Sunday 15 August 2021

குறுங்கதைகள்-பயணம்






அந்தக் கடற்கரையில் அழகான பறக்கும் தட்டு ஒன்று வந்திறங்கியது. அதிலிருந்து ஒளியைப் போன்ற ஒரு பெண் இறங்கினாள். அவள் கையில் கண்ணைப் பறிக்கும் நிறத்தில் ஒரு பெட்டி வைத்திருந்தாள். அவளைக் கண்டவர்கள் அசையாமல் அதே இடத்தில் நின்றுவிட்டிருந்தார்கள். அந்தக் கிரகத்தின் ஆயுள் முடிவடைய இருப்பதால் அங்கிருப்பவர்களைக் காப்பாற்ற வந்திருப்பதாகச் சொன்னாள். அதனால் அங்கிருப்பவர்களை மூன்று வகையாகப் பிரித்திருப்பதாகவும் அவர்களை வேறு மூன்று கிரகங்களுக்கு அனுப்பிவிடப் போவதாகவும் சொன்னாள். முதல் பிரிவு உள்ளுணர்வு மூலம் எதையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்பவர்கள். இரண்டாவது பிரிவு உள்ளுணர்வில் எதையும் புரிந்துகொள்ளாதவர்கள். மூன்றாவது பிரிவினர் உள்ளுணர்வில் புரிந்துகொண்டாலும் அதற்கு எதிராக நடந்துகொள்பவர்கள். இப்படிப் பிரிக்கப்பட்டதில் உள்ளுணர்வால் இயங்குபவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மூன்று பிரிவினரையும் கொண்டு செல்ல மூன்று விண்கலன்கள் வந்திறங்கின. மூன்று பிரிவினரும் அவர்களுக்கு உரிய விண்கலன்களில் ஏறிக்கொண்டனர். அந்தப் பெண் தன் கண்கவர் நிறப்பெட்டியைத் திறந்து அந்த விண்கலன்கள் செல்லும் பாதையைக் குறித்துக் கொண்டாள். விண்கலன்கள் கிளம்பின. முதலாம் பிரிவான உள்ளுணர்வால் இயங்குபவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். இரண்டாம் பிரிவினர் இலக்கு எது என்று அறியாமல் விண்வெளியில் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். மூன்றாம் பிரிவினர் அவர்களைக் கடக்கும் போது அவர்கள் போகும் திசைக்கு எதிர் திசையில் போகும்படி அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்கள். மூன்றாம் பிரிவினர் ஒரு முறை விண்வெளியைச் சுற்றி விட்டு மீண்டும் தங்கள் கிரகத்திற்கே வந்து சேர்ந்துவிட்டனர். அவர்கள் இரண்டாம் பிரிவினர் மீது பரிதாபப்பட்டனர். மேலும் அவர்கள் முதலாம் பிரிவினர் கடும் போராட்டத்தை அடைவார்கள் என்று சாபமிட்டனர். இந்த வகையான மூடநம்பிக்கைகளை நம்பக்கூடாது என்றும் எது நடந்தாலும் துணிச்சலாகச் சமாளிக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறிக்கொண்டார்கள். இலக்கு எது என்று தெரிந்தும் அதை அடையவிடாத அதில் ஒரு குழுவை மற்றொரு குழு கடுமையாகச் சாடியது. அதனால் பெரிய போர் வெடித்தது. அந்தக் கிரகத்தை அழிக்கும் ஆயுதத்தை அவர்களில் ஒரு குழு பிரயோகித்தது.  

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...