Tuesday, 21 September 2021

குறுங்கதைகள்-விபத்து


 


அவன் தன்னுடைய மனித ரோபாட்டை வடிவமைக்கத் தொடங்கினான். இந்த எந்திர மனிதன் எல்லா வகையிலும் மனிதனை  விட அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்க பல முன்னேற்பாடுகளைச் செய்தான். எந்திரங்கள், வாகனங்கள், ஆயுதங்கள், விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என எல்லா காரணங்களினாலும் வரும் அபாயங்களைப் பதிவு செய்தான். இதில் முக்கியமான ஒரு வளர்ச்சியாக முன்னுணர்வு கொள்வதற்கான சூத்திரத்தை உருவாக்கி எந்திர மனிதனின் மூளையில் வைத்தான். இதனால் அது நிலநடுக்கம் முதல் புயல் மழை வரை வரக்கூடிய அபாயங்களை முன் கூட்டியே கணித்தது. இத்தனையும் செய்தும் அதில் ஏதோ குறை இருப்பது போல் அவனுக்குப்பட்டது. மனித மூளை எதைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது, ஓர் அனுபவத்திற்குப் பின் என்ன சிந்திக்கும் என்பதைக் குறித்த அறிவை உருவாக்கி எந்திர மனிதனுக்குக் கொடுத்தால் ஓரளவு எந்திர மனிதன் அதிமனிதன் ஆவான் என அவனுக்குத் தோன்றியது. அதையும் நிகழ்ச்சி நிரலாக மாற்றி அந்த எந்திரத்தின் கணினியில் பதித்தான். அதனைச் சோதித்துப் பார்க்க எண்ணினான். தான் சிந்திப்பது குறித்து கேட்டான். எந்திரக் கணினியில் அடுத்து என்ன புதிய அம்சத்தை உருவாக்கலாம் எனச் சிந்திப்பதாகச் சரியாகப் பதிலளித்துவிட்டது அது. மேலும் சில அம்சங்களைக் குறித்து யோசித்துக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தான். எந்திர மனிதன் அபாயம் அபாயம் என அலறினான். எதற்காக அலறுகிறது எனக் கேட்டான். மனிதனுக்கு விபத்து வரப்போவதாகக் கூறியது. எந்த மனிதன் எனக் கேட்டான். அதற்குச் சொல்லத் தெரியவில்லை. உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரைப் பற்றியும் அது அறிந்தால் மட்டுமே அது துல்லியமாகச் சொல்லும். தன்னைப் பற்றிக் கூட அதன் மூளையில் பதிவு செய்யவில்லையே என நினைத்தான். என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டே எழுந்து போய் கையைத் தவறுதலாக மின்சார இணைப்பில் வைத்துவிட்டான். மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட அவன் மூச்சு நின்றது. அபாயம் அபாயம் என எந்திர மனிதன் அலறிக் கொண்டிருந்தான்.

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...