Sunday, 10 October 2021

குறுங்கதைகள்-ரகசியம்





கிரகங்களை விண்வெளியில் ஒரு கற்பனையான புள்ளியில் நிலைத்து வைத்திருக்கும் காந்த விசைகளைக் கட்டுப்படுத்தும் ஓர் அளவைமானியைக் கண்டுபிடித்தது ஒரு மர்மக்குழு. அந்தக் கருவியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்தால் கிரகங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதை அறிந்து கொண்டது அந்த மர்மக்குழு. எந்த இடம் எவ்வளவு காலம் என்ற ரகசியத்தை ஒவ்வொரு பரம்பரையாகக் கடத்திக் கொண்டு வந்து அந்த அளவை மானியை ஒவ்வொர் இடமாக மாற்றிக் கொண்டிருந்தது அந்தக் குழு. அந்த ரகசியக் குழுவில் உறுப்பினராக வேண்டும் என்றால் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் கடத்தப்படுவார்கள். அவர்கள் இருக்கும் இடத்தைச் சரியாக அறிந்து கண்டுபிடிக்கவேண்டும். வாகனம் எதிர்பாராமல் நின்றுவிடும். அதைச் சரி செய்யத் தெரிந்திருக்கவேண்டும். கடும் மழையில் வேண்டுமென்றே சுடுகாட்டுக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒரு குண்டுமணியைத் தேடி எடுக்க வேண்டியிருக்கும். இப்படி பல கட்டச் சோதனைகளைக் கடந்து அந்தக் குழுவில் சேர்ந்தால் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு அந்த அளவை மானியைத் தேடச் சொல்லி செய்தி வரும். அந்தக் குழுவின் தலைவர் யார் என்பது அதன் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு குழுவில் பல கட்டச் சோதனைகளைக் கடந்து ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் அந்த அளவை மானியை உடனடியாக அந்தக் கிரகத்தின் கிழக்குத் திசையிலுள்ள ஒரு புள்ளிக்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பை ஏற்றான். அந்த அளவை மானியைத் தேடி அலைந்தான். குப்பைத் தொட்டிகளிலும் மரப்பொந்துகளிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வேலையை முடிக்க இன்னும் குறைவான நாட்களே இருந்தன. வந்திருந்த ரகசியச் செய்தியில் ஏதாவது துப்பு கிடைக்குமா என நூறாவது முறையாகப் படித்துப் பார்த்தான். ’மானியும் முதலாம் நகரத்து மூன்றாம் திசையில்’ என மட்டும் எழுதியிருந்தது. அந்த வாசகத்தை வேறு மொழிகளில் மொழிபெயர்த்தான். நகரம் என்ற சொல் நகரத்தைக் குறிக்கவில்லை எனப் புரிந்தது. வேறு ஏதோ ஒன்றைக் குறிக்கிறது என்று நினைத்து ரயிலடிக்கு வந்தான். அங்கிருந்த மூன்றாவது நடைமேடையில் இருந்த முதல் இருக்கையின் அடியில் பார்த்தான். அளவை மானி கிடைத்துவிட்டது.

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...