பெரும்
செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர்
உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக்
கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச்
சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்றான். மற்றொருவன் உலகம்
அழியப் போகிறது என்றான். இன்னொருவன் செல்வந்தனின் சொத்து முழுவதும் களவு
போய்விட்டது என்றான். இப்படிப் பல பொய்கள் சொன்னாலும் எல்லாமே வெளிப்படையான
பொய்களாகவே இருந்தன. உண்மையை வெகு சுலபமாகக் காட்டிக் கொடுத்தன. செல்வந்தன் தன்
சொத்து தன்னைவிட்டுப் போகாது என நினைத்துக் கொண்டான். அன்று ஒருவன் வந்தான். அவன்
தன் கனவில் கடவுளைக் கண்டதாகச் சொன்னான். இறந்து போன தன் தந்தை கடவுளை அடையாளம்
காட்டியதாகச் சொன்னான். அந்தக் கடவுள் அவதாரம் எப்படி இருக்கும் என்றால், ஒரு
கோவிலில் தான் கண்ட சிற்பத்தை ஒத்து இருந்ததாகச் சொன்னான். இது
உண்மை போல் தெரிகிறதே என்றான் செல்வந்தன். வந்தவன் தான் சொன்னது உண்மையா பொய்யா என
செல்வந்தன்தான் கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறிவிட்டான். செல்வந்தன் அவன் சொன்ன
கோயிலுக்குச் சென்று கடவுளின் தோற்றத்தைக் கண்டான். பொய் சொன்னவனிடம் உன் கனவில் கடவுள்
வந்திருந்தால் நீ எதற்கு என்னிடம் வந்து பொய் சொல்லவேண்டும் என்று கேட்டான். ஆகவே
நீ சொன்னது பொய் அல்ல உண்மை. எனவே நான் உனக்கு என் சொத்துகளைத் தரமுடியாது
என்றான். பொய் சொன்னவன் அடுத்த முறை கடவுளைக் கனவில் கண்டால் நீங்கள் சொன்னதைச்
சொல்லிவிடுகிறேன் என்றான். இது அருமையான பொய். நான் உன் உண்மையைக்
கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்ன பின்னும் சிறிது அதிர்ச்சியடையாமல்
இருந்துவிட்டு எப்படியும் சொத்தை அடைந்தே தீருவது என்ற உன் முயற்சியில் சொன்ன பொய்
அற்புதமானது. ஆகவே உனக்கே என் சொத்துகளைத் தருகிறேன் என்றான்.
No comments:
Post a Comment