Friday 10 September 2021

குறுங்கதைகள்-மலை





எப்போதும் அந்த மலையில்தான் அவளும் அவள் தோழியும் பள்ளி முடிந்தவுடன் விளையாட வருவார்கள். அவர்களுக்கு மலையின் அழகும் கம்பீரமும் அதனை நெருங்க நெருங்கத்தான் அதிகரிக்கும். அதன் மௌனம் அவர்களுக்குள்ளும் எப்போதும் குடிகொள்ளும். அவர்கள் இருவரும் மலை அருகே போவதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று மலை முன்னே நகரத் தொடங்கியது. தினமும் அவர்கள் இருவரும் எத்தனை முறை அந்த மலை மீது ஏறி இறங்கி விளையாடி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த மலை அன்று மட்டும் ஏன் நகர்கிறது என இருவருக்கும் அதிசயமாக இருந்தது. இருவரும் சிறிது பின்வாங்கினார்கள். அது மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. இதை எப்படி நிறுத்துவது எனப் புரியாமல் இருவரும் விழித்தார்கள். மலையின் முன் மண்டியிட்டு அமர்ந்து இருவரும் முறையிட்டார்கள். அவர்களை விடப் பல மடங்குப் பெரிதாக இருக்கும் மலை இப்படி நகர்ந்தால் அதன் எதிரில் எதுவும் இருக்க முடியாது. எல்லாமும் அழிந்துவிடும். அதனால் தயைக் கூர்ந்து நகர்தலை நிறுத்தும்படி இருவரும் வேண்டிக் கொண்டார்கள். மலை சொன்னது நகர்தலை நிறுத்த முடியாது. ஏனெனில் தனக்குள் இருக்கும் கல் அசுரன் இப்படி நகர உத்தரவிட்டிருப்பதாக மலை கூறியது. அந்த அசுரனுக்குப் பிடித்த ஒரு பாடல் எங்கோ ஒலிப்பதால் அதைக் கேட்க இப்படி நகரச் சொல்வதாக மலை சொன்னது. அந்தப் பாடல் தங்களுக்குக் கேட்கவில்லையே என்று இரு தோழியரும் சொன்னார்கள். மண்ணின் அடியில் காதை வைத்துக் கேட்டால் அவர்களுக்கும் அந்தப் பாடல் கேட்கும் என மலை கூறியது. உடனே அவர்கள் இருவரும் அருகில் இருந்த வற்றிப் போனக் கிணற்றில் குதித்தார்கள். அந்தக் கிணற்றின் அடிப்பகுதியில் இருந்த மண்ணின் மீது காதை வைத்துக் கேட்டார்கள். அப்போது ஓர் இனிமையான பாடல் கேட்டது. அதன் இனிமையில் சொக்கி இருவரும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள். மலை, கிணற்றின் அருகில் வந்து நின்றது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...