Monday 20 September 2021

குறுங்கதைகள்-காகம்

 



எப்படியாவது மயிலாகிவிட வேண்டும் என்று காகம் ஒன்று பெருந்தவம் இருந்தது. மயில் தோகைகளைக் கொண்டு வந்து கூட்டில் வைத்து அதன் மீது அமர்ந்து தவம் செய்தது. அதிகமாகக் கரையவே இல்லை. ஏனெனில் மயில் போல் குரலும் வாய்க்க வேண்டும் என கவனம் கொண்டது. மயில் போன்ற அழகும் கம்பீரமும் வாய்த்துவிட்டால் முருகனின் அருள் பார்வைக் கிடைக்கும் என எண்ணியது. மயில் தோகை விரிப்பது போலவும் நடனம் ஆடுவது போலவும் கனவு கண்டது. அந்த மயிலாகத் தான் ஆகிவிட்டதாக எண்ணி ஒயிலாக நடமாட ஆசைக் கொண்டது காகம். மயில் தோகை விரித்தால் பின்புறம் வேல் போல் தெரியும் தோற்றம் கிடைக்கும் என்று நினைத்து அதற்காக ஏங்கிப் போனது. தான் மயிலாகிவிட்டால் தன் சந்ததிகள் அனைத்தும் மயிலாகிவிடும் என நினைத்து இறுமாந்து கொண்டது. முருகனை எண்ணிப் பலவாறு துதித்தது. முருகன் தோன்றி காகத்திடம் எதற்காக மயிலாகவேண்டும் எனக் கேட்டான். அப்போதுதான் அவனுடைய இருப்பிடத்தில் வசிக்க முடியும் என்றது காகம். மயிலாகாமலேயே தன்னிடத்தில் வசிக்கலாம் என்றான் முருகன். ஆனால் மயிலானால் அங்கிருப்பவர்கள் தன்னை மதிப்பார்கள் என்றது காகம். பிறர் மதிப்பதற்காக எதற்கு உருமாற வேண்டும் என்றான் முருகன். தன் அழகு கூடும் என்றது காகம். அழகு நிலையானதல்ல என்றான் முருகன். மயில் பெற்றிருக்கும் மதிப்பைப் பெற என்றது காகம். மயில் மதிப்பு பெற்றிருப்பதாக வீண் கற்பனை செய்யக்கூடாது என்றான் முருகன். காகமாக எல்லோரும் உதாசினப்படுத்துகிறார்கள் என்றது. தோற்றத்திற்கு இத்தனைக் கவனம் கொண்டு மயில் ஆகிவிட்டால் கூட தன் இடத்திற்கு வரமுடியாது என்றான் முருகன். மயிலாக மாறி சில மணித்துளிகள் மட்டும் முருகனின் இருப்பிடத்தில் இருக்க அனுமதி கேட்டது காகம். தன்னிடத்தில் சில மணித்துளிகள் மிக நீளமானவை என்றான் முருகன். தான் பேசியது எல்லாமே அபத்தமானவை என்று கூறி முருகனிடம் இருக்கவேண்டும் என்பது மட்டுமே தன் நோக்கம் என மன்னித்து அருளுமாறு கெஞ்சியது காகம். மயிலும் காகமும் இணைந்து புதிய பறவையாய் தன்னிடம் வாழ முருகன் அருளினான்.  

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...