Thursday 5 August 2021

குறுங்கதைகள்-கிரிகோர் சம்ஸா*வுடன் ஓர் உரையாடல்





 காஃப்காவின் கதையில் உருமாறிய கிரிகோர் சாம்ஸாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் கதையை விட்டு வெளியேற முடியவில்லை என்றான். பலரும் தொடர்ந்து அந்தக் கதையை வாசிப்பதால் அவர்களுக்காக அந்தக் கதையிலேயே இருக்க  வேண்டியிருப்பதாகக் குறைபட்டுக் கொண்டான். பூச்சியான பிறகு வாழ்வு தரும் சிக்கலை எப்படி பொறுக்க முடிகிறது என்றேன். உருமாறி இருப்பது குறித்து மகிழ்வு இருப்பதால் சாத்தியமாகிறது என்றான். அவனுடைய குடும்பமே அவனை ஏற்காத போது இன்னும் என்ன நம்பிக்கையில் வாழ முடிகிறது என்றேன். யாருமற்ற உலகில் பூச்சிகள் துணை நிற்பதாகச் சொன்னான். அவர்களின் வாழ்வில் இருக்கும் சிக்கல்களைத் தெரிந்து கொள்ள தன் வாழ்வு பயன்படுவதாக எண்ணி காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். பூச்சிகளைச் சுலபமாக கொன்றழித்துவிடுகிறார்கள். அப்படி ஒழிக்கப்படுவோம் என்ற அச்சம் இருக்கிறதா என்றேன். மனிதனாக இருந்தால் மட்டும் என்ன எப்படியும் ஒழித்துக்கட்டி இருப்பார்கள். பூச்சியான மனிதன் என்ற வேடிக்கை பார்க்க விட்டுவைத்திருக்கிறார்கள். எல்லோரும் பூச்சியாக உருமாறிவிட வேண்டும் என நினைக்கிறாய் என்றேன். இல்லை அப்படி ஆகிவிட்டால் மனிதனாக உருமாறுவது குறித்து யாராவது கதை எழுதிவிடுவார்கள் என்றான். பூச்சியாகிவிட்டதால் மனித குணாம்சங்கள் மறைந்து சுமை குறைவது போல் இருக்கிறதா என்றேன். ஆம் பூச்சிகள் சுமையற்றவை என்றான். நான் உன்னை பூச்சியாக பார்க்க வேண்டுமா மனிதனாகப் பார்க்க வேண்டுமா என்று கேட்டேன். நீ பூச்சியாக மாறிவிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன் என்றான். பூச்சியான பெண் குறித்து நான் ஒரு கதை எழுதலாம் என நினைக்கிறேன் என்றான்.

* பிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் நாவலில் இடம்பெற்ற கிரிகோர் சாம்ஸா பாத்திரம் இங்கு மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...