Friday 10 September 2021

குறுங்கதைகள்-சூரியபுராணம்





சூரியன் அவளை அழைத்தான். சூரியனின் தேரில் அவள் ஏறி அமர்ந்தாள். சூரியனிடம் தன்னை ஏன் உடன் சேர்த்துக் கொண்டதாகக் கேட்டாள். அவள் தனது மற்றொர் உயிர் என்றான் சூரியன். அவள் சூரியனுடன் சேர்ந்து விட்டது மற்ற நட்சத்திரங்களுக்குத் தெரியுமா என்று கேட்டாள். இல்லை என்றான் சூரியன். தெரிந்தால் என்னாகும் என்று கேட்டாள். பொறுத்திருந்து பார்க்கலாம் என்றான் சூரியன். இவள் சூரியனுடன் சேர்ந்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட ஒரு நட்சத்திரம் சூரியனிடம் வந்து தனக்கு அவளை விட்டுக் கொடுக்குமாறு கேட்டது. தன் உயிரில் பாதி அவளுக்குக் கொடுத்திருப்பதால் அது முடியாது என்று சூரியன் கூறிவிட்டான். அதனால் ஆத்திரமடைந்த அந்த நட்சத்திரம் மேலும் ஒன்பது நட்சத்திரங்களை அழைத்து வந்து அவளைத் தங்களுடன் அனுப்பக் கேட்டன. அவள் தன் பத்து விரல்களைப் பிய்த்து அந்தப் பத்து நட்சத்திரங்களிடம் கொடுத்து அவர்கள் தனது மூச்சுக்காற்றை ஊதினால் தன்னைப் போன்ற பெண் கிடைப்பாள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள். அவர்கள் போன பின் அண்டத்தின் தலைவர் வந்து அவளைத் தன்னிடம் அனுப்புமாறு கோரினார். சூரியன் அச்சமடைந்து என்ன செய்வது எனத் திகைத்து நின்றுவிட்டான். அவளுடன் தான் கலந்து விட்டால் அவள் மட்டுமே ஒளி பெற்றுத் திகழ்வாள் எனவும் தான் ஒளி தந்து கொண்டு இருக்கப் போவதில்லை எனவும் தன்னுடன் அவள் இருப்பதால்தான் இந்தப் போட்டி எனவும் கூறி அவளுடன் கலந்துவிடுகிறான். சூரியனின் ஒளியைப் பெற்று புதிய சூரிய நட்சத்திரமாகிவிட்ட அவள் தன்னைப் போன்ற உருப்பெற்ற பெண்களை மற்ற நட்சத்திரங்களிடமிருந்து காணாமல் போகச் செய்தாள். சூரியன் தன்னுடன் கலந்துவிட்டதால் ஈருயிர் என்ற நிலைமாறி ஓருயிர் ஆகிவிட்டதால் தான் யாருக்கும் இனி சொந்தமாகப் போவதில்லை எனக் கூறி அண்டத்தின் தலைவரையும் அனுப்பிவைத்தாள்.  

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...