Sunday 24 October 2021

குறுங்கதைகள்-நகர்வு


 



அன்று காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள். அவள் நின்றிருந்த நிலப்பகுதி நகரத் தொடங்கியது. அந்த இடத்தில் அவளைத் தவிர வேறுயாரும் இல்லை. கீழே கிடந்திருந்தப் பழங்களை எடுத்துச் சாப்பிட்டாள். நிலம் மெதுவாக நகரும் படகு போல் நகர்ந்துகொண்டிருந்தது. அருகில் இருந்த கடலில் போய்ச் சேர்ந்தது. கடலில் மிதந்துகொண்டே சென்றது. அலைகளின் சீற்றம் அந்த நிலப்பகுதியை எதுவும் செய்யவில்லை. அந்தப் பகுதியில் இருந்த பழங்களும் கிழங்குகளும் மட்டுமே அவளுக்குப் போதுமானவையாக இருந்தன. ஆங்காங்கே தோன்றிய ஊற்றுகளிலிருந்து நீரை எடுத்துப் பருகினாள். இந்த நிலம் நிற்குமா இப்படியே பயணிக்குமா என யோசித்தாள். நிலத்தின் மீது நடப்பது சிரமமாக இருந்தது. மெதுவாக நகர்ந்து சென்று வேறு யாராவது அதில் இருக்கிறார்களா எனத் தேடினாள். யாரும் இல்லாத தனித் தீவு அது எனப் புரிந்துகொண்டாள். அந்தத் தனித்தீவின் ஒரே உரிமையாளர் தான் மட்டுமே என நினைத்து மகிழ்ந்தாள். ஆனால் இதை யாரிடமும் சொல்லி மகிழ்வதற்கு வழியில்லாமல் போய்விட்டதே என நொந்து கொண்டாள். தூரத்தில் மலைகள் தெரிந்தன. இந்த நிலப்பகுதி அங்கு போகுமா என நினைத்தாள். மழையும் பனியும் பொழிந்து கொண்டிருந்தன. வெயிலும் குளிரும் அவளைப் பெரிதாக வாட்டவில்லை. அந்த நிலப்பகுதி நகராமல் நிற்கவேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது. அப்படியே நின்றாலும் அங்கிருக்கும் மக்கள் தன்னை ஏற்பார்களா என்று சந்தேகம் கொண்டாள். இப்படி நகரும் நிலத்தில் வாழ்வதுதான் இனி இயற்கையின் விதி என்றால் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என நினைத்து அமைதியானாள். தூரத்தில் தெரிந்த மலைகள் இப்போது அருகே தெரிந்தன. மெதுவாக அந்த நிலம் மலைகளில் மோதி நின்றுவிட்டது.. அவள் அந்த மலையின் மீது ஏறினாள். உச்சிக்கு வந்து பார்த்தாள். அப்போது அவள் வந்த நிலம் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கீழே பார்த்தாள் ஒரு நகரம் தெரிந்தது. அங்கு போனாள். நகரும் நிலத்தில் அவள் அங்கு வந்து சேர்ந்ததாகச் சொன்னாள். அவள் மனநிலை பாதிக்கப்பட்டப் பெண் என எண்ணி அவளைக் காப்பகத்தில் சேர்த்தார்கள். சில நாட்களில் பெரிய நிலநடுக்கம் வந்தது. அவள் இருந்த பகுதி நகரத் தொடங்கியது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...