Sunday, 3 October 2021

குறுங்கதைகள்-புழு


 


அவள் குழந்தையாக இருக்கும் போது தன் வீட்டுக்கு எதிரில் மண்ணிலிருந்து வெளிக் கிளம்பும் புழு ஒன்றைத் தினமும் பார்ப்பாள். அதில் என்ன அதிசயம் என்றால் அந்தப் புழு தினமும் ஒரு நிறத்தில் வெளிவரும். அதன் நிறத்திலிருந்துதான் அவளால் வண்ணங்களில் வேறுபாடுகளையும் அவற்றின் பெயர்களையும் அறிய முடிந்தது. தினம் அது எந்த நிறத்தில் வரும் என அவளுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு கட்டத்தில் அவள் நினைக்கும் நிறத்தில் வெளிப்படும் போது அவளுக்குப் பெரும் பரவசமாக இருக்கும். தினம் காலையில்தான் அது வெளியே வரும். தினம் இப்படி இவள் காலையில் எழுந்ததும் வெளியே வந்து எதையோ பார்க்கிறாள் என கண்டறிந்த இவளுடைய தாய் இந்தப் புழுவைப் பார்த்துதான் இவள் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறாள் எனப் புரிந்து அதிர்ச்சி அடைந்தாள். ஒருவேளை இவள் அந்தப் புழுவைத் தொட்டு இவளுக்கு உடலில் கேடு வந்துவிட்டால் என்ன செய்வது என அஞ்சினாள் இவளுடைய தாய். அடுத்த நாள் இவள் எழும் முன்பே சாணியிட்டு தெளித்து முற்றத்தைப் பெருக்கி மெழுகிவிட்டிருந்தாள் இவளுடைய தாய். இவள் எழுந்து பார்க்கும் போது புழு வெளிப்படும் மண் குழி காணாமல் போயிருந்தது. இவள் பெரும் துக்கமடைந்தாள். புழு தன்னிடம் பேசாதா என ஏங்கினாள். புழு மானசீகமாக இவளுடன் பேசியது. தன் குழி மூடப்பட்டதால் அடுத்து தான் எப்படியாவது ஓர் இடத்தில் வெளிப்பட்டு குழியை உருவாக்கவேண்டும் எனவும் பிறகொரு முறை அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் கூறியது. அவளும் அந்தப் புழுவைக் காணும் எண்ணத்திலேயே வளர்ந்தாள். கல்லூரிப் படிப்பில் விலங்கியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படித்து அதில் ஆய்வுப் படிப்பு வரை வந்துவிட்டாள். மண்ணுக்கு அடியில் வாழ்ந்து நிறம் மாறும் புழுக்களைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினாள். அப்போது இவள் தேடிக் கொண்டிருந்த புழு குறித்த காணொலியை ஒரு சிறுமி பகிர்ந்திருந்தாள். தினம் நிறம் மாறி வெளிப்படும் புழுவைப் பற்றிய காணொலியாக இருந்தது அது. அந்த இடம் இவளுடைய இடத்திலிருந்து பல்லாயிரம் அடி தூரத்தில் இருந்தது. ஆனாலும் இவள் அங்கு போய் அந்தச் சிறுமியின் வீட்டின் முன் நின்றிருந்தாள். அந்த வீட்டின் முன் ஒரு சிறிய குழி இருந்தது. அதன் அருகே நின்று அந்தப் புழு வெளிப்படவேண்டிய நிறத்தை மனதில் நினைத்தாள். அதே நிறத்தில் புழு வெளிப்பட்டது.   

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...