Tuesday, 14 September 2021

குறுங்கதைகள்-ஒளி


 



அன்று அவன் வீட்டு எதிரில் ஒரு பானை இருந்தது. அதை எடுத்துப் பார்த்தான். அதனுள் ஒளி நிரம்பியிருந்தது. அவனுக்கு அந்தப் பானையைக் கண்டு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அந்த பானையை வைத்துக் கொண்டு என்ன செய்வது  என யோசித்தான். வீட்டில் அதை வைத்துவிட்டு தன் பாட்டுக்கு எப்போதும் போல் வேலைகளைப் பார்ப்பது முதலாவது முடிவாக இருக்கும் என நினைத்தான். அந்தப் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடித்துப் பார்ப்பது இரண்டாவது முடிவாகக் கருதினான். யாருக்காவது அந்தப் பானையைக் கொடுத்துவிடுவது அல்லது கிணற்றில் அல்லது நதியில் போட்டு உடைப்பது மூன்றாவது முடிவாக எண்ணினான். அந்தப் பானை ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன்னிடம் வந்திருக்கிறது. அதனால் அதை வைத்துவிட்டு எப்போதும் போல் இயல்பாக இருக்க அவனால் முடியவில்லை. அதை யாருக்கும் கொடுப்பதையும் உடைப்பதையும் அவனால் ஏற்க முடியவில்லை. அதனால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடித்தான். உடனே தன் பிறவியின் முக்காலத்தையும் அறிந்தான். வேலைக்குக் கிளம்பினான். அங்கிருப்பவர்களின் முக்காலங்களையும் அறிந்து கொண்டான். இதைச் சொன்னால் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் எல்லோரும் தங்கள் வருங்காலத்தை அறிந்து துன்பமே அடைவார்கள். எதற்காக அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தவேண்டும். தனக்குத் தெரிந்து தன்னுடன் மட்டுமே இருக்கட்டும் என கருதி வீட்டிற்கு வந்து அந்தப் பானையைக் கிணற்றில் போட்டு உடைத்தான். கிணற்றில் தண்ணீர் ஒளிரத் தொடங்கியது.  

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...