Tuesday 19 October 2021

குறுங்கதைகள்-கண்ணாடி மாளிகை





அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல் காப்பவர் அதற்குள் சென்றுவிட்டால் வெளியே வருவது கடினம் எனவே அங்கு யாரும் உள்ளே போவதில்லை என்று கூறினார். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. உள்ளே நுழையும் கதவைத் திறந்தவுடன் அந்த அறைக்குள் மேலிருந்து கீழ் வரை கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்ததால் அவளது பிம்பத்தைக் காட்டின. அவள் நுழைந்தவுடன் அவளுக்குப் பின்புறம் அந்தக் கதவு சாத்திக்கொண்டது. அதிலும் உட்புறம் கண்ணாடி இருந்தது. அவள் மெதுவாக நகர்ந்தாள். அவள் பிம்பங்களும் நகர்ந்தன. ஒவ்வொரு கண்ணாடியாகத் தள்ளிப் பார்த்தாள். ஒன்று திறந்தது. அது மற்றொரு அறையாக இருந்தது. அதிலும் கண்ணாடிகள் மட்டுமே இருந்தன. அந்த அறையிலும் மெதுவாக எல்லா கண்ணாடிகளையும் தள்ளிப் பார்த்து மற்றொரு அறைக்கு வந்தாள். அதுவும் கண்ணாடிகளால் நிரம்பியிருந்தது. இப்படி எல்லா அறைகளிலும் கண்ணாடிகள் மட்டுமே காணப்பட்டன. எல்லாவற்றிலும் அவள் பிம்பங்கள் எதிரொளித்தன. இதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என நினைத்த அவள் வெளியே போக எத்தனித்தாள். அறைக் கதவுகளைத் தேடித் தேடி திறந்தாள். அவை எல்லாம் மற்றொரு அறையில் மட்டுமே திறந்தன. வெளியில் போகும் வழி தென்படவில்லை. எப்படி வெளியே போவது எனத் தெரியாமல் அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. முதலில் அந்த அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என நினைத்தாள். ஓர் அறைக்குள் நுழைந்து அந்தக் கதவைத் திறந்து வைத்தாள். அந்த அறையில் இருக்கும் மற்றொரு கதவைத் திறந்தாள். அந்த இரண்டு கதவுகளைத் தவிர மூன்றாவது ஒரு கதவு இருக்கும் ஓர் அறை இருக்கிறது. அந்த அறையைக் கண்டுபிடித்தால் வெளியே போகலாம் எனப் புரிந்தது. இப்படி எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டே வந்து ஓர் அறையில் மூன்றாவது கதவு இருப்பதை அறிந்து அதைத் திறந்தாள். அது மீண்டும் மற்றொர் அறையில்தான் திறந்தது. அதில் நுழையாமல் இது போல் மூன்று கதவுள்ள அறைகளைத் தேடினாள். அவற்றுக்குள் நுழைந்தால் கண்ணாடி மாளிகையின் மிகவும் உட்புறம் போகவேண்டியிருக்கும் எனப் புரிந்துகொண்டாள்.  ஒரு குறிப்பிட்ட கணக்கில் மூன்று கதவுள்ள அறைகள் இருந்தன. அவை எல்லாமே கண்ணாடி மாளிகையின் உட்புற வழிகளாக இருந்தன. அவற்றைத் தவிர்த்து நான்காவது கதவுள்ள அறையைத் தேடினாள். அப்படியே சுற்றி வந்தாள். மிகவும் களைப்புற்று ஒரு கண்ணாடி மீது சாய்ந்தாள். அந்தக் கதவு வெளியே போவதற்கான வழியாகத் திறந்தது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...