கு வந்தேன். முந்தைய நாள் மழையில் எல்லா இடமும் இன்றும் ஈரமாகவே இருந்தது. அப்போது சட்டென்று ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டேன். மேலே ஏறவே முடியவில்லை. தூரத்திலிருந்து ஒரு யானை அருகே வந்து நின்றது. அதனிடம் கையைக் காட்டி மேலே இழுக்கச் சொன்னேன். அது எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லை. சிறிது நேரம் அருகில் நின்ற யானை கொஞ்சம் தொலைவில் சென்று சிறுசிறு கற்களைப் பொறுக்கி எடுத்து வந்து பள்ளத்தில் போட்டது. ஓரளவு பள்ளம் நிரம்பியது. அடுத்த நாளும் கடும் மழை பொழிந்தது. யானை என்னருகிலேயே நின்று தும்பிக்கையில் என் கையைப் பிடித்துக் கொண்டது. பள்ளத்தில் நீர் நிரம்பியது. மீண்டும் யானை என்னை இழுத்துப் பார்த்தும் முடியவில்லை. அருகில் நின்ற யானை பக்கத்தில் ஏதோ தேடி ஒரு விதையை என் தலை மீது போட்டது. பழங்களையும் கிழங்குகளையும் பறித்து வந்து எனக்கு உண்ணக் கொடுத்தது. அருகிலிருந்து ஓடையிலிருந்து தண்ணிரைக் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தது. என் தலை மீதும் தண்ணீரை ஊற்றியது. சில நாட்கள் அந்தப் பள்ளத்திலேயே யானையின் பராமரிப்பில் இருந்தேன். தலையில் செடி வளர்ந்திருந்தது. மெல்லிய
வேர்கள் தலையிலிருந்து கீழே பரவிக் கொண்டிருந்தன. மேலும் சில நாட்கள் ஒரு சிறிய மரமாக அது வளர்ந்துவிட்டிருந்தது. எப்படியோ யானை கொடுக்கும் பழம், கிழங்கு போன்றவற்றை உண்டும் நீரைப் பருகியும் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். இரவும் பகலும் யானை அருகிலேயே நின்றிருந்தது. சில நாட்களில் மரம் பெரிதாக வளர்ந்துவிட்டிருந்தது. ஒரு நாள் யானை அந்த மரத்தை வேருடன் சாய்த்தது. அப்போது நானும் அந்த வேருடன் வெளியே வந்தேன். யானை என்னைத் தூக்கி வெளியே போட்டது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...