Wednesday 20 October 2021

குறுங்கதைகள்-வயது





அவள் மிகவும் முதுமை அடைந்துவிட்டதால் வேறு யாரும் ஆதவுக்கு இல்லை என்ற எண்ணத்தில் ஓர் இல்லம் தேடிப் போய்ச் சேர்ந்துவிட்டாள். அந்த இல்லத்தில் இருக்கும் போது எப்போதும் போல படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டும் இருந்தாள். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாதத்தில் அவளது தோற்றம் நடுத்தர வயதைத் தொட்டிருந்தது. அந்த இடத்தில் அவளுக்குப் பிடித்தமான அம்சங்கள் இருந்ததால் அவளது தோற்றத்தில் இளமை வந்துவிட்டது என நினைத்தாள். இன்னும் சில காலத்தில் அவள் தோற்றம் இன்னும் இளமையாகிவிட்டது. நரை மறைந்துவிட்டது. உதிர்ந்த கேசம் வளர்ந்துவிட்டது. அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்லலாம் என முடிவெடுத்தாள். அடுத்த நாள் வேறிடத்திற்குச் சென்றுவிட்டாள். அங்கு அவளைப் பார்த்தவர்கள் அவள் குறிப்பிடும் வயதிற்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை என சந்தேக்கத்துடன் பார்த்தார்கள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தாள். அப்போது அவள் கல்லூரிக்குச் செல்லும் பெண் போல் ஆகியிருந்தாள். தனக்கு ஏன் இப்படி நேர்ந்திருக்கிறது என அறிய பல மருத்துவர்களை நாடினாள். முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பும் தலைகீழ் வளர்சிதை மாற்றம் கொண்ட மரபணு அவள் உடலில் இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த இளமை அவளுக்குக் கிடைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதை நிறுத்த முடியாது எனவும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். இவளுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. அடுத்த சில நாட்களில் அவள் பள்ளி செல்லும் சிறுமியாகிவிட்டாள். இப்போது என்ன செய்வது எனப் புரியாமல் தத்தளித்தாள். ஒரு நாள் ரயில் நிலையம் சென்று அமர்ந்திருந்தாள். இரவு நடமாட்டம் இல்லாத போது இவள் குழந்தையாகி வீறிட்டு அழத் தொடங்கினாள்.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...