Sunday 5 September 2021

குறுங்கதைகள்-முத்து





அவனுக்கு நதியில் நீச்சலடிப்பது பெரு விருப்பமான ஒன்றாக இருந்தது. அந்த நதி காட்டில் நுழைந்து வரும் இடம்தான் அவனுக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. அன்று நீச்சலடிப்பதற்காகக் காட்டிற்கு வந்தான். நதியில் பாய்வதற்கு நின்றான். அப்போது நதியின் ஆழத்தில் ஒரு பெண் இருப்பதைக் கண்டான். அவளிடம் பெரிதும் ஈர்க்கப்பட்டுப் பேசினான். அவளிடம் தான் வரவேண்டும் என்று விருப்பமாக இருப்பதாகச் சொன்னான். தான் மிகவும் ஆழமான பகுதியில் இருப்பதால் அவனால் மூச்சை அடக்கி அங்கு வர முடியாது என்றாள். அங்கிருந்து போக விருப்பமில்லாமல் கரையிலேயே தங்கிவிட்டான். அந்தப் பெண்ணிடம் ஏதாவது வழியில் அவளை வந்தடைய முடியும் என்றால் அதைச் சொல்லச் சொல்லி வற்புறுத்தினான். அதற்குப் பல கடும் பயிற்சிகள் செய்யவேண்டும் என்றாள் அவள். அதற்கு ஒத்துக்கொண்டான். முதலில் நதியில் தலைகீழாகத் தொங்க வேண்டும் என்றாள். அதைச் செய்தான். பல மணி நேரங்கள் நதியில் நீச்சலடிக்க வேண்டும் என்றாள். அதையும் செய்தான். அங்கிருந்து தூரத்தில் தெரியும் மலையின் அடிவாரத்தில் இருக்கும் குளத்தில் சிப்பி ஒன்று இருப்பதாகவும் அதை எடுத்து வரவேண்டும் என்றும் கூறினாள். அதற்கு அபாயங்களைக் கடக்கவேண்டும் என்றாள். அதைச் செய்ய உறுதி பூண்டான். அந்தக் குளத்திற்குச் சென்றான். அந்த குளத்தில் கண்ணாடி மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. மேலும் பல விஷ பூச்சிகள் கொடுக்குகளைத் தூங்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன. அதை எல்லாம் பொருட்படுத்தாது அந்தக் குளத்தில் பாய்ந்தான். கண்ணாடி மீன்கள் அவனைக் குத்திக் கீறின. அவன் உடல் ரணமானது. இருந்தும் விடாமல் முயற்சி செய்து அந்தச் சிப்பியை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த நதியில் இருக்கும் பெண்ணிடம் அதைக் காட்டினான். அதை நதியில் கழுவச் சொன்னாள். அதைக் கழுவக் கழுவ அந்தப் பெண் வெண்மையாய் உருண்டு திரண்டு உருமாறி முத்தாய் மாறி அவன் கையில் வந்து சேர்ந்தாள்.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...