Monday 13 September 2021

குறுங்கதைகள்-தலை





திடீரென்று அவள் அமர்ந்திருந்த இடத்தின் தரைப் பகுதி வெடித்து ஒரு தலை முளைத்தது. ஓர் ஆணின் தலை அது. அதன் கண்கள் மூடி இருந்தன. அவளுக்கு அச்சத்தில் பேச்சு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. அந்தத் தலை எப்படி வந்தது, ஏன் வந்தது என அவளால் யோசிக்கவே முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அதன் முகத்தில் புன்னகை வந்தது. மண்ணில் புதைந்திருந்து வெளிப்பட்டதால் அதன் முகத்தில் மண் அப்பியிருந்தது. பயந்துவிட்டாயா என்றது அது. ஆம் என்றாள். தான் வந்துவிட்டதால் இனி அச்சப்பட வேண்டாம் என்றது. மேலும் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்றும் கேட்டது. ஒரு வார இதழில் வந்திருந்தக் குறுக்கெழுத்துப் புதிர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாகக் கூறினாள். தெரியாத சொற்களைத் தன்னிடம் கேட்கும் படி சொன்னது. அவளும் அதை ஆமோதித்து ஆழ்கடலாக இருக்கவேண்டியது எது என்று கேட்டாள். அறிவின் தெளிவு என்றது தலை. அதற்குத் தொடர்பான சொற்களைப் போட்டு அதைப் பூர்த்தி செய்தாள். இன்மை எனப்படுவது எது என்று கேட்டாள். அனுபவம் பெறாத எதுவும் என்றது தலை. சரியான சொல் என்றாள் அவள். தலை பெருமிதமாகச் சிரித்தது. உள்ளும் புறமும் இருப்பது எது என்று கேட்டாள். உன் உள்ளில் இருப்பது என் புறத்தில் இல்லை என் உள்ளில் இருப்பது உன் புறத்தில் இல்லை என்றது. புரியவில்லை என்றாள். சுயத்தைக் குறித்த கவனம்தான் அது என்றது. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டாள். இதெல்லாம் தெரிந்ததால்தான் என்னை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துவிட்டார்கள் என்றது. நீ ஏன் திரும்பி வந்தாய் என்றாள். உன்னிடம் என்னை ஏற்கும் பக்குவம் இருக்கும் என்பதால் வந்தேன் என்றது. வெறும் தலையாகிய உன்னை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது என்றாள். குறுக்கெழுத்துப் புதிர் விளையாடலாம் என்றது. வேறு ஏதாவது உபோயகமான செயலாகச் சொல் என்றாள். என்னைப் பற்றி வெளியில் சொன்னால் உன்னைப் பெரும் சக்தி வாய்ந்தவளாகக் கருதுவார்கள் என்றது. அது எனக்குத் தேவையில்லை என்றாள். என்னை உயிருள்ள பொம்மை என்று கூறிவிடு என்றது. அது அவளுக்குப் பிடித்தது.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...