Thursday 16 September 2021

குறுங்கதைகள்-வாசம்





அவள் உடுத்தியிருந்த அந்தப் புடவையில் ஒரு சிவப்பு மலர் பெரிதாக விரிந்திருந்தது. இரவில் அவள் உறங்கும் போது அதைக் கண்ட ஒரு நாகம் அந்தப் பூவில் ஒளிந்துகொள்ள விரும்பியது. மெதுவாக அந்தப் பூவுக்கு அருகில் வந்து சுருண்டு அதன் மையத்திற்குப் போனது. அந்தப் பூவின் வாசம் அந்த நாகத்தை மயக்கியது. இந்தப் பூ மட்டுமே தனது சொர்க்கம் என கருதியது. இனி என்ன நடந்தாலும் இந்தப் பூவை விட்டுப் போகக் கூடாது என முடிவெடுத்தது. தன் உடலைப் புடவையுடன் ஒட்டியிருப்பது போல் மாற்றிக் கொண்டது. அவள் எழுந்தாள். புடவையில் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்ந்து கொண்டாள். உடனடியாக புடவையை மாற்றிக் கொண்டாள். கழற்றிய புடவையை ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினாள். அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு புற்றின் அருகில் பையை வீசிவிட்டு வந்தாள். புடவையில் இருந்த பூவிசன் வாசம் மறைந்துவிட்டது. நாகத்திற்குச் சுயநினைவு வந்தது. காட்டுக்கு எப்படி வந்தது எனப் புரியாமல் விழித்தது. பூ இருக்கிறது. வாசம் ஏன் இல்லை என வேதனை அடைந்தது. வாசத்தைத் தேடிப் போகலாம் என முடிவெடுத்து. அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்தது. வாசலில் தான் விரும்பிய பூவும் தனக்குப் பிடித்த வாசமும் இருப்பதைக் கண்டு அந்தச் செடிக்கு அருகிலேயே சுருண்டு படுத்துக் கொண்டது. அந்த நாகம்  வரும் என எதிர்பார்த்த அந்தப் பெண் பூவின் மீது தனது விருப்பமான வாசனைத் திரவியத்தைத் தெளித்து வைத்திருந்தாள். அப்படியே அந்தப் பாம்பைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு அத்துடன் அந்தப் பூச்செடியையும் போட்டு எடுத்துப் போய் அதன் புற்றுக்கு அருகில் விட்டுவிட்டு வந்தாள். தினம் அந்த வாசனைத் திரவியத்தை அந்தப் பூச்செடியின் மீது தெளித்துவந்தாள். ஒரு நாள் வேலை காரணமாக அங்குப் போக முடியவில்லை. நாகம் மீண்டும் அவள் வீட்டில் குடியேறியது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...