Saturday 23 October 2021

குறுங்கதைகள்-குறை





அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் அந்த வீட்டின் ஜன்னலிலிருந்து அவன் வரைந்த பூவைக் காட்டுவான். அந்தப் பூவின் நிறத்தை வைத்து அன்று நடக்கப் போவதை அவள் ஊகிப்பாள். மஞ்சள் என்றால் மங்கலம், சிவப்பு என்றால் கோபம், பச்சை என்றால் பழைய நினைவுகள், நீலம் என்றால் நீர் போன்ற குளுமையான செய்திகள் இப்படி நிறத்திற்குத் தக்கவாறு ஊகிப்பாள். திரும்பி வரும்போது தான் அந்த பூவைக் கண்டு எண்ணியது அப்படியே நடந்துவிட்டது என்பதற்காக அவனைப் பார்த்து கையசைப்பாள். இது அவனுக்குப் பெரும் உற்சாகத்தைத் தரும். தினமும் நடப்பது இது. ஒரு நாள் அவனைக் காணவில்லை என்றால் கூட குழப்பமடைந்துவிடுவாள். பள்ளி இறுதிப் படிப்பு வரை இந்த விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவன் காட்டிய பூக்களின் நிறங்கள்தான் அவளை ஊக்கப்படுத்தி நல்ல மதிப்பெண்கள் வாங்க வைத்தன என அவள் நம்பினாள். மருத்துவப் படிப்பில் சேர்ந்தாள். அப்போதும் பூக்களின் ஓவியங்களை அவனும் வரைந்து காட்டுவான். இவளும் கையசைப்பாள். மருத்துவப் படிப்பு முடியும் வரை இந்தப் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பூக்களோடு இப்போது வண்ணத்துப் பூச்சிகளையும் அவன் வரைந்தான். அவளுக்கு அவையும் பல செய்திகளைக் கொடுத்தன. மருத்துவப் படிப்பு முடிந்து மூளை வளர்ச்சி திறன் குறைபாடு குறித்த சிறப்புத் துறையில் மேல் படிப்பு படித்தாள். அத்துடன் அந்தக் குறைபாட்டுக்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடித்து அவற்றைத் திருத்துவது குறித்தும் அவைப் பரம்பரையில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் ஆய்வு செய்து தீர்வு கண்டுபிடித்தாள். அது ஏற்கப்படும் நாள் அவன் என்ன நிற பூவைக் காட்டுவான் என்று அவள் ஆவலாகப் பார்த்தாள். அவன் கறுப்பு நிறத்தைக் காட்டினான். அது வரைக் கறுப்பு நிறத்தில் அவன் எதையுமே வரைந்ததில்லை. அன்று கறுப்பு நிறத்தைக் காட்டியது அவளுக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருந்தது. அவள் ஆய்வு அங்கீகரிக்கப்பட்டது. அன்று அவன் வீட்டுக்குச் சென்று அவனுக்கு நன்றி சொல்லி அவனை அழைத்துச் சென்று ஏதாவது நல்ல பரிசை வாங்கித் தரவேண்டும் என எண்ணி அவள் வீட்டுக்குப் போனாள். அவன் வீட்டிற்கு வெளியே பலரும் நின்றிருந்தார்கள். அவன் இறந்துபோயிருந்தான். கறுப்பு மலரின் பொருள் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...