Friday, 17 September 2021

குறுங்கதைகள்-கர்ட் வன்னேகாட்*டுடன் நடந்த உரையாடல்


 



நாவலாசிரியர் கர்ட் வன்னேகாட் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தேன். அவருடைய கசாப்புக்கடை-5* என்ற மிகப் பிரபலமான நாவல் குறித்து விவாதித்தேன். அதில் ட்ரால்ஃபமடோரியன்* என்ற வேற்றுக்கிரகவாசிகள் இனம் குறித்து விரிவாக எழுதியிருந்தார். அந்த வேற்றுக்கிரகவாசிகளை அவர் நேரில் சந்தித்திருப்பதாகத் தெரிந்ததால் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் வேறு சில வேற்றுக்கிரகவாசிகளைச் சந்தித்திருப்பதாகவும் அவர்களை அப்படியே கதையில் பயன்படுத்தினால் ஏதாவது  விபரீதம் ஏற்படும் என்பதால் இப்படி உருமாற்றி வேறு பெயரில் பயன்படுத்தியதாகச் சொன்னார். அவர் சந்தித்த வேற்றுக்கிரகவாசிகள் ஆல்ஃபா சென்டாரி என்ற விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கிரகத்திலிருந்து வந்ததாகவும் குறிப்பிட்டார். அப்போது தன்னுடைய மரணத்தைப் பற்றியும் கூறினார். தான் இறந்த பின் அந்த வேற்றுக்கிரகவாசிகள் தன்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று சொன்னார். அவர்கள் பூமிவாசிகளைக் கண்காட்சியாக வைத்துப் பார்ப்பதற்காக அழைத்துப் போகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். கசாப்புக்கடை-5 கதையில் வந்த பில்லி பில்கிரிம் பாத்திரம் அவருடையதா என்று கேட்டேன். ஓரளவு ஒற்றுமை இருப்பதாகச் சொன்னார். அந்த வேற்றுக்கிரகவாசிகளிடம் ஏன் சரணடையவேண்டும் என்று கேட்டேன். வேறு எந்த முடிவுக்காகவும் காத்திருப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினார். அந்தக் கிரகத்திற்குப் போகலாம் என்ற உறுதியான முடிவு ஆறுதல் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். என்னையும் அந்த வேற்றுக்கிரகத்தில் கண்காட்சிப் பொருளாக வைத்துக் கொள்ளப் பரிந்துரைக்கலாமா எனக் கேட்டார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். வேறு என்ன காரணத்தினால் அந்த வேற்றுக்கிரகவாசிகளுடன் செல்ல அவர் முடிவெடுத்தார் என்று கேட்டேன். அங்குக் கடிகாரம் இல்லை என்றார்.


**கர்ட் வன்னேகாட் அமெரிக்க நாவலாசிரியர். ஜெர்மனியிலிருந்து குடிபெயர்ந்தவர். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் ட்ரெஸ்டன் நகர் அழிக்கப்பட்டதை நேரில் கண்டவர். அதனை வைத்து கசாப்புக்கடை-5 (Slaughterhouse-V) என்ற பின்நவீனத்துவ நாவலை எழுதியவர். அந்த நாவலாசிரியரும் அந்த நாவலில் வந்த பில்லி பில்பிரிகிம் மற்றும் ட்ரால்ஃபமடோரியன் கதாபாத்திரங்களும் மீண்டும் இங்குக் கதாப்பாத்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

No comments:

மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு

  (தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...