Sunday 15 August 2021

குறுங்கதைகள்- குழந்தை*





காலையில் இருந்தே அவனுடன் அவளுக்குச் சண்டைத் தொடங்கிவிட்டிருந்தது. இந்த ஒரு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு அவள் படும் அவஸ்தை சொல்லி மாளாததாக இருந்தது. அவனுக்குக் குடி மட்டுமே விருப்பமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. அவள் இனி ஏதாவது வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்கும் போவது சிரமம். இதை எங்கேயும் விட முடியாத சூழல் வேறு அவளை அலைக்கழித்தது. அவன் மயங்கி உறங்குவதைப் பார்க்கும் போது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிடலாம் போல் இருந்தது. அமைதியாக யோசித்தாள். அவன் எழுந்து மறுபடியும் குடித்துவிட்டு வரக் கிளம்பினான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவன் புறப்படுகையில் இனி அவனை வீட்டுக்கு வரவேண்டாம் என்றாள். அவளை ஓங்கி அறைந்தான். அவள் சுருண்டு படுத்துவிட்டாள். இரவு அவன் சாலையில் அடிபட்டு விபத்தில் இறந்துவிட்டதாக யாரோ வந்து சொன்னார்கள். இவள் எந்தச் சிந்தனையும் இல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். விடிந்து சில மணி நேரங்கள் ஆன பின்தான் அவள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். குழந்தையைக் கையில் எடுத்து ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள். அவள் வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. கொஞ்சம் சிதிலமடைந்த குடியிருப்பு அது. சிறிய பால்கனி ஒன்றிருந்தது. அதை நோக்கிக் குழந்தையுடன் நடந்தாள். சுற்றிப் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு குழந்தையைத் தூக்கிவீசினாள். அது பெரிய ஒலி எதுவும் எழுப்பாமலேயே இறந்து போனது. கீழே இறங்கி வந்து குப்பை அள்ளும் வண்டியில் குழந்தையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்தாள்.

* 5ஆம் வகுப்புப் படிக்கையில் பள்ளிக்குச் செல்லும் சாலையில் இருந்த வீட்டில் ஒரு கைக்குழந்தையை அதன் தாய் தூக்கி வீசிக் கொன்றதை நேரில் பார்த்ததன் நினைவாக எழுதிய கதை இது.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...