என்
படுக்கை அறையில் திடீரென அந்தச் செடி முளைத்திருந்தது. அறையின் நடுவில் இரவோடு
இரவாக எப்படி முளைத்திருக்கும் என யோசனை செய்துபார்த்தேன். அதைப் பிடுங்கி எறிய
மனம் வரவில்லை. ஒரு வாரத்தில் கொஞ்சம் பெரிய செடியாக வளர்ந்துவிட்டது. பெரிய மரமாக
வளரப் போவதில்லை இப்படியே அறையில் இருக்கட்டும் என விட்டுவிட்டேன். வேலை காரணமாக
ஒரு மாதம் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் கூரையை முட்டிக் கொண்டு பெரிய
மரமாக வளர்ந்திருந்தது. எனக்கு பயமாகப் போய்விட்டது. இந்த மரம் கூரையைப்
பிய்த்துவிட்டால் இந்த வீட்டில் இருக்க முடியாது என அச்சம் ஏற்பட்டது. மரத்தை
வெட்ட முடியாது. வீட்டை விட்டுச் சென்று விடுவது என முடிவு செய்து தூங்கிப்
போனேன். காலையில் என் கால்களை நகர்த்த முடியவில்லை. மரத்தின் வேர்கள் கால்களோடு
பின்னிப் பிணைந்திருந்தன. எப்படி விடுவித்துக் கொள்வது எனப் புரியவில்லை. அப்படியே
படுத்துக்கிடந்தேன். மரத்தின் கிளையில் ஒரு பூ மலர்ந்திருந்தது. அந்தக் கிளை என்
அருகே தொங்கிக் கொண்டிருந்தது. இது என்ன மரமாக இருக்கும் என நினைத்துக்
கொண்டிருந்தேன். காட்டில் வளர வேண்டிய மரம் என் வீட்டில் வளர்ந்துவிட்டது என
நினைத்தேன். அது இன்னும் வளர்ந்தால் கூரை என் மீது விழும் என்ற உணர்வு அந்த இடத்தை
விட்டு உடனே அகல கலவரப்படுத்தியது. வேர்களிலிருந்து எப்படியோ கால்களை விடுவித்தேன்.
எழுந்து நின்றால் கால்கள் தடுமாறின. அரை முழுக்க வேர்களாக இருந்தன. இதைத் தாண்டிப்
போவதே பெரும் சிரமமாக இருக்கும் எனத் தோன்றியது. மற்றொரு கிளை என் அருகே வந்தது.
அதில் என் உயரம் அளவுக்கு ஒரு பூ மலர்ந்திருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கக் கை
நீட்டினேன். அந்த மலர் என்னை உள்ளிழுத்து மூடிக் கொண்டது.
No comments:
Post a Comment