Friday 6 August 2021

குறுங்கதைகள்-வண்டு





அவள் கை மீது ஒரு காட்டு வண்டு ஒன்று வந்தமர்ந்தது. அவள் அதைத் துரத்த கை ஓங்கினாள். என்னைத் துரத்தாதே என்றது. ஏன் என்றாள்.  நான் காட்டில் வாழ்ந்து சலித்துவிட்டதால் நாட்டுக்கு வந்திருக்கிறேன். என்னை இங்கேயே வைத்துக் கொள் என்றது. அதை ஒரு கூடையில் போட்டு வைத்தாள். இரவு அவளிடம் வந்து காட்டிலிருந்து உனக்கு ஏதாவது பழம் எடுத்து வருகிறேன். நாளை காலை உன்னருகில் பழம் இருக்கும் என்றது. அடுத்த நாள் அவள் கண் விழித்த போது பழத்துடன் வண்டும் அமர்ந்திருந்தது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று கேட்டாள். தன்னைப் போல் இறக்கை முளைத்து பறக்கலாம் என்றது. அவள் இறக்கை முளைப்பதை விரும்பவில்லை. அப்படி என்றால் இந்தப் பழம் எனக்கு வேண்டாம் என்றாள். சரி நாளை வேறொரு பழம் எடுத்து வருகிறேன் என்றது. அடுத்த நாள் கொண்டு வந்த பழத்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று கேட்டாள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்பே தெரிந்துகொள்ளலாம் என்றது. அதில் மயங்கி அந்தப் பழத்தை அவள் சாப்பிட்டாள். அடுத்த நாள் அவர்கள் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கும் என்று அவளுக்குப் புரிந்தது. இதை எல்லோரிடமும் கூறினாள். அவளுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க வண்டையும் அது கொடுத்தப் பழத்தையும் பற்றிக் கூறினாள். அவளுக்குப் புத்தி பேதலித்துவிட்டது எனக்கூறி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவள் வண்டையும் எடுத்துப் போனாள். மருத்துவமனைக்கு வெளியே சென்று அமர்ந்துவிட்டாள். மருத்துவமனைக்குள் வரப் போவதில்லை என்று கூறிவிட்டாள். அடுத்த நாள் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. சுற்று வட்டாரத்தில் எல்லாமே அழிந்து போனது. அவள் வண்டை எடுத்துக் கொண்டு காட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...