Friday 24 September 2021

குறுங்கதைகள்-தொடர்


 




அவன் எழுதும் தொடர்கதைகளை அவள் விரும்பி வாசித்து வந்தாள். அந்தக் கதைகளில் வரும் கதாநாயகிகளைத் தன்னை நினைத்து எழுதியதாகவே அவள் கருதிக் கொள்வாள். பல கதைகளின் முடிவுகளை அவள் பெரிதும் ரசித்திருக்கிறாள். அவனுக்கு அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கதையின் போக்குகளைக் குறித்து விவாதிப்பாள் அவன் தொலைபேசி எண்ணை அவளிடம் கொடுக்க மறுத்தான். எப்படியோ தேடி அதையும் வாங்கிவிட்டாள். ஆனால் அவள் பேசுவதை அவன் விரும்பவில்லை. குறுஞ்செய்திகள் மட்டும் அனுப்ப அனுமதி தந்தான். அதில் தன் குணநலன்களை விளக்கினாள். கதையின் நாயகிகள் தன்னைப் போல் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறினாள். ஆனால் அவன் அவளுடைய கருத்துகளைப் பெரும்பாலும் புறக்கணித்துவிடுவான். அவன் போக்கில் எழுதுவதை எப்படியும் இவள் விரும்பியே தீருவாள். ஒரு பிரபல வார இதழில் அவனது ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அதில் வரும் கதாநாயகியை வேண்டுமென்றே அவளைப் பிரதிபலிப்பது போல் உருவாக்கியிருந்தான். அதில் அவளுக்குப் பரம திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இறுதியில் கதை என்ன ஆக வேண்டும் எனப் பல யோசனைகளைக் கூறிக்கொண்டே இருந்தாள். கதையின் நாயகியின் திருமணம் குறித்தச் சிக்கல் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. கதாநாயகனை அந்தக் கதாநாயகி மணந்து கொள்ளக் கூடாது என்று இவள் கூறினாள். அப்படி ஒரு காட்சியை அமைத்தால் இவள் தற்கொலைச் செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள். அவன் அதனால் எரிச்சலடைந்தான். கதையின் நாயகி கதாநாயகனைத் திருமணம் செய்யாமல் போனால் வாசகர்கள் விரும்பமாட்டார்கள். என்ன செய்வது என யோசித்தான். கதையின் நாயகி கதையிலிருந்து வெளியேறி விட்டதாகவும் அவள் தன்னைச் சந்தித்தால் தானே அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறி கதையை முடித்தான். இதைத்தான் அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்று கூறி அவனைச் சந்திக்க நேரில் வந்து நின்றாள்.

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...